இசை ஞானத்தில் சிறப்புற்ற ஒரு இசைவாணன் ஒருவன் கர்வமுற்று அலைந்தான். தன் இசைக்கு ஈடு இணை இவ்வுலகத்திலேயே இல்லை என்று ஆணவம் கொண்டு நாடு நாடாகச் சென்று இசைஞர்களைப் போட்டிக்கு அழைத்து அவமானப்படுத்தினான். ஆனால் ஒரு நாட்டில் விறகுவெட்டியின் கானத்தைக் கேட்டு வெட்கமடைந்து ஊரைவிட்டே ஓடினான். அந்த இசைவாணனைப் பற்றியும் அவனைத் தன் இன்னிசையால் விரட்டிய விறகுவெட்டியைப் பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பாண்டிநாட்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு வரகுணபாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இசைவல்லுநர்கள், பாணர்கள், விறலியர், கலைஞர்கள் அனைவரையும் ஆதரித்து அவர்களின் திறமைக்கேற்பப் பொன்னும் பொருளும் பரிசிலாக வழங்குவான்.
வடநாட்டைச் சேர்ந்த இசைப்பாணர்கள் குழு ஒன்று ஒரு முறை மன்னனின் அவைக்கு வந்தது. அதன் தலைமை யாழ்பாணனின் பெயர் ஏமநாதன். அவன் தன்னுடைய இசைக்குழுவினருடன் ஒரு இன்னிசைக் கச்சேரியை நிகழ்த்தினான். அந்த இசையைக் கேட்ட சபை மட்டுமல்ல நாடே மயங்கியது. அவ்வளவு இனிமை. ஆனால் இனிமையாகப் பாடத்தெரிந்த அவனுக்கு இங்கிதமாகப் பேசத் தெரியவில்லை.
