தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகள் அதில் ஆழ்ந்து அதைப் போலவே வீரசாகசங்களைத் தாங்களும் செய்து பார்ப்பதுண்டு. இப்பழக்கம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஒரு அரசருக்கே அந்த நாளில் இருந்தது. யார் அந்த அரசர் அப்படி அவர் என்ன காரியம் செய்தார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
எட்டாம் நூற்றாண்டில் சேரநாட்டின் திருவஞ்சைக்களம் என்னும் இடத்தில் திடவிரதன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருக்குக் குலசேகரன் என்ற மகன் பிறந்தார்.
தன் தந்தைபோலவே சிறப்பாக ஆட்சி புரிந்த இவர் ஒரு சமயம் நாடு பிடிக்கும் ஆசையில் சோழ பாண்டிய நாடுகளின் மீதும் படையெடுத்து வென்றார். பாண்டிய மன்னன் இவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்குச் சேரகுலவல்லி என்ற மகள் பிறந்தாள்.
மகன் பிறந்ததும் தான் ஈடுபட்ட கொடுமையான போர்க்களங்களை நினைத்து வருந்திய குலசேகரர் ஒரு கட்டத்தில் கடவுளைச் சரணடைந்தார். நாளும் கிழமையும் கடவுளின் புகழ் கூறும் உபன்யாசகர் யாரையாவது அழைத்து வந்து காவியங்களின் விளக்கத்தைக் கேட்டு இன்புற்று வந்தார்.
