அத்தினாபுரம் அரண்மனை. ‘தாயம்.. தாயம்.’. என்று சொல்லி நெற்றியில் தட்டிக்கொண்டு தாயக்கட்டைகளை உருட்டிப் போடுகிறான் ஒருவன். அவன் சொன்னபடியே தாயம் விழ. கௌரவர்கள் குதூகலிக்கிறார்கள். பாண்டவர்களோடு பீஷ்மர் விதுரர் துரோணர் கிருபர் ஆகியோரும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். குள்ளநரிப்புன்னகையோடு இவர்கள் நடுவில் அமர்ந்து தாயம் உருட்டும் அவன் தான் சகுனி. சூதால் அவன் செய்த வினை கொஞ்சமா நஞ்சமா. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்ப்போம் குழந்தைகளே.
திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி காந்தார நாட்டில் பிறந்தவள். தந்தை சுவலன். அவளுக்கு நூறு சகோதரர்கள். அவர்களின் ஒருவன் சகுனி. திருதராஷ்டிரனுக்கு மணம் முடிக்கு முன்பு காந்தார தேசத்தில் அவளுக்கு திருமணதோஷம் இருந்ததால் ஒரு ஆட்டுக்கு மணம் செய்து தோஷம் கழித்தார்கள். இது பீஷ்மருக்குத் தெரியவர அவர் கோபமாக காந்தாரியின் தந்தை சுவலனையும் அவரது பிள்ளைகள் நூறுபேரையும் சிறையில் அடைக்கிறார்.
போதிய உணவு இல்லாமல் அனைவரும் சிறையில் வாடுகிறார்கள். தங்களுக்குக் கொடுக்கப்படும் உணவை அவர்கள் சகுனிக்குக் கொடுத்துத் தாங்கள் மரிக்கிறார்கள். சகுனியின் தந்தை சுவலன் சாகும் தருவாயில் சகுனியின் கணுக்காலை அடித்துஉடைத்துத் ” நம் வம்சத்தைச் சிறையில் சாகடித்த குருவம்சத்தைப் பழிவாங்கவேண்டும்” என்று கோபமாய்ச் சொல்கிறார்.
