காட்டுத்தீயும் காதல் நோயும்
“ஐயையோ ஓடியாங்க ஓடியாங்க” என்ற மாண்பனின் குரல் கேட்டு மொத்த பங்களாவும் விழித்துக் கொண்டது. அவன் மனைவி பொம்மியும் இன்னுமுள்ள எஸ்டேட் பணியாளர்களும் சத்தமிட்டபடி அங்கே இங்கே ஓடிக்கொண்டிருந்தார்கள்.
கைபேசியை சார்ஜரில் இருந்து எடுத்துப் பார்த்த சாம் வேகமாக எழுந்தான். ஜன்னல் திரைச்சீலை விலக்கிக் கண்ணாடியின் மூலம் பார்த்தான். செக்கச் செவேலென இது என்ன எரிமலைக் குழம்பு வழிந்து ஓடிவருகிறதா. ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது போல ஜன்னல் எல்லாம் ஒரே செங்காவி நிறம், புகை. வெக்கை அனலடிக்கத் துவங்கி இருந்தது. படபடவென மாடியிலிருந்து கீழிறங்கத் துவங்கினான். உடன் விழித்த தேவியும் எழுந்து ஓடினாள்.