எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 மே, 2023

மன்னார்குடி சில நினைவுகள் !

 மன்னார்குடி நினைவுகள் !

கணபதி விலாஸும், செயிண்ட் ஜோசப்பும், லெக்ஷ்மி காலனியும். 

 மன்னார்குடி என்னும் ராஜ மன்னார்குடியில் நாங்கள் கிட்டத்தட்டப் பன்னிரெண்டு வருடம் இருந்தோம். எனது முதலாம் வகுப்பிலிருந்து ப்ளஸ்டூ வரை நான் அங்கேதான் செயிண்ட் ஜோசப்பிலும் பின்னர் கணபதி விலாஸிலும் அதன் பின்னர் திரும்ப செயிண்ட் ஜோசப்பிலும் படித்தேன். 

நாங்கள் குடியிருந்த வீட்டின் பக்கவாட்டுத் தோற்றம். வனஜாக்கா, சித்ராவின் வீட்டிலிருந்து நாங்கள் 2022 இல் மன்னார்குடிக்குச் சென்றிருந்தபோது எடுத்த படம்.

இதே வீட்டில்தான் குடி இருந்தோம். நம்பர் 18, லெக்ஷ்மி காலனி, சிங்காரவேலு உடையார் தெரு. இதுதான் முகவரி. இந்தக் காலனியின் முன்னால் வேலி போட்ட ஒரு காலி இடமும் அதன் முன் செங்குளமும் இருக்கும். கிழக்குப் பார்த்த வீடு.  (இந்த ரோடு மேற்காலே முடியும் இடத்தில் நாதன்ஸ் ஸ்டூடியோ இருந்தது.) 

முன்புறம் தெரிவது முகப்பு, முதல் ஜன்னல் பக்கம் முதல் ரூம், இரண்டாம் மூன்றாம் ஜன்னல்கள் சாமி ரூம். அதன் அந்தப் பக்கம் நடு ரூம், கடைசி ஜன்னல் அடுப்படி. இதே ஓட்டுக் கட்டிடம். ஒருவேளை ஓடு மட்டும் மாற்றி இருக்கலாம், ! 


இது அந்தச்செங்குளம் தாண்டி கிழக்குப் பார்த்து அமைந்த முருகன் கோவில். 
பள்ளிப்படைக்கோயில்போல் ஒரு அமைப்பு. 
இங்கே அடிக்கடி சென்று வருவோம். கிருத்திகை, செவ்வாய்க்கிழமை, சஷ்டி என்று பல்வேறு விசேஷங்கள் உண்டு. 

கந்தா கந்தா என்று சொல்லுங்க கலங்கிய மனம் தெளியும்!
வேலா வேலா என்று சொல்லுங்க வேண்டிய வரம் கிடைக்கும்!
முருகா முருகா என்று சொல்லுங்க முடிவு வெற்றிதான்!> 
அதன் பக்கத்திலேயே அமைந்திருக்கும் ஜுபைதா ரைஸ் மில். 
என் பள்ளி போர்டின்முன் நான்.
இங்கிருந்து வலப்பக்கம் வந்தால் நாங்கள் படித்த - நான் மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படித்த கணபதி விலாஸ் நடுநிலைப் பள்ளி இன்று தொடக்கப் பள்ளியாக இன்னும் இருக்கிறது.. பெயரளவில்..

அதுவும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி என்ற பெயருடன்.!

இது ஒரு வீடு போல் பெரிதாக இருந்தது. இப்போது உள்ளே காலேஜ் இருக்கு. ஸ்கூல் எங்கு இருக்குன்னு தெரில. ஆனால் போர்டு மட்டும் இருக்கு. இதன் முன்னேதான் ஒத்தைத் தெருவும் அங்கே ஆனந்த விநாயகரும் இன்னும் ஆனந்தமாக இருக்கிறார்கள். அதன் பக்கவாட்டில் நேஷனல் ஹைஸ்கூல். 

அப்படியே போனால் எங்க அப்பா வேலை செய்த பாங்க் ஆஃப் மதுரா கட்டிடத்தில் இன்று கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி செயல்படுகிறது. 

இடது பக்கம் திரும்பி வாழைப்பழ வாணியத்தெரு  ( பாக்குப் பட்டத் தெரு குறுக்கிடும் ) வழியாகப் போய் டெலிஃபோன் எக்ஸேஞ்சைத் தாண்டினால் நான்  ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட், செகண்ட் ஸ்டாண்டர்ட், ஒன்பதாம், பத்தாம், ப்ளஸ் ஒன், ப்ளஸ்டூ படித்த செயிண்ட் ஜோசப் கான்வெண்ட் .

சாரி சாரியாகப் பெண்குழந்தைகள்வந்து கொண்டிருந்தார்கள். 

இதுதான் எண்ட்ரன்ஸ் கேட். இதன் இடப்பக்கம் ஒரு குளமும் வயலும் தோட்டமும் இருக்கும். வலப்பக்கம் வகுப்பறைகள், கிண்டர்கார்டன் முதல் ஐந்தாம் வகுப்பு வரை. 
இதுஒரு ஃப்ளோராக இருந்தது இப்போது இரண்டு மாடி ஆகக்காட்சி தருது. 

எதிரே தெரியும் அந்த மெயின் பில்டிங்தான் நாங்கள் படித்தது. இந்த ஆரம்ப வகுப்பு அப்போது ஹாஸ்டலின் மாடியில் நடந்து வந்தது.  எங்கள் மிஸ் பெயர் ஹார்லிக்ஸ் மிஸ், என் தம்பி வகுப்பின் மிஸ்ஸின் பெயர் பனானா மிஸ். ஆங்கிலோ இந்தியன் டீச்சர்ஸ். அவர்களுக்குப் பிடித்த பொருளைக் கொண்டு அவர்களைக் குறிப்பிடுவார்கள்!

இங்கே ஃபர்ஸ்ட் , செகண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் படிக்கும்போது ஆண்டுவிழாவில் நான் ரைம்ஸ் எல்லாம் பாடி இருக்கிறேன். 

என்ன ஒன்று காலை ப்ரேயர்தான் இதோ தெரியும் க்ரவுண்டில் வெய்யில் நிற்க வைத்து மயக்கம் வரச் செய்துவிடுவார்கள் அரைமணி நேரம்.

ப்ரேயர் சாங், ஆங்கில, தமிழ் செய்தி வாசிப்பு, நற்கருணை வீரன் செய்தி, ஒரு வரி செய்தி, அறிவுக் களஞ்சியத் தகவல் , உலகத் தகவல் எல்லாம் பகிர்ந்து அதன் பின் நேஷனல் ஆன்தமுடன் முடியும்போது வேர்த்து விறுவிறுத்துப் போயிருப்போம். சிலருக்கு மயக்கமே வந்துவிடும்.

அதே ஸ்கூல் ஆனால் அந்தப் பக்கம் சுவர் எழுப்பி அங்கே ஒரு காலேஜ் நடக்குதுன்னு சொன்னாங்க. 

அந்தப் பக்கம் பஸ் ஸ்டாண்ட்போகும் ரோடும். ஷெண்பகா தியேட்டரும் இருக்கும். இன்னும் கொஞ்சம் சென்றால் மேலராஜ வீதியும் இராஜகோபால ஸ்வாமி கோயில் கோபுரமும் தென்படும். 
என்ன ஒரு விநோதமான சம்பந்தம்னா நான்படிச்ச ரெண்டுபள்ளிகளுமே அரசு உதவி பெறும் பள்ளிகளா ஆயிருந்ததுதான்.. ஆனா இது மேல்நிலைப் பள்ளியாவே நீடிச்சு இருக்கு. 
என் எதிர்வீட்டு சித்ரா மற்றும் அவளது அக்கா வனஜாக்கா. 
எங்கள் காலனி பற்றி சொல்லவே இல்லையே. 

எங்கள் வீடு தவிர்த்து 16 + 5 வீடுகள் இருந்தன. இப்போது அவை எவையும் காணோம். மேலும் எங்கள் வீட்டையும் பின் வீட்டையும் தவிர மற்ற இடங்களில் நாலா பக்கமும் குறுக்கும் நெடுக்கும் உயர உயரமான வெண்மையான அழகான வீடுகள் முளைத்திருந்தன. 

எங்கள் வீட்டில் அதே பழமையான ஓடுகள், அதே கட்டிடம், 1982 இல் விட்டுவந்த பின் பாசம்படிந்து அந்தக் கார்னர் வீடு மட்டும் 2022 இலும்  தப்பிப் பிழைத்துக் கிடந்தது. கிட்டத்தட்ட 40 வருடங்கள். நான் ப்ளஸ்டூவரை இந்த வீட்டிலிருந்து சென்றுதான் படித்தேன். முன்புறம் இந்த க்ரில் கேட் கம்பிகளில்லை. அரளிக்குப் பதில் அங்கே ஒரு வேம்பு கம்பீரமாக நின்றிருக்கும்.

எங்கள் வீடு மட்டும் இன்னும் ஓட்டு வீடாய் அப்படியே நிலைத்திருக்கிறது. 

அதன் முன்புறம் புதிதாய் வராண்டாவைக் கவர் செய்து க்ரில் கம்பி அடைப்பும் கேட்டும் முளைத்திருக்கிறது. 


என் அன்பிற்கினிய தோழிகள். இவர்களில் ப்ரேமலாதாவின் அன்பான அழைப்பினாலே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ப்ளஸ்டூ வரை என்னுடன் படித்தவர்கள் இவர்கள். பாடும் வானம்பாடி வஹிதாஜான், ப்ரேமலதா, அமுதா. இவர்களுடன் கலந்து உறவாடி வந்தேன். 

ப்ரேமலதாவின் மருமகள் சங்கீதாவின் துணையுடன் என்னை முகநூலில் தேடிப்பிடித்தாள் ப்ரேம் என்று நான் அழைக்கும் லதா :) இன்னும்பலரையும் ஒன்றிணைத்துள்ளாள். ப்ளஸ்டூவில் ஏ மற்றும் பி செக்‌ஷனில் படித்த தோழிகளான மிஸ்ஸி, சித்ரா, முத்துலெக்ஷ்மி, ராமலெக்ஷ்மி, வசந்தி, அமுதா, தேன்மொழி, சசிகலா ஆகியோரையும். மற்றையோரையும் தேடிக் கொண்டே இருக்கிறாள். :)

அடுத்து வசந்தி வீட்டுக்கும் சென்று வந்தோம். எங்கள் பள்ளிக் காலக் கதைகள் சுவாரசியமானவை மற்றும் எங்களுக்கானவை. சமயம் கிடைத்தால் அந்தப் பதின்பருவ மன்னார்குடி நினைவுகளை இன்னொரு இடுகையில் பகிர்கிறேன் :) 

4 கருத்துகள்:

  1. என்னுடைய ஊரும் ராஜ மன்னார்குடி தான்! அதே செயிண்ட் ஜோசப் பள்ளியில் தான் நானும் படித்தேன். தெப்பக்குளம் மேலக்கரையில் தான் நாங்கள் இருந்தோம். பள்ளி செல்கையில் உப்புக்காரத்தெரு, தாமரைக்குளம், ஊமையன் சந்து, செண்பகா தியேட்டர் வழியாக பள்ளி செல்வோம். மலரும் நினைவுகள் என்றைக்குமே இனிமை தான்!!

    பதிலளிநீக்கு
  2. அஹா! அருமை மனோ மேம். நாம் செயிண்ட் ஜோசப் பள்ளிக்கு ஒரு அலும்னி உருவாக்கலாமா

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...