எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 மே, 2023

6.அதிக இரத்தப் போக்கும் இரத்த சோகையும்

 6.அதிக இரத்தப் போக்கும் இரத்த சோகையும்


மாதவிடாய்க் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய அன்றாடக் கடமைகளைச் செய்யவிடாமல் முடக்குவதில் அதிக இரத்தப் போக்கும் பங்கு வகிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு இரத்தப் போக்கு மற்றும் அது அதிக நாட்கள் நீடித்தால் அதை மெனோராஜியா என்று குறிப்பிடுகிறார்கள். மெட்ரோராஜியா என்றால் இரு மாதவிடாய்களுக்கு இடையிலும் ரத்தப் போக்கு ஏற்படுதலைக் குறிக்கிறது. அதிக அளவு இரத்த இழப்பால் இரத்த சோகையும் ஏற்படுகிறது.

மாத விலக்கின் போது அதிக இரத்தப் போக்கினால் அடிக்கடி நாப்கின்களை மாற்ற வேண்டிவரும். இதனால் தொடைகளில் உராய்வு மற்றும் அசௌகரியம் ஏற்படும். எங்கே சென்றாலும் இரண்டுமணி நேரத்திற்கு ஒருமுறை ரெஸ்ட் ரூம் சென்று பேடை மாற்றவேண்டி வருவதால் வெளியே செல்வதே சிரமம் கொடுப்பதாய் இருக்கும். இதனால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும்..

ஏனெனில் இரத்த இழப்பால் இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து இரத்த சோகையை ஏற்படுகிறது. மேலும் பலவீனம், சோர்வு, மூச்சுத்திணறல் ஏற்படலாம். இரண்டு பேட்கள் அணியும் நிலையும் இரவில் எழுந்து பேட்களை மாற்றும் நிலையும்கூட சிலருக்கு ஏற்படலாம். ஏழு நாட்களுக்கு மேல் நீடித்தாலும், இரு மாதவிடாய்களுக்கு நடுவே இரத்தப் போக்கு ஏற்பட்டாலும், கருச்சிதைவு, கர்ப்பத்தடைக்குப் பின் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டாலும், மெனோபாஸுக்குப் பின் முழுமையாய் முழுக்கு நின்றபின் இரத்தப் போக்குக் காணப்பட்டாலும்  மகளிர் மருத்துவர் உதவியை நாடுவது நல்லது.

முதல் காரணம் ஹார்மோன் பிரச்சனைகள், இதனால் மாதவிடாய் காலத்தில் அந்த ஹார்மோன்கள் சமநிலை இழந்து கருப்பையின் புறத்தோலைக் கடினமாக்கி அதிக இரத்தப் போக்குக்கு வழிவகுக்கிறது. கருப்பையிலிருந்து ஒவ்வொரு மாதமும் கருவுறாத முட்டை வெளியேறும்போது அது ஹார்மோனின் சமநிலையை இன்னும் பாதிக்கிறது. இத்துடன் கருப்பையில் வளரும் பாலிப்கள் எனப்படும் நார்த்திசுக்கட்டிகளும், ஃபைப்ராய்டுகள் எனப்படும் சதைக்கட்டிகளும் அதிக இரத்தப் போக்கை ஏற்படுத்தி அதை நீண்ட காலம் நீடிக்க வைக்கின்றன. IUD எனப்படும் சில கருத்தடை சாதனங்கள் பொருத்தப் படுவதாலும் இரத்தப்போக்கு அதிகமாகிறது. 

கர்ப்பம் தரித்தபின் கருவானது கருப்பையின் உள்ளே வளராமல் கருப்பைக்கு வெளியே வளர்ந்தால் அதற்கு எக்டோபிக் கர்ப்பம் என்று பெயர். இப்படி அமைந்தால் குழந்தை பெரிதாகும்போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இது சாத்தியமான கர்ப்பம் அல்ல. இதன் அறிகுறிகளாலும் அதிக இரத்தப் போக்கு ஏற்படும். கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது வயிற்றில் குழந்தை துரதிர்ஷ்டமாக மரணித்தாலோ கூட அதிக இரத்தப் போக்கு ஏற்படலாம். அரிதாக சில பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் அல்லது கருப்பைப் புற்றுநோய் பாதித்தாலும் அதிகப் போக்கு ஏற்படும்.

இரத்தத்தை நீர்க்க வைக்கும் சில மருந்துகள் அல்லது வீக்கத்தை எதிர்த்துப் போராடும் மருந்துகள் எடுத்துக் கொள்பவருக்கும், எண்டோமெட்ரியோசிஸ், தைராய்டு, இடுப்பு அழற்சி நோய், சிறுநீரகநோய், கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கும், ஹார்மோன்கள் அடிப்படையிலான பிறப்புக் கட்டுப்பாடு, கிளமிடியா போன்ற சில பாலியல் நோய்த்தொற்றுகள், கருப்பை வாய் அல்லது கருப்பையில் நோய்த்தொற்று, வான் வில்பிராண்ட் எனப்படும் இரத்த உறைதல் கோளாறு நோய் உள்ளவர்களுக்கும், தொற்று அல்லது காயம் உள்ளவர்களுக்கும் இவ்வாறு அதிகப் போக்கு ஏற்படலாம். 


இதற்கு அல்ட்ராசவுண்ட், பேப் சோதனை மற்றும் கருப்பைத் திசு மாதிரியை எடுத்துப் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் மாத்திரைகள், மாதவிடாய் ஓட்டத்தைக் கட்டுக்குள் வைக்கும் மாத்திரைகளை இதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அறுவை சிகிச்சை மூலம் கருப்பைப் புறணியின் அடுக்கை நீக்குதல், நார்த்திசுக்கட்டிகளை நீக்குதல் அல்லது சுருக்குதல், மேலும் கருப்பை நீக்கம் மூலமும் கடுமையான போக்கு கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

மெனோராஜியா எனப்படும் அதிக இரத்தப்போக்கு அதிக இரத்த இழப்பு, இரத்த சோகை, இரும்புச்சத்துக் குறைபாடு, வெளிறிய தோல், பலவீனம், சோர்வு, கடுமையான வலி ஆகிய சிக்கல்களை உண்டாக்குகிறது. இரு மாதவிடாய்களுக்கு இடையே அவ்வப்போது காணப்படும் இரத்தப் புள்ளிகள் ஸ்பாட்டிங் எனப்படுகின்றது. பெரி மெனோபாஸ் என்னும் நிலையாலும் ஸ்பாட்டிங் ஏற்படுகிறது. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் நிலையால் ஒழுங்கற்ற மாதவிடாய், ஸ்பாட்டிங் எனப்படும் புள்ளிகள் உண்டாகின்றன. இத்துடன் அடிவயிற்றில் வலி, தலைவலி, காய்ச்சல், வெளிறிய தோல், அடிக்கடி இரத்தம் கசிதல், மாதவிடாய் நின்றபிறகும் இரத்தப் போக்கு, கர்ப்பமாய் இருக்கும்போது இரத்தப் போக்கு, 70, 80 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு ஆகியவற்றுக்கு மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அதிக இரத்தப் போக்கின் காலம், அளவு ஆகியவற்றை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இரத்தப் பரிசோதனைகள், டிரான்ஸ்வஜைனல் அல்ட்ராசவுண்ட் மற்றும் எண்டோமெட்ரியல் பயாப்ஸி மூலம் சிக்கல்களைக் கண்டறிந்து அவர்கள் தகுந்த மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்கள். 

அதிக இரத்தப் போக்கினால் உடலில் துர்நாற்றம் ஏற்படும். எனவே  சுத்தமான நாப்கின்களை உபயோகித்தல், ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை நாப்கின்களை மாற்றுதல் வேண்டும். பார்லி வாட்டர் – கொதிக்க வைத்த நீர் சிறுநீரைச் சீராக்கும். ஓரளவு தண்ணீர் குடித்தல். தளர்வான ஆடை அணிதல் வேண்டும். ஹைஹீல்ஸ் போடுவதால் கருப்பையைப் பாதிக்கும். விளம்பரங்களில் காட்டுவதுபோல்உடற்பயிற்சி,நடைப்பயிற்சி செய்யக் கூடாது.

மாதவிலக்கின் போதுகடுமையான வேலைகளைத் தவிர்த்தல் நலம். கடுமையான உஷ்ணத்தின் முன் நின்றால் தீட்டு அதிகமாகும். இந்நாட்களில் நரம்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருக்கும் எனவே உணர்ச்சி வசப்படுதலைத் தவிர்ப்பது நல்லது. ஓய்வும் உறக்கமும் தேவை. காஃபி டீ எண்ணெய், வாசனைப் பொருட்களைக் குறைத்து உண்பது நல்லது. விலக்காகும் நாட்களில் கத்திரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. மஞ்சள் பூசிக்குளித்தல் நல்லது. காலில் மெட்டி அணிவது கருப்பையைப் பலப்படுத்தும். The stress of life என்ற நூலில் ஹான்ஸ் ஸெல்யீ என்ற மருத்துவர் மன இறுக்கமே இரத்த அழுத்தம், குடற்புண் போன்ற (கருப்பை நோய்கள்) கோளாறுகளுக்குக் காரணம் என்று எழுதி உள்ளார்.

இரத்த சோகையை நீக்கும் உணவு வகைகளில் முதலாவது சிவப்பரிசி  அவல் பொரி உருண்டை.தேவையானவை, சிவப்பரிசி அவல் – கால் கிலோ, பொட்டுக்கடலை – ஒரு கைப்பிடி, வேர்க்கடலை – 1கைப்பிடி, எள் – 1 டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை. வெல்லம் – 75 கி. நெய் – சிறிது. கடாயில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எள் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒரு பேசினில் போடவும். சிவப்பரிசி அவலை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரிந்ததும் பேசினில் இருக்கும் மற்றவற்றோடு போட்டு ஏலப்பொடி தூவி வைக்கவும். வெல்லத்தை நைத்து சிறிது தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகு காய்ச்சவும். பேசினில் இருக்கும் பொரி, கடலை எள் மிக்ஸரில் போட்டு கரண்டிக் காம்பால் கிளறிவிட்டு நெய் தொட்டு உருண்டைகள் பிடித்துக் கொடுக்கவும்.

இரத்த சோகையை நீக்கும் இன்னொரு உணவு. இரும்புச் சத்து மிகுந்த கோங்குராக் கீரையில் செய்யப்படும் கோங்குரா சட்னி . புளிச்ச கீரைப் பச்சடின்னும் சொல்றாங்க. . புளிச்ச கீரை ரெண்டு கைப்பிடியை ஆய்ந்துகழுவி ., எண்ணெயில் வதக்கி வைக்கணும். பிறகு இன்னொரு வாணலியில் இரண்டு கைப்பிடி மிளகாய்., ரெண்டு டேபிள் ஸ்பூன் தனியா. கட்டிப் பெருங்காயம் பெரிய துண்டு., எல்லாம் வறுத்து ., உப்பும் புளிச்ச கீரையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து., பின் கடாயில் நிறைய எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்துச் சேர்க்க வேண்டும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவேண்டும்.

3 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நன்றி ப்ரபா

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...