எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 டிசம்பர், 2022

கருப்பை நம் உயிர்ப்பை - 1. பெண்ணின் உடல் நலம்.

கருப்பை நம் உயிர்ப்பை


பெண்ணின் உடல் நலம்.

பெண்ணின் உடல் நலம் என்பது ஒரு குடும்பத்தின் உயிர்நாடியைப் போன்றது. பெண்ணின் உடல் நலம் சீராக இருந்தால்தான் குடும்பம் சிறப்பாக நடக்கும். ஒவ்வொரு மனிதரும் பெண்ணின் உடல் அமைப்புப் பற்றியும் அவளின் உடல் உபாதைகள் பற்றியும் தெரிந்துகொள்வது இன்றியமையாதது. இன்றும் குடும்ப அமைப்பு சிறந்தோங்கும் இந்தியச் சூழலில் பெண்ணைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது மட்டுமல்ல, பெண்ணைப் பேணிக்காப்பதும் அவசியம்.

கருப்பை நமது உயிர்ப்பை. ஏன் அப்படி? பத்து மாதம் ஒரு கருவை உயிருடன் சுமந்து உலகுக்கு அளிப்பதாலே அது உயிரைத் தாங்கி இருக்கும் உயிர்ப்பை. ஒரு பெண் பூப்படைந்தவுடனே சில வீடுகளில் திருமணத்தை நடத்தி விடுவார்கள். ஒரு மலர் மலர்ந்தவுடன் கசக்கி முகர்வதைப் போன்றது அது. பூப்படைந்து ஆறு வருடம் கழித்த பின்புதான் அப்பெண்ணின் கருப்பை குழந்தையைச் சுமக்கத் தேவையான அளவு பக்குவப்படும். அப்போதுதான் பிறக்கும் குழந்தைகளும் எந்த ஊனமும் இல்லாமல் முழுமையான குழந்தையாய்ப் பிறக்கும்.

  

சிறுகுழந்தைகளாயிருக்கும்போது எந்தக் குழந்தைக்கும் ஆண் பெண் பேதம் தெரிவதில்லை. ஆனால் பருவ வயது வர வர ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் வித்யாசம் கண்கூடாகத் தெரியத் துவங்குகிறது. பருவமடைவதற்கான ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்குவதால் பெண்ணுக்கு மார்பகங்கள் வளர்ச்சி அடைகின்றன. அக்குள்களிலும் அந்தரங்க உறுப்புகளிலும் முடி வளரத் தொடங்குகிறது. சிலருக்கு முகப்பரு கூட வரும்..

பருவம் எய்துதல் என்பது பத்து வயது முதல் பதினைந்து வயது அதற்கு மேலும் கூடத் தொடர்கிறது. இப்போது எட்டு வயதுப் பெண் குழந்தைகளும் கூடப் பருவமெய்தி விடுகிறார்கள். இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், சமூகவலைத்தளங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மாசுபட்ட சுற்றுச் சூழல், உடல் பயிற்சி இன்மை, ஓபிசிட்டி எனப்படும் உடற்பருமன், சுரப்பிக் கோளாறுகள் ஆகியன இதற்கான காரணிகள்.  

பருவவயதில் பருவமடையுமுன்பு சில மாதங்கள் வெள்ளைப் படுதலும் அதன் பின் ரத்தப் போக்கும் ஏற்படும். வெள்ளைப் படுதல் ஏற்பட்டாலே சீக்கிரம் பூப்படைந்து விடுவார்கள் என்பதைக் கண்டு கொள்ளலாம். இதிலும் அபூர்வமாக சில வயதான பெண்கள் பூப்படையவே இல்லை எனக் கேள்விப்படுவோம். பருவமடைந்தபின் அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் மாதாந்திரத் தீட்டு ஒழுங்காக வரும். ஆனால் சில குழந்தைகளுக்கு அடுத்த தீட்டு வரவே ஒரு வருடம் ஆகிவிடும்.


பூப்படைதலை ப்யூபர்ட்டி என்றும் மாதாந்திரத் தீட்டை எஸ்ட்ரஸ் சைக்கிள் எனவும் சொல்கிறோம். இதிலும் அதீத ரத்தப் போக்கு, குறைந்த ரத்தப் போக்கு, சூதகக் கோளாறுகள், கடுமையான வயிற்று வலி, கால் வலி, தலைவலி, உடல் உஷ்ணம், அசதி, வலி மிகுந்த ரத்தப் போக்கு, இடுப்பு அழற்சி போன்றவை ஏற்படும்.  

முதன் முதலில் வெள்ளைப் படுதலைக் காணும் பெண் குழந்தைக்கு பயம் ஏற்படும். அது பருவடைவதற்காக ஹார்மோன்கள் உடலைத் தயார்ப்படுத்தும் நிகழ்வு என எடுத்துக் கூற வேண்டும். அவர்கள் அச்சத்தைப் போக்க வேண்டும்.

தீட்டு சமயத்தில் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தாலும், ரத்தக் கசிவாலும் தன் உடலையே அருவருப்பாகப் பார்க்கத் தோன்றும் சில பெண்களுக்கு. பெண்ணுறுப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்வது,  மாதாந்திர விலக்கு சமயத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை எல்லாம் கற்பிக்க வேண்டும்.

பெண்களுக்கே தன் உடல் பற்றிய முழுமையான தெளிவு இல்லை. பெண் உறுப்புப் பற்றியும் அதனை முறையாகத் தெரிந்து சுகாதாரம் பேணுவது பற்றியும் கற்பித்தால் ஒவ்வொரு பெண்ணுக்கும் பூப்படைதல் என்பது பற்றிய பயம் இருக்காது.

மேலும் பெண்களுக்கு ஏற்படும் எண்டோ மெட்ரியோசிஸ், கருப்பை நார்த்திசுக் கட்டிகள், நீர்க் கட்டிகள், பெண்ணோயியல், புற்று நோய், இண்டர்ஸ்டீடியல் சிஸ்டிடிஸ், பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், சிறுநீர்ப் பாதைத் தொற்றுகள், நீர்க் கடுப்பு, ரத்த சோகை, கருப்பை வளைந்திருத்தல், கருமுட்டைகள் வளர்ச்சி, பிரசவத்தின் போது இடுப்பெலும்பு விரிவு, பெண்மைக் குறைபாடு, பெண்ணுக்கு சினை முட்டைகள் இல்லாமலிருத்தல், கருப்பைச் சுவர் தடித்திருத்தல், கருப்பை நோயால் பலவீனமாக இருத்தல்,மென்சஸ் சுழற்சி, மெனோபாஸ்,ஆகியவை ஏன் ஏற்படுகின்றன. அதை எப்படி எதிர்கொள்வது என்பதைக் கூறவே இந்த நூல். மேலும் ஆங்கில மருந்துகளின் பின் விளைவுகள், இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றிக் கூற விளைகிறேன். 

2 கருத்துகள்:

  1. வளர்நிலையில் உள்ள பெண் குழந்தைகளுக்கும் ஏனையோர்க்கும் பயனுள்ள பதிவு...

    பதிலளிநீக்கு
  2. நன்றி துரை சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...