எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 டிசம்பர், 2009

அந்தி மந்தாரை

நந்தினியோ குந்தவையோ
வானதியோ வஞ்சியரை
எதிர்பார்த்து நான்...

அட்ட வீரட்டானத் தலங்களில்
அர்ச்சனைத் தாம்பாளங்களில்
அருள்மொழிவர்மன் அள்ளித் தூவ ...

வானதியும் கூட...
புன்னகை தேவதை...
பூக்களின் அரசி...

வெள்ளி, 4 டிசம்பர், 2009

முத்துச் சிப்பி

நாட்காட்டியோ மணிகாட்டியோ
திசைகாட்டியோ இல்லாத
ஊர்த்துவப் பொழுது...

தாம்புக்கயிறறுந்த குடம்
மெல்ல மெல்ல மூழ்குவதுபோல
உன் முத்த அலைகளுக்குள்...

கிணற்றைப்போல என்னை
விழுங்கிக் கொண்டிருந்தாய் நீ

வினோத மேகம் போல
என் உதடுகள்
மழை பொழியப் பொழிய
வெளுக்காமல் கறுத்து...

மீண்டும் மீண்டும்
மழை தேடும்
சாதகப்பறவையாய் நீ ...

உன் உதடுகளுக்குள்
சிப்பிக்குள் சிக்கிய
நன்னீர் சொட்டுப் போலும்
அன்னியப் பொருள் போலும்
இறுக்கி விளைந்த முத்தாய்
என் உதடு....

வியாழன், 3 டிசம்பர், 2009

இசைவு பிடிமானம்

நிலவு மரத்திலிருந்து
நட்சத்திரங்கள் விடியலில்
பழுத்த இலையாய்
உதிர்ந்து....

ஜன்னல் கம்பிகளுக்குள்
பறக்கவியலா பறவையாய் ...
வீடென்ற கூட்டுக்குள்...

குழந்தைகள் பறவைகளாக
பரந்த வானத்தில்
விரிந்த இறக்கைகளுடன்....
வெறுங்கூடாகிப் போனது வீடு....

முந்தானைக்குள்
முடிச்சிட்டு இருந்தேன்
தொட்டுப் பார்த்தால்
வெறும் முடிச்சு மட்டும்...

இராணித்தேனீயும்
வேலைக்காரத்தேனீயுமாய் நானிருக்க
ஆண்தேனீக்கள் அலைச்சலில்
அவரவர்க்கான தேடலில்....

புதன், 2 டிசம்பர், 2009

நட்பு

ஊர்விட்டு ஊர்
நாடுவிட்டு நாடு
தேசம்விட்டு தேசம் ஏன்
ஜென்மம்விட்டு ஜென்மம்
கடந்தும் கூட தொடரும்
கால வர்த்த பரிமாணம்
அற்றது நம் நட்பு ...

பிரபஞ்ச செடியின்
சருகாகவோ
தளிராகவோ பூவாகவோ
மரித்துக்கொண்டும்
பூத்துக்கொண்டும் நாம்...

புத்தகங்களோ பூக்களோ
பழக்கூடையோ இனிப்போ ஏன்
ஒரு டீத்தூள் பாக்கெட்டோ கூட
கொண்டு எனைப்பார்க்க
எங்கிருந்தாவது வருகிறாய் நீ....

பாதியான உடலும் உணர்வும் கொண்டு
முழுமையடைய விரும்புவதாய்...

செவ்வாய், 1 டிசம்பர், 2009

நீர் தேங்கிக் கிடக்கிறது

நீர் தேங்கிக்கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்...

இலைச் சருகுகளால்
வசந்தகாலப் பூக்களால்
அர்ச்சிக்கப்பட்டு...

தென்றலில் குளித்துக்
குளிர்ந்து போன
நீர் தேங்கிக் கிடக்கிறது....

வழிப்போக்கருக்கு என்ன தெரியும்..?
வேர்களுக்குத்தான் தெரியும் ....
வாய்க்கால் சுனையென்று...

சுரந்து சுரந்து சுமந்து
சலித்துப் போய்
வாய்மூடிக்கொண்ட
நீர் தேங்கிக் கிடக்கிறது....

அட... அள்ளிப்
பருகத்தான் வேண்டாம்...
கொஞ்சம் கால் நனைத்தாவது
கலக்கிச் சென்றாலென்ன....?
Related Posts Plugin for WordPress, Blogger...