எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
1984 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1984 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

சத்துணவு கல்யாண வைபோகமே ! -- பார்ட் 7,8. ( நாடகம் ).



காட்சி – 7.

[ பனகல் பார்க்கில் ஒரு பூவரசமரத்தின் பின்புறம்.]

செந்தில்நாதன் :- வள்ளிநாயகி ! என்னைக் காதலிக்கின்றேனென்று நீ சொன்னாயே ? அது உண்மையா ?

வள்ளிநாயகி :- ஆமாம். ! நீங்கள் காம்பவுண்டுச் சுவரில் ஏறிய வீரத்தனத்தைப் பார்த்ததும் என் மனம் உங்கள்பால் நாடிவிட்டது. அந்த ஆசிரியரை நீங்கள் படுத்திய பாடு. ! அவர் உங்களை எவ்வளவு பணிவுடன் வணங்கினார் என்பதை நினைத்துப் பார்த்தாலே உங்களின் மதிப்பு புரிந்தது. மேலும் இரண்டு காலும் வீங்கிய நிலையில் நீங்கள் என் அப்பாவிடமும், அவர் திட்டிய போதிலும் மரியாதையாகப் பதிலளித்த உங்கள் குணம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.  ( என்கின்ற பாணியிலேயே வள்ளி பேசிக்கொண்டே போக இனிமேலும் கேட்டுக் கொண்டிருந்தால் தான் தலைமயிரைப் பிய்த்துக் கொள்ளப் போய்விடுவோம் என்று பயந்து போனான். )

செந்தில் நாதன். : - ஆமாம் .. ஆமாம். ( எனப் பதற்றத்தில் கூற ) 

[ பக்கத்தில் இருந்த புதரிலிருந்து அருணாசலம் வெளிப்பட்டு ]

அருணாசலம் :- ( கோபாசலமாக )  ஏண்டா டேய் ! என்ன ஆலுமா ஆலுமான்னு ஆமாஞ்சாமி போடறே !. கால் வீக்கம் கொறையறதுக்குள்ள என்ன காதல் வசனம் வேண்டிக்கிடக்குங்குறேன். உன்னை உதைச்சா..

[ என்று கூறி அவனைப் பிடிப்பதற்குள் அவன் விம்மிப் புடைத்த வீரக்கால்களுடன் பாக்கின் சுவரைத் தாண்டுகின்றான்.

அருணாசலம் :- ( கருணாசலமாக ). ஏம்மா, இவனைப் போய்க் காதலிக்கிறியே ! சரியான கோழைப்பய ! அன்னக் காவடிம்மா இவன் ! ( என்க )

வள்ளிநாயகி :- ( நாணத்துடன் ) போங்கப்பா ! பெரிய வீரராக்கும் அவர் ! அவரைப் போல இந்தக் காம்பவுண்டுச் சுவரைத் தாண்டுங்களேன் பார்ப்போம். !. அவர் நீங்க பெரியவர்னு ரொம்ப மரியாதை குடுக்கிறார்பா. !

புதன், 6 ஏப்ரல், 2016

சத்துணவு கல்யாண வைபோகமே ! பார்ட் 4 - 6 ( நாடகம் )



 காட்சி – 4.

[சத்துணவுக் கூடம் ]

[ ஜான் அமல் கென்னடி உருட்டி உருட்டித் தர பகாசுரன் மாதிரி உணவை விழுங்கிக் கொண்டிருக்கின்றான். ஏறக்குறைய பெரிய அண்டாவில் இருந்த உணவு தீர்ந்துவிட்டது. கொஞ்சம் சோற்றுப் பருக்கைகள் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டு இருந்தன. ]

ஜான் அமல் கென்னடி :- ( தனக்குள் ) முனியம்மா வந்தா என்னைப் பார்வையாலே எரிச்சிடுவாளே ! பயம்மாயிருக்கே !

 ( சத்தமாக ) ஸார் ! நீங்க தப்பா நினைச்சுக்கப்படாது. உணவு அவ்வளவுதான். !. ஸார் ஒரு விஷயம் ! நீங்க அந்த விஷயத்தைப் பத்தி மறந்துடுங்க. ! நானும் மறந்துடுறேன். ! தயவுசெய்து யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. !

[ என்றவரைப் பார்த்து ]

செந்தில்நாதன் :- ( தனக்குள் ) சரியான லூசாயிருப்பார் போலிருக்கே !. அன்றைக்கு ஒரு கடையில் நான் கடைக்காரனுக்குத் தெரியாமல் பொட்டுக்கடலையை அமுக்கிப் பையில் போட்டுக்கிட்டு ஒவ்வொண்ணாத் தின்னுகிட்டு வர்றதைப் பார்த்தாரே. அதனால இவர் அவன்கிட்ட சொல்லிடுவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தா இவர் என்கிட்டேயில்ல பயப்படுகின்றார். நம்மளுக்கு விஷயம் ஒண்ணும் தெரியாட்டாலும் சும்மா நடிக்க வேண்டியதுதான்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

சத்துணவு கல்யாண வைபோகமே ! -- பார்ட் 1 - 3. ( நாடகம் )



சத்துணவு கல்யாண வைபோகமே !

காட்சி – 1.

[அனந்த ராம விலாஸ் தொடக்கப் பள்ளியின் சத்துணவுக் கூடம். திருமதி முனியம்மா சத்துணவுக் கூடத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றாள். முனியம்மாவின் ‘பற்களை விடக் கூரானது நாக்கா அல்லது நாக்கை விடக் கூரானது பற்களா’ என்கின்ற ஆராய்ச்சி செய்து கொண்டு இருப்பவர் சத்துணவு அமைப்பாளர் ஜான் அமல் கென்னடி ]

ஜான் அமல் கென்னடி : அம்மா, முனியம்மா கொஞ்சம் அந்த இடத்தை நல்லாப் பெருக்கேன். குழந்தைகள் உக்கார்ந்து சாப்பிடற இடம்.

[ஹூங்காரம் செய்துகொண்டு கையில் விளக்குமாற்றுடன் திருமதி முனியம்மா தன் திருமுகத்தைக் காட்டியதுதான் தாமதம் ஜான் அமல் கென்னடியின் தாத்தா முதல் பிறக்கப்போகும் பேரன் வரை அனைவரும் அவளின் திருவாயால் வாழ்த்தப்பட்டார்கள். ]. பிறகு

முனியம்மா : ஏன்யா ! பெருக்குறது கண் தெரியல. இது நொள்ளை அது நொட்டைங்கிறியே ! உன் ரகசியத்தை அம்பலப்படுத்திடுவேன். நேராய்ப் போய்ச் சொன்னேன்னா அப்புறம் நீ படும் பாடு. என்னய நீ அதிகாரம் பண்றியா ? உன்னய எப்பிடிப் பார்க்கணுமோ, எங்க பார்க்கணுமோ, அங்க பார்த்துக்கறேன். அறிவுகெட்ட மூதி , சோமாறி .

[இப்படியாக முனியம்மா பல சில சொல்லக்கூசும் வார்த்தைகளை வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியில் அடுக்கு மொழியில் இரைச்சலிட ,’டங், டங்’ என்ற பள்ளியின் மணீ ஒலிக்கிறது. ]

முனியம்மா : ( கோபமாக ) ஹூம். ! இப்ப பெல்லடிச்சிடுச்சு. மீதியை அப்புறம் திட்டறேன். (வறட் வறட் என்று பெருக்கிக் குப்பையை ஜான் அ. கென்னடியின் முகத்தில் வீசுவதுபோல் தள்ளிவிட்டுச் செல்கிறாள். )

{திரை விழுகிறது.}

காட்சி – 2.
பிள்ளைகள் கசமுசவென்று சத்தம்போட்டுக் கொண்டே அமர்கின்றனர்.

மாணவன் – 1. இன்னிக்கு என்னோட பிளேட் கொண்டு வரலை.

சங்கரன் :- ஐயோ எங்க மாமா இங்க வந்துடுமே !.அதுக்குள்ள சாப்பிட்டுடணுமே ! லபக் லபக் என்று விழுங்குகிறான்.

{திரை }.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

பனிப்பறவைகள்.

பனிப்பறவைகள்:-
**********************************
“வான ராஜ்ஜியத்தில்
ஒளியரசனை வரவேற்கக் காத்திருக்கும்
வைகறைத் தாரகையே
தனிமை உனக்கு மட்டும் உரிமையல்ல.
அதன் பங்குதாரி நானும்தான். “

என்று தன் டயரியில் எழுதி மூடிவைத்தாள் பவித்ரா, அம்மா நாலாவது தடவையாக “ பவித்ரா. இங்கே வாயேன்.” என்று அழைத்துக் கொண்டிருந்தாள். அடுத்த தடவை கூப்பிடாமல் நேராக ஹாலுக்கு வந்துவிட்டாள்.

வரும்போதே எண்ணெய்ச் சட்டியில் போட்ட கடுகு போல படபடவென்று பொரிந்து தள்ளிக்கொண்டே வந்தாள். “ பெண் பிள்ளைன்னா எல்லாம் தானாத் தெரியணும். ஏதாடா அம்மா ஒத்தையா கஷ்டப்படுறாளே அவளுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவோம் இல்லைன்னா பேங்கில் போய் பணம் எடுத்துக் கொண்டு வருவோம். ஒண்ணும் தெரியாது. என்னவோ எந்நேரம் பார்த்தாலும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் வைச்சுக்கிட்டு இராவும் பகலும் விடியக்காலைலயும் நட்சத்திரத்தையும் பறவைக்கூட்டத்தையும் மரத்தையும் மட்டையையும் பார்த்து என்ன எழுத வேண்டிக் கிடக்குங்குறேன்.  சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணிப்புடுவம்னாலும் ஒருத்தன் அகப்பட மாட்டேங்குறான்.


திங்கள், 7 ஏப்ரல், 2014

நிழல்களை எரித்த நிஜங்கள்.



நிழல்களை எரித்த நிஜங்கள்:-
===============================

சந்தானம். சந்தானம். ஹூம் இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கின்றேன். நல்ல பரிச்சயம் கூட. எங்கே எங்கே .. என்று பாலகுமாரனின் ”மௌனமே காதலாயில்” வந்த  கதாநாயகன் பெயரைப் படித்துவிட்டு மனதினுள் தேடினாள் சுசீ.

“ஹாங்.. வந்துவிட்டது. கோ எஜுகேஷனில் எட்டாப்பூப் படிக்கும்போது எதுக்கெடுத்தாலும் என்னோட போட்டி போடுற சந்தான ராமன். வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு, வெள்ளையாய் அணிந்து கொண்டு, வெள்ளையாய்க் காண்பித்துக் கொண்டு எதுக்கெடுத்தாலும் படிப்பு, டிராமா, விளையாட்டுப் போட்டி அத்தனையிலும் போட்டி போடும் சந்தானம். தினம் அழகாய் உடையணிந்து கொண்டு நெற்றியில் கீற்றுப் பிறையாய் சந்தனத்துடன் வரும் சந்தானம்..

திங்கள், 24 மார்ச், 2014

புத்தக வாசம்:-



புத்தக வாசம்
==================

கண்ணை மூட முடியவில்லை. அந்தப் புத்தக நிலையத்தின் வாசம் முழுக்க உடம்பெல்லாம், மனசெல்லாம், அப்பிக் கொண்ட மாதிரி இருந்தது. தேடித் தேடி எடுத்த புத்தகம் இது. பன்னிரண்டு ரூபாய் முட்ட முழுசாய். என்னுடைய தகுதிக்கு அது அளவுக்கு மீறியதுதான். அப்பா பணம் அனுப்புவது டியூஷன் ஃபீஸுக்கும் மெஸ்ஸுக்கும்தான்.

அதிலேயும் ’மில்க்கும் எக்கும்’ வாங்காமல் இப்பிடித் தகிடுதித்தம். அப்பா வாராவாராம் ”ஏம்மா எக்ஸ்ட்ராஸ் எல்லாம் எடுக்குறியா.?”. ஓ.. ரெகுலரா எடுக்குறேம்பா “ . ”பிள்ளை மெலிஞ்சுக்கிட்டே போகுது, முடியும் இப்பிடிக் கொட்டுதே ”. தனக்குக் கவலைப்பட ஆளிருப்பதாலேயே வெளியில் ஒரு நமுட்டுச் சிரிப்பு உதிர்க்கும்.

அம்மாவுக்குத் தெரியும் நான் பாங்கில் பணம் போடுவது. ரொம்ப நாள் ஆசை. நாலாங்கிளாசிலிருந்தே ’புத்தகக் கடையிலிருக்கிற அத்தனை புத்தகத்தையும் வாங்கிவிட வேண்டும். ‘. பள்ளிக்கூடத்திலேயே வருடா வருடம் புது நோட், புக்ஸ் எல்லாம் பீஸ் கட்டி வாங்கும்போது விடிறி அடிப்பதாய் ஒரு கையில் பிடித்து மறுகையால் படபடவென்று பிரித்து மூக்கருகில் வைத்து அத்தனை புத்தகங்களையும் சலிக்காமல் வாசம் பார்ப்பேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...