எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 டிசம்பர், 2013

படிகளும் புள்ளிகளும்.

உச்சியைப் பார்த்ததும்
திகைப்பாய்த்தானிருந்தது.
கண்குவித்து
ஒவ்வொரு படியாய்
நகரத் துவங்கியதும்
அடுத்த படியே தேடலானது.
ஒரு சில படிகளில்
ஓய்ந்து அமர்வதும்

உச்சியைப் பார்த்து
பெருமூச்சுவிடுவதும்
கீழே பார்த்து பெருமிதப்படுவதும்

இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம் என்று
மூச்சைத் தேற்றிக் கொள்வதும்
முழங்காலைத் தடவிக் கொள்வதுமாய்
தொடர்ந்தது மலைப் பயணம்.
படிப்படியாய்க் கடந்து
பச்சையம் படர்ந்த வயல்.
பொங்கிச் சிதறும் அருவி
ஓவிய மேகங்களோடு உலவி
மலையுச்சி அடைந்தவுடன்
எல்லாப் பக்கங்களிலிருந்தும்
வீசத் தொடங்கியது
விடுதலைபெற்ற காற்று.
உச்சிதொடும் பயணத்தில்
வெற்றியடைந்ததும்
கீழிருப்பதெல்லாம் புள்ளியாய்த் தெரிய
மலையுச்சியில் தானும் ஒரு புள்ளிதானென
கற்பித்துக் கழுவிச் சென்றது
பெய்யத் துவங்கியிருந்த பெருமழை.
எங்கிருந்தாலும் தாங்களும் புள்ளிகள்தானென
புன்னகைத்துக் கொண்டிருந்தன
தூரத்து நட்சத்திரங்கள்.


டிஸ்கி:- இந்தக் கவிதை நவம்பர் 1 - 15 , 2013 தீபாவளி அதீதம் இஷ்யூவில் வெளிவந்தது.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...