எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 நவம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். சாந்தி மாரியப்பன் -- மலைத்தேனும் மாத்தேரனும்.

அமைதிக்குப் பெயர்தான் சாந்தி. இந்தப் பாட்டை 700 தரமாவது முணுமுணுத்திருப்பேன். என் பள்ளி நட்பிலிருந்து இன்று வரை நிறைய சாந்திகள் என்னைச் சுற்றி. இந்த சாந்தி அமைதி அதே சமயம் கொஞ்சம் கலகலப்பும் கூட. 

வலை உலக சகோதரிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சகோதரி அமைதிச்சாரல் என்ற சாந்தி மாரியப்பன். அவர் எடுக்கும் புகைப்படங்கள் மட்டுமல்ல. சிறுகதைகளும் சிறப்பானவை. அவர் எழுதும் சமையல் குறிப்புக்கள் ருசிகரமானவை. அவர்கிட்ட சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி.

///உங்க கணவரோட போன ஊர்ல மறக்க முடியாத ஊர் எது.? ஏன் ?///

யக்கோவ்.. எதைச்சொல்ல எதை விட . ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு விதத்துல மறக்க முடியாததுதான்னாலும் மாத்தேரன் சம்திங் ஸ்பெஷல்.. நாலஞ்சு இடுகையாவது வர்ற அளவுக்கு எளுதுவேன். அக்கா பாவமாச்சேன்னு சுருக்கிட்டேன். ப்ளாகில் போட்டோ வேண்டாமே ப்ளீஸ்..
அன்புடன், சாந்தி மாரியப்பன்.


அடக்கடவுளே ஃபோட்டோ இல்லாமலா . இத நான் எதிர்பார்க்கல..ஓக்கே சரி சொல்லுங்க அதையாவது பகிர்கிறேன் சாந்தி..:)


மாத்தேரன்..


சுற்றுலாவோ அல்லது சாதாரணப் பயணமோ.. நாம் சென்று வரும் ஒவ்வொரு ஊரும் தனது நினைவுத்தடங்களை நமது மனதில் பதித்து விடுகின்றன. பழைய நினைவுகளை அசைபோடும் தருணங்களில் பனியின் பின்னிருந்து மெல்ல மெல்ல புலப்படத்தொடங்கும் உருவங்களாய் ஒவ்வொரு ஊரின் நிகழ்வுகளும் மெல்ல மெல்ல ஒன்றைத்தொட்டு ஒன்றென மேலெழும்பி வருகின்றன. சுருக்கமாய்ச் சொன்னால் வாழ்நாள் முழுவதும் அந்த ஊர்களை மனதில் சுமந்து கொண்டுதான் நாம் திரிகிறோம். நிகழ்வுகளைப்பொறுத்தோ அல்லது ஏதாவதொரு காரணத்தாலோ சில ஊர்களின் மேல் நம்மையறியாமல் ஏதோ ஒரு பிடிப்பு ஏற்பட்டு மறக்க முடியாததாக்கி விடுகிறது. 


அவ்வப்போது சொந்தங்களின் ஊர்களுக்கும் ஒரு நாள் விசிட்டாக ஒரு சில ஊர்களுக்கும் போய் வந்திருந்தாலும், பக்காவாகத் திட்டம் போட்டு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு எங்குமே அதுவரையிலும் பிக்னிக் சென்றதில்லை. இந்தக்குறையை நிவர்த்தி செய்ய பக்கத்திலிருக்கும் மலைப்பிரதேசங்களான ‘மாத்தேரன்’ போகலாமா? அல்லது ‘மஹாபலேஷ்வர்’ போகலாமா என்று ஹாலில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தோம். மாத்தேரனுக்கு அதிகபட்ச ஓட்டுகள் விழுந்ததால் அந்த வாரத்தின் சனி,ஞாயிறை மாத்தேரனுக்கு நேர்ந்து விட்டோம். 

கிளம்புவது என்று முடிவானதும், ஹோட்டல்கள் எதிலும் தங்கவேண்டாம், அங்கிருக்கும் பேயிங் கெஸ்ட் வசதி கொண்ட வீடுகளில்தான் தங்குவது என்ற முக்கியமான முடிவும் எடுக்கப்பட்டது. அது எவ்வளவு சரியானது என்பதை அங்கே போனதும் உணர்ந்தோம். அழகான அந்தக் கிராமத்துச் சூழல் அட!!.. அட!! அட.. இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நகரத்துச் சூழலையே பார்த்துப் பழக்கப்பட்ட கண்களுக்கு அந்த மலைக்கிராமம் எத்தனையோ குளுமையாக இருந்தது 

 மாத்தேரனுக்குள் வாகனங்கள் எதையுமே அனுமதிப்பதில்லை. நம் ஊட்டி ரயிலைப்போன்று ஒரு பொம்மை ரயில் மட்டுமே நேரல் ஸ்டேஷனிலிருந்து மாத்தேரனுக்குத் தைரியமாகச் சென்று வருகிறது. மற்றபடி புகையில்லாக் கிராமம்தான் மாத்தேரன். சுற்றுலா வரும் பயணிகளுக்கு இடங்களைச் சுற்றிக்காண்பிப்பதற்காக நிறையக் குதிரைகளையும், மட்டக்குதிரைகளையும் கூட்டிக்கொண்டு வீரர்கள் வலம் வந்து கொண்டே இருப்பார்கள். போக வேண்டிய இடங்களைச் சொல்லி பேரம் படிந்தால் குதிரைகளில் பயணிக்கலாம். இல்லையெனில் மூட்டு பலமுள்ளவர்களுக்காக இருக்கவே இருக்கிறது 11-ம் நம்பர் பஸ்

 விடியற்காலையில் போய் இறங்கியதும் ஒரு வீட்டைப் பிடித்து, மூட்டை முடிச்சுகளை அங்கே போட்டோம். அட்டாச்ட் பாத்ரூமுடன் கூடிய படுக்கையறை மட்டுமே மொத்த ரூமும். வீட்டின் ஒரு பகுதியை இப்படி மாற்றியமைத்து வாடகைக்கு விடுகிறார்கள். போய் வர நமக்குத் தனி வழி. வீட்டுக்காரர்கள் ஒரு பக்கத்தில் வசிப்பார்கள். வேண்டியதைச்சொன்னால் சமைத்தும் கொடுப்பார்கள் என்பது முக்கியமான ஒன்று. காந்தாபோஹா,.. பாக்ரியுடன் கூடிய மஹாராஷ்ட்ரியன் தாலி என்று சிம்பிளான அதேசமயம் ருசியுடன் கூடிய சுத்தமான வீட்டுச்சாப்பாடு கிடைத்ததால் வயிறும் பாதிக்கப்படவில்லை. 

இயற்கை சிலம்பாட்டமாடும் மாத்தேரனில் ஒவ்வொரு இடமும் பார்க்க வேண்டியவைதான் என்றாலும் முக்கியமான ஒரு சில இடங்கள் மட்டும் பாயிண்ட்ஸ் என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்படுகின்றன. ஒரு சில பாயிண்டுகளில் பைனாகுலர் வைத்து மலையும் அடுத்துள்ள சமவெளியும் சுற்றுலாப்பயணிகளுக்குக் காண்பிக்கப்படுகின்றன. இந்த மலையிலிருந்து லோனவ்லாவை வெறும் கண்ணாலேயே பார்க்க முடியுமாம். அவசியம் பார்க்க வேண்டிய புண்ணியஸ்தலமென்று அங்கிருந்த கைடு எங்களுக்குக் காட்டியது ‘மனிஷா கொய்ராலாவின் பண்ணை வீடு’. 

மாத்தேரனில் ஒவ்வொரு பாயிண்டிலும் பாயிண்டுகளின் மேப்பும் செல்லும் வழியும் பேனராக வைத்திருக்கிறார்கள். ஆகவே அவ்வளவு பெரிய காட்டில் வழி தவறும் வாய்ப்பில்லை. ஒரு சில உள்ளடங்கிய பகுதிகளில் பழங்குடியினரும் வசிக்கிறார்கள். அவர்களது முக்கியத்தொழிலே தேனெடுப்பதுதான். மலைகளின் செங்குத்தான பகுதிகளில் தேனடைகள் இருக்கும் பகுதிகளில் நூலேணிகள் மூலமாகப் போய் தேனெடுத்து வருவார்களாம். ஒரு சில நூலேணிகள் அபாயகரமான கோணங்களில் தொங்கிக்கொண்டிருப்பதை பைனாகுலர் மூலம் பார்த்த போது நடுக்கமாக இருந்தது. மலைத்தேனுக்கு இருக்கும் கிராக்கிதான் இவர்களை இப்படிக் கஷ்டப்படச்செய்கிறது என்பதை அறிந்து மலைத்தேன். 

மாத்தேரன் சென்ற முதல் நாளில் கால்களில் வலுவிருந்ததால் நடந்தே நிறைய இடங்களைச் சுற்றிப்பார்த்தோம். மறுநாள் ‘இதுக்கு மேல முடியாது சாமி’ என்று கால்கள் எங்களைக் கெஞ்சியதால் குதிரைகளின் உதவியை நாட வேண்டியதாகி விட்டது. கால்வலி போதாதென்று குதிரைப்பயணம் கொடுத்த இடுப்புவலியும் சேர்ந்து கொண்டது தனிக்கதை 

இதற்குப்பின் கொடைக்கானல், ஊட்டி என்று எத்தனையோ பிரயாணங்கள் சென்று வந்து விட்டாலும் மாத்தேரனின் கிராமச்சூழல், விடியலின் விலகாத பனி, உச்சிக்கு ஏறிச்சென்றால் நட்சத்திரங்களையே பறித்து வந்து விடலாம் போன்ற உயரமான மரங்கள், சூரியனின் உறக்கம் கலைத்த கொக்கரக்கோ சேவல் என்று விடுமுறையுடன் கிராமச்சூழலையும் குழந்தைகளும் நாங்களும் அனுபவித்த நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன.. எப்போதும் இருக்கும். :)

---- நன்றிடா சாந்தி .. ஒரு அருமையான இடத்தை அறிமுகப்படுத்தியமைக்கு. அங்கே சென்றுவந்த ஒரு உணர்வு உங்க பகிர்வைப் படித்ததும் ஏற்படுது. வாழ்க வளமுடன்  :)

17 கருத்துகள்:

  1. மாத்தேரன் சென்ற முதல் நாளில் கால்களில் வலுவிருந்ததால் நடந்தே நிறைய இடங்களைச் சுற்றிப்பார்த்தோம். மறுநாள் ‘இதுக்கு மேல முடியாது சாமி’ என்று கால்கள் எங்களைக் கெஞ்சியதால் குதிரைகளின் உதவியை நாட வேண்டியதாகி விட்டது. கால்வலி போதாதென்று குதிரைப்பயணம் கொடுத்த இடுப்புவலியும் சேர்ந்து கொண்டது தனிக்கதை
    என்று சொல்லி இருப்பது அருமை

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான அறிமுகம், மாத்தேரன் என்ற அழகிய மலைக்கிராமத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள், வாய்ப்பு கிட்டினால் கண்டிப்பாய் போவோம்.. :)

    பதிலளிநீக்கு
  3. கட்டுரை நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. ’அமைதிக்குப் பெயர்தான் சாந்தி’ அவர்களின் பேட்டி அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான பகிர்வு... மாத்தேரனுக்கு சென்று வர ஆசை வந்துவிட்டது. தங்களது வரிகளினால் ...

    பதிலளிநீக்கு
  6. பகிர்வுக்கு மகிழ்ச்சி தேனக்கா.. நல்வாழ்த்துக்கள் சாந்தி.

    பதிலளிநீக்கு
  7. அமைதிக்கு மறு பெயர் சாந்தி நான் அடிக்கடி சாந்திக்கு மெயில் எழுதும் போது சொல்வது. மிக அருமையான பகிர்வு ..தேனக்கா

    பதிலளிநீக்கு
  8. இதற்குப்பின் கொடைக்கானல், ஊட்டி என்று எத்தனையோ பிரயாணங்கள் சென்று வந்து விட்டாலும் மாத்தேரனின் கிராமச்சூழல், விடியலின் விலகாத பனி, உச்சிக்கு ஏறிச்சென்றால் நட்சத்திரங்களையே பறித்து வந்து விடலாம் போன்ற உயரமான மரங்கள், சூரியனின் உறக்கம் கலைத்த கொக்கரக்கோ சேவல் என்று விடுமுறையுடன் கிராமச்சூழலையும் குழந்தைகளும் நாங்களும் அனுபவித்த நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன.. எப்போதும் இருக்கும். :)

    சாந்தியின் பேட்டி அருமை. அழகான சுற்றுலா தலத்தை சொன்னதற்கும் நன்றி.
    நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  9. பேட்டியை வெளியிட்ட தேனக்காவுக்கும் பாராட்டிய நட்புகளுக்கும் மிக்க நன்றீஸ் :-))

    பதிலளிநீக்கு
  10. அமைதிச் சாரல் சாந்தி அக்கா தனது பதிவு போல சிறப்பான ஒரு கட்டுரையே கொடுத்திருக்கிறார் தங்கள் சாட்டர்டே ஜாலி கார்னருக்கு...

    இருவருக்கும் வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  11. நல்ல பகிர்வு.... இந்த இடத்துக்கு போகத்தான் வேண்டும் போல!

    பதிலளிநீக்கு
  12. அருமையான பகிர்வு + புது இடம் அறிமுகம். நன்றீஸ்

    பதிலளிநீக்கு
  13. சுவாரஸ்யமான அனுபவம், சாந்தி:)! பகிர்வுக்கு நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  14. நன்றி ஸ்ரீராம்

    நன்றி செந்தில்குமார்

    நன்றி நீலவண்ணன்

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி வைகோ சார்

    நன்றி ஆதி வெங்கட்

    நன்றி ஆசியா

    நன்றி ஜலீலா

    நன்றி கோமதி மேடம்

    நன்றி குமார்

    நன்றி வெங்கட்

    நன்றி புதுகைத் தென்றல்

    நன்றி ராமலெக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  15. அருமையான இடம். விவரணமும் அதே போல,...

    (கீதா: சென்றிருக்கின்றோம்...புனா, லோனாவாலா, மாத்தேரன்...புனாவில் நெருங்கிய உறவினர் இருக்கிறார்...)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...