ஆண்டாளின் அண்ணன் படைத்த அக்கார அடிசில்.
உலகிலேயே பிரதிபலன் எதிர்பாராத உன்னதமான உறவுகளில் ஒன்று அண்ணன் தங்கை உறவு. உடன்பிறந்த சகோதரர்களே சகோதரிகளுக்குச் சீர் செய்ய அலுத்துக் கொள்ளும் காலமிது. ஆனால் உடன்பிறவா சகோதரர் ஒருவர் ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற பெருமாளுக்கு அக்கார அடிசில் படைத்த கதை ஒன்று உண்டு. தங்கை பாடிச் சென்றதற்காக ஒன்று இரண்டல்ல ஆயிரம் அண்டாக்கள் நிறைய வெண்ணெயும் அக்கார அடிசிலும் படைத்த அந்தப் பாசக்கார அண்ணன் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஸ்ரீவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் விஷ்ணுசித்தர் என்பார் வாழ்ந்து வந்தார். ஒரு திரு ஆடிப்பூரத்தன்று அவரது தோட்டத்தில் இருந்த திருத்துழாய்ச் செடியின் அருகில் ஒரு பெண்குழந்தை கிடைத்தது அவருக்கு. கொள்ளை அழகு கொண்ட அக்குழவிக்குக் கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.
கோதை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோயிலுக்கு அவள் தந்தை விஷ்ணு சித்தர் தினமும் மலர் கைங்கர்யம் செய்து வந்தார். நந்தியாவந்தனப் பூக்களைத் தொடுத்துக் கெட்டி மாலையாக்கித் தினம் கோயிலுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பது அவர் தொண்டு. அந்த மாலைகளின் அழகைக் கண்ட கோதை விளையாட்டாய்த் தன் கழுத்தில் அணிந்து கண்ணாடியில் அழகு பார்ப்பார்.
