"இருநூத்துச் சொச்சம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சம்பழத்துல ஒடப்போகுது.” எனக்கு எஸ் பியைத் தெரியும் ஆனா அவருக்கு என்னைத் தெரியாது.” ” என்னடா ஒரு அனிமல் ப்ளானெட்டே இலைக்குக் கீழ இருக்கு. நடக்குறது, பறக்குறது, நீஞ்சுறது, ஓடுறது, இது ஓடுறது போடுறது” இவை நடிகர் விவேக்கின் பிரபலமான வசனங்களில் சில.
நூறாண்டு காலத் திரைச் சரித்திரத்தில் எத்தனையோ முன்னவர்கள். நகைச்சுவை நாயகர்கள். விழியை உருட்டிச் சிரிக்க வைத்த இராமச்சந்திரன், உடம்பை வில்லாக வளைத்துப் பேசும் நாகேஷ், பாட்டுப் பாடியும் ஆடியும் அசத்திய சந்திரபாபு, நெளிந்து வளைந்து பேசும் சுருளி ராஜன், ஏற்ற இறக்கத்தோடு பேசும் தேங்காய் சீனிவாசன், எகிறி உதையும் கவுண்டமணி, எட்டி ஓடும் செந்தில் இவர்களுக்குப் பின் நகைச்சுவை உலகை ஆட்டிப் படைத்தவர்களில் முக்கியமானவர்கள் வடிவேலுவும் விவேக்கும்.
தன் அதிரடி நகைச்சுவைக் கருத்துக்களால் பொதுஜனத்தைக் கவர்ந்த கலைவாணர் திரு என் எஸ் கிருஷ்ணன் அவர்களைப் போல் ஒவ்வொரு படத்திலும் தன் பங்கை வெறும் நகைச்சுவையாக இல்லாமல் விழிப்புணர்வுக் கருத்துக்கள், பகுத்தறிவுச் சிந்தனைகளைப் புகுத்திப் புதுப்பித்தவர் மக்கள் கலைஞன் விவேக்.
