பெரியோர் சிறியோர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் வறியோர் வலியோர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருமே இறைவனை எட்டமுடியும் என்பதற்கு இறைவனை நினைத்து யாழிசை மீட்டி வந்த ஒரு பாணரின் கதை உதாரணமாய் இருக்கிறது. அது என்ன என்று பார்ப்போம் குழந்தைகளே.
உறையூர் நகரில் மிகப் பரந்த செந்நெல் வயல் அது. கடம்ப மரங்களும் மருதநில மரங்களும் செழித்திருந்தன. நண்பகல் நேரம் வெய்யிலோ தகித்தது. திடீரென குவா குவா என்ற சத்தம் ஓங்கி வளந்திருந்த நெற்பயிரின் ஊடே ஒலித்தது.
அந்தப் பக்கமாக பாணன் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் யாழினை மீட்டி இறைவனைப் பாடிப் பரவும் மெய்யன்பர். இறையன்பரான அவருக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லை. எனவே குழந்தைச் சத்தம் கேட்டதும் மனம் திடுக்கிட்டு இதென்ன பிரம்மையோ என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.
உண்மையாகவே ஒரு குழந்தையின் அழுகுரல் அவரை அசைத்தது. பதட்டத்துடன் செந்நெற்பயிர்களை விலக்கித் தேடத் தொடங்கினார். அடடா பிஞ்சுக் குழந்தை ஒன்று கைகால்களை அசைத்தபடி உச்சியில் சுட்ட சூரியனைக் காணக் கண் ஒட்டாமல் அழுது கொண்டிருந்தது.

