மதுரையில் அனந்த குண பாண்டியன் காலத்தில் ஒரு
நந்தி பசுவை அடக்கியது. பசுவும் நந்தியும் ஒரு இனம்தானே. இரண்டும் இணக்கமாகப்
போனால் என்ன ? அது ஏன் நந்தி பசுவை அடக்கியது ? அப்படி நந்தியால் அடக்கப்படும்படி
அந்தப் பசு என்ன செய்தது, என்ன காரணம் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
மதுரையில் அனந்த குண பாண்டியன் என்ற மன்னனின்
அரசாட்சிக் காலத்தில் அவுணர்களால் இடர்ப்பாடு அதிகம் ஏற்பட்டது. முதலில் யானையை
ஏவியும் அதன் பின் நாகத்தை ஏவியும் தொல்லை கொடுத்த அவர்கள் பாண்டியனை இன்னும்
துன்புறுத்த ஒரு மாயப்பசுவை உருவாக்கி ஏவினார்கள்.
பசு என்றால் அனைவரும் வணங்குவார்கள். அதை
எதிர்க்க மாட்டார்கள். அதனை தெய்வமாகப் பூஜிப்பார்கள். எனவே பசு ரூபத்தில் ஒரு கொடிய அரக்கனை உருவாக்கி அனுப்ப
நினைத்தார்கள். மிகப் பெரும் கொடிய யாகம் ஒன்றை நடத்தி அதில் தீய மந்திர
உச்சாடனம் செய்து அந்த அரக்கனை மாயப்பசு ரூபத்தில் உருவாக்கி ஏவினார்கள்.
