ஆளுடையபிள்ளை வரப்போகிறாராம்.
திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் அவரை சிவநேசர் அழைத்துவருகிறாராம்.
பாதையெல்லாம் பூக்கள். எப்போதும் ஓயாத அலைகளால் நனைந்திருக்கும் அந்த நெய்தல் நிலம்
அன்று அந்த சாலையில் தூவியிருந்த மலர்களில் இருந்து சிந்திய தேன் துளிகளால் நனைந்திருந்தது.
மெத்தை விரித்ததுபோல் அவ்வளவு பூக்கள்.
அதோ வந்துவிட்டது
ஆளுடையபிள்ளையின் சிவிகை. பூக்களில் மிதந்த படகு போல் வந்து இறங்கியது பல்லாக்கு. அந்தச்
சிவிகையிலிருந்து சிவத்தொண்டாலும் செந்தமிழ்த் தொண்டாலும் கனிந்திருந்த திருஞானசம்பந்தப்
பெருமான் இறங்குகிறார். உடலிலும் நெற்றியிலும் சிவச்சின்னங்கள் தரித்து வணக்கத்துக்குரிய
சிவனடியாராக சிவநேசரின் வேண்டுகோளை நிறைவேற்ற அங்கே எழுந்தருளியே விட்டார்.
சீர்காழிச் செம்மல்
எதற்காக வந்திருக்கிறார் ? அவரை ஏன் சிவநேசச் செல்வர் அழைத்து வருகிறார் என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட்டுக்
கொண்டார்கள். ஒரு சாரார் சொன்னார்கள்,. எல்லாம் சிவநேசரின் மகள் அங்கம் பூம்பாவையை
மணந்துகொள்ளத்தான். ஆனால் ஐயகோ அவள்தான் இப்போது சாம்பலாகிவிட்டாளே. ஒரு குடத்தில்
பிடி சாம்பலும் எலும்புமாக மிஞ்சி இருப்பவளைக் காட்டவா அழைத்துவந்தார் என்றார்கள் சிலர்.
