நெஞ்சில் ஓர் ஆலயம் தேவிகா
”நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நேற்றுமுதல் ஓர் நினைவுதந்தாய், நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ, நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா, கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே, நான் என்ன சொல்லி விட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்.. பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது, அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்” என்று எத்தனை தேவிகாவின் பாடல்கள். அதுவும் பி சுசீலா, பி பி ஸ்ரீனிவாஸின் சந்தனக் குரலில், எம் எஸ் வியின் இசையில், கண்ணதாசனின் வரிகள் நம்மைக் கிறங்கடிக்கும்.
சிறிது புஷ்டியான உடல்வாகு கொண்ட தேவதை தேவிகா. விஜயகுமாரி போல் பரந்த முகம். பெரிய அகலமான கண்கள். குட்டியான உதடுகள். செதுக்கி வைத்த மூக்கு
மீடியமான உயரம். முழங்கையைத் தாண்டிய ஜப்லா ரவிக்கை. அப்ளிக் வேலை செய்த பாப்ளின் ரவிக்கை, எம்பிராய்டரி புடவைகள், சரோஜாதேவி மாதிரி ரிப்பன் வைத்துப் பின்னிய கூந்தல்! எடுப்பான நீள கோபிப் பொட்டு.