எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 25 மே, 2025

நெஞ்சில் ஓர் ஆலயம் தேவிகா

 நெஞ்சில் ஓர் ஆலயம் தேவிகா


”நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நேற்றுமுதல் ஓர் நினைவுதந்தாய், நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ, நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா, கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே, நான் என்ன சொல்லி விட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்.. பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது, அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்” என்று எத்தனை தேவிகாவின் பாடல்கள். அதுவும் பி சுசீலா, பி பி ஸ்ரீனிவாஸின் சந்தனக் குரலில், எம் எஸ் வியின் இசையில், கண்ணதாசனின் வரிகள் நம்மைக் கிறங்கடிக்கும்.

 

சிறிது புஷ்டியான உடல்வாகு கொண்ட தேவதை தேவிகா. விஜயகுமாரி போல் பரந்த முகம். பெரிய அகலமான கண்கள். குட்டியான உதடுகள். செதுக்கி வைத்த மூக்கு

மீடியமான உயரம். முழங்கையைத் தாண்டிய ஜப்லா ரவிக்கை. அப்ளிக் வேலை செய்த பாப்ளின் ரவிக்கை, எம்பிராய்டரி புடவைகள், சரோஜாதேவி மாதிரி ரிப்பன் வைத்துப் பின்னிய கூந்தல்! எடுப்பான நீள கோபிப் பொட்டு.

 

இல்லாத குட்டி இடையை இறுக்கக் கட்டிய தாவணியுடன் அவர் ஒசித்து ஒசித்து நடப்பது அழகு. சில படங்களில் உயரக் கொண்டை, பல படங்களில் காதோரம் ரோஜாப்பூவும் டோலாக்கும் அந்த ரெட்டைப் பின்னலும் கூட அழகுதான். நாணம், வெட்கம், துள்ளல் கொஞ்சும் நடிப்பு. இதுதான் தேவிகா.

 

25 ஏப்ரல் 1943 இல் பிறந்தார் பிரமிளா என்னும் தேவிகா. 11 வயதில் இருந்து நடிக்கிறார். கணவர் பெயர் தேவதாஸ். ஒரே மகள் கனகாவும் சிறந்த நடிகை. 22 வருடங்கள் நடித்துள்ளார். தமிழிலும் தெலுங்கிலும் 150 படங்கள். அதன் பின் 1986 இல் இருந்து 2002 இல் மறையும் வரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. பெரும்பகுதியும் கறுப்பு வெள்ளைப் படங்கள். அதிலும் அநேகம் கதாநாயகி வேடம்தான்.  

 

திருவிளையாடலில் அவரது கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என பொதிகை மலைத் தென்றலைப் போலவும் முத்துராமனைப் போலவும் நாமும் மயங்குவோம். எஸ் எஸ் ஆருடன் வானம்பாடி, மேஜருடன் பாரத விலாஸ், ஜெமினியுடன் சுமைதாங்கி, வாழ்க்கைப் படகு, சரஸ்வதி சபதத்தில் லெக்ஷ்மி, வெகுளிப்பெண், அன்னை வேளாங்கண்ணி, களத்தூர் கண்ணம்மா, நாகநந்தினி எனப்பல படங்களில் நடித்திருக்கிறார். 

 

சிவாஜியுடன் ஆண்டவன் கட்டளையும் எம்ஜியாருடன் ஆனந்த ஜோதியும் இருவேறு களங்கள் என்றாலும் காதல் தோய்ந்தவை. மனதில் பூக்கும் காதலை வெளிப்படுத்த இயலாமல் உச்சியில் தவிக்கும் பேராசிரியராய் சிவாஜியும் அழகே வா அருகே வா என அவரை விளித்துக் கண்களை விரித்துக் காதல் சுழலில் சிக்குண்டு பாடும் தேவிகாவும் கேரளக் கடற்கரையின் கொள்ளை அழகுச் சிற்பங்கள்.

 

சிவாஜியுடன் நடித்த படங்கள் அனைத்துமே டாப் க்ளாஸ், அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று என்று குலமகள் ராதை சிந்திக்க வைப்பார். மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உருமாறிக் கொஞ்சும் கிள்ளை போல் பிள்ளை உருவானதே எனக் கர்ணனின் மனைவி சுபாங்கியாக தாய்மை பொங்க தகதகப்பார். பலே பாண்டியாவில் அத்திக்காய் காய் காய் என்ற சிலேடைப் பாடலில் சிவாஜி தேவிகா நடிப்பில் இயல்பான போட்டி இருக்கும். அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் பாடலில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தேவிகா புன்முறுவல் பூப்பது அவரது நளின நடிப்புக்குச் சான்று. 

 

நெஞ்சம் மறப்பதில்லையும் நெஞ்சில் ஓர் ஆலயமும் இரண்டுமே கல்யாண்குமாருடன் வாழாத காதல். முத்துராமன் தான் நெஞ்சில் ஓர் ஆலயத்தில் ரியல் ஜோடி. ஏழேழு ஜென்மத்திலும் தொடர்ந்து வரும் முன் ஜென்மக் காதல் பந்தம் நெஞ்சம் மறப்பதில்லை. மிக உன்னதமான அந்தக் காதலின் அச்சமும் பிரியமும் கவர்ச்சியும் கலந்த அந்த ரீங்கார கானம் நம் மனமெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.


 

Niche movie என்று சொல்லப்படக் கூடிய மருத்துவமனையை மட்டுமே களமாகக் கொண்ட படம் நெஞ்சில் ஓர் ஆலயம். இதில் ஒரு பாடலில் கட்டிலின் கீழ்ப்புறம் கூட கேமிரா சென்று தேவிகாவின் முகபாவத்தைப் படம்பிடித்துப் பின் மேல் எழுவது ஸ்ரீதரின் தேர்ந்த டைரக்‌ஷனுக்கு எடுத்துக்காட்டு. காசாப்ளாங்கா என்றொரு கதையின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் இரண்டும் வேறு வேறு களங்கள். அது போர்க்களம், இது மருத்துவமனை.

 

நேர்த்தியான சினிமா சிற்பி ஸ்ரீதரின் இழைப்புளியில் செதுக்கிய நெஞ்சில் ஓர் ஆலயத்தில் புனிதமான குத்துவிளக்காகச் சுடர் விடுவார் தேவிகா. காதல் கற்பு வாழ்க்கை இரண்டையும் கண்ணியமாகக் கையாண்ட படம். என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே இறுதிவரை துணையிருப்பேன் என்றதும் நீதானே என்று திருமண வாழ்வின் புனிதத்தைக் கூறியது இப்படம்.  

 

ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல் தோழி சொல் என வாழ்க்கைப் படகில் பாடும் முத்துராமன் நெஞ்சில் ஓர் ஆலயத்தில் தனக்குப் பிறகும் மனைவிக்கு வாழ்க்கை வேண்டும் என்று மறுமணம் செய்துகொள்ளச் சொல்லும் நல்லுள்ளம் படைத்தவர் ”சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே” என தேவிகாவின் கண்ணீர்க் குரலில் சாகாவரம் பெற்ற கண்ணதாசனின் வரிகள் நம்மையும் கலங்கச் செய்யும். பின்னர் மருத்துவரான கல்யாண்குமார் தன்னுயிரை ஈந்து முன்னாள் காதலியின் கணவனை உயிர்ப்பிப்பார்.

 

பின்னாட்களில் அதிகம் படம் இல்லாமல் சிரமப்பட்டபோது ஒருமுறை ஒரு விழாவில் கேபியைப் பார்த்த தேவிகாவிடம் அவர் நலம் விசாரிக்க, வெடுக்கென்று கோபமாக ”உங்க தயவெல்லாம் இல்லாமல் நல்லாவே இருக்கோம்” என்று தேவிகா சொன்னதாக ஒரு திரைச் செய்தியில் படித்திருக்கிறேன். எத்தனையோ படங்களில் வெகு சிறப்பாக நடித்திருந்தாலும் இன்றும் கணவன் மனைவிக்கிடையே உள்ள புனிதமான பந்தத்தைத் சொன்ன ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயத்தில் மட்டுமல்ல. நம் மனதிலும் அவர் அப்புனிதமான சீதாவாகவே குடி கொண்டிருக்கிறார் என்பது உண்மை!.



டிஸ்கி:- மனத்திரையில் மின்னலில் மாதங்களும் வாரங்களும் என்ற கட்டுரையைப் பாராட்டியுள்ள திருநகர் வாசகி திருமதி மலர்விழி பழனியப்பன் அவர்களுக்கு நன்றி !வாசகர் கடிதத்தை வெளியிட்ட தனவணிகன் இதழுக்கும் நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...