நற்றமிழ் வளர்த்த நகரத்தார்கள்
(நன்றி பதிப்பாளர் திரு. இராம.மெய்யப்பன் அவர்களுக்கும்)முனைவர் மு.பழனியப்பன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி,
திருவாடானை
மூத்த வணிகக் குடியினர் நகரத்தார்கள் ஆவர். நகரத்தார்கள் வணிகத்தை நன்முறையில் செய்த பொருள் ஈட்டினர். அவ்வாறு ஈட்டிய பொருள் கொண்டு பல்வகை அறச்செயல்களை நடத்தினர். வணிகத்தோடு தம் தாய்மொழியாம் தமிழையும் வளர்க்கும் மேன்மைப் பணியிலும் நகரத்தார்கள் ஈடுபட்டனர். தமிழறிஞர்கள் பலரும் நகரத்தார் மரபில் தோன்றி நற்றமிழ் வளர பாடுபட்டுள்ளனர். அவர்களின் சொல்லாற்றலும், படைப்பாற்றலும் தமிழை மேன்மை கொள்ள வைத்தன. செட்டி நாட்டுச் செந்தமிழ் என்ற நிலையில் தனித்த தமிழ் வளர்ச்சிச் செயல்பாட்டு அடையாளங்களை நகரத்தார் குலத்துத் தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்கள் உருவாக்கினர். உருவாக்கி வருகின்றனர்.


