குமரேச சதகத்தில் வாழ்வியல் விழுமியங்கள் – தேனம்மைலெக்ஷ்மணன்
முன்னுரை:- சதகம் என்றால் நூறு பாடல்கள் கொண்டது. தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று இச்சதக அமைப்பு. குமரேசர் என்று சொல்லப்படும் முருகக் கடவுள் பற்றிய 100 செய்யுட்களால் யாக்கப்பட்டது இந்நூல். 18 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்புல்வயல் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் மீது பக்தியுற்று இதை இயற்றியவர் குருபாததாசர் எனப்படும் முத்து மீனாட்சிக் கவிராயர்.
நூல் அமைப்பு:- புறப்பொருள் பற்றிய இந்நூலில் ஒவ்வொரு அடியின் முடிவிலும் புல்வயலில் உறையும் குமரேசக் கடவுளை வாழ்த்தும் முகமாகவும், உட்பொருளாக மனிதர்கள் கைக்கொள்ள வேண்டிய பக்தி, அன்பு, அறம், ஒழுக்கம், நேர்மை ஆகிய வாழ்வியல் விழுமியங்களை வலியுறுத்தியும், தமிழின், திருக்குறளின் மாண்பைச் சிறப்பிக்கும் வண்ணமும் பாடல்கள் அமைந்துள்ளன. காப்பு, அவையடக்கம் இவை தவிர 100 பாடல்கள் நூற்பயனுடன் ஆசிரிய விருத்தப் பாவில் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடுபொருளிலும் அதன் சார்பாகவும், எதிராகவும் பத்துமுதல் பன்னிரெண்டு பொருட்களை ஈடாகக் கூறி விளங்க வைக்கிறார் குருபாத தாசர். கிமு மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சாணக்ய நீதிக்கும், சௌரியப் பெருமாள் தாசர் என்பாரால் இயற்றப்பட்ட ஸ்ரீ பார்த்தசாரதி மாலை என்ற 100 பாடல்கள் கொண்ட நூலுக்கும் இந்நூலுக்கும் கருத்தளவில் அதிக ஒற்றுமை உள்ளது.