எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 ஏப்ரல், 2016

சத்துணவு கல்யாண வைபோகமே ! பார்ட் 4 - 6 ( நாடகம் )



 காட்சி – 4.

[சத்துணவுக் கூடம் ]

[ ஜான் அமல் கென்னடி உருட்டி உருட்டித் தர பகாசுரன் மாதிரி உணவை விழுங்கிக் கொண்டிருக்கின்றான். ஏறக்குறைய பெரிய அண்டாவில் இருந்த உணவு தீர்ந்துவிட்டது. கொஞ்சம் சோற்றுப் பருக்கைகள் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டு இருந்தன. ]

ஜான் அமல் கென்னடி :- ( தனக்குள் ) முனியம்மா வந்தா என்னைப் பார்வையாலே எரிச்சிடுவாளே ! பயம்மாயிருக்கே !

 ( சத்தமாக ) ஸார் ! நீங்க தப்பா நினைச்சுக்கப்படாது. உணவு அவ்வளவுதான். !. ஸார் ஒரு விஷயம் ! நீங்க அந்த விஷயத்தைப் பத்தி மறந்துடுங்க. ! நானும் மறந்துடுறேன். ! தயவுசெய்து யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. !

[ என்றவரைப் பார்த்து ]

செந்தில்நாதன் :- ( தனக்குள் ) சரியான லூசாயிருப்பார் போலிருக்கே !. அன்றைக்கு ஒரு கடையில் நான் கடைக்காரனுக்குத் தெரியாமல் பொட்டுக்கடலையை அமுக்கிப் பையில் போட்டுக்கிட்டு ஒவ்வொண்ணாத் தின்னுகிட்டு வர்றதைப் பார்த்தாரே. அதனால இவர் அவன்கிட்ட சொல்லிடுவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தா இவர் என்கிட்டேயில்ல பயப்படுகின்றார். நம்மளுக்கு விஷயம் ஒண்ணும் தெரியாட்டாலும் சும்மா நடிக்க வேண்டியதுதான்.


[இதற்குள் முனியம்மாவை எதிர்பார்த்து மேலும் கீழும், கீழும் மேலும் நடந்து கால்வலித்துப் போன ஆசிரியரிடம் ஒரு பையன் வந்து முனியம்மா அவசரமாக வீட்டிற்குச் சென்று விட்டதாகக் கூறுகின்றான். ]

ஜான் அமல் கென்னடி :- ( நிம்மதிப் பெருமூச்சுடன் ) வாங்க சார் போகலாம். ! (ரிக்‌ஷா கொண்டு வரச் செய்து அதில் ஏற்றி பக்கத்துக் கிளினிக்கில் சேர்க்கின்றார். )

காட்சி – 5.

[ க்ளினிக் ]

[ செண்பகராம் கிளினிக். உள்ளே டாக்டர் அருணாசலம் ஈ ஓட்டிவிட்டு மேஜை மேல் தாளம் போட்டுக் கொண்டிருக்கின்றார். உதவியாளன் கம் ஸ்டெனோ ராம் அவசர அவசரமாக உள்ளே வந்து ]

ராம் :- சார் ! சார்! நம் க்ளினிக் வாசல்லே ஒரு ரிக்‌ஷா ! ரிக்‌ஷாவில் ரெண்டு பேரு. ரெண்டு பேர்ல ஒருத்தனுக்குக் காலு… காலு.. காலுல வீக்கம். கேஸு வருது. !

அருணாசலம் :- ( ஜம்பமாக ) யோவ்.. ( சற்று சத்தத்துடன் ) நான் அரைமணி நேரத்துக்குப் பிஸி. ! கதவை சாத்திவிட்டுப் போ ! என்னைத் தொந்தரவு செய்யாதே ! ஆமாம். ! ( என்று கூறிவிட்டு ) நான் டெலிஃபோனில் முதலமைச்சருடன் பேசி, அவருடைய சத்துணவுத் திட்டத்திற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.

அருணாசலம் :- ( அழைப்பு மணியை அழுத்தியவாறு ஃபோனில் பேசும் தோரணையுடன் ) ஹலோ ! நாந்தான் டாக்டர் அருணாசலம் பேசுறேன். உங்க சத்துணவுத் திட்டத்துக்கு .. ஹலோ.. ஹலோ ஆமாம் அதுக்கு நான் பாராட்டுத் தெரிவிக்கிறேன். என்னது என் வாயால பாராட்டப்பட்டதுக்குப் பெருமை அடையறீங்களா. !

[ தொடர்ந்து இவர் காற்றுடன் பேசிக் கொண்டிருக்க ராம் சிறிது எரிச்சலுடன் கதவைப் படாரெண்டு சாத்திச் செல்கின்றான் ]

[ டாக்டர் தன் அறைக்குள் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கின்றார். அதுவும் முதலமைச்சருடன் எனத் தெரிந்ததும் பதற்றமாகிறது ஜான் அமல் கென்னடிக்கு. மெதுவாக எழுந்து பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் உலவுகிறார். யதேச்சையாகத் திரும்பியவரின் கண்ணில் ஜன்னல் வழியாக டாக்டர் சுவற்றைப் பார்த்து பேசிக்கொண்டிருப்பது தெரிகின்றது. ]

ஜான் அமல் கென்னடி :-  அட இவ்வளவுதானா ! இந்தாளு இப்பிடில்ல என்னை ஏமாத்திட்டான். ரொம்பத்தான் அநியாயத்துக்கு நான் பயப்படுறேன். ( என்று கூறிச் சடாரெனத் தன் முகத்தை ஜன்னலில் நீட்டவும் டாக்டர் பதறிப்போய் )

டாக்டர் :- ஆ.. ! ஆ.. ! பேய்.. ! பேய்..! என்னைப் பார்க்குது. ! ( என்று கூறி மயங்கி விழுகின்றார். ).

[ உதவியாளன் ராம் வந்து இரண்டு படுக்கைகளைத் தயார் செய்து ஒன்றில் டாக்டரையும், பக்கத்துப் படுக்கையில் செந்தில்நாதனையும் படுக்க வைத்துவிட்டு ]

ராம் :- ஆகா.. கேஸு.. கேஸு.. இன்னிக்கு ரெண்டு கேஸ். நாந்தான் கவனிக்கப் போறேன்.!

[ திரை விழுகின்றது ]

காட்சி – 6.

மறுநாள் மாலை.

[ வள்ளிநாயகி டாக்டர் அருணாசலத்தின் மகள். அவள் க்ளினிக்கின் தோட்டத்தில் உலா வந்து கொண்டிருக்க., அவளைக் கண்ட செந்தில்நாதன் ]

செந்தில்நாதன் :- அடாடா ! லவ்லி நாயகில்ல ..இங்க வந்திருக்கா !. லவ்லி நாயகி.. லவ்லி நாயகி ( என உரக்கக் கத்த  பக்கத்தில் படுத்திருந்த டாக்டர் விழித்துக் கொண்டு )

டாக்டர் :- லவ்லி நாயகியா ? என்ன சுத்தப் பேத்தலாயிருக்கு. ! என் மகளுக்கு நான் எவ்வளவு அழகாப் பெயர் வச்சிருக்கிறேன். வள்ளி நாயகின்னு !> இன்னொருதடவை லவ்லி நாயகின்னு கூப்பிட்டே உன் கன்னத்தையும் வீங்க வச்சிடுவேன். ஆமாம்.

செந்திநாதன் :- ( முறைப்புடன் ) இவர் மக பெரிய ரதின்னு நினைப்புப் போலேருக்கு. !. நானா இருக்கக் கொண்டு இந்த மூஞ்சியை ’லவ் ’பண்றேன். ! ( என்றவுடன்  டாக்டர் பதிலுக்கு )

டாக்டர் :- உன் குரங்கு மூஞ்சியை எவ ல’வ்’பண்ணுவா. இந்த மூஞ்சியை என் மக  ’லவ் ’ பண்றான்னு நீ சொல்றதே எனக்கு வெட்கமா இருக்கு. !
[ என்றவுடன் ஏற்கனவே கு ரங்கு மாதிரி இருந்த முகம் இஞ்சி தின்ற ’கு’ னா  மாதிரி மாறியது.

வள்ளிநாயகி :- ( உள்ளே வந்து கொண்டே ) அப்பா வந்து வந்து நான் இவரை லவ் பண்றேன். ( என்று கூறியதுதான் தாமதம் அருணாசலம் நெற்றிக்கண்ணைத் திறந்து இருவரையும் மாற்றி மாற்றி நோக்கி சாம்பலாக்கத் தொடங்கினார். சட்டை பொசுங்கும் நெடி ஏற்பட்டது செந்தில்நாதனுக்கு. )

வள்ளிநாயகி :- சரி அப்புறம் வர்றேன். ( என்று கூறிவிட்டு வெட்கம் மேலிட ! ஓடினாள் ) .

[ திரை விழுகின்றது ]

டிஸ்கி :- 1984 கல்லூரி டைரியில் எழுதியது. ஃபாத்திமா அம்மா கொடுத்த அசைன்மெண்டுக்காக எழுதப்பட்டது. மிச்ச பகுதிகளும் பின்னர் வெளியாகும்.

ையும் பாரங்க


சத்துணவு கல்யாண வைபோகமே ! -- பார்ட் 1 - 3. ( நாடகம் ) 


சத்துணவு கல்யாண வைபோகமே ! பார்ட் 4 - 6 ( நாடகம் ) 

 

சத்துணவு கல்யாண வைபோகமே ! -- பார்ட் 7,8. ( நாடகம் )

 


3 கருத்துகள்:

  1. நாடகம் வித்யாசமாகவும், சிரிப்பாகவும் உள்ளது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...