பெல்லட்:-
அத்யாயம் –
1. சிபிஐ கோர்ட்
ஒரு கோடி ரூபாயைக்
கையாடல் செய்த வழக்கில் கைதாகி கோயமுத்தூரில் இருந்த அந்த சிபிஐ கோர்ட்டில் ஆஜராகி
தலைகுனிந்து அமர்ந்திருந்தார் முருகானந்தம். மது மாது சூது என்று எந்தப் பழக்கமும்
இல்லாத நேர்மையான மனிதர், மிகப் பெரும் நிலக்கிழார் என்று பெயரெடுத்திருந்த, மிகப்பெரும்
நிறுவனத்தின் உயர் பொறுப்பிலிருந்த அவருக்கு ஒரு கோடி ரூபாய் எடுக்கும்படி அப்படி என்னதான்
தேவை பணத்துக்கு என்று அவரது அலுவலகச் சிப்பந்திகளே அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்கள்.
”முருகானந்தம்
முருகானந்தம் முருகானந்தம்..” மூன்று முறை அழைத்தார் டவாலி.
நேரே எழுந்து
சென்றவரை சைகை காட்டி பக்கவாட்டில் வரச் சொன்னார் டவாலி. மாண்புமிகு நீதிபதியின் முன்
குறுக்கே செல்வதோ பின்புறம் திரும்பி நடப்பதோ சிபிஐ கோர்ட்டில் அனுமதிக்கப்படுவதில்லை.
குற்றவாளிக்
கூண்டில் ஏறி நின்றார் முருகானந்தம். ஆறடி உடம்பும் ஆறு சாண் ஆகிவிடாதா எனக் குறுகியபடி
இருந்தது அவர் முகம். எந்தப் பக்கம் திரும்பினாலும் எல்லாம் தெரிந்த முகங்கள்.
சாட்சிக் கூண்டில்
ஒரு கோடி ரூபாய்க்கான அந்த செக் மாற்றப்பட்ட வங்கியின் ஊழியர் ராஜன் நின்றிருந்தார். அவர் அங்கே இண்டர்னல் ஆடிட்டிங்கில்
இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்டில் இருந்தார். ராஜனுக்கு முருகானந்தத்தைப் பார்க்க வருத்தமாக
இருந்தது. இருந்தும் என்ன செய்ய ?. கோர்ட் நடைமுறை. நடந்ததை சொல்லித்தானே ஆகவேண்டும்.