எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 19 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1



சிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1

வா மணிகண்டன் சொன்னது போல சினிமாவாகவோ, வீடியோவாகவோ, தொலைக்காட்சி கார்ட்டூனாகவோ பார்க்கும்போது ஏற்படும் சிந்தனையற்ற மொந்தைத்தனத்தைவிட அவற்றையே புத்தகங்களில் படிக்கும்போது மனக்கண்னில் தோன்றும் சித்திரங்கள் உருவாக்கும் அதிசய உலகம் அற்புதமானது. புத்தக வாசிப்பு கற்பனா சக்தியை மேம்படுத்தும். கிரியேட்டிவிட்டியையும் தூண்டும்.

வீட்டில் நிறைய நூல்கள் இருந்தாலும் இந்த சிறுவர் இலக்கியங்கள் & காமிக்ஸ் நம்மை என்றும் கவர்பவை. சிறுபிள்ளைப் பருவத்துக்கு இட்டுச் செல்பவை. எனவே அவற்றை ஒரு நாள் ஆசையுடன் படித்தேன். படித்ததைப் பகிர்கிறேன்.


அரிச்சந்திரன் கதை

வாய்மையே வெல்லும் என்பதை முழுமையாகச் சொன்ன கதை. அறநெறி வகுப்புகள் அருகிவிட்ட இக்காலத்தில் சிறுவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் நெறியாகிய உண்மை பேசுதலை வலிவுடன்சொன்ன கதை. எத்தனை நெருக்கடிகளிலும் மாமன்னன்அரிச்சந்திரன் உண்மையையே பேசுவதையும் அவருக்குத் துணையாக அவர் மனைவி சந்திரமதி நடந்துகொள்வதையும் இன்றைய மக்கள் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்லோகிதாசனுக்காக அவள் பாடும் பாடல் ஒன்று மனதை விட்டு நீங்காதது.( பள்ளிப் பருவத்தில் படித்தது !!! )

பனியால் அலைந்து வெய்யிலால் உலர்ந்து

பசியால் அலைந்தும் உலவா

அநியாய வெங்கண் அரவால் இறந்த

அதிபாவம் என் கொல் அறியேன்

தனியே கிடந்து விடநோய் செறிந்து

தரை மீதுருண்ட மகனே

இனி யாரை நம்பி உயிர்வாழ்வம்

எந்தன் இறையோனும் யானும் அவமே. ”

இவர்கள் இருவரோடும் கூட அமைச்சர் சத்தியகீர்த்தியின் பாசமும் பரிவும் உண்மைத்தன்மையும் அவர் மன்னரிடம் நிகழ்த்தும் உரையாடலும் மனதை நெகிழச் செய்தது.

அனைவருக்கும் தெரிந்த கதை என்றாலும் திரும்பவும் படிக்கலாம். 

நூல் :- அரிச்சந்திரன் கதை

பதிப்பகம் :- மணிமேகலைப் பிரசுரம்.

விலை :- 93/95 இல் விலை ரூ 23./-


அலாவுதீனும் அதிசய விளக்கும்

அலாதீன் லைலாவுடன் மந்திரக் கம்பளத்தில் பறந்து செல்வதையும், ஜீனி பூதம் கைகட்டி நிற்பதையும் தூரத்தே மாட மாளிகையும் கூட கோபுரங்களுமாக சூரிய உதயத்தோடு தெரிவதையும் ரசித்திருப்போம்.

இதில் அதே கதையே பாலை மண்ணில் மனக்கண்ணில் அழகாக விரிகிறது. தாயின் உணர்வுகள் இதில் அதிகமாக விவரிக்கப்பட்டுள்ளது அருமை.

மாயாஜாலக் கதைகளையும் மந்திர தந்திரக் கதைகளையும் விரும்பாதவர் உண்டோ. ?!

நூல் :- அலாவுதீனும் அதிசய விளக்கும்

ஆசிரியர் :- தராசன்

பதிப்பகம்:- கவிதா பப்ளிகேஷன்

விலை:- 90 இல் 14/- ரூ


மகுடம் பறித்த மாயாவி

இளைய உள்ளங்களில் நல்ல எண்ணங்களை உருவாக்க வேண்டும் என்று முன்னுரையில் கூறி இருக்கும் ஆசிரியர் பூவை அமுதனின் அறுபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி பொன்னி நூலகம் வெளியிட்ட நூல் இது. இதுவும் ராஜா ராணி & மாயாஜாலக் கதைதான். அல்லிராணியைப் போல இருக்கும் அங்கையற்கண்ணியைப் பற்றிய கதை.

///யாரும் பெரியவர்கள் மனதைப் புண்படுத்தக் கூடாது. இயற்கைக்கு மாறாக நடந்துகொள்ளக் கூடாது. இலட்சியம் என்று எதையோ நினைத்துக் கொண்டு நல்ல இதயங்களைக் கசக்கிப் பிழியக் கூடாது./// என்று அறிவுரையாக இல்லாமல் நன்னெறியார் என்ற துறவியின் வாக்காக ஆசிரியர் கூறியுள்ளது சிறப்பு.

அல்லிராஜ்யம் நடத்தும் சிங்க நாட்டு ராணி அங்கையற்கண்ணியின் மனதை மறவநாட்டு மன்னர் சூரசேனர் மாயாவியாகி மயக்குகிறார்அரசர் அங்கயற்கண்ணியின் மனதைக் கவர்ந்து மணமுடிப்பதே கதை. இதில் மகாராணி விசாலாட்சியும் இருவேறு உருவமெடுக்கும் முனிவரும் அரசியின் மெய்க்காப்பாளர் பெருந்தேவியும் பெரும்பங்கு வகிக்கிறார்கள். மிக அருமையான சரளமான கதை. பதின்பருவப் பிள்ளைகள் ரசித்துப் படிப்பார்கள். :)    

நூல் :- மகுடம் பறித்த மாயாவி

ஆசிரியர் :- பூவை அமுதன்

பதிப்பகம்:- பொன்னி நூலகம்

விலை:- 93/99 இல் 21/- ரூ


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...