எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக.

குங்குமம் தோழியின் பொங்கல் சிறப்பிதழில் ( 14.1. 2015 இதழ் ) ஸ்டார் தோழியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். நன்றி குங்குமம் தோழிக்கு. இதழில் இரண்டு பக்கங்களில் வந்துள்ளது. ஆனால் இணைய இணைப்பில் முழுமையாகப் படிக்கலாம். :)  நன்றி குங்குமம் தோழி பொங்கல் சிறப்பிதழில் சிறப்பிடம் கொடுத்தமைக்கு. :)

கேள்விகள்:


1.
நான் ஒரு மனுஷியாக . தாயாக . தோழியாக [ எல்லம் ஒரே பத்தி ]

நான் தேனம்மைலெக்ஷ்மணன். ரொம்ப பர்ஃபெக்ட் என்று நினைத்துக் கொள்ளும் சாதாரண மனுஷி. வெற்றியைக் கொண்டாடுகிறேனோ இல்லையோ தோல்வியைக் கொண்டாடி விடுவேன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்யும் அனுசூயையாகவோ, அமிர்தானந்தமயியாகவோ, க்ரேக்க தேவதை ஹீராவாகவோ ( HERA)  நினைத்துக் கொள்வதுண்டு.என் தந்தை தாய்க்கும் என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் தோழி. அப்புறம் முகநூல் நட்பு வட்டத்தில் அனைவருக்கும் பாசக்கார அக்கா.& மதிப்பிற்குரிய தோழி.

2.
பள்ளியும் ஆசிரியர்களும் . பள்ளி போதித்தது


காரைக்குடி அழகப்பா ப்ரப்பரேட்டரியில் கேஜி படித்தேன். அதிகம் ஞாபகமில்லை. மன்னார்குடி கணபதி விலாஸில் மூன்றாம் வகுப்பு சண்முகம் சார் பார்த்தால் மிரட்சியாக இருக்கும். எங்கள் ஆசிரியர்கள் இல்லத்துக்கே வந்து ட்யூஷன் சொல்லிக் கொடுக்கும்படி அப்பா ஏற்பாடு செய்திருந்தார்கள். அடுத்து செயிண்ட் ஜோசப் . அங்கே தங்கம் மிஸ், மைதிலி மிஸ், ப்ளஸ்டூவில் ராஜேஸ்வரி மிஸ். எந்த ஆட்டபாட்டமும் இல்லாமல் எல்லா இடங்களிலும் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாகவே வளர்க்கப்பட்டதுதான் ஞாபகம் வருது. பள்ளியில் தமிழ் ”அறம் வாழி ” மாஸ்டரும் ஃபாத்திமா கல்லூரியில் சுசீலாம்மாவும்  ஃபாத்திமாம்மாவும் இன்றைய என்னுடைய தமிழுக்குக் காரணம்னு சொல்லலாம். மொழிப்பிழையில்லாமல் எழுதக் கற்றுக் கொண்டதும் பெரியோர் வார்த்தைகளைச் சிரமேற்கொண்டு நடந்துகொள்ளவேண்டும் என்று வளர்த்தெடுத்ததும் பள்ளி போதித்தது என்று குறிப்பாக சொல்லலாம்.

3..
இப்போ வசிக்கும் ஊர் குறித்து கற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டதும் . அங்கே ரசிக்கும் உணவு மற்றும் கலாசாரம்

இப்போ இருப்பது ஹைதராபாத். இங்கே சில்பாராமம் கலாசாரக் கிராமம் அழகு. ஹைடெக் சிட்டி. தொல்லைகள் இல்லாத ஹை டெக் வாழ்க்கை. இன்னும் தெலுகு கற்றுக் கொள்ளவில்லை. இங்கே இருப்பவர்கள் அனைவருக்கும் ஹிந்தி ( பள்ளியில் கட்டாயப் பாடம் ) தெரிவதால் மொழிப் ப்ரச்சனை பாதிக்கவில்லை. இங்கே ஹைதராபாத் பிரியாணியும் ஹலீமும் ஸ்பெஷல் என்பார்கள் ஆனால் எனக்கு கோங்குரா சட்னி பிடித்திருக்கிறது. நிறைய விதம் விதமான சட்னி ( பீரகாய சட்னி, ஊர்ப்பிண்டி சட்னி ) வகையறாக்கள்தான் இவர்கள் சமையலில் இடம் பிடிக்கும். இஸ்லாமியர்கள் அதிகம். வீடுகளில் பச்சை, சிவப்புக் கொடி பறப்பதை வைத்தே அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்று கண்டு கொள்ளலாம். எளிமையான இனிய மக்கள். திருமணங்களுக்குக் கொள்ளை கொள்ளையாகச் செலவழிக்கிறார்கள். இன்னும் பாரம்பரிய உணவுகளுக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு.

4.
பிடித்த புத்தகங்கள்

விக்டர் ஹியூகோவின் ”ஏழை படும் பாடு”, ஃப்யோதர் தஸ்தாவ்யெஸ்க்யின் ”குற்றமும் தண்டனையும்” ( சுசீலாம்மா மொழி பெயர்ப்பு ) . வைக்கம் முகம்மது பஷீரின் ”மந்திரப் பூனை”. கல்கியின் ”சிவகாமியின் சபதம்”. சுசீலா தேஷ்பாண்டேயின் ”மௌனத்தின் குரல்”.

ஃப்ரெஞ்சுப் புரட்சியில் தாய் தந்தையை இழந்த கோஸ்த் ம், ஜீன் வல் ஜீனும் , எதிர்பாராமல் ஒரு கொலை செய்துவிட்டு மனச் சிக்கலுக்கு உள்ளாகி கடைசியில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சைபீரியச் சிறைக்குச் செல்லும் வெகுசாமான்ய இளைஞன் ரஸ்கோல்னிகோவும், நம்முன்னே இருக்கும் சௌபாக்கியவதிகளைப் பற்றிய நுண்மையான பார்வையில் மிக அருமையான ஹாஸ்யமான கதைகள் படைக்கும் பஷீரும், நாட்டியப் பெண்கள் மனோராணிகளாகலாம் மஹாராணிகளாக முடியாது என்று உணரும் சிவகாமியும், என்னைப் போன்ற குடும்பத் தலைவியாகத் தன்னைப் பூரணமாக வெளிப்படுத்தும் ஜெயாவும் என்னை ஆட்டிப் படைக்கிறார்கள்.

5
குடும்பம் . குறித்து நாலைந்து வரிகளில்

கணவர் திரு லெக்ஷ்மணன். வங்கிப்பணியில் கணக்காய்வாளராக இருக்கிறார் என் எல்லா முயற்சிகளுக்கும் துணை நிற்பவர். பல வருடம் மனைவியாகவும் அம்மாவாகவும் மட்டுமே இருந்த நான் சில வருடங்களாக வலைத்தளம், பத்ரிக்கைகளில் எழுதவும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவும் செல்கிறேன் அப்போதெல்லாம் ஊக்கம் கொடுப்பார். .பையன்கள் இருவர் திருவேங்கடநாதன், சபாரெத்தினம். பொறியியல் வல்லுனர்கள். மூவரும் என் பக்கபலம். பாசக்காரர்கள். வலைத்தளம் ஆரம்பித்துக் கொடுத்தவன் என் பெரிய மகன். நான் பேசிய நிகழ்ச்சிப் பதிவுகளை யூ ட்யூபில் பதிந்து கொடுப்பவன் சின்ன மகன். மூவரும்தான் என் மனோபலமும்.

6. hobbies

புத்தகங்கள் வாசிப்பது, கவிதை, கதை, கட்டுரை எழுதுவது, பின்னல், தையல் வேலைகள். ( ஹாண்ட் எம்பிராய்டரி, க்ரோஷா, ஸ்வெட்டர் பின்னுதல் ), சுடோகு போடுதல், வீட்டுத் தோட்டம், பயணம் செய்வது, சமையல் குறிப்புகள் எழுதுதல், கோலங்கள் போடுதல், மற்றும் வலைத்தள எழுத்து. 5 வலைத்தளங்களில் எழுதி வருகிறேன். ( சும்மா, டைரிக் கிறுக்கல்கள், கோலங்கள், THENU’S RECIPES, CHUMMA!!! ).

7.
இயற்கை

ரொம்ப சீரழிந்து கொண்டிருக்கிற ஆனால் பாதுகாக்கப்படவேண்டிய விஷயம். பெட்ரோலுக்காக ஜட்ரோப்பா கார்க்கஸ்னு ஒரு செடியின் எண்ணெயை மாற்றா உபயோகிக்கலாம். அதேபோல மின் தேவைக்காக அச்சுறுத்தும் அணுமின்சாரம் தவிர்த்து நீர், காற்றாலை போன்றவற்றில் கிடைப்பதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம். ஒவ்வொரு வீட்டிலும் ப்ளூம் பாக்ஸ் நிறுவுவதன் மூலம் மின் உற்பத்தி செய்துக்கலாம். ஆற்றில் மணல் அள்ளுவதைத் தவிர்த்து செயற்கை மணல், ஹாலோ ப்ளாக்ஸ் போன்றவற்றை உபயோகிக்கலாம். பின்னாடி வர்ற தலைமுறை வாழ நாம் இந்த மண்ணை மட்டுமாவது விட்டுட்டுப் போகணும்.

8.
தண்ணீர் சிக்கனம். plastic பயன்பாடு

குடி தண்ணீரை கேன்களில் வாங்கும் சமூகத்தில் வசிக்கிறோம் நாம். மழை நீர் சேகரிப்பு ஒவ்வொரு கட்டிடத்துக்கும் வீட்டுக்கும் அவசியம். ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் மழை நேரங்களில் வழியும் நீர் ஆழ்கிணறுகளில் சேமிக்கப்பட்டு உபயோகப்படுது. நம்ம ஊர்ப்பக்கம் எல்லா வீடுகளிலும் போர்வெல் போட்டு பூமியைத் துளைச்சிருக்காங்க. நதிகளில் சம்பாப்பருவங்களில் விடப்படும் நீர் ப்ளாஸ்டிக் குப்பைகளோடு ஓடுது.

30 வருடங்களுக்கு முன் ப்ளாஸ்டிக் பைகள் ரொம்ப இல்லை. மலேஷியாவிலிருந்து உடைகள் பொருட்கள் கொண்டுவரும் உறவினர்கள் அதைப் பாலித்தீன் பையில் போட்டுக் கொடுப்பார்கள். ரொம்ப வாசனையா மென்மையா இருக்கும் அந்தப் பைகள் ஒன்றிரண்டு பார்ப்பதே அபூர்வம். இப்போ பார்த்தா வீட்டை விட்டு வெளியே காலை எடுத்து வச்சா ரோடு மரம் செடி கொடி, நதி, சாக்கடை, கடல் என்று எல்லா இடத்திலும் ப்ளாஸ்டிக் குப்பைகள்தான். பால்பாக்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் எல்லாவற்றையும் நாம் பாலிதீன் பைகளில் வாங்கி வந்துதான் உபயோகிக்கிறோம். பெருகிவரும் கான்சர் போன்றவற்றிற்கு இவைதான் மூலகாரணமாக இருக்கக் கூடும். பழைய மாதிரி கடைக்குப் போகும்போது மஞ்சள் பை, ஜவுளிக்கடைப் பைகள், எடுத்துச் செல்லலாம். எண்ணெய், பால் போன்றவற்றை பூத் போல வைத்து  பாத்திரங்களில் வாங்கிச் செல்லும்படி அமைக்கலாம். உணவுப் பொருட்களை முடிந்தவரை ப்ளாஸ்டிக் டப்பாக்களில் வாங்கி உண்ணாமல் இருப்பது நலம்.

9.
சமூக அக்கறை

பெண்களுக்கான சமத்துவமும் உரிமையும் கிடைச்சிட்டதா சொன்னாலும் இன்னும் பேலன்ஸ்டா இருக்காத இருவேறு சூழ்நிலைகளில்தான் பெண்கள் வாழ்றாங்க. கிராமங்களில் சிசுக்கொலை, கருக்கொலை, கல்வி மறுப்பு, குழந்தைத் திருமணம், வேலைவாய்ப்பு மறுப்பு, குடும்ப வன்முறை,  போன்றவை அதிக அளவில் இருக்க, நகரங்களில் விவாகரத்து, லிவிங் டுகெதர், குடிப்பது, சிகரெட் புகைப்பது , போதைப் பொருட்கள் உபயோகிப்பது போன்றவை சுதந்திரம் என்று நினைக்கிறார்கள். எங்கேயும் பெண்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லை.. வேலைக்குச் செல்லுமிடத்தில் கல்வி கற்கச் செல்லுமிடத்தில் பாலியல் தொந்தரவுகள், குழந்தைகளுக்கான செக்‌ஷுவல் அப்யூஸ், ஆகியவை இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட வேண்டும். சாதி மத இன ரீதியிலான பிரிவினைகள் இருக்கக் கூடாது.கல்வியும் மருத்துவமும் இப்போ காஸ்ட்லியாயிடுச்சு. அது சலுகைகளோடு வழங்கப்படணும்.

மரபணு மாற்றப் பயிர்கள், விதைகள், உரங்கள் இந்தியாவுக்குக் கொண்டுவருவதைத் தடை செய்யணும். விவசாயிகள் நமது பாரம்பரிய முறையில் மீண்டும் பயிர்செய்து நம் மண்ணை வளப்படுத்தித் தாங்களும் வளமாக வாழணும். நீர் மின்சாரம் போன்றவற்றை மாநிலங்கள் பகிர்ந்து வாழப் பழகணும்.

10.
மனிதர்கள்

பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திப்பது எப்போதும் பிடித்தமானதாயிருக்கிறது. 1 வயதுக் குழந்தையானாலும் சரி, 100 வயது ஆனவர்களானாலும் சரி ஒற்றைப் புன்னகையில் சிநேகமாகி விடுகிறார்கள். நட்பு, வெறுப்பு விருப்பு, அன்பு, பாசம், காமம், க்ரோதம், நெகிழ்ச்சி அனைத்தும் கலந்தவர்கள்தாம் அனைவருமே. எல்லாரிடமும் நல்லவையும் நிரம்பி இருக்கின்றது. நமக்கான நல்லதை மட்டுமே அவர்களிடமிருந்து எடுத்துக் கொண்டு அல்லதை அங்கேயே விட்டுவிடவேண்டும். ரூமி சொன்னபடி WHAT YOU SEEK SEEKS YOU எனவே அனைவரிடமிருந்தும் கற்றுக் கொள்கிறோம். நம்மிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடும்.

11 .
பிறந்த ஊர் . சொந்தங்கள்.. கற்றுக் கொண்டவை

பிறந்த ஊர் காரைக்குடி, அப்பத்தா வீட்டு  அருணாசல ஐயா , அன்பாலே செய்த மனிதர், அடுத்து அப்பா , உனக்கு நல்லது கிடைத்தால் உன் அதிர்ஷ்டம், கெடுதல் கிடைத்தால் என் துரதிர்ஷ்டம் என்பார். எல்லா இடத்திலும் என் உறுதுணையாக இருப்பார். இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் இதே பெற்றோருக்கு மகளாகப் பிறக்கவேண்டும். தம்பிகள் மூவர். அனைவரும் பாசக்காரர்கள்தான். நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர் கொண்ட காலத்திலும் அப்பாதான் தோள் கொடுத்தவர். அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்றாலும் பாசக்காரர். தங்கள் தேவையை எல்லாம் எளிமையாக்கி, கோயில், திருமணம் படிப்பு செலவு என்று தேவைப்படுவோருக்கு அப்பா, அம்மா உதவி செய்வதும், 70 வயதிலும் அம்மா சிஎன்பிசி, என்டிடிவி பார்த்து போன் மூலமாக ஷேர்ஸ் ஆர்டர் செய்து ஷேர் பிஸினஸ் செய்வதும் பிரமிக்கவைக்கும் விஷயங்கள். வீட்டில் வேலை செய்ய வரும் யாரையுமே பிள்ளைகள் போல அம்மா அப்பா நடத்துவதும் ரொம்பப் பிடிக்கும்.

12.
நேர நிர்வாகம்

ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருந்தாலும் கடைசி நேரம் சில சமயம் பரபரப்பாகி விடும். இப்போதுதான் அது ஒழுங்குக்கு வந்திருக்கிறது. அரக்கப் பரக்க ரயில்வேஸ்டேஷனுக்கு ஓடுவது, பிள்ளைகளின் ஸ்கூல், காலேஜ் போன்றவற்றிற்கும் நிகழ்ச்சிகளுக்கு, சினிமா, விருந்து கோயில் போன்றவற்றிற்குப் போகும்போதும் வீட்டு வேலைகளை முடித்து க்ளியர் செய்துவிட்டுப் போகவேண்டும் என்று அரக்கப் பரக்கச் செய்வேன். இப்போது முதல் நாளே ப்ளான் செய்துவிடுவதால் சீக்கிரம் செய்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறேன். ( இத கத்துக்க இத்தனை வருஷம் ஆச்சான்னு கேக்காதீங்க. இப்போத்தானே பிள்ளைகள் நம்மை டிப்பெண்ட் பண்ணாம இருக்காங்க. !! )

13.
சமையல்
ரொம்பப் பிடிச்ச விஷயம். விதம் விதமா மட்டுமில்ல. டெய்லி சமையலே ரொம்ப ரசிச்சி செய்வேன். பொருத்தம் பார்த்துத்தான் சமைப்பேன். ஒண்ணு காரம்னா ஒண்ணு எளசா, அப்பிடின்னு. நளபாகம்தான்னு சாப்பிடுறவங்க எல்லாம் சொல்வாங்க. ஏன் நிறையப் பேருக்கு அவங்க சமைச்சது பிடிக்காது. ஆனா என் சமையலை நானே ரசிச்சிச் சாப்பிடுவேன். அவ்ளோ பிடிக்கும். செட்டிநாட்டு சமையல் மட்டுமில்ல எந்த ஊருக்குப் போறமோ அந்த ஊர் சமையல் எல்லாம் ட்ரை பண்ணி சமைச்சு டேஸ்ட் பண்ணிடுறது உண்டு. ( டெஸ்ட் இல்லைங்க J அதை எல்லாம் ஃபோட்டோ எடுத்து ப்லாகில் சமையல் குறிப்பு எழுதுறது. ( ஆங்கிலத்திலும் தமிழிலும் )

14
பிற கலை

ஓவியம், கோலம், இதெல்லாம் போட பிடிக்கும். ஒவ்வொரு பண்டிகைக்கும், கடவுளுக்கும் ஏத்தமாதிரி தீம் கோலங்கள் போட்டு வைச்சிருக்கேன் என்னோட கோல ப்லாகில். ராசிக் கோலங்கள், கிழமைக் கோலங்கள், கிராம தெய்வக் கோலங்கள், முருகன், சிவன், அம்மன், விநாயகர், பெருமாள், ஐயப்பன் கோலங்கள், மார்கழி, பொங்கல், தீபாவளி, ஓணம், நவராத்திரி, மாசி மகம்,தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், ஆடி மாதம் அம்மனைப் பற்றி என்று கோலங்கள் வரைந்து ப்லாகில் போட்டு இருக்கிறேன்.


15 . organizing at home and office

வீடுதான் என் ஒரே இடம். என் சுவாசம் போல அது. ஒவ்வொரு வீட்டை விட்டுப் போறதும் தோழியைப் பிரியிறது போலக் கஷ்டமா இருக்கும். அப்புறம் அடுத்துப் போற வீடும் புதுத்தோழி போலப் பழகி அந்யோன்யமாயிடும்.  இதுவரைக்கும் ட்ரான்ஸ்ஃபர் காரணமா 25 வீடு மாறி இருப்போம். எனக்கு எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்கணும். அப்போ அப்போ க்ளீன் பண்ணி அடுக்கி வைச்சுக்கணும். அடிக்கடி வீடு , ஊர் மாறுறதால வேலைக்கு ஆள் கிடைக்காது. பொறுமையா அதெல்லாம் நானே செய்துக்குவேன். பெட், புக்ஸ், ட்ரெஸ் ஷெல்ஃப், சாமிஷெல்ஃப், கிச்சன் எல்லாம் பளிச்சின்னு இருக்கும். வீடு நீட்டா இருந்தாத்தான் எனக்கு மைண்ட் கிளியரா இருக்கும்.

16.
கடந்து வந்த பாதை எப்படி இருக்கிறது என்பது குறித்து

கல்லூரியில் படிக்கும்போது நிறைய கவிதைகள் எழுதியுள்ளேன். சில கல்கி, புதியபார்வை, சிப்பி, வைகறை, புரவி, நம் வாழ்வு, தேன் மழை, பூபாளம் போன்ற பத்ரிக்கைகளில் வந்துள்ளன. மாணவ நிருபராகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அதன் பின்  திருமணம் ஆகிவிட்டது. முழுநேர இல்லத்தரசி. பிள்ளைகள் கல்லூரி செல்லும்வரை எந்த வெறுமையும் தெரியவில்லை. அவர்கள் வேலைக்குச் சென்றவுடன் ஏற்பட்ட தனிமையைத் தீர்க்க வலைப் பூ தொடங்கி எழுத ஆரம்பித்தேன். பத்ரிக்கைகளும் வாய்ப்புக் கொடுக்க எழுத்தாளர் ஆகிவிட்டேன். கடந்துவந்த பாதை கரடும் முரடும். ஆசையும் நிராசையும் பள்ளமும் மேடும் நிரம்பியதுதான் என்றாலும் இன்று அடைந்திருக்கும் இடம்தான் மனதில் இருக்கிறது. எனக்கும் கரம் கொடுத்து எழுத்தாளர் முகம் கொடுத்த பத்ரிகைகளுக்கு நன்றி.

17.
சினிமாத் துறை
 
எப்பிடியும் சினிமாவுக்கு ஒரு பாடல் எழுதிடணும்னு வலைப்பூ எழுத வந்த ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. J அதுவும் சங்கர் டைரக்‌ஷனில், ரஹ்மான் இசையமைப்பில் என் பாடல் இடம் பெறணும்னு பேராசை கூட இருந்தது.. அதுக்காக நிறைய மெனக்கெடனும்னு சொன்னாங்க. நாம யாருன்னே அவங்களுக்குத் தெரியாதில்ல. ஒரு வலைப்பதிவரா நான் எழுதிய கவிதைகள் இரண்டை முகநூல் நண்பரும் இயக்குநருமான ஐஎஸ்ஆர் செல்வகுமார், இசையமைப்பாளர் விவேக் நாராயணின் இசையமைப்பில் மகளிர்தினப் பாடலா இசையமைச்சு வெளியிட்டார். முகநூல் நண்பர்கள் சேரன், மிஷ்கின், பாரதி மணி, நிகோலஸ் ராஜன், மோகன், இயக்குநர் செல்வகுமார் இவங்கதான் எனக்குத் தெரிஞ்ச சினிமாக்காரங்க.

18.
உடல் நலம் மன நலம்

விசையுறு பந்தினைப் போல உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்னு பாரதியார் பாடுனது ரொம்பப் பிடிக்கும். பேச்சு எப்பிடி ஃபாஸ்டோ அதே போல உடம்பும் செயல்படணும்னு நினைப்பேன். அதுக்காக பறக்குறது போல நடந்து அடிக்கடி காலை ஒடச்சுக்குவேன். உடம்புல கால்சியம் குறைவா இருந்தாலும் இப்பிடி ஆகும்னு சொல்றாங்க.

அனைத்துக்கும் ஆசைப்படு அப்பிடின்னு சொல்றாங்க. ஆனா அப்செட் ஆகுன்னு சொல்லல. ஆசைப்படுறனோ இல்லையோ அப்போ அப்போ அடிக்கடி மூட் அப்செட் ஆகி அப்புறம் என்னை நானே சரிப்படுத்திக்குவேன். DON’T EXPECT , DON’T COMPARE னு சொல்லிக்கிட்டு.

19.
நீங்கள் எழுதியதில் உங்களுக்குப் பிடித்தவை

நான் எழுதியதில் ரொம்ப ரொம்பப் பிடித்த கவிதைகள்.

கல்யாண முருங்கை:-
********************

கோலமாவில் தோய்ந்த முஷ்டிகளால்
உன் பாதங்கள் வரைகிறேன்..

சீடைகள் செய்யத் தெரியாததால்
வெண்ணை கடைந்து வைத்திருக்கிறேன்..
நீ பிடிப்பிடியாய் உண்ணும் அவலும் கூட..

விஷம் கக்கும் பூதனை ., காளிங்கன்
இல்லை இங்கு..
அன்பைக் கக்கும் நான் மட்டுமே..

வருடம் ஒரு முறை
வருகிறாய் வீட்டுக்குள்..
என் வயிற்றில் ஒரு முறையாவது வாயேன்..

உறை பனியிலிருந்து
குழாய் வழிப் பயணத்திலோ.,
தொட்டிலில் இருந்து தத்தாகவோ

மற்றும்.

சுமந்தவள்:-
**********************

அவள் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.
என்னைப் பிரியும் துயரம்.
முன்பே பிரித்திருக்கிறாள்.
பிரித்தபின் மகிழ்ந்திருக்கிறாள்.

எனக்கும் துயரம்தான்
இருந்தும் வலைபின்னிக்
கிடக்கிறது வலியப்
பிரியவேண்டிய வேலை.

வழக்கம்போல அணைத்தாள்.
நெற்றியில் முத்தமிட்டாள்.
முதுகுச் சுமை விட
கனமாய்க் கிடந்தது அவளது அன்பு.

கடக்க நினைகிறேன்.
கண்ணீர் பெருகுகிறது.
உப்புமுட்டையாய் இறக்கமுடியவில்லை
வயிற்றில் சுமந்தவளின் அன்பை..

மற்றும்

உதறப்பட்ட வார்த்தைகள்.:-
********************
மௌனக்கூடுடைத்து
வார்த்தை சிறகுகளில்
வலம் வரும் பட்டாம்பூச்சிகள்
வீழ்ந்து கிடக்கும்
வெள்ளைத்தாள்களில்
தொத்தி தொத்தி
கிறுக்கலாகின்றன.
நிம்மதியின்மையை
சுமந்த தாள்
தாளமுடியாமல்
காற்றில் தலைதிருப்பி
உழன்று கொண்டிருக்கிறது,
உதறப்பட்ட வார்த்தைகளோடு.


20 .
இசை

பழைய திரை இசைப் பாடல்கள், சில ஹிந்திப்பாடல்கள், ரிக்கி மார்ட்டின், மோரிஸ் ஆல்பர்ட், ஈகிள்ஸ், பீட்டில்ஸ், ஜாஸ், பாப், ராக், கஜல், கவ்வாலி, ஹிந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம் என்று  எல்லாமே ரசிப்பது உண்டு. கேள்வி ஞானம்தான். பாடவோ இசைக்கவோ தெரியாது. ( பாத்ரூம் பாடகி என்று வேண்டுமானால் சொல்லலாம். J

21.
பிடித்த ஆளுமைகள்

அன்னை தெரசா, ஜெ ஜெயலலிதாம்மா, இந்திரா காந்தி அம்மையார், மலாலா, அருந்ததிராய் பட்டாச்சார்யா, சந்தா கோச்சார், பாடலாசிரியர் தாமரை. எழுத்தாளர் சுஜாதா, நடிகர்கள் பசுபதி, தனுஷ், நாடகத்தில் கோமல் சுவாமிநாதன், பெண் க்ரிக்கெட்டர் திருஷ்காமினி.

22.
பிடித்த பெண்கள் - குடும்பத்தில், வெளியில்

குடும்பத்தில் ஆத்தா, ஆயா, அப்பத்தா, அத்தைகள் இவர்களது அன்பும் கண்டிப்பும் பிடிக்கும். தீர்க்கமான சிந்தனைகளோடு வளர இவர்கள்தான் காரணம். வெளியில் மோகனா சோமசுந்தரம், உமா சக்தி, தமிழச்சி தங்கபாண்டியன். என்றும் அன்பைச் சொரியும் முகநூல் சகோதரிகள் ராஜிகிருஷ் அக்கா, லலிதா முரளி, கயல்விழி லெக்ஷ்மணன்,  ராஜி மலர், வாணி மல்லிகை, கயல்விழி ஷண்முகம், மலர்விழி ரமேஷ், புவனேஷ்வரி மணிகண்டன், சித்ரா சாலமன், ,சாந்தி மாரியப்பன், ராமலெக்ஷ்மி, அகிலா, வல்லிம்மா, ஏஞ்சல், கீதா இளங்கோவன், மணிமேகலை, விஜி, கவிதா, உமா மோகன் ஆனந்தி சுப்பையா, மர்லின், ரம்யா, காயத்ரி, அங்கை, சுந்தரி, எழில் அருள், ப்ரிய சகி அம்மு , சரோ க்ருஷ் அக்கா, ஆகியோர்.


23.
நகைச்சுவை நிகழ்ச்சிகள் வாழ்க்கையில்

நான் கொஞ்சம் சீரியசான ஆள்தான். சிரியஸா பேசிக்கிட்டு இருக்கும்போதே அதை சீரியஸா எடுத்துக்கிடுவேன்னு வீட்டில் கிண்டலடிப்பார்கள்.

24. ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும்

எதைக் கொடுக்கின்றீர்களோ அதையே பெறுவீர்கள். நிறைய நட்பும், அன்பும் சில பாடங்களும் பெற்றதைக் குறிப்பிடலாம்.

25.
அழகென்பது

உள் ஒளி.

26.
வீடு interiors and decoration

கிட்டத்தட்ட 25 வீடுகள் மாறி இருப்போம். ஒவ்வொரு வீட்டிலும் பல சௌகரியங்களும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. அடுத்து அடுத்து மாறுவதால் இருக்கும் வீட்டிற்கேற்ப பொருட்களை அடுக்கிக் கொள்வேன். வீடு விட்டு வீடு மாறும்போதெல்லாம் பல பொருட்கள் உடையும். பலது புதுசு வாங்குவோம். ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான வசதியை செய்து முடிக்கும்போது அடுத்த வீடு மாறிவிடுவோம். ஷாண்ட்லியர்ஸ், காலப்ஸ் வைத்த திரைகள், திவான், ஃப்ரெஞ்ச் டோருடன் கூடிய சொந்த வீட்டையும் பணி மாற்றத்தில் வாடகைக்கு விட்டு வந்தோம். கணவரின் ரிட்டயர்மெண்டுக்குப் பிறகு சொந்த வீட்டில் செட்டிலாகும்போது இன்னும் பார்த்துப் பார்த்துச் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கு.

27.
வாழ்க்கை குறித்து

தீர்மானமாய் இருப்பவர்கள் ஜெயிக்கிறார்கள். எது வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் கவனம் வேண்டும். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதில் முழு நம்பிக்கை உண்டு.

28. recycling

எதையும் வீணடிப்பதில் எனக்குப் பிரியம் கிடையாது. உடைகள் ஓரளவு நன்றாக இருந்தால் அந்த அந்த ஊரில் வேலை செய்யும் பெண்களிடமே கொடுப்பதுண்டு. எந்தப் பொருள் ரிப்பேரானாலும் அதைப் பழுது நீக்கி உபயோகித்தலே சிறந்தது என்று நினைப்பேன் . மார்க்கெட்டில் புதுசாக வந்திருக்கு என்று கம்ப்யூட்டரும், டிவியும், செல்ஃபோனும் , 4 பர்னர் அடுப்பும், வாங்கிக் குவிப்பதில் உடன்பாடு இல்லை. ஆனாலும் எப்படி எப்படியோ சேர்ந்துவிடும் சிலதை அடுத்த ஊருக்குப் போவதற்குள் தேவைப்படும் யாரிடமாவது கொடுப்பதுண்டு.

29.
எழுத்தும் வாசிப்பும்

என்னுடைய மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ”சாதனை அரசிகள்” என்ற கட்டுரைத் தொகுப்பு . இது வாழ்க்கையில் போராடி ஜெயித்த பெண்களின் வெற்றிக் கதைகளின் தொகுப்பு. ”ங்கா” – ஆராதனா என்ற குழந்தையின் புகைப்படங்களோடு கூடிய கவிதைத் தொகுப்பு. “ அன்ன பட்சி “ என்ற தலைப்பில் என்னுடைய கவிதைத் தொகுப்பு.

பஜ்ஜி, சுண்டல் கட்டின பேப்பரைக் கூட விடாமல் படிக்கும் ரகம் நான். ஒரு புத்தகத்தை எடுத்தால் முதல் அட்டையிலிருந்து கடைசிப் பக்கம் முற்றுப் புள்ளி வரை படிப்பேன். இப்போதெல்லாம் முகநூலும் வலைத்தளமும் பெரும் நேரத்தை எடுத்துவிடுவதால் படிப்பது குறைந்துவிட்டது. வாசிப்புக்குத் திரும்ப யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் வாங்கிய புத்தகங்கள் தேங்கிப் போய் இருக்கு. அடுத்துப் படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.

30.
புகைப்படக்கலை (or) உங்கள் பொழுதுபோக்குக் கலை

போற ஊரைப் பார்க்கும் பொருளை எல்லாம் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் போடுவதுதான் ஒரே வேலை. என் லூமிக்ஸ் காமிராவில் எடுக்கப்படும் படங்கள் சில சமயம் அழகானதாக அமைந்துவிடுவதும் உண்டு. மேகத்தில் ஆஞ்சநேயர், குவாலியர் சூரியனார் கோயில் மயில், ஆந்திராவில் சன்செட் ,பிதார் சோலே கம்பா மாஸ்க், குல்பர்கா ஜும்மா மசூதி,  ஆகியன பலராலும் விரும்பப்பட்ட புகைப்படங்கள். உணவுப் புகைப்படங்கள் பல கூகுள் சர்ச்சில் அடிக்கடி சிக்கி முதலிடத்தில் இருக்கின்றன. குழந்தைகள், பூக்கள், விநாயகர் ஆகியோர் என் புகைப்படத்தில் முதலிடம் பெறுவார்கள். நேரடி ஒளிபரப்புப் போல எங்கு சென்றாலும் அந்த ஊரைப் பற்றி அல்லது அந்த நிகழ்வைப் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் எழுதுவது பிடித்தமான ஒன்று.

31.
இவை தவிர நீங்கள் கூற விரும்புபவை.

குங்குமம் தோழியின் ஸ்டார் தோழியாகத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றியும் அன்பும் வாழ்த்துகளும்.

32.
குங்குமம் தோழி இதழ் பற்றி உங்கள் கருத்துகள்

பெண் சாதனையாளர்கள், வித்யாசமான தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கட்டுரைகள் அருமை. மேலும் தொழில் வாய்ப்பு பற்றிய கட்டுரைகளும், சட்டம்/சட்ட ஆலோசனை , மருத்துவம், குழந்தை வளர்ப்பு பற்றிய கட்டுரைகளும் அருமை. மொத்தத்தில் பூங்கொத்துக் கொடுக்கலாம். ( குங்குமம் தோழிக்கு அழகுப் பூங்கொத்து என்ற தலைப்பில் முதல் இதழ் வெளிவந்ததும் நான் என் வலைத்தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தேன். அதை இன்று வரை தக்கவைத்துக் கொண்டிருப்பதற்குப் பாராட்டுகள். ) ஓரளவு எழுதத் தெரிந்த முகநூல் தோழியர் பலரையும் சிறப்பான எழுத்தாளர்களாக்கிய பெருமை குங்குமம் தோழிக்கு உண்டு.

33.
குங்குமம் தோழி இதழில் இடம் பெற வேண்டிய புதிய பகுதிகள் / விஷயங்கள்
குங்குமம் தோழியில் பெண் அரசியல்வாதிகள், பெண் விளையாட்டு வீராங்கனைகள், பெண் எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் இடம் பெறலாம். ஒவ்வொரு இதழிலும் சிறுகதை ஒன்றும் கவிதை ஒன்றும் கூட இடம்பெறலாம். மற்ற நாட்டுப் பெண் எழுத்தாளர்களின் படைப்பு ஒன்றை ஒவ்வொரு இதழிலும் மொழிபெயர்த்துப் போடலாம். கல்வி, மருத்துவம், கவுன்சிலிங் ஆகியன குறித்தும் அதிகம் வெளியிடலாம். 

டிஸ்கி - 1 :- இந்தப் பேட்டியை இங்கேயும் படிக்கலாம்.
டிஸ்கி - 2 :-   உங்கள் பேரன்புடனும் பேராதரவுடனும் என் அடுத்த தொகுதி பெண்பூக்கள் புதிய தரிசனம் வெளியீடாக மலர்கிறது.(பெண்கள் பூக்கள் ரொமான்ஸ், காதல் பாசம், நேசம். ). மகளிர் தினத்துக்கு முன் கடைகளில் கிடைக்கும். கடைகள் பற்றிய விபரம் கிடைத்தவுடன் பகிர்கிறேன். அன்பும் நன்றியும். தேனம்மைலெக்ஷ்மணன்.


17 கருத்துகள்:

  1. அபாரம். உங்களுடைய பல்கலைத் திறனையும் ஒன்றிரண்டு பக்கங்களில் அடைக்க முடியாதுதான். விரிந்து பரந்த எழுத்தும் எண்ணமும் அழகாகத் தெரிகிறது பகிர்ந்து பக்கங்களில். வாழ்த்துகள் தேன்.

    பதிலளிநீக்கு
  2. சகல கலா சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  3. அடுத்த தொகுதியான பெண்பூக்களின் வருகைக்கு இனிய வாழ்த்துகள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  4. குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக எங்கள் வலையுலகத் தோழி இடம்பெற்றுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  5. தங்களின் தீர்க்கமான பார்வையும், கம்பீரமான தோற்றமும், மிக அருமையான எழுத்துக்களும், இதுவரை தாங்கள் செய்துள்ள பல்வேறு சாதனைகளும், தங்களின் தனித்திறமைகளும் இந்தப்பேட்டியின் மூலம் மேலும் ஜொலிக்கின்றன.

    >>>>>

    பதிலளிநீக்கு
  6. தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தங்கள் குடும்பத்தார் தங்களுக்குக் கொடுத்துவரும் ஒத்துழைப்புகளையும் கேட்க மிகவும் மகிழ்ச்சியாகவும், அதே சமயம் கொஞ்சம் ஏக்கப் பெருமூச்சு விடக்கூடியதாகவும் உள்ளது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அருமையான, அழகான, அர்த்தமுள்ளதோர் பேட்டி.

    தங்களுக்கு ’ஸ்டார் தோழி’ என மங்கலகரமாகக் குங்குமமிட்டு, திலகமிட்டு, பேட்டி எடுத்து, வெளியிட்டுள்ளதால், குங்குமத்திற்கே ஓர் தனிப்பெருமை கிடைத்துள்ளது என்பது என் சொந்தக் கருத்து.

    மேலும் மேலும் பதிவுலகிலும், எழுத்துலகிலும், முக நூலிலும், சமுதாயப்பணிகளிலும் தொடர்ச்சியாகத் தாங்கள் ஜொலித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு கேள்விக்கும் மிகமிக அருமையாக,சூப்பரான பதில்கள் அக்கா. உங்களை குங்குமம்தோழி "சூப்பரான" ஸ்டார் தோழியாக சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்காங்க. வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.
    இத்தனைபேர் மத்தியில் பிடித்தமானவர்களில் நானுமா!! ரெம்ப மகிழ்ச்சியாக இருக்கு. ரெம்ப ரெம்ப நன்றிகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  9. இனிய வாழ்த்துக்கள் தோழி... அழகாய் உங்களைப் பற்றிப் பகிர்ந்திருக்கீங்க...உங்களுக்கு பிடித்த பெண்ணாய் நானும் இருக்கின்றேன் மிக்க நன்றி. நானும் உங்களைப் போல் தான் பஜ்ஜி சுற்றிய பேப்பர் படித்த காலம் போய் இணையத்தில் சுற்றுவதால் புத்தகம் படிக்க ஆர்வம் செல்வதில்லை. உங்கள் பெண்பூக்கள் நிறைய மனிதர்களைச் சென்றடைய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. 2008ம் ஆண்டு இறுதியில் அலுவலக வேலையாக நான் ஹைதராபாத் BHEL GUEST HOUSE இல் தொடர்ச்சியாக 15 நாட்கள் தங்கியிருந்தேன். பல இடங்களையும் சுற்றிப் பார்த்து மகிழ்ந்து வந்தேன்.

    2011 மட்டுமே பதிவுலகுக்கு நான் வந்ததால், தங்களின் அறிமுகம் எனக்கு அப்போது கிடைக்காமல் போய் விட்டது. மேலும் அதுசமயம் தாங்கள் சென்னையில் இருந்திருப்பீர்கள் எனவும் நினைக்கிறேன்.

    கின்னஸ் சாதனையில், உலகிலேயே மிகப்பெரியதுமான, ராமோஜி ராவ் ஃப்லிம் சிடிக்குச் சென்று ஒரு நாள் முழுவதும் அங்கு மகிழ்ச்சியுடன் அனுபவித்தேன். உள்ளே செல்ல நுழைவுக்கட்டணமே ரூ. 1000 அதுவும் அப்போதே. ஆனாலும் அனைவரும் பார்க்க வேண்டியதோர் மிக அழகான இடம்.

    போலித்தனமாக எவ்வாறு சினிமாக்கள் எடுக்கப்பட்டு, மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார் என்பதை அங்கு என்னால் நன்கு உணரப்பட்டது.

    அங்கு எடுக்கப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இன்னும் என்னிடம் பத்திரமாகவே உள்ளன. அதில் என் சுவையான அனுபவங்களை பதிவினில் நான் எழுதினால் அதுவே 15 பகுதிகள் கொண்ட தொடராக அமைந்து விடும். :)

    சார்மினார் சென்றேன். அங்கு ஒரு மிகவும் அருமையான ருசியான தென்னிந்திய சைவ உணவுகள் மட்டும் கிடைக்கும் உணவகம் இருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அங்கு போய் எனக்குப்பிடித்தமான பூரி மஸால், ஆனியன் ரவா தோசை போன்றவற்றை நன்றாக ஒருபிடி பிடித்துக்கொண்டேன்.

    அருகே முத்துமாலைகளுக்குப் புகழ்பெற்ற கடைக்குச் சென்று, மாலைகளும், வளையல்களும் நிறைய வாங்கி வந்தேன். வேறு ஒரு ஜவுளிக்கடையில் ஒருசில புடவைகளும் வாங்கி வந்தேன்.

    கோல்கொண்டா கோட்டைக்கும் சென்றேன்.

    அரண்மனைக்குச் சென்று, அங்கு தினமும் இரவு 7 மணி சுமாருக்கு ஆரம்பித்து 8 மணி வரை காட்டப்படும், ஒலி, ஒளி கண்காட்சியையும் கண்டு களித்தேன்.

    பிர்லா மந்திர், NTR தோட்டம் என பல இடங்களுக்குச் சென்று வந்தேன்.

    நாங்கள் BHEL திருச்சியிலிருந்து 4 நண்பர்களும், BHEL மற்ற UNITS களிலிருந்து சுமார் 30-40 பேர்களும் சேர்ந்து பல இடங்களைச் சுற்றிப்பார்த்து, ஆசைதீர ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வந்தோம்.

    ஏனோ ஹைதராபாத் என்று தாங்கள் சொன்னதும், இதையெல்லாம் தங்களிடம் பகிர்ந்து கொள்ளணும் என எனக்குத் தோன்றியது. அவை எனக்கு இன்றும் மிகவும் இனிய நினைவலைகளாக உள்ளன. :)

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  11. சும்மாவை சும்மா அடிக்கடி பார்ப்பேன். ஆனால் தங்களைப்பற்றிய முழு விவரம் இந்தப் பதிவில் தான் கிடைத்தது.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதில்கள். நல்வாழ்த்துகள் தேனம்மை, மலரவிருக்கும் பெண் பூக்களுக்கும்!

    பதிலளிநீக்கு
  13. மிக்க நன்றி கீத்ஸ்

    நன்றி தனபாலன் சகோ

    அஹா இவ்வளவு பாராட்டா. என்ன சொல்வதென்று தெரியவில்லை கோபு சார். ஆனந்த அதிர்ச்சி. மிக்க நன்றி :) ஹைதராபாத் பற்றி மிக அருமையான வர்ணனை. நேரில் பார்த்ததை விட அழகா சொல்லி இருக்கீங்க. :)

    நன்றி டா அம்மு :)

    நன்றிம்மா எழில் :)

    மிக்க நன்றி ஜெயகுமார்

    மிக்க நன்றி ராமலெக்ஷ்மி :)


    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  15. எழில் அருள் எழுதிய பதிவைப் படித்துவிட்டு இங்கு வந்தேன் தேன். ஆனந்த அதிர்ச்சியாக
    என் பெயரும் இருப்பதைப் பார்த்தேன். வலைப்பதிவுகளைப் படிப்பதையே அவ்வப்போது தான் செய்கிறேன்.
    இத்தனை விவரங்கள் உங்களைப் பற்றித் தெரிய வந்தது மிக மகிழ்ச்சி,. மல்லதோழியின் அடையாளம் பளிச்சிடுகிறது. இன்னும் வளர வாழ்த்துகள் மா தேன்.

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துகள். செகந்திராபாதில் எழுபதுகளின் கடைசியில் இருந்திருக்கேன். ஹைதராபாதுக்குச் சுற்றிப் பார்க்கச் சென்றது தான். அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் இன்றுதான் முகநூல் மூலம் தெரிந்து கொண்டு வந்தேன். பல சிநேகிதிகளின் பெயரையும் உங்கள் குழுவில் கண்டேன். அனைவருக்கும் வாழ்த்துகள். வல்லி சொன்னமாதிரி எப்போதாவது தான் வருவதால் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  17. மிக்க நன்றி வல்லிம்மா :)

    நன்றி கீதா மேம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...