சொன்ன சொல்லைக் காப்பாற்றியவன்/ பிரம்ம ராட்சசனை மனிதனாக்கிய இசை.
சொன்ன சொல்லைக் காப்பாற்ற உயிரைக் கூடக் கொடுப்பார்கள் சிலர், ஆனால் இறைவனைப் பாடிய பாடல்களின் பலனைக் கொடுக்கமாட்டார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தான் நம்பாடுவான் என்ற மனிதன். அவனது கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
திருக்குறுங்குடி என்றொரு ஊருக்கருகே ஒரு கிராமத்தில் வசித்து வந்தான் நம்பாடுவான் என்றொரு மனிதன். அவன் தினமும் அதிகாலையில் எழுந்து காலைக்கடன்கள் முடித்து திருக்குறுங்குடிப் பெருமானை நியம நிஷ்டைப்படி வணங்கி வந்தான். கைசிகம் என்ற பண் இசையால் அவன் தினமும் இறைவனைப் பாடித் துதித்து வந்தான்.
தினமும் அவன் கோயிலுக்குச் செல்வதை ஒரு பிரம்ம ராட்சசன் கவனித்து வந்தான். ஒரு நாள் நம்பாடுவான் கோயிலுக்குச் செல்லும் போது வழியில் ஒரு பெரிய உருவம் தோன்றித் தடுத்தது. அதுதான் அந்த பிரம்ம ராட்சசன். பூமிக்கு வானுக்கும் இடையே கருத்த உருவத்தில் பிரம்மாண்டமாக இருந்த அந்த பிரம்ம ராட்சசன் நம்பாடுவானைப் பிடித்து வைத்துக் கொண்டான்.
”ஐயோ பசிக்கிறதே.. நீ எனக்கு இப்போதே உணவாக வேண்டும் “ என்று அலறியவாறு தன் கரியகைகளால் நம்பாடுவானைப் பிடித்து வாயின் அருகில் கொண்டு சென்றான் பிரம்ம ராட்சசன். அதைக் கண்டும் பயப்படாமல் நம்பாடுவன் “ ஹே ராட்சசா , சிறிது நேரம் பொறு . நான் பெருமானை வழிபட்டு வந்தபின் உனக்கு உணவாகிறேன் “ என்றான்.
