தொடர் முயற்சியாளர் தேனம்மைலெக்ஷ்மணன்
தேனம்மையின் பூர்வீகம் காரைக்குடி. பள்ளிப் படிப்பெல்லாம் ராஜமன்னார்குடி. தந்தை பெயர் சபாரெத்தினம், தாயின் பெயர் முத்துக்கருப்பாயி. உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். மதுரை ஃபாத்திமாக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு. அதுதான் இவரைப் புதிப்பித்த இடம். எம் ஏ சுசீலாம்மா என்ற தமிழன்னை வேதியல் படித்து வந்த இவரின் கவி இயற்றி வரும் திறனைக் கண்டுபிடித்து ஊக்குவித்தார்.
கல்லூரியில் நிறைய எழுதித் தியாராஜா பொறியியல் கல்லூரி, யாதவா கல்லூரி, மதுரை மெடிக்கல் காலேஜ், தியாசபிகல் சொஸைட்டி போன்றவற்றில் ஆன் த ஸ்பாட் கவிதைகள் எழுதிப் பரிசுகள் வாங்கிக் குவித்த இவர் திருமணமானபின் எழுத்தை மறந்தே போனார். அதன் பின் 24 ஆண்டுகள் கழித்துத் தன் ஆசிரியையைச் சந்தித்தபோது அவர் வலைப்பூ ஆரம்பித்து எழுதிவருவதாகக் கூறினார். அறுபதைத் தாண்டிய தன் ஆசிரியை ரஷ்ய நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்து வந்ததை, முப்பெரும் விருதுகள் பெற்றதைக் கண்ட இவர் இந்த வயதிலும் அவர் செய்து வரும் சாதனைகளைக் கண்டு பிரமித்தார்.
வயது ஒரு தடையல்ல என்றும் கேட்டால்தான் விரும்பியது கொடுக்கப்படும் என்பதையும் உணர்ந்தார். தன் கிரியா ஊக்கியான ஆசிரியரைப் பின்பற்றி 2009 இல் வலைப்பூ ஆரம்பித்துப் பல்வேறு பத்ரிக்கைகளிலும் எழுதி வருகிறார்.
குழந்தைகள் வளர்ந்தபின் ஏற்பட்ட இடைவெளியையும் வெறுமையையும் களையவே எழுத ஆரம்பித்தார். பலவருடங்களுக்குப் பின் எழுத ஆரம்பித்ததால் முதலில் தன்னால் முடியுமா என்ற மனத்தடையைக் கடந்து, மெனோபாஸ் பிரச்சனைகளையும் மறந்து வாழ்வில் ஏற்ற இறக்கங்களிலும் தொடர் முயற்சியாளராக எழுதி வருகிறார்.
இவர் ஒரு சிறந்த கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்ரிக்கையாளர். யூ ட்யூபர். ஏழு வலைப்பூக்களில் எழுதி வருகிறார். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு, தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம், விடுதலை வேந்தர்கள், பெண் மொழி, காதல் வனம், மஞ்சளும் குங்குமமும், பெண் அறம், கீரைகள், ஆத்திச்சூடிக் கதைகள், பெண்ணின் மரபு, நன்னெறிக் கதைகள் இரண்டு தொகுதிகள், வளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும், நாககுமார காவியம், நீலகேசி , ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள், கோலங்கள், மகாபாரதக் கதைகள், சாணக்ய நீதி, சோகி சிவா, செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள், இப்படியும் சாதிக்கலாம், கருப்பை நம் உயிர்ப்பை ஆகிய இருபத்து ஏழு நூல்களின் ஆசிரியர். அமேஸானில் 66 நூல்கள் வெளியாகி உள்ளன.
நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கத்தில் வெ.தெ. மாணிக்கணாரின் மருதத்திணை பற்றிய ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். அந்தாதியும், அனுபூதியும் என்ற ஆய்வும் செய்துள்ளார். ”பெண் பரிமாணங்களும் இலக்கியப் பகிர்வுகளும்” என்ற தலைப்பில் ஃபாத்திமா கல்லூரியில் சுசீலாம்மா ஃபாத்திமாம்மா ஆரம்பித்த எண்டோவ்மெண்டுக்காகச் சிறப்புரை ஆற்றி உள்ளார்.
இந்திய ஆசிய கவிஞர்கள் மாநாட்டில் தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம் என்ற நூல் வெளியாகி உள்ளது. அழகப்பா பல்கலை வெளியிட்ட கருத்தரங்க நூலில் 20 ஆம் நூற்றாண்டுப் புதின ஆசிரியர்களில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார். அழகப்பா பல்கலையின் தொலைதூர பாடத்திட்டத்தில் இவரது சூலும் சூலமும் என்ற கவிதை இடம்பெற்றுள்ளது. காரைக்குடி கம்பன் கழக நிகழ்வு ஒன்றில் மாணவர் போட்டிக்கான நடுவராகவும் செயலாற்றி உள்ளார்.
குங்குமம், குங்குமம் தோழி, குமுதம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த் ப்ளஸ், ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, இந்தியா டுடே, தேவதை, மல்லிகை மகள், மெல்லினம், லேடீஸ் ஸ்பெஷல், பாக்யா, பூவரசி, சமுதாய நண்பன், நம் தோழி, சூரியக்கதிர், இவள் புதியவள், தினமலர், தினமணி, தினமணிக் கதிர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம், பரிவு, குறுஞ்செய்தி, தினகரன் வசந்தம், புதிய தலைமுறை, யுகமாயினி, இன் & அவுட் சென்னை, சென்னை அவென்யூ, கொளத்தூர் டைம்ஸ், ஆச்சி வந்தாச்சு, புதிய பயணி, ஹாலிடே நியூஸ், நமது மண்வாசம், கோகுலம், ஷெனாய் நகர் டைம்ஸ், தமிழ்த்தேர், மங்கையர்மலர், ஐபிசிஎன், எஸ் பி என், சொற்கோயில், மகளிர் தரிசனம், இந்து பார்வைகள் & குரல்கள், இனிய நந்தவனம், ஹலோ மதுரை, சென்னை ஸ்கூப், பெண்க்ளின் குரல், சுவடு, தென்றல், தனவணிகன், நமது செட்டிநாடு, நான் மீடியா ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி வருகின்றன.
இளமை விகடன், திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், அதீதம், முத்துக் கமலம், கழுகு, வலைச்சரம், ஊடகம், சுவடு, பூவரசி, தகிதா, புதிய “ழ” , அவள் பக்கம், தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல்,வாசகசாலை ஆகிய இணையங்களில் எழுதி வருகின்றார் .
நம் உரத்த சிந்தனை, தீக்கதிர், லேடீஸ் ஸ்பெஷல், தினமலர், தினமணி, இந்தியா டுடே, தி தமிழ் இந்து, புதிய தரிசனம், தென்றல், புன்னகை உலகம், மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றில் இவர் பற்றியும் இவரது நூல் பற்றியும் வெளியாகி உள்ளன.. சாஸ்த்ரி பவன், போர்ட் ட்ரஸ்ட், பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி, விஜய் டிவி , சன் நியூஸ் தொலைக்காட்சி, புதிய யுகம், வானவில், பொதிகை, வானொலி ஆகியவற்றில் இவரது கருத்து & பேட்டி வெளியாகி உள்ளது. பொதிகையின் காரசாரத்திலும், நம் விருந்தினர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும், மங்கையர் சோலையில் சிறப்பு மங்கையர் அறுவரில் ஒருவராகவும் பங்கேற்றுள்ளார். எட்டு நூல்களுக்கு முன்னுரை, அணிந்துரை கொடுத்துள்ளார்.
இவருடைய கவிதைகள் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் மலாயிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சகி என்ற கன்னடப் பத்ரிக்கையில் இவரது கவிதையின் மொழிபெயர்ப்பு வெளியாகி உள்ளது. அன்ன பட்சி நூலுக்காக ”அரிமாசக்தி” விருது பெற்றவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் போட்டியில் இருமுறையும் சிறுகதைப் போட்டியில் ஒரு முறையும் பரிசு பெற்றவர். வலைப்பூ எழுத்துக்களுக்காக 25 விருதுகளும், சமூக இணையப் பங்களிப்புக்காக சிறப்பு விருதும், மதர் தெரசா அவார்டு, விமன் எம்பவர்மெண்ட் அவார்டு, கம்யூனிட்டி சர்வீஸ் அவார்டு பெற்றவர். இவ்விருதுகளை இவருக்கு சாஸ்திரிபவனில் வழங்கியவர்கள் அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் டாக்டர் சாந்தாவும், குழந்தைப்பேறு சிறப்பு மருத்துவர் டாக்டர் கமலா செல்வராஜும் ஆவார்கள்.
சாஸ்திரிபவனிலும் போர்ட் ட்ரஸ்டிலும் மகளிர் தினத்திலும் மேலும் 120 ஆசிரியைகளுக்கு ஆசிரியர் தினத்திலும், பல்வேறு கல்லூரி, பள்ளிகளிலும் உரையாற்றி உள்ளார்.
அவள் விகடனின் வலைப்பூவரசி, குங்குமம் தோழியின் ஸ்டார் தோழி, திருநெல்வேலி தூத்துக்குடி எஃப் எம்மின் சிறந்த பெண் வலைப்பதிவர், ஈரோடு சங்கமத்தில் பதினைந்து ஆண்பதிவர்களுடன் சிறந்த பெண் வலைப்பதிவர், பாக்யாவில் எதிரொலி நாயகியாக, நம் உரத்த சிந்தனையில் இணையதள ப்ளாகர், திருப்பூர் அரிமா சங்கத்தின் அரிமா சக்தி விருது, தமிழால் இணைவோம் தந்த தங்கமங்கை விருது, லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்பெஷல் லேடி விருது, ஸ்ரீ சக்தி விருது, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழங்கிய விஞ்ஞானி ரகுபதி நினைவு விருது, தமுஎகசவின் நற்றமிழ் நங்கை விருது பெற்றிருக்கிறார்.
பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இவரது புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ”சிதம்பரம் மகளிர் கல்லூரி”யிலும், ”பென்னிங்டன் லைப்ரரி”யிலும் காரைக்குடி ”கம்பன் கற்பகம் பள்ளி”யிலும், ”ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி”யிலும் ”கார்த்திகேயன் பள்ளியிலும்” ””அழகப்பா பல்கலைக் கழகத்திலும்”, ”இராமசாமி தமிழ்க் கல்லூரி”’யிலும் இவை சிறப்பிடம் பெற்றுள்ளன. அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள லூடன் கவுண்டி தமிழ்ப் பள்ளி நூலகத்தில் இவரது நூல்கள் இடம் பெற்றுள்ளன. ஜெர்மனி டோர்ட்மெண்டில் இருக்கும் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்தில் இவரது பத்து நூல்கள் இடம் பெற்றுள்ளன.
யூ ட்யூபில் 2500 பாமாலைகள், குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த 2000 கோலங்கள், 450 புத்தக மதிப்புரைகள் வழங்கி உள்ளார். பாமாலைகளில் திருவாசகம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, திருப்பாவை, திருவெம்பாவை, குமரேச சதகம், ஸ்ரீ பார்த்த சாரதி மாலை போன்றவற்றையும், அஷ்டகங்கள், சகஸ்ரநாமங்கள், ஸ்லோகங்கள், பதிகங்கள்,பாசுரங்கள் போன்றவற்றைப் பதிவு செய்யும் எண்ணத்தில் யூ ட்யூபில் பாடலாகப் பாடியுள்ளார்.
மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள், பெண் சாதனையாளர்கள், நேர்காணல்கள், பேட்டிகள், கோலங்கள், சமையல் குறிப்புகள், கவிதைகள் , கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் குழந்தைகளுக்கான கதைகள், கட்டுரைகள், 150 க்குமேல் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் சினிமா விமர்சனங்கள், 450 க்குமேல் புத்தக விமர்சனங்கள் ( சிறுவர் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்களையும் ஆவணப்படுத்தி உள்ளார் ). ஆன்மீகச் சிறுகதைகள் ( 180 இதிகாச புராணக் கதைகள் சிறுவர் மலரிலும், சொற்கோயிலிலும் திருநெல்லை இதழிலும் வெளியாகி உள்ளன ) படைத்து வருகிறார்.
ட்ராவ்லாக் என்னும் பாணியில் பயணக் கட்டுரை நூல்களாக ஜெர்மனி, யூரோப், ஃப்ரான்ஸ், ரோம், இத்தாலி, பெல்ஜியம், ஜெனிவா, ஸ்விட்ஜர்லாந்து, துபாய், அபுதாபி, ஷார்ஜா, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளைப் பற்றி எழுதி இருக்கிறார். இவருடைய காதல்வனம் என்னும் நாவல் முதன்முதலாக பாக்கெட் எஃப் எம்மில் ஆடியோ நாவலாக வெளியாகி உள்ளது. அச்சு நூலாகவும், அமேசானில் மின்னூலாகவும், பாக்கெட் எஃப் எம்மில் ஒலிநூலாகவும் மூன்று தளங்களிலும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
இருபத்து நான்கு வருடங்கள் கழித்து எழுத ஆரம்பித்ததால் ஏற்பட்ட மனத்தடை மட்டுமல்ல, சுற்றம் நட்பு வட்டத்தினரிடையே தம்மைப் பற்றி எழுதி விடுவாரோ என்று ஏற்பட்ட சிற்சில எதிர்ப்புகள், பத்திரிக்கை அரசியல், ஆகியவற்றையும் மீறித் தம் கருத்துக்களை மற்றவர் மனம் புண்படா வண்ணம் இச்சமூகத்தில் இந்த நூற்றாண்டிலும் நீடிக்கும் பெண்களின் பிரச்சனைகளையும் அதே சமயம் பொது எண்ணப் போக்கு மாறியுள்ள இச்சமூகத்தை எதிர்கொள்ள இன்றைய ஆண்குலம் படும் அவஸ்தைகளையும் அவதிகளையும், அவர்களையும் பெண்களாகிய நாம் நம் சகமனிதர்களாக இணைத்துச் செயல்பட வேண்டும் என்பதைக் கதைகளாகவும், கட்டுரைகளாகவும் படைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதை மையக் கருத்தாகக் கொண்டு அமேஸானில் “தாயுமானவர்களும் தந்தையுமானவர்களும்” என்ற இவரது நூல் வெளியாகி உள்ளது.
சரித்திரத்தில் இடம் பெற்றவர்களும் பிரபலமானவர்களும் மட்டுமல்ல சாதாரணப் பெண்களும் சாதனையாளர்கள்தான் என்பதை முதன் முதலாக உரத்துச் சொல்லி நூலாக்கம் பெற்றது இவரது முதல் நூல் சாதனை அரசிகள். இளைய தலைமுறைக்கு நம் இதிகாச புராணக் காப்பியங்களின் சிறப்பை எடுத்துக் கூறும் வண்ணம் மகாபாரதத் துணைக்கதைகள், நன்னெறிக் கதைகள், ஆத்திச்சூடிக் கதைகள் என்று சிறுகதை நூல்களாவும், சுதந்திரத்தின் சிறப்பை எடுத்தியம்பும் விடுதலை வேந்தர்கள், ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள் என்ற கட்டுரை நூல்களாகவும், நம் காப்பியங்களான வளையாபதி, குண்டலகேசி, நீலகேசி, நாககுமாரகாவியம் ஆகியவற்றிற்கு உரையும் சிலவற்றைப் புதினமாகவும் எளிமையாகக் கொடுத்துள்ளார்.
கருக்கொலை, சிசுக்கொலை, பெண்கல்வி மறுப்பு, கருத்து சுதந்திரம், கொத்தடிமைகள், மூன்றாம் பாலினம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், பாலியல் பலாத்காரமும் அமில வீச்சும், பெண் பாலியல் தொழிலாளிகளின் பிரச்சனைகள், பணியிடப் பாலியல் பலாத்காரம், பெண் உடல் நலம், முதிய பெண்களின் நலம், பேறு காலப் பாதுகாப்பு, கருப்பை நலம் ஆகிய பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் கட்டுரை நூல்களாக பெண்மொழி, பெண் அறம், பெண்ணின் மரபு ஆகிய கட்டுரை நூல்கள் 13,000 பெண் சுய உதவிக்குழுக்களுக்காக நடத்தப்பட்டுவரும் மதுரை தானம் அறக்கட்டளையின் ரிஃப்ளக்ஷன் பதிப்பகம் மூலம் வெளியானது.
மஞ்சளும் குங்குமமும் என்ற நூல் நம் பாரம்பரியத்தின் சிறப்பை எடுத்துக் கூறும் வண்ணம் அமைந்தது. மதுரை தானம் அறக்கட்டளையின் வளரிளம் பெண்கள் குழுக்களுக்காக இந்நூலில் போட்டிகள் வைக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நூல் பல பதிப்புகள் கண்டுள்ளது. சிவப்புப் பட்டுக் கயிறு என்ற சிறுகதைத் தொகுப்பும் சோகி சிவா என்ற நாவலும் செட்டிநாட்டு வட்டார வழக்கையும் வாழ்வியலையும் ஆவணப்படுத்த எழுதப்பட்டவை. சாணக்யர் கிமு மூன்றாம் நூற்றாண்டில் எழுதிய சாணக்ய நீதி என்ற சமஸ்கிருத சூத்திரங்களை இவர் ”சாணக்ய நீதி பதவுரை பொழிப்புரையுடன் என்று பதம் பிரித்துப் பொழிப்புரையுடன் நூலாகக் கொடுத்துள்ளார்.
பாரதியின் அக்கினிக் குஞ்சைப் போல மனப் பொந்தில் பதியன் வைத்திருக்கிற இவரது எழுத்தின் பொறி நீறு பூத்த நெருப்பாய் இன்னும் கனல்வதாக என்று ஆசி வழங்கிய சுசீலாம்மாவின் வாழ்த்து இவரை இன்னும் இயங்கச் செய்கிறது. வாளை விடக் கூர்மையானது பேனா முனை. இவர் தன் எழுத்தால் தீர்ப்பு வழங்க முடியாவிட்டாலும் இச்சமூகத்தின் எண்ணப் போக்கைச் சீர்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் எழுதி வருகிறார்.
இவ்வாறு தொடர்ந்து வெவ்வேறு தளங்களிலும் இயங்கி வருவதையே தன் குறிக்கோளாகச் செயல்பட்டு வருகிறார் இந்தத் தொடர் முயற்சியாளராகிய தேனம்மைலெக்ஷ்மணன். எழுத நினைப்பவர்கள் எந்த வயதிலும் எழுதலாம், சாதிக்கலாம் என்பதற்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. தொடர்ந்து முயற்சி செய்தால் சாதனையாளராகவும் ஆகலாம். வாழ்வையும் சுவாரசியமாக்கலாம் என்பது இவர் தரும் செய்தி.
--கரு.லெக்ஷ்மி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)