எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 ஜூலை, 2010

முகம்......

கார்பனும் ஹைட்ரஜனுமான மூலக்கூறின் கலவை தானே உனது முகமும் என்றது எனது அகந்தை... மென்மையாய் அழகாய்., ஓராயிரம் அல்ல லட்சம் கவிதைகள் எழுதலாம் என்றது மனம்..ஒரு ஒளியைச் சிந்தி ., பூவாய் விரிந்து., குழந்தையைப் போலானதாய்..

சாயங்கால மஞ்சள் கிரணமாக., காலை நேர இசைவகுப்பின் ஒலிக்குறிப்பாக.,இரவின் தண்ணென்ற பால் ஒளியாக ஒரு தீபத்தை ஏந்தி இருக்கிறது உன் முகம்.. சமயத்தில் கனிவாகவும்.. சமயத்தில் உக்கிரமாகவும்..

வெடித்துச் சிதறும் ஆவியைப் போல பீரிட்டு எழுகிறது எண்ணம் அவ்வப்போது..முழுதும் அடங்கும் வரை உஷ்ணமாய்.......டால்ஃபினின் அசைவைப் போலப் புரட்டிப் போடுகிறது ஞாபகங்கள்.. இரு கைகளாலும் ஏந்தி உச்சி முகர்ந்து அருகே காணும் ஆவல் அடித்துக் கொல்கிறது திடீர் மழைபோல்.. நினைக்கும் போதெல்லாம் பக்கம் சூழ்கிறது உனதான வாசனை..



மரக்கரங்கள் வழி மழை வழிவதாய் என் கைகள் வழி உன் மூச்சு வழிவதுகூட உணர்கிறேன்..எத்தனை நூறு முகங்கள் பார்த்திருந்தாலும் திரும்பத் திரும்ப வரும் ஒற்றை முகம்.. டாட்டூவாய் பச்சை குத்தி..

பெரு நெருப்புப் பிடித்த காடொன்றின் செவ்வண்ணமாய் ஜொலிக்கிறது உன் முகம்.. சருகுகளும் சாம்பலும் அற்று எரியும் மரங்களாய் நான்..

மழை நின்ற மரத்திலிருந்து தெறிக்கும் சொட்டாய் உன் எண்ணச் சிதறல்கள்..ஒவ்வொரு சொட்டும் கிரீடம் சூட்டுவது போல் காதல் சூடுகிறது மனசு..

கூடு பாய்ந்தது உன் அழகு காந்தமாய் என் மனதில்.. தென் துருவமும் வடதுருவமும் சுமந்து அலைகிறேன்..இறக்கி வைக்கும் இடம் தெரியாமல்..
சவலைப் பிள்ளையின் இருமலாயும் ., ஓட்டைப் பானையின் நீராயும் போகும் இடமெல்லாம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் மிச்சமும் இருக்கிறது..தீராமல்..

அலையடித்துக் கிடக்கும் தடுப்புப் பாறையாய் நான்.. விடாமல் மோதிக்கொண்டே உன் ஞாபகம்.... தனக்கான வலை பின்னி தானே சிக்கிய சிலந்தியாய் நான்..

விளைந்து முற்றிய வயலாய் நீ செழிப்பமாய்.. உன்னைக் காவல் காக்கும் சோளக் கொல்லை பொம்மையாய் நான்..

மனக் கூடாரத்துள் ஒட்டகமாய் நுழைந்தது உன்முகம்.., பின் என்னை வெளித்தள்ளி.. உன் தவறை எல்லாம் காரணம் காட்டி தூக்கி எறிய முயல்கிறேன்.. கைகளில் ஒட்டிக் கொண்டு போகமறுக்கிறது அது.. உன் தவறையெல்லாம் உதறி.. வாரி்யணைத்துப் போர்த்துப் படுக்கிறேன் எனக்கான கணப்பாய்.... நிம்மதியாய்..

உறைந்து கிடக்கும் பனிப்பாறையின் கீழ் மீனாய் உலவித் திரிகிறேன்.. கட்டமாய் வெட்டி குத்தீட்டியாய்ப் பாய்ந்து என்னை உயிரோடு பிடிக்கிறது உன் பார்வை..

சேணம் அணிந்து இலக்கு நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன் நான்.. எல்லாவற்றையும் பிடுங்கிப் போட்டு மேகத்துள் பாய்ச்சலெடுக்க வைக்கிறது உன் சிரிப்பு..

என்னை நோக்கியதான உன் புன்னகையின் இனிய குழப்பத்தில் நான்.. கசாட்டாவின் முந்திரியைப் போன்றதான மூக்கு என்னை தொடச் சொல்கிறது.. டென்சிங்கின் சிகரமாய்.. என்னால் எட்ட முடியாமல்...

ஒரு குழந்தையாயும் தாயாயும் உணர்ந்திருந்தேன் என்னை.. ஒரு குமரியாயும் நாண வைத்துவிட்டாய்.. எல்லோரும் உடனிருந்த போது நீயில்லை.. யாருமற்ற பொழுதில் நீ மட்டும் என்னுடன் இருந்தாய்....

என் உடலும் உடலற்றும் உலாவித் திரிகிறேன் உன் முகம் என்ற பிரபஞ்சத்துள் .................

27 கருத்துகள்:

  1. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல கவிதை உங்க கிட்ட இருந்து

    “:)

    பதிலளிநீக்கு
  2. கவிதையின் நீளம் அதிக மிருந்தாலும் வார்த்தைப் பிரயோகம் அருமை.

    பதிலளிநீக்கு
  3. கவிதை ரொம்ப நீளம் சகோதரி. :(
    ஆனால் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. //ஓராயிரம் அல்ல லட்சம் கவிதைகள் எழுதலாம் என்றது மனம்.//

    ஒரு கவிதையே தாங்கமுடியலை ஒரு லட்சம் கவிதைகளா ?

    பதிலளிநீக்கு
  5. //மழை நின்ற மரத்திலிருந்து தெறிக்கும் சொட்டாய் உன் எண்ணச் சிதறல்கள்..ஒவ்வொரு சொட்டும் கிரீடம் சூட்டுவது போல் காதல் சூடுகிறது மனசு..//

    வார்த்தை ஜாலங்களில் கவிதை ஜொலிக்குது எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துகள் தேனக்கா...

    பதிலளிநீக்கு
  6. குழந்தையின் சிரிப்பின் 'முகமாய்' இருக்கிறது உங்கள் கவிதை பதிவு...வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. அழகான வெளிப்பாடு தேனம்மை ..
    நாம் அது வாகிப் போகும் சுகமான வலி கவிதையாய் மலர்ந்து ....

    பதிலளிநீக்கு
  8. //உன் அழகு காந்தமாய் என் மனதில்.. தென் துருவமும் வடதுருவமும் சுமந்து அலைகிறேன்..இறக்கி வைக்கும் இடம் தெரியாமல்..//

    அசத்திட்டீங்க தேனக்கா..!!!

    பதிலளிநீக்கு
  9. //உன் அழகு காந்தமாய் என் மனதில்.. தென் துருவமும் வடதுருவமும் சுமந்து அலைகிறேன்..இறக்கி வைக்கும் இடம் தெரியாமல்..//

    அசத்திட்டீங்க தேனக்கா..!!!

    பதிலளிநீக்கு
  10. அக்கா, உங்கள் பாணியில் இருந்து வேறுபட்டு, கவிதை வித்தியாசமாக இருக்கிறது. இந்த வகையிலும் கலக்குறீங்க!

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப அருமையா அசத்தலா வெளிப்படுத்தி இருக்கீங்க...வாழ்த்துக்கள். தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  12. எல்லோரும் உடனிருந்த போது நீயில்லை.. யாருமற்ற பொழுதில் நீ மட்டும் என்னுடன் இருந்தாய்...//

    ஆஹா....

    சித்ரா சின்னது போல நானும் உணர்ந்தேன். புதிய பாணியாய் எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. என்ன ஒரு மொழி ஆளுமை.. அடர்த்தி நேர்த்தி.. சபாஷ்

    பதிலளிநீக்கு
  14. வாவ் என்று தான் என் மனமும் சொல்கிறது..

    பதிலளிநீக்கு
  15. விளைந்து முற்றிய வயலாய் நீ செழிப்பமாய்.. உன்னைக் காவல் காக்கும் சோளக் கொல்லை பொம்மையாய் நான்..


    அருமையாக உள்ளது சகோதரி.

    பதிலளிநீக்கு
  16. கைகளில் ஒட்டிக் கொண்டு போகமறுக்கிறது அது.. உன் தவறையெல்லாம் உதறி.. வாரி்யணைத்துப் போர்த்துப் படுக்கிறேன் எனக்கான கணப்பாய்.... நிம்மதியாய்..

    superb lines

    பதிலளிநீக்கு
  17. //கூடு பாய்ந்தது உன் அழகு காந்தமாய் என் மனதில்.. தென் துருவமும் வடதுருவமும் சுமந்து அலைகிறேன்..இறக்கி வைக்கும் இடம் தெரியாமல்..
    சவலைப் பிள்ளையின் இருமலாயும்// ஆஹா..அருமை.

    பதிலளிநீக்கு
  18. மன்னிக்கவும் ....

    உங்கள் சும்மா சும்மா வரி எடுத்து
    சும்மா சும்மா
    என் வலை தளத்தில் பின்னூட்டமா எழுதிவிட்டேன்.

    பார்க்க : மீண்டும் ஒர் பள்ளிப் பருவம்

    http://forum.padukai.com/post7507.html#p7507

    தவறோ?
    மன்னிக்கவும்

    இவன்
    படுகை.காம்

    பதிலளிநீக்கு
  19. அட... ஒரு ஒளிக்கீற்றை கண்டுபிடித்துவிட்டீர்கள்
    போலத்தெரிகிறதெ தேனம்மை....?
    உங்கள் மனச்சிறகு விரிந்து பரவட்டும்...
    நெடி இல்லாத நறுமணம்
    பரப்பும் இந்த வசனகவிதை
    முயற்சிக்கு
    என் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  20. ப்ரிய கவிதை.பெரிய கவிதை.
    நல்லாயிருக்கு தேனக்கா.

    பதிலளிநீக்கு
  21. பிளாகர் ஹேமா கூறியது...

    ப்ரிய கவிதை.பெரிய கவிதை.
    நல்லாயிருக்கு தேனக்கா.//
    உங்க தங்கச்சி சொன்ன கருத்துதான் என் கருத்தும்.... கூடுதலாய்... உவமைகள் அருமை!

    பதிலளிநீக்கு
  22. நன்றீ நேசன்., குமார்., கார்த்திக்.,நசர்., கலாநேசன்.,விஜய்.,கனி., ராம்ஜி., அக்பர்.,குரு., பத்மா., ஜெய்.,சித்து., கமலேஷ்., ஸ்ரீராம்.,ரிஷபன்., காவேரி கணேஷ். , இளம்தூயவன்.,சக்தி., டி வி ஆர்., ஸாதிகா.,தமிழ் ஆன் லைன் ஜாப்..(நன்றி) ., அரவிந்த., தங்கமணி., ஹேமா.,கருணாகரசு..

    பதிலளிநீக்கு
  23. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...