குறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள்
புராண காலங்களில் தங்கள் துர்நடைத்தையாலும் அகந்தையாலும் முனிவர்களையும் மகரிஷிகளையும் மதிக்காமல் நடந்து சாபம் பெற்றோர் பலர். சாபம் பெற்றபின் தங்கள் தவறுணர்ந்து சாப விமோசனத்துக்காக சாபமிட்டவரிடமே வணங்கி மன்னித்தருளும்படி வேண்டுவார்கள். உடனே சாபமிட்ட மகரிஷிகளும் முனிவர்களும் சாபவிமோசனத்துக்கான வழிமுறைகளைக் கூறி மன்னிப்பார்கள். இப்படி சாபம் பெற்ற இருவர் பற்றியும் அவர்கள் பெற்ற சாபத்திலிருந்து எப்படி விமோசனம் அடைந்தார்கள் என்பது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
குபேரனின் புதல்வர்களின் பெயர் நளகூபரன், மணிக்ரீவன். அவர்கள் இருவரும் ஒருநாள் மிதமிஞ்சிய களியாட்டத்தில் அரண்மனை வாவியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கூடவே பல்வேறு வகையான மங்கையர்களும் அவர்களுடன் ஜலக்ரீடை ஆடிக் கொண்டிருந்தனர்.