ஜனவரி மாதம் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வழியாகக் காரைக்குடிக்கு வரும்போது சித்தன்ன வாசல் சென்று வந்தோம்.
இங்கே குடைவரைக் கோயிலுக்கு உள்ளே உள்ள குகை ஓவியங்களைக் காணவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது அன்றுதான் வாய்த்தது. கிபி ஏழாம் நூற்றாண்டு ஓவியங்களைக் காண்பது என்றால் சும்மாவா. மூலிகை வண்ணங்கள் கொண்டு வரையப்பட்டவை என்பதால் பதினான்கு நூற்றாண்டுகளாகியும் அவை பொலிவு குறையாமல் உள்ளன.
மனிதர்களின் அஜாக்கிரதையால் அவை நிறம் மங்கித்தான் உள்ளன என்றாலும் அவற்றின் பொலிவும் எழிலும் குன்றவில்லை.
மிக அழகான அலங்கார வளைவுகளோடு கோட்டைபோல் வரவேற்றது சித்தன்ன வாசல் நுழைவாயில். இதன் அருகேதான் குடுமியான் மலை. ஆனால் ஒரே நாளில் தஞ்சைப் பெரிய கோவில், சித்தன்ன வாசல், குடுமியான் மலை எல்லாவற்றையும் நடந்து நடந்து பார்க்க முடியாது என்பதால் குடுமியான் மலை செல்லவில்லை.