ஆயிரம் பிறவிகள் எடுத்த காகபுஜண்டர்
ஒருவர் எத்தனை பிறவிகள் எடுக்கிறார் என்பது அவரது கர்மவினைப் பயனைப் பொறுத்தது. குருவை மதிக்காத சித்தர் ஒருவர் பெற்ற சாபம் என்னவென்றால் அவர் இப்பூலோகத்தில் பத்தாயிரம் பிறவிகள் எடுக்க வேண்டுமென்பது. இத்தனைக்கும் அவர் நற்பவி எனப் பெயரெடுத்தவர். அவர் மேல் இரக்கப்பட்ட குரு அவருக்காக வேண்டியபின் அது ஆயிரம் பிறவியாகக் குறைந்ததாம். அவருக்கு சாபமிட்டவர் யார்? ஏன் சாபமிட்டார்? அவரின் குரு யார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
தேவலோகத்தில் அன்று ஒரு நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாடலின் தாளத்துக்கு ஏற்ப தேவகணங்களும் பூதகணங்களும் ஆடத் தொடங்கின. அங்கே இருந்த அன்னப்பறவைகளும் தம்மை மறந்து ஆட்டத்தில் கலந்து கொண்டன. மகிழ்ச்சி வெள்ளம் பொங்கிக் கொண்டிருந்த வேளையில் சிவனாரின் தலையில் சூடிய சந்திரகலையில் இருந்து ஒரு காகம் உருவெடுத்துப் பறந்து போய் ஒரு அன்னபட்சியுடன் நடனமாடியது.