ஜனாதிபதியிடம் விருது வாங்கிய முனைவர் சே செந்தமிழ்ப்பாவை
காரைக்குடி அழகப்பா தமிழ் உயராய்வு மையத்தின் தலைவர் முனைவர் சே செந்தமிழ்ப் பாவை அவர்களின் பாவை ( திருப்பாவை, திருவெம்பாவை) பற்றிய உரையைக் கேட்டு வியந்தேன். இவர் நெறியாள்கையின் கீழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்கள் 117, முனைவர் பட்டம் பெற்றோர் 27 பேர். பல்வேறு பொருண்மைகளில் தொல்காப்பியம், புறநானூறு, சங்க இலக்கியங்களில் ஆய்வு செய்துள்ள இவர் பெற்றுள்ள விருதுகளும் கணக்கில் அடங்கா. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் 2009 இல் ”செம்மொழி தமிழ் இளம் ஆராய்ச்சி அறிஞர்” விருதும் பெற்றவர். இவரிடம் தமிழின் மேல் இவ்வளவு பற்றுவரக் காரணம் என்ன எனக் கேட்டபோது
“10 ஆம் வகுப்பு முடித்தவுடன் எனக்கு முன்பு படித்த மாணவர்களிடம் இருந்து 11 ஆம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களை வாங்கி வைத்துவிட்டேன். ஆனால் என்னுடைய தந்தையார் சிறப்புத் தமிழ்ப் பாடப் பிரிவில் சேர்த்துவிட்டார். மடைமாற்றம் தமிழின் மீது பற்றுக் கொள்ள வைத்தது. என்னுடைய தந்தையார் புலவர் சேதுராமன், பெரிய குளத்தில் 1969 இல் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பொன். பாண்டித்துரைத் தேவர் பெயரால் மகளிர் கல்லூரியை நிறுவி நடத்தி வந்தார். சில காரணங்களால் கல்லூரி தொடர்ந்து நடைபெற இயலவில்லை. அதனால் மீண்டும் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதற்காக என்னைத் தனித்தமிழ் படிக்க வைக்க விரும்பினார். இது முதற்காரணம். (இரண்டாவது எங்கே அறிவியல் படித்து பூனைகள் வீட்டிற்குள் வர கதவில் நானும் இரண்டு துவாரம் போட்டு விடுவேனோ என்று அஞ்சியது கூட காரணமாய் இருக்கலாம்!)