புவனா
”அடி ஒனக்கும் ரெண்டு பொண்ணு ஒம் மகளுக்கும் ரெண்டும் பொண்ணா”
தம்பி கல்யாணத்துக்கு வந்திருந்த உறவினரில் ஒருவள் விருந்தைத் தின்றுவிட்டுச் சும்மா
ஏன் இருப்பானேன் என்று பிருந்தா சித்தியிடம் கேட்டு வைத்தாள்.
ஏற்கனவே மனக்குறையில் இருந்த பிருந்தாவுக்கு வயிறெரிந்தது. அக்கம்
பக்கம் திரும்பிப் பார்த்தவள் கண்ணில் விளையாடிக் கொண்டிருந்த ஆச்சியின் பேரன்கள் பட்டார்கள்.
கோபத்தோடு சாபமிட்டாள். “இவனுகள்ளாம் பெரிசானதும் பொண்ணு கொடு, பொண்ணு கொடுன்னு பொண்ணு
கெடைக்காமக் கெஞ்சிக் கதறப் போறாய்ங்க” ரெண்டு மகனைப் பெற்ற பெருமிதத்தில் இருந்த புவனாவுக்கு
பிருந்தா சித்தியைப் பார்க்கவே பயமாயிருந்தது. ”உங்களுக்குக் கோபம் வந்தா என் புள்ளைக்களுக்கு
ஏன் சாபம் கொடுக்குறீங்க சித்தி” என்று கேட்க நினைத்து மௌனித்தாள் புவனா.
சித்தியின் வாய் முகூர்த்தமோ என்னவோ அவளின் மூத்த மகன் மீனாக்ஷி சுந்தரனுக்குத் திருமண வயது வந்தும் வரன்கள் தட்டிக் கொண்டே சென்றன. அவனோ எந்த மேட்ரிமோனியைப் பார்த்தாலும் நல்லா ஃபேஷனாக உடை உடுத்தி முடியை விரித்துப் போட்டுக் கொண்டிருந்த மணப் பெண்களை செலக்ட் செய்ய அவனது அப்பத்தாளோ,”அப்பச்சி முடிய விரிச்சுப் போட்டுக்கிட்டு இருந்தா லெச்சுமி தங்காது வீட்டுல. நல்ல பதவிசான பொண்ணாத்தான் பார்க்கணும்.”என்று எதவான பெண்களாகப் பார்க்க அவன் கண்ணில் அனைவரும் சப்பை ஃபிகராகத் தெரிந்தார்கள்.