எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 மார்ச், 2017

சரண்யா - முதியோர் ( பெண்கள் ) இல்லத்தில் திருப்புகழ் அமுதம்.

சென்ற மாதம் ஒருநாள் மதுரை கருப்பாயி ஊரணியில் இருக்கும் சரண்யா முதியோர் இல்லத்துக்குத் திருப்புகழ் பாராயணக்குழுவினருடன்  சென்றிருந்தேன்.

முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களாலும் ரோட்டரியாலும் மிக அருமையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது இந்த முதிய பெண்கள் இல்லம். அனைவரும் சீருடை போல மஞ்சள் புடவையும் சிவப்பு ரவிக்கையும் அணிந்திருந்தனர். அங்கே பல மதத்தைச் சேர்ந்தவர்களும் சிறப்புரை ஆற்ற வருவார்கள் என்றும் ஃபாதர், போன்றவர்களும் உரையாடுவார்கள் என்றும் சொன்னார்கள். மருத்துவரும் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வார்கள் என்று கூறினார்கள்.  இரண்டு பெண்கள் இங்கே பணி புரிகிறார்கள். இதனை நிர்வகிப்பவர் வீடு அருகிலேயே இருப்பதால் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்கிறார். 

முதுமை, உடல் நலக்கோளாறுகள், மூட்டுவலிகள் போன்றவை இருந்தும் அந்தக் காலை நேரத்தில் குளித்துவிட்டு அழகாக அனைவரும் காத்திருந்த காட்சி மறக்க இயலாதது.
வாசலில் விதம் விதமாக வண்ணக் கோலங்கள்.


சீரான நடை பாதை. ( படிகள் ஒரு பக்கம் இருந்தன.)
அழகான ஷாமியானா போட்ட முற்றத்தில் அனைவரும் குழுமி இருந்தார்கள். சிலர் சமுக்காளத்திலும் சிலர் சேர்களிலும் அமர்ந்து திருப்புகழ் பாராயணக் குழுவினர் பாட ஆரம்பித்ததும் அனைவரும் சேர்ந்து பாடினார்கள்.
அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் 108ஐ மட்டும் தொகுத்து இசையமைத்துப் பாடிப் பாராயணமாகச் செய்துவருகிறது காரைக்குடியைச் சார்ந்த இக்குழு.

கிட்டத்தட்ட 10 மணியிலிருந்து ஒன்றரை மணிவரை இப்பாராயணம் நடைபெற்றபோதும் பெரும்பாலோர் இருக்கும் இடம் விட்டு துளியும் அசையவில்லை.
இந்த இல்லத்தில் முதலில் கணவனை இழந்த குழந்தைகளில்லாத முதிய பெண்களை மட்டும் சேர்த்து வந்ததாகவும் அதன்பின் ஒரு பெண் குழந்தை இருந்து அவள் திருமணமாகித் தனித்து விடப்பட்ட தாயைச் சேர்த்துக் கொண்டதாகவும் கூறினார்கள் இதன் நிர்வாகிகள்.( இதன் நிர்வாகிகள் & வேலை செய்வோர் அனைவருமே பெண்கள்) .

அதன்பின் இருகுழந்தைகள் இருந்தும் கைவிடப்பட்டோர், அல்லது வெளியூரிலோ வெளிநாட்டிலோ தாயைக் கொண்டு வைத்துக் கொள்ள முடியாதவர்களுக்காகவும் இவர்கள் தங்கள் விதிகளைத் தளர்த்தி முதியோர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்பான்ஸர்ஸ் மூலம் உதவி பெற்று அனைத்துமே இலவசமாகச் செய்து கொடுக்கிறார்கள் இவ்வில்லத்தில்.
முதலில் வாடகை இல்லத்தில் செயல்பட்டு வந்த இவ்வில்லம் தற்போது சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
வந்திருந்தவர்களை வரவேற்கிறார்கள் அதன் நிர்வாகியும் செயலாளரும்.

முருகன் படம் வைக்கப்பட்டிருக்கிறது பின்னணியில்.
இந்த இருவரும் மிகமிக அருமையாக முருகன் பாடல்களைப் பாடினார்கள்.

அழகு அழகு எங்கள் முருகன் அழகு

என்ற பாடல் மிக அற்புதம்.

அது போக திருப்புகழ் பாட வந்த குழுவுக்கும் மிக அழகாக நன்றி நவின்றார்கள்.
கேரளப் பெண்மணிஒருவரும் தன்னார்வலராக இருக்கிறார். பாடலில் வேகத்தில் ஒருவருக்கு ஆவேசம் வந்ததும் அவரை சமாதானப் படுத்தி அவருக்குத் தண்ணீர் அளித்து விபூதி பூசி அவர் வாயில் வழிந்த எச்சிலைத் தன்னுடைய முந்தானையால் துடைத்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
அழகன் அவன் முருகன். நன்கு சுடச் சுட நெய் வழிய சர்க்கரைப் பொங்கலும் சுண்டலும் நைவேத்தியம் செய்து தீபதூபம் காட்டினார்கள்.
வணங்கிய பின் சுற்றிப் பார்த்தேன்.

இரண்டு பெரிய ஹால்கள் இருக்கின்றன. ஃபேன், சூரிய வெளிச்சம் , காற்றோட்டம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெட், டேபிள் சேர். நடுவில் தொலைக்காட்சி.  இரண்டு ஹாலும் இணையுமிடத்தில் நான்கு பாத்ரூம், நான்கு டாய்லெட். உடல் நிலை சரியில்லாத ஓரிருவருக்கு தனி டாய்லெட் அருகிலேயே தனி ரூம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் உடனடியாக சிறுநீர் கழிக்கும் தொந்தரவு அதிகம் உள்ள ஒருவருக்கு அவ்வாறு வழங்கப்பட்டிருந்தது. முதுமையில் படுத்தும் நோய்களில் இதுவும் ஒன்று. பெண்களை மட்டுமே தாக்கும் நோய் என்று முன்னே ராயப்பேட்டை டாக்டர் ஸ்ரீகலா அவர்களிடம் பேட்டி எடுத்தது ஞாபகம் வந்தது. இதற்கென சில யோகா பயிற்சி முறைகளும் முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சைகளும் இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

சமையற்கட்டு தனியாக உள்ளது. அது போக  டைனிங்க் ஹாலும் இருக்கும்.
இவ்வளவு ஐட்டமும் பரிமாறப்பட்டது. உடனடியாக ஊர் திரும்பிச் செல்ல வேண்டிய நாங்கள் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்த அவர்கள் அதன் பின் உணவருந்தினார்கள்.
எந்த ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தங்கள் முதுமையை அவர்கள் எதிர்கொண்டிருக்கும் விதம் வியப்புக்குரியது.
அவர்கள் உணவருந்துவதை மனங்குளிரப் பார்த்தபடி பிரிய முடியாமல் பிரிந்து வந்தோம்.ஏதோ நம் அம்மா,பாட்டி பூட்டியைப் பிரிவது போல ஒரு பாச வாசம் நம்மைச் சுற்றிக் கலங்கடித்தபடி இருந்தது.


இதன் முகப்பில் லவ்பேர்ட்ஸ் பறவைகளும்  இன்னபிற பறவைகளும் கீச் கீச் எனக் கத்தியபடி இருந்தன. குழந்தைகள் விளையாடும் சீஸா, ஊஞ்சல், சறுக்குமரம் போன்றவை அமைக்கப்பட்ட தோட்டம் ஒன்றும் இருந்தது. ( இவர்கள் பேரன்பேத்திகள் வந்தால் விளையாடுவார்களாயிருக்கும். )

கிளம்பும்போது இவர்கள் கையால் திரித்த பஞ்சு பாக்கெட்டை அனைவரும் விலைக்கு வாங்கிக் கொண்டோம். வீட்டில் இதைப் போட்டு ஏற்றிய தீபங்கள் அழகாய் அற்புதமாய் ஒளிவிட்டு எரிகின்றன. நன்றி அம்மாக்களே.
எனது சகோதரன் மெய்யப்பன் மற்றும் என்னுடைய தோழி & சகோதரி சௌம்யா ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே சென்றோம். சௌம்யாவும் இதில் பங்கெடுத்து சேவை செய்து தன்னாலியன்ற உதவிகளைப் புரிகிறார். அவர் இல்லத்தில் அன்று காலை எங்களுக்கு அளித்த விருந்து மறக்க இயலாதது. கேசரி,பொங்கல், சட்னி, சாம்பார், பூரி, கிழங்குடன் சுக்குமல்லிக் காஃபியும் ஸ்பெஷலாக வந்தது. அதுவும் ஓரிருவருக்கு அல்ல 25 க்கும் மேற்பட்டவர்களுக்கு. இவர் இல்லத்தில் நிறைய பைரவர்கள்  வளர்ந்து வருகிறார்கள்.உயிர்களிடத்தில் அன்பு வேணும் என்று பாரதி பாடியது இவர் போன்றோரைப் பார்த்தபின்புதானாக இருக்கும்.
மதுரையில் இருந்து வரும் வழியில் இந்த சிகப்பி இல்லமும் கண்ணில் பட்டது. இதுவும் முதிய பெண்கள் இல்லம்தான். குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என நினைக்கிறேன். இவர்களுடன் உரையாட வேண்டும் என ஒரு தோழி அழைத்திருக்கிறார். ஒரு நாள் இங்கேயும் சென்றுவந்தபின்பு பகிர்கிறேன். 

முதுமை ஒன்றும் ஒதுக்கப்பட்டது அல்ல. நிதானமாகக் கையாண்டால் முதுமையும் கொண்டாட்டமே எனக் கற்றுக்  கொடுத்த சரண்யா இல்லத்தின் அனைத்து அம்மாக்களுக்கும் , பாட்டிகளுக்கும் நன்றிகள்.

7 கருத்துகள்:

  1. படங்களுடன் மிக மிக அருமையாக
    அறிமுகம் செய்துள்ளீர்கள்
    வாத்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  2. முதியோர் இல்லப் பொறுப்பாளர்களின் பணி பாராட்டுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு
  3. கோடி புண்ணியம். தொடரட்டும் அவர்கள் தொண்டு. படங்களுடன் தகவல்களைச் சொன்ன சகோதரி தேனம்மை அவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. முதியவர்களுக்காக சரண்யா இல்லம் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. புகைப்படங்களும் நன்றி. முதுமை ஒதுக்கப்பட்டதல்ல, அப்போதும் கொண்டாட்டம் உண்டு என்ற அரிய செய்தியைப் பகிர்ந்துள்ளீர்கள். என்னிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்குக் கட்டுரை கேட்டிருந்தீர்கள். உங்கள் மின்னஞ்சல் கொடுத்தால் அனுப்பிவைக்கிறேன். நன்றி தேன்.

    பதிலளிநீக்கு
  5. ....படங்களுடன், விரிவான தகவல்கள்....அவர்கள் பணியும் சேவையும் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ....நல்ல நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. நன்றி ரமணி சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி இளங்கோ சார்

    நன்றி கலை

    நன்றி துளசி சகோ

    நன்றி செல்லப்பா சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...