எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 நவம்பர், 2017

அழகப்பா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கவியரங்கம் கருத்தரங்கத்தில் பங்கேற்பு.



சந்திப் பிழையும் சிறு பிணக்கும்.

1661. பக்கத்தில்
அமர்ந்திருந்தோம்
உன் செய்தித்தாளில்
கொலை கொள்ளை
கற்பழிப்புகள்.
செய்தித் தூதுவன்போல
செய்தி அறிவிக்கிறாய்.
சார்நிலைக் கருவூலப் பொறுப்பாளனாய்
தள்ள வேண்டியவற்றையும்
கொள்ள வேண்டியவற்றையும்
பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன்.
இருவரும்
அந்தரத் த்யானத்தில் அமிழ்கிறோம்.
போதிமரமான அறையில்
மௌனம் தனித்திருக்கும்போது
இருவர்மேலும் குளிர்காற்றை
பூவிதழ்களாய்த் தூவிக்கொண்டிருக்கிறது மின் விசிறி.

1662. நான் இதுதான்
இப்படித்தான் என்று சொல்லிவிட்டு
நீ நிம்மதியாக அமர்ந்திருக்கிறாய்
மற்றவர்கள்
கஷ்டப்படத் துவங்குகிறார்கள்
நீ
உன் உண்மைக்காகத்
தலை குனிகிறாயாவென
ஓரக்கண் பார்க்கிறார்கள்.
பெருமரங்களைக் கெல்லிய நீ
புற்களையும் கிள்ளிப்போடத் தொடங்குகிறாய்.

1663. எல்லாருக்கும்
ஒரே மாதிரித் தெரிவது
எனக்கு மட்டும்
வேறொன்றாய்த் தென்படுகிறது
ஒரு மாதிரி எல்லாம்
ஒரே மாதிரியல்ல.

1664. எல்லாருடனும் எனக்குச்
சிறு பிணக்கு இருக்கிறது.
எப்போது ஆரம்பித்தது என்று தெரியாத மாதிரி
எப்போது முடிந்தது என்றும் தெரியாது
எதிர்ப்படும்போதெல்லாம்
எதுவுமில்லாதது போல்
அனைவரும் புன்னகைத்துக் கடக்கிறோம்.

சனி, 25 நவம்பர், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். சுபிவண்யாவும் சிபிச்சக்கரவர்த்தியும் காதல் அணுக்களும்.

முதன் முதலில் லாவண்யாவின் பெயரை இவள் புதியவளிலும் சூரியக்கதிரிலும்தான் பார்த்தேன். மிக அருமையாக எழுதுவார். நிறைய எழுதி இருக்கிறார். இப்போது அவ்வளவாக எழுதவில்லை. காரணம் எல்லாரும் முகநூலுக்குப் போயிட்டாங்க. நாம விடுவோமா. ஒரு நாள் அவரது போஸ்டில் போய் அர்த்தராத்திரியில் கலாட்டா கமெண்ட்ஸுகளாக எழுதி வைக்க. அவர் பதில் சொல்ல அவரை நான் உடனே சாட்டர்டே போஸ்டுக்கு  எழுதி ( ஆரியக்கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இருக்கோணும்னு எங்க ப்லாகாத்தாவும் கூகுளாண்டவரும் சொல்லி இருக்காங்க :)  அனுப்பும்படி கேட்டேன். 

அம்மணி வெளிநாட்டில் ( லண்டனில் ) வசிப்பதால் நாம் தூங்கும் நேரம் அவருக்கு மாலையாக இருக்கும். கேட்டவுடனே அடுத்த 54 ஆவது நிமிஷத்தில் என் லாப்டாப்பில் ஒரே காதல் ஆலய மணி ஓசையிட்டு அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஓடிப் போய்ப் பார்த்தால் லாவியின் போஸ்ட். படித்ததும் நானும் காதல் கைதியானேன். நீங்களும் படிச்சுப் பாருங்க. செமயா எழுதி இருக்காங்க.


கல்லூரி சென்றதும் எல்லோரும் `தொபுக்கடீர்`ன்னு காதலில் விழுவது போல
நானும் விழுந்தேன். ஆனா யாரைக் காதலிக்கிறேன் என்றுதான் தெரியவில்லை.
மல்லிகை சரம், ஆகாய நிற சுடிதார், கொலுசு சத்தம், லாவண்டர் மனம்,
கொத்துபரோட்டா என கண்ணில், கருத்தில்படும் யாவையும் காதலித்தேன். அப்படி
எல்லாவற்றையும் காதலிக்க கத்துக் கொடுத்தவன் ``சிபி`` . அந்த பெயரைச்
சொல்லும் போதே, பெத்தடின்  ஊசி போட்டது போல் கிறுகிறுக்கும்.  நான் அவனை
எழுத்துக்கள் வழியாக சந்தித்த நாள் அன்று, தேவ கன்னிகள் காதலை
நுகர்ந்திருப்பார்கள்.

அது கல்லூரி சேர்ந்த பிறகு வந்த முதல் வெள்ளிக்கிழமை. பள்ளிப்படிப்புவரை
மதிப்பெண்ணுக்காக கடிவாளம் இட்ட குதிரையாக ஓடிய எனக்கு, இப்போது சுதந்திர
காற்றை சுவாசிக்க முடிந்தது. பாரதியார் கவிதைகள் மட்டும் படித்து நல்ல
(???) புள்ளையாக இருந்தவள், அன்று நூலகத்தில் எதேச்சையாக ஒரு வார
பத்திரிக்கையை புரட்டிப் பார்த்தேன்.

``உன்னை காதலிக்கிறேன்
என்பதற்காக
 நீயும் என்னை காதலித்துவிடாதே.
என் கொடிய காதலை
 உன் பிஞ்சு இதயத்தால்
தாங்கமுடியாது.``

மூன்றாவது முள் – ஒரு பார்வை.

மூன்றாவது முள் – ஒரு பார்வை. 


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


வெள்ளி, 24 நவம்பர், 2017

கேட்காதவள்.



கேட்காதவள்.

கார்த்திகை.. எங்கே சொல்லு “ மாடிப்படியோரம் கீழ்க்கண்ணால் பார்த்தபடி அமுதாக்கா கேட்டாள்.

“தார்த்திதை” என்றாள் ஆனந்தி. 

செல்லமாகத் தட்டித் திரும்பவும் ”கார்த்திகை” ன்னு சொல்லுடி வாலு ” என்றாள்.

”தார்த்திதை” என்றாள் அவள் முகத்தைப் பார்த்தபடியே ஆனந்தி. 

”நாக்கை எதுக்குப் பல்லோட ஒட்டுறே… கா.. கா சொல்லு. கார்த்திகை ” என்றாள். ”தா தா தார்த்திதை” என்று அவள் சொல்லவும் மாடிப்படியிலிருந்து இறங்கி இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறு கார்த்திகேயன் செல்லவும் சரியாக இருந்தது. வெட்கத்தோடு இவளை இழுத்து அணைத்து உம்மா கொடுத்தாள் அமுதாக்கா. சரியா சொல்லிட்டோம் போல என நினைத்து இவளும் பதிலுக்கு அக்காவுக்கு உம்மா கொடுத்தாள். கன்னமெங்கும் அக்காவின் பவுடர் மணத்தது.

யேய்.. உக்கி போடுடி.. பெரியம்மா கூப்பிட்டுட்டு இருக்காங்க. கேக்காதமாதிரி சொப்பு வைச்சு விளையாடிட்டு இருக்கே. வா இங்கே இந்தப் புள்ளையாருக்கு எதுக்கால உக்கி போடு “

காதைப் பிடித்து முருகு அத்தான் இழுத்துச் சென்று தோப்புக்கரணம் போட வைக்க என்ன செய்தோம் எனக் குழம்பியவாறு தொடை வலிக்க வலிக்க அவன் போதும் என்று சொல்லும் வரை உக்கி போட்டு அமர்ந்தாள் ஆனந்தி. வலியில் கண் கசிந்தது. ரௌடிப்பய. முறைச்சா அடிச்சாலும் அடிச்சிருவான். 

“எப்பக் கூப்பிட்டாங்க.” அது கூடத் தெரியாமயா விளையாடிட்டு இருந்தோம். குனிந்து அமர்ந்து சொப்பு சாமான்களை அடுக்கினாள். 

“அத்த கூப்பிட்டீங்களா” ஓடிப்போய்க் கேட்டாள். 

“ஆமா. எப்பக் கூப்பிட்டேன். எப்ப வர்றே .. வர வர மெய்மறந்துகிட்டே போறே “ என்று டோஸ் வைத்த அத்தை மாங்கொட்டைகளைக் கொடுத்து ”இந்தா போய் சாப்பிடு” என்றாள். பெரிது பெரிதாக துண்டு துண்டாக இருந்ததே. புளித்த கொட்டைகளை சாப்பிட்டுவிட்டுக் கைகழுவினாள். 

டீ ஆனந்தி.. நில்லு நில்லு” என வேக வேகமாக ஓடி வந்து காலண்டரைப் பறித்துக் கொண்டாள் புஷ்பா. வகுப்புத் தோழி. 

வெள்ளி, 17 நவம்பர், 2017

பனிப்பொட்டும் சூரியக் கண்ணாடியும்.

1641. சமவயது உடையவர்கள் மட்டுமே ஒருவரை ஒருவர் அதிகம் புரிந்துகொள்ள முடிகிறது.

1642. வெளிச்செல்லவும் உள்வரவும் முடியாமல் முன்னோர்கள் வளர்த்த வேலி முள்ளால் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

1643. ஏன் எதற்கு எப்படி எதனால் - தேவையா இதெல்லாம் என்ற கேள்விகள் சில விஷயங்களில் அடிக்கடி எழுந்தால் அதிலிருந்து விலகி இருப்பது நல்லது.

1644. திருமண விஷயத்தில் முடிவெடுப்பதுதான் இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது.

# மகன் அல்லது மகள் என்று சேர்த்துக் கொள்ளவும்.

1645. பத்ரிக்கையில் மாடல்களின் விளம்பரப் புகைப்படங்களைப் பார்க்கும்போது இப்போதெல்லாம் சாதாரணமாகத் தோன்றுகிறது... ஃபேஸ்புக்கில எத்தனை அற்புதமா ப்ரொஃபைல் பிக்சர் போடுறாங்க.. கொஞ்சம் கத்துக்குங்க ஃபோட்டோகிராஃபர்ஸ்.

மூலையோரமாய் ஒரு சீதை.

ஏமாந்த சிங்கம்
பிடித்ததோ
பசுத்தோல் போர்த்திய
சிங்கம்.

கிணற்று நீரைக்
கலங்க அடிக்கும்
பூனையின் ஊளை.

கபடத்தைப் பாதுகாக்க,
காடுவருவதைத்
தடுக்கும் இராமன்கள்.

ஸரிகமதபத நீ. !

எனக்குத் தேவையில்லை
இந்த யதார்த்தங்கள்

பாறைகளுக்குள்ளே நடந்து
தூரத்துச் சொர்க்கங்களுக்குச் செல்ல
நான் கல் இல்லை
என்னுள் நிகழும்
வேதிவினைக்கு
நானே வினையூக்கியாய்
நானே இரசாயனமாய்

மூட்டை நெல்லாய்
என்னைக் கட்டிப்போடாதே !
இப்போதே உமி நீக்கி
உலைநீரில் கொட்டி
உணவாக்கி உண்.

தபால்காரனும் ரிஷிகுமாரனும்.

உன் கடிதம் பார்த்து
வாசலிலேயே
தவம் கிடக்கும்
கதவாய்
மனசும்

என் எதிர்ப்பார்ப்பைப்
போலத்
தேய்ந்து போகும்
வாசற்படிகள்

உன் கடித வரவிற்காய்
உறுத்து விழித்து
மெல்ல்ல்ல சுவாசித்து
மௌனமாய் அடங்கும்
சமையற்கட்டுச்
சன்னல் கதவு.

உன்னைச் சூடும் அதிசயப் பூவாய்.

தெரிந்தவற்றைத்
தெரியப்படுத்து
புரிந்துகொள்ளப்
ப்ரியப்படுகிறேன்.

ஆகாச நிர்மலமாய்
உன் மனசைக் கொட்டு
செடிப்பசுமையாய்ப்
பரந்து விரிந்து ஆக்ரமி
மண்ணாய் நீரை உள்வாங்கு

அறிந்தவற்றை
அறியப்படுத்து
ஆவலாயிருக்கிறேன்
அகத்துள்ளும்
புறத்துள்ளும்.

அசையும் பொழுது.

பகல் தோணி
சூரியத் துடுப்பில்

மரங்கள் மண்ணுடன்
நித்யப் புணர்வில்

குதிரைகள் லாடமில்லாமல்
குளம்படி பதித்து
அவசர ஓட்டம்

வியாழன், 16 நவம்பர், 2017

பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸில் எங்கள் வில்லுப்பாட்டு.

கல்லூரிகளுக்கிடையேயான கல்சுரல் காம்பெடிஷன்களில் ( INTERCOLLEGIATE CURTURAL COMPETITIONS )  பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸில் மொத்தமாக 5 போட்டிகளில் பங்குபெற மாணவியர் சென்றோம். நான் தமிழ் வெர்ஸ் ரைட்டிங் ( VERSE WRITING.) -  ஆன் த ஸ்பாட் கவிதை எழுதும்  போட்டியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன்.  இன்னும் சில தோழியரும் ப்ளாக்போர்ட் ட்ராயிங், கார்ட்டூன் ட்ராயிங் , கட்டுரைப் போட்டி போன்றவற்றிற்கு வந்திருந்தார்கள். சென்றவர்களே ஸ்கிட் போன்ற ப்ரோக்ராமிலும் பங்கேற்றோம். அதில் ஒன்று இந்த வில்லுப் பாட்டு. இதில் நாங்கள் எல்லாம் பக்கத்துணையாக அமர்ந்து கதை சொல்பவர் சொல்லிவிட்டு வில்லைத் தட்டும்போது  சீடர்களாகக்  கோரஸாகப் பாடினோம்.

ஆண்கள் மாதிரி தலையைச் சுற்றி மடித்து கிராப் போல அமைந்து வெள்ளை சட்டை வேஷ்டி அங்கவஸ்திரம் அணிந்து அந்த ஆண்கள் கல்லூரியில் ( ஹோ ஹோ என்று ஒரே சத்தம் ) திகிலோடு பாடியது மறக்க முடியாத அனுபவம்.  இதில் என் தோழி கே ஆர் கே கீதாவும் பங்கேற்றதாக ஞாபகம்.

ரயில்வே ஸ்டேஷனில் மதுரையில் இருந்து பாளைசெல்லும் வரையிலும் திரும்பி வரும்போதும் அந்த வில்லையும் குடத்தையும் வைத்துக் கொண்டு இடம் இடமாக அலைந்தோம். அந்த வில் வேறு லேசாகப் பட்டாலே ஜல் ஜல் என்றது வித்யாசமான அனுபவம். :)

எங்களுடன் வந்த மிஸ் நாங்கள் நன்றாகப் பாடினால் நெல்லையின் தொண்டையடைச்சான் உருண்டை/நெஞ்சடைச்சான் பக்கோடா வாங்கித்தருவதாக ப்ராமிஸ் செய்தார். ஹாஹா பின்னர் ட்ரெயின் ஏறும்போது இருட்டுக் கடை அல்வா வாங்கிக் கொடுத்தார். வாழையிலையில் சுருள் போல சூடாக இருந்தது அல்வா. அட்டகாசம்.

இனி நிகழ்ச்சியில் பாடிய பாடல்களைப் பார்ப்போம். ( யதேச்சையாக இது பழைய காலேஜ் பேப்பர்களுடன் அகப்பட்டது. :) இல்லாட்டி நீங்க மாட்டிக்கிட்டீங்க. என்ன சொல்றது ஹாஹா :)

(( வில்லுப்பாட்டு ஆறுமுகம்,  அவரது குழுவினர் & மகள் எங்களை மன்னிப்பார்களாக !  ))

கணபதி துதி. ( கோரஸ் )

கணபதியே அருள்வாய் துணை எமக்கு
கணபதியே அருள்வாய்
கதாகாலட்சேபம் செய்ய வந்துள்ளோம் நாங்கள்
கேட்பவர் அனைவரும் ஓடிவிடாமலே.
கணபதியே அருள்வாய்.

கீதா  சீ - 1 :- ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே

செவ்வாய், 14 நவம்பர், 2017

காரைக்குடிக் கல்விக் கவியரங்கம். சில புகைப்படங்கள்.



கவிஞர்கள். யா. சாம்ராஜ், அன்பரசன்,  நீ. இரவிச்சந்திரன், கவியரங்கத்தலைவர் கனவுதாசன், கல்யாணி கணேசன், தேனம்மை லெக்ஷ்மணன், மனோ. இளங்கோ. ஆகியோர்.


என் குழந்தைகள் தினக் கவிதை. !!!

என் முதல் பையன் வெங்கட் பிறந்த ஓரிரு வருடங்களில் எழுதியது !
எழுதமுடியும் என்னால்
நன்றாக
எழுதமுடியும்.

முறிந்த மனச்சிறகுகளை
வெட்டிப் போட்டு
புதுச் சிறகு
இணைத்து என்னாலும்
எழுதமுடியும் நிச்சயமாய்.

பாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார் ? ( கவியரங்கக் கவிதை )

பாரதி இன்று வந்தால். இன்றையக் கல்வி பற்றி என்ன சொல்லி இருப்பார்.?

தமிழ்த்தாய் வாழ்த்து.

தீஞ்சுவைப் பாலெடுத்து 
நறுஞ்சுவைத் தேன் கலந்து
பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் 

புளிக்குதென்பேன்.,
தமிழ்த்தாயிடம் மதலை நான் 

தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்
இல்லையில்லை அன்னையவள் பரிவுகொண்டு 

என்னை வளர்த்த காரணத்தால் 
அவள்தாளில் தெண்டனிட்டேன்.
தமிழன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்.

காரைமாநகர் வாழ்த்து:-

காரைக்கட்டிடங்கள் செறிந்திருக்கும் காரைக்குடி
கல்விக்குடியானது கொடைவள்ளலின் விடாமுயற்சியால்
கல்விக்கோட்டை கட்டி ஞாலம் புகழவைத்த
வள்ளலின் அழகூருக்கு வற்றாத வணக்கங்கள்.

திங்கள், 13 நவம்பர், 2017

ஃபாத்திமா அம்மாவின் அப்ரிஷியேஷனும் சஜஷனும். !

மதுரை ஃபாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறையில் என்னைப் புதுப்பித்த இருவர் சுசீலாம்மா, ஃபாத்திமா அம்மா. புதுக்கவிதை பற்றிய அசைன்மெண்டை கவிதையாகவே எழுதிக் கொடுத்ததால் ஐந்துக்கு நாலே முக்கால் மதிப்பெண்கள் கொடுத்தவர்.

இவர்கள் இருவரும் கொடுத்த ஊக்கத்தாலேயே நான் ரசயானம் படித்தாலும் தமிழை நேசித்தேன். தமிழ் கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டேன்.

இனி ஃபாத்திமா அம்மாவின் அப்ரிஷியேஷன்.

துடைப்பம் பற்றிய கவிதை, அதன் எடுப்பு முடிப்பு எல்லாமே நன்று.

சஜஷன்.

பொருள் பற்றிய சிந்தனையில் தானாய் வரும் படிமங்களோடு வேறு சில படிமங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். கவிதையில் அவை ஒட்டாமல் தனியே இருக்கின்றன. கவிதை நீளமாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.
” ஆண்டவரே, என் இறைவனே, வியத்தகு செயல்கள் பல நீர் செய்தீர் :எங்கள்பால் உமக்குள்ள எண்ணங்களில் உமக்கு நிகர் எவருமில்லை. அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில் அவை எண்ணில் அடங்கா “ - சங் 39 :5.

புரவிக்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதம்

புரவிக்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதம்

நாங்கள் கல்லூரிப் பருவத்தில் கொண்டு வந்த கையெழுத்துப் பத்ரிக்கை புரவி  ( PEGASUS ).

அதற்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக் கடிதம்.

புரவிப் படைப்பாளிகட்கு,

புரவியின் பாய்ச்சலை ஒரே மூச்சில் ரசித்துவிட்டு, ரசனையின் சூடு ஆறுமுன் இதை எழுதுகிறேன்.

“சின்னஞ்சிறு கதைகள் பேசி” உழலும் மனித மந்தையரிடையே புரவிக் கூட்டம், அபூர்வமாய் மொட்டுவிட்டிருக்கும் ஒரு குறிஞ்சி மலர்க்கூட்டம் ! பேசிவிட்டுப் பிரியாமல் செயல் வடிவம் கொடுக்க முனைந்தமைக்கு முதற் பாராட்டுக்கள் !

எங்கள் புரவியும் மீனாக்ஷியின் கடிவாளமும்.

ஒவ்வொரு தோழிகளுக்குள்ளும் பேசிக்கொள்ள ஏகப்பட்டது இருக்கும்போது கல்லூரிப் பருவத்தில்  நான் என் தோழிகள் ( ஆங்கில இலக்கியம் - மீனாக்ஷி, கே ஆர்கே கீதா ) ஆகியோர் இலக்கியம் பற்றியும் நாங்கள் நடத்திவந்த புரவி - பெகாஸஸ் ( PEGASUS )   என்ற இதழ் பற்றியும் கடிதங்களில் பேசி இருக்கிறோம். அலையலையாய்ப் பறக்கும் பிடரியுடன் கூடிய நல்ல கம்பீரமான பறக்கும் குதிரை அட்டையை அலங்கரிக்கும். 5 முதல் 10 இதழ் வந்திருக்கலாம்.

அதற்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதமும் இருக்கிறது. மிக அருமையான எழுத்து மீனாவுடையது. அவள் எழுதிய மூன்று கடிதங்களில் புரவி பற்றியும் அவளின் எழுத்தாற்றல் தெரிவதற்காக இன்னும் கொஞ்சமும் கொடுத்திருக்கிறேன் .

புரவியில் கடிவாளம் என்ற தலையங்கம் எழுதியது இவள்தான். அவள்தான் புரவியின் எடிட்டர் . இவளின் கடிவாளம் சாட்டையடியாக இருக்கும். பாலசந்தர் எங்க ஊர் கண்ணகி என்று படம் எடுத்த பிறகு காலத்துக்கேற்ப மாறும் பச்சோந்திகள் என்று அவரின் படங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப்போட்டு விளாசியவள்.   இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு இன்று சாட்டர்டே போஸ்டுக்கு எழுதிக்கொடு என்றால் கூட எழுத மாட்டேன் என்கிறாள்.

ஹ்ம்ம் புரவியைத் திரும்பக் கொண்டுவரலாமா என்ற எண்ணம் அவ்வப்போது எழுகிறது. அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும். பார்க்கலாம்.

மீனாவின் 3 கடிதங்களிலும் கே ஆர் கே கீதாவின் கடிதங்களிலும் எவ்வளவு சுவாரசியம்.

இது கே ஆர் கே கீதாவின் கடிதம். அதை முதலில் கொடுக்கிறேன்.

கே ஆர் கே கீதா :-WHEN ARE YOU COMING TO MADURAI ? OR YOU 'VE DECIDED NOT TO SHOW HEAD OR TAIL IN MDU ?

ஞாயிறு, 12 நவம்பர், 2017

நான் வரைந்த பென்சிலைகளும் பேனாக்காதலர்களும்.

கல்லூரியில் படிக்கும்போது பாடம் நல்லா எழுதுறமோ இல்லையோ படம்நல்லாப் போடுவேன். தினம் ரெக்கார்ட் நோட் வரையிறதையே ப்ளஸ்டூவில் இருந்து காலேஜ் வரை ஒரு தவம் மாதிரிப் பண்ணிட்டு இருந்தேன்.

முதல் இரண்டு வருடம் பிஸிக்கிஸ் ஆன்சில்லரி. மூன்றாம் வருடம் ஸூவாலஜி. அதே போல் முதல் இரண்டு வருடம் மொழிப்பாடங்கள் உண்டு. தமிழ் & ஆங்கிலம். மூன்றாம் வருடம் மேஜர் சப்ஜெக்ட்ஸ் மட்டும்தான்.

இந்தப் படம் THE SECRET OF WORK BY VIVEKANANDA என்ற ஒரு  ஆங்கில அசைன்மெண்டுக்காக வரைந்தது. மிஸ் இதுக்காக நாலரை மதிப்பெண் கொடுத்திருக்காங்க. :)

மணியம் செல்வன், கோபுலு, ராமு, ஆதிமூலம், ட்ராட்ஸ்கி மருது, ஜெயராஜ், மாருதி என்று எனக்குப் பிடித்த ஓவியர்கள் அதிகம். இவர்களின் பாணியை வைத்தே சொல்லிவிடலாம்.  மசெவின் நாயகிகள் ஆங்கில வனிதைகளாகவும் ஜொலிப்பார்கள். திட்டமான எல் போன்ற மூக்கும் நேர்க்கோடுகளும் இவர் ஸ்பெஷல். சொஃபிஸ்டிகேடட் & ரிச் லுக் இருக்கும் இவரது ஓவியங்களில். மேன்மக்களைப் போல இருப்பார்கள் அனைவருமே.

கோபுலு அதிகம் நாடகம், சிறுகதைகளில் மனிதர்களின் செழிப்பான உருவத்தையும் நல்ல கிளி போன்ற மூக்கையும் வரைவார். தீர்க்கமான ஓவியங்கள். சமூகத் தொடர்களில் இவரது ஓவியம் பரிச்சயம்.

ராமுவின் ஓவியங்கள் சுருட்டைக் கேசம் போல் சுருண்டு சுருண்டு இருக்கும் . அந்த ஒவ்வொரு சுருளும் வெகு அழகாக வந்து மனதிற்குள் ஒரு உருவைப் படைப்பது அற்புதம். அக உணர்வைப் படைக்கும் ஓவியங்கள். வெகு தீவிரமான ஓவியமொழி இவருடையது.

ஆதிமூலம் ஓவியத்தில் முகத்தின் நிழல்களும் பேசும். !. கோட்டுச்சித்திரபாணி இவருடையது. வெகு சிக்கலானது . சில சமயம் கறுப்பு வெள்ளைப்  புகைப்படங்கள் போன்றது.

ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியம் கம்பீரமானது. ஒன்றில் ஒன்றைக் கொண்ட இரட்டை ஓவியங்களாக இருக்கும். மனிதர்களும் பொருட்களும் கலந்து கட்டி நம்மை அக்கதையின் கருவை தீவிரமாக உணரவைப்பார்கள். சாட்டையை வீசியது மாதிரி  ஒரு அடர் மொழி கொண்டது இவரின் ஓவியங்கள்.

ஜெயராஜ் கேட்கவே வேண்டாம் ஓவிய உலக பிரம்மா. பெண்களையும் ஆண்களையும் செக்ஸியாகப் படைத்து உலவ விடுபவர். சுஜாதா கதைகள் என்றால் இவர் படம்தான் ஞாபகம் வரும். அபாரமான , அபாயகரமான சடன் ஸ்ட்ரோக்குகள் இவரின் ஸ்பெஷாலிட்டி.

மாருதி காவியக் காரிகைகளைப் படைத்துக் காதலிக்க வைப்பவர். இவரின் நாயகிகள் சுருட்டைக் கேசமும், அழகிய இதழ்களும் காந்தப் பார்வையும்  கொண்டு காதலிக்க வைப்பவர்கள். இவரது ஓவியங்களைப் பார்க்கும்போது தண்ணென்ற குளிர்ச்சி பரவும்.  இவர்கள் அனைவருமே என் ஆசான்கள். நான் ஒரு பத்துப்பன்னிரெண்டு படம்தான் வரைந்திருப்பேன். அதுவும் மூன்று நான்கு மணி நேரம் எடுக்கும். ரப்பர் எல்லாம் போட்டு அழிப்பதுண்டு :) எடுத்தவுடன் மெல்லிசாக அவுட்லைன் போட்டுப் பின் வரைவேன். பென்சிலாலும், பேனாவாலும் இண்டியன் இங்காலும் ( பேனாவில் தொட்டு ) வரைந்ததுண்டு. முன்பு கூட நான் கலந்துகொண்ட காம்பெடிஷன்களின் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்களைப் போட்டிருந்தேன்.

இந்த ஓவியப்  பெண் மண்டி போட்டிருக்கும் பொஸிஷன் சரியில்லை என்று இப்போது தோன்றுகிறது . அதேபோல் டிசைன் சங்குபோல் அல்லது குட்டிக் கொம்பு போல் ( கொம்பூதுதல் )  ஒன்றை வரைந்துள்ளேன். சங்கு இப்படி இருக்குமா தெரியல. :) தலையிலிருந்து விழும் சல்லாத்துணி ரொம்பப் பிடித்தது.
இது யாரோ வரைந்ததை பத்ரிக்கையில் பார்த்து வரைந்திருப்பேன் என நினைக்கிறேன். ஹாஸ்டலில் இருக்கும்போது ஓவியக்காரி என நினைத்துப் பார்த்த வெட்டி வேலைகள் இப்போது ப்லாக் போஸ்டாக உதவுகின்றன. :)

வெள்ளி, 10 நவம்பர், 2017

காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் கவியரங்கம்.




பாரதியார் காரைக்குடிக்கு வந்த நாளைக் ( நவம்பர் 9 ) கொண்டாடும் பொருட்டு காரைக்குடி பாரதி தமிழ்க்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கவியரங்கத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

புதன், 8 நவம்பர், 2017

என் சிர்க்கோனியம் பல்லே. !

முன்னே எல்லாம் சொத்தைப் பல் என்றால் பிடுங்கிவிடுவார்கள் டாக்டர்கள். இல்லாவிட்டால் தங்கப்பல் கட்டி விடுவார்கள்.  என் சொந்தக்காரர்களில் ஓரிருவர் இதுபோல் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை நினைக்கும்போதெல்லாம் தங்கப் பல்லே பிரதானமாய் நினைவில் பளீரிடும். ! இப்போது எல்லாம்  சொத்தை( யை) எடுத்துவிட்டுப் பூசி மெழுகி விடுகிறார்கள். அதன் மேல் சிர்க்கோனியம் பல்லை டூத் பிக் போன்ற மரக்குச்சிகளால் சொருகிவிடுகிறார்கள்.
இங்கே காண்பவை அனைத்தும் மாடல் பற்களே. என்னுடையவை அல்ல. கடைசியா கொடுத்திருக்கேன் என்னோட சிர்க்கோனியம் பல்லை ! :)

செவ்வாய், 7 நவம்பர், 2017

காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.

871. ஒக்கிடுதல். - சீர் செய்தல். உடைந்த ஒரு பொருளை ரிப்பேர் செய்து வைத்துக் கொள்ளுதல். வீட்டை ஒக்கிட்டு வைத்துக் கொள்வது .

872.மரவுதட்டி/மறைவுதட்டி. :- மறைப்புக்காகப் பயன்படுவது. மரச்சட்டங்களால் ஆனது. முழுவதும் மரத்தால் ஆன மரவுதட்டியும்  உண்டு. சிலவற்றில்  ஸ்கிரீன் போடப்பட்டிருக்கும்.  ஒரே சதுரமாகவோ அல்லது இரட்டைச் சதுரங்களாகவோ மரச்சட்டங்களால் செய்யப்பட்டிருக்கும். கீழே கால் வைக்கப்பட்டிருக்கும். இச்சட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் உருட்டு ஆணிகளில் ஸ்க்ரீனை மாட்டி உபயோகிக்கலாம். பொதுவாக ஆல்வீட்டில் அல்லது வளவில் அல்லது அடுப்படியில் ஒருவர் பங்கிலிருந்து மற்றவர் பங்கை மறைக்கப் பயன்படுத்துவது.

873. உள்ளதைப் போல :-சுமாராக. பெண் எப்படி இருப்பாள் என்று கேட்டால்  அது ரொம்ப உள்ளதைப் போல இருக்கும்.  என்பார்கள்.  திருத்தம் பத்தாது, அழகு போதாது என்பது அவர்கள் கணிப்பு.

874.புரியாதவளும் பொல்லாதவளும்.. :- ”பொல்லாதவளோட கூட இருந்துறலாம். அடி இந்தப் புரியாதவளோட இருக்க முடியாது” என்பது சொலவடை.

875.கசம் பிடிச்சவ :- மகா, மெகா சிக்கனக்காரி. எச்சில் கையால் காக்காய்கூட ஓட்ட மாட்டாள் என்று அர்த்தம்.

புதன், 1 நவம்பர், 2017

மெர்சலும் துப்புக்காரர்களும்.

1621. Ore mercelathan keethu. 😂


1622. உக்கிரமான சாமியை எல்லாம் பாஸ்வேர்டா வைச்சா எந்த உக்கிரம் எந்த ஐடிக்குன்னு மறந்துபோகுது. இந்த ஐடில இந்த லாப்டாப்புல இன்ன தேதிலதானே பாஸ்வேர்ட் மாத்தினேன்னு காமிக்கிறது என்ன பாஸ்வேர்டுன்னும் காமிக்கலாம்ல.  :P 

1623. நாம டிம் டிப் செய்தாலும் எதிர்க்க வர்றவங்க நம்ம கண்ணை குருடாக்கிடுறாங்களே. இந்த பஸ் , லாரி கூட பரவாயில்லை. வேன்., கார்க்காரங்களுக்கு கர்ட்டஸின்னா என்னன்னு லைசென்ஸ் கொடுக்கும்போதே க்ளாஸ் எடுக்கணும். 
Related Posts Plugin for WordPress, Blogger...