புதன், 19 ஜூன், 2013

ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்..

ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்:-

பஷீரைப் போல என்னை ஈர்த்த இன்னொருவர் தோப்பில் முகம்மது மீரான். இவரது சிறுகதைத் தொகுதியை சமீபத்தில் படித்தேன். குமரி மாவட்டத்தின் சொல்வழக்கில் மிக அற்புதமான கதைகள்.

ஒரு குட்டித்தீவின் வரைபடம். இதை வெளியிடுவதை எஸ். பொ அவர்கள் ஒரு பேறாகவே கருதுவதாக குறிப்பிட்டு இருந்தார்கள். இதைப் படித்ததையே ஒரு பேறாகக் கருதுகிறேன்.

சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் பஷீரின் கதைகளில் எனக்கு தரிசனம் தந்த ப்ரபஞ்சம் இந்த நாவலில் குமரி முனையாகக் காட்சியளித்தது. பஷீரின் எழுத்துக்கள் பேரன்பைப் பேசினால், தத்துவத்தைப் பேசினால்  இவரது கதைகள் நம் வீட்டில் நம்முடனே வாழும் மனிதர்களின் பாசத்தை, சுயநலத்தை பேசுகின்றன . பணக்கார ஏழை வர்க்கபேதத்தைப் பேசுகின்றன.

பஷீரின் கதைகளில் அவரும் ஒரு மாந்தராய் இருந்தாலும் தன்னைப் பற்றிய கம்பீரமான வெளிப்பாடு இருக்கும். மற்றவர்களை எளிதாகப் பகடி செய்வதைப் படிக்கும்போது புன்னகையை உண்டு பண்ணும். இவரது தொகுதியில் இவரது மன்னிப்பு வேண்டுதல் போல சில கதைகள் உண்டு. தன்னைத் தானேயும் பகடி செய்து கொள்வதையும் காணலாம்.  ஈழத்தமிழில் கதைகள் படிப்பது போல சுகமானது குமரித் தமிழிலும் கதைகள் படிப்பது. நமக்குப் பரிச்சயமில்லாத இடம், பொருள், நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள ஆழ்ந்து படிக்கத் தூண்டும் அதே சமயம் மிகவும் சுவாரசியமான புதிரை விடுவிப்பது போலவும் அமையும்.

மொத்தம் பதினாலு கதைகளில் ”குட்டன் சார்” கதை எல்லார் வாழ்விலும் தூண்டுகோலாய் இருக்கும் ஒரு ஆசிரியர் பற்றியது.
என் அப்பா காலத்தில் எல்லாம் கணக்கப் பிள்ளை பள்ளியில் சேர்க்கப் போகும்போது வயசு என்ன என்று கேட்டால் முன்ன பின்ன சொல்லி சேர்த்து விடுவார்கள். என் அப்பாவை ஒன்றேமுக்கால் வயது அதிகமாகச் சொல்லிச் சேர்த்து விட்டிருந்தார் கணக்கப் பிள்ளை. அது ரிட்டயர்மெண்ட் வயதிலே வந்து இடித்தது. பணி ஓய்வு பெறும் சமயம் ஒன்றேமுக்கால் வருடம் பணியும் போச்சு , சம்பளமும் போச்சல்லவா. இதை அப்பா அடிக்கடி கூறுவார்.

இந்த நூலிலும் ”பிறப்பின் விசித்திரம்” என்ற கதையில் நாயகன் பிறந்தது உத்தேசமாக ஒரு ரஜப் மாசம் அத்திக்குப் பெத்தா என்று வீட்டில் விபரம் கூறுகிறார்கள். இதை வைத்து எப்படி டிசி கொடுப்பது எனத் தாங்களே கணக்குப் பண்ணி ஒரு வயது போட்டு டிசி கொடுக்கிறார்கள். இதில் ஆசிரியர் கிண்டலாக “ கைருன்னிசாவைக் குட்டிம்மா பெத்த ரஜப் 10லுமல்ல, வாப்பாவின் கணக்குப்படி சித்திரை மாதம் நெத்தொலிபட்ட நாளிலுமல்ல, ’அரைகிளாஸ்” வாசுபிள்ளை சார் கணித்துப் போட்ட ஆண்டு மாதம் தேதியில், என் உம்மா என்னைப் பிரசவித்தாள்!. “ கூறுகிறார்.

”ஏணி, பச்சை நிறக்கார்”, இவை இரண்டும் மூத்தும்மா, வாப்பாவின் நோவுகள், தன்னுடைய நோவுகளோடு பொருத்திப் பார்ப்பதான கதை. ”மாளிகை வீட்டில்”  “எப்படி மறக்க முடியும் , நான் மிதிச்சது உங்களை அல்ல” என்று கூறும்போது ஏழை பணக்கார வர்க்கபேதத்தைக் குறிப்பதாக இருக்கும். கட்டிக் கொடுத்த அக்கா பறக்கமுடியாமல் பணக்காரவீட்டின் கூண்டுக்கிளியாக உலவுவது குறித்த வருத்தம் இருக்கும்.

”களியோடக்கா”வுக்காக மூத்தும்மாவின் மூத்திரச் சட்டியை ஒளித்து வைத்ததனால் அவர் முதுமையோடும் பிணியோடும் பிறந்தகம் செல்லகிறார். தான் தாய் என நினைத்துக் கொண்டிருக்கும் தன் பெரியம்மா தன்னைப் பெற்றவரல்ல என்பதனால் இப்படிச் செய்ததாக மூத்தும்மா வருந்தும் இடம் இழிவரலை உண்டு செய்தது. தன்னுடைய தவறுகளையும் ஒப்புக் கொள்ளும் தன்மை இந்தக் கதைகளில் இருக்கிறது.

“ஒரு குட்டித்தீவின் வரைபடமும்” இதுதான். கல்சானுக்காக நொண்டிக் கண்ணும்மாவுக்குக் கொடுக்க வேண்டிய சக்காத்துப் பணத்தைக் கையாண்டதற்காக இதில் மன்னிப்புக் கேட்கும் தொனி தெரியும்.

”காலண்டர் பாவா”, ஒரு சிறப்பான சிறுகதை. சிறுவர்களின் மனநிலையிலேயே கதை பயணிக்கும். நோன்பு பிறை பார்க்க சிறுவர்களோடு மலைக்குச் செல்லும் அவர் முதுமையினால் தனக்குத் தெரியவில்லையோ என நினைக்க அவர் “ பழைய காலண்டராக” சுருட்டிப் போடப்பட்டு சிறுவர்களின் புதிய காலண்டர் படி பெருநாள் அறிவிக்கப்படுவது ரொம்ப யதார்த்தம். “ இரண்டு திருட்டியாலே பார்த்தேன் என்று சொல்லவா? பார்க்கலே என்று சொல்லவா.?” என்று எல்லாக் கதைகளின் முடிவிலும் ஒரு பஞ்ச் டயலாக் மாதிரி ஒன்று வந்துகொண்டே இருக்கிறது.

”புதையல் கதை”யில் தன்னையே பீக்காடு காவலாளியாக கிண்டலடித்துக் கொள்வது, ”நிற்காத காலி”ல்  மகனின் மேல்கல்விக்காக கல்லூரியிலும், வங்கியிலும் முயன்று, உறவு , நட்புக்களிடமும் சிறுமைப்பட்டு கடைசியில் மூஸா அப்பா தர்க்காவுக்கு சென்று தன் மகனுக்கு சீட்டுக் கிடைக்க வேண்டாம் என்று வேண்டிக் கொள்வது ( இதில் வங்கி அதிகாரியுடனான உரையாடல் உண்மையை நச்செனப் பகிரும் ஒன்று ), ”முன்னோர்களின் இரண்டாவது நல்லடக்கம்” , என தன் தமக்கை எடுத்துச் சென்ற தாய் வீட்டு அலமாரியில் முன்னோர்களின் பெயர் மறைக்கப்பட்டுப் பலகை அடித்து அவள் வீட்டில் யாரோ ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது, என நவரசக் கலவையாய் உணர்வுகளின் வெளிப்பாடு இருக்கும்.

இதில் ”அஸ்தமனம்” மட்டும் கொஞ்சம் காதல் கலந்த கதை எனலாம்.

”தலைக்குளம்” தண்ணிச் சுரப்பற்ற பூர்வீக வீட்டின் நிலைமையை எடுத்துரைக்கும். ”பண்டமாற்றி”ல் கலந்தான் பெட்டியை எடுத்துக் கொண்டு பேரன் உப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் கதை.

கடைசி இரண்டும் சுற்றுச்சூழல் கேடு மற்றும் சீர்கெட்ட சமூகத்தின், குடும்பத்தின் மனோபாவம் இரண்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
மொத்தத்தில் எல்லாக் கதைகளுமே திரும்பத் திரும்ப சொல்லாட்சிக்காகவும், அதன் நேர்த்தியான புனைவுக்காகவும் படிக்கப்பட வேண்டியவை.

இஸ்லாமிய மக்களின் குடும்பப் பழக்க வழக்கங்கள், ராமநாதபுரம், கன்யா குமரி முஸ்லீம் மக்களின் பேச்சு வழக்கு என இவை நம்மை அந்த இடங்களுக்கே கொண்டு செல்லும் வல்லமை படைத்தவையாய் இருக்கின்றன.

பஷீர் ஒரு விதத்தில் நம்மிடம் பிரபஞ்சம், தத்துவங்கள் என்று பேசி வியக்கச் செய்கிறார் என்றால் இதில் யதார்த்தம், மொழி ஆட்சி, மனவோட்டத்தில் சொல்லப்படும் கதைகள் என மீரானும் அசரடிக்கிறார்.

நூல் :- ஒரு குட்டித்தீவின் வரைபடம்.
ஆசிரியர் :- தோப்பில் முகம்மது மீரான்
பதிப்பகம் - அர்ஜுனா பதிப்பகம்.
விலை :- ரூ 55.

டிஸ்கி:- இந்த விமர்சனம் 17. ஃபிப், 2013 திண்ணையில் வெளிவந்தது.


செவ்வாய், 18 ஜூன், 2013

கணினிக் கண்ணாடி.:-

கணினிக் கண்ணாடி.:-
***************************
இறுக்கித் தாழ்போட்டு
யாருமற்ற அறையில்
சுவற்றுக் கண்ணாடியில்
தன் பிம்பத்தைத் தானே
பார்த்து ரசிப்பது போன்றது
கணினிதிரையில் விரியும்
தன்கவிதைகளை ரசிப்பது.
 இன்னொரு கைக்கண்ணாடியில்
பிரதிபலிக்கும்
அதிர்ஷ்ட மச்சங்கள்
ஆச்சர்யப்படவைப்பதும்
ஒச்சங்கள் தடவிப்பார்க்க
வைப்பதுமாய்.
 திருத்தப்படாத புருவமும்
ஒப்பனையில்லாத முகமுமாய்
எதார்த்தாமாய் சிலவும்,
குத்துப் புதர்தலைமுடியாயும்
குழைந்து வளைந்து உடலாயும்
துன்ப இன்ப அதிர்ச்சியாய் சிலவும்.
அடிக்கடி புன்னகைத்துப் பார்ப்பதாய்
சிலதை மட்டும் அடிக்கடி படித்து
விழி விரித்துப் பார்ப்பதாய்
சிலதை மட்டும் வெறித்துப் பார்த்து
வித்யாசங்களை உணர்ந்துபார்ப்பதாய்
சிலதை மட்டும் ரசித்துப்பார்த்து
நிர்வாண உடம்பின் வாடையைப்
போலெழும் கணினிச் சூட்டில்
கொஞ்சம் சலிக்கும்போதோ
கண்கள் வலிக்கும்போதோ
கண்ணாடியின்மீது
திரைக் காப்பானைப்போட்டு
வெளியேறியபின்னும்
மிச்சமிருக்கும் அறைக்குள்
நிர்வாணமாய்த் திரிந்த
உடலின் வாசம் மேலெழும்பும்
கவிதை உடலின்
கணினிக் கணப்பாய்

டிஸ்கி:- இந்தக் கவிதை மார்ச் 15 - 31, 2013,  அதீதத்தில் வெளியானது. 


திங்கள், 17 ஜூன், 2013

பதின்பருவப் பெண்களின் பிரச்சனைகள்..

”வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா.”என்ற பாட்டை பொதுவா பதின்பருவப் பெண்களைக் கவரவே எழுதி இருக்காங்களோ என நினைப்பதுண்டு. மேக்கப் என்பது இப்போவெல்லாம் குழந்தைகள் கூட உபயோகப்படுத்தும் விஷயம் ஆகிவிட்டது. எவ்வளவுக்கெவ்வளவு நீங்க மேக்கப் சாதனங்கள் உபயோகப்படுத்தாம இருக்கீங்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்க தோல் மென்மையா இருக்கும். முன்ன எல்லாம் பெண்கள் ஒரு 20 வயதுல திருமணத்தை ஒட்டி அல்லது கல்லூரியில் படிக்கும் பெண்கள் மேக்கப் போடுவாங்க. மத்தபெண்கள் எல்லாம் சோப்புக் குளியல், எண்ணெய்க் குளியல் அதன் பின் பவுடர் போட்டு பொட்டு வச்சுக்குவாங்க. சிலபேர் ஃபேர்னஸ் க்ரீம் உபயோகிப்பாங்க. கண்மை போடுறது உண்டு.

ஆனா இன்றைய உலக மார்க்கெட் லெவலில் இந்த அழகு சாதனப் பொருட்கள்தான் அழகிப் போட்டியில் கலந்துக்குற பெண்கள் கிட்டேயிருந்து ஒரு உலக அழகியையே/ப்ரபஞ்ச அழகியையே தேர்ந்தெடுக்குதுன்னு சொல்லலாம். வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகளை விடுத்து வளர்ந்து வரும் நாடுகளில் அழகுசாதனப் பொருள் விற்கும் நிறுவனங்கள் தங்களுடைய அழகு சாதனப் பொருட்களை விற்கத் தேர்ந்தெடுத்த கருவிதான் இந்த அழகிப் போட்டிகள் எல்லாம். சிவப்புத்தான் அழகுன்னு திரும்பத் திரும்பச் சொல்லி நம்ப வைக்கும் முயற்சி.

நம்ம ஊரில் எல்லாம் பொண்ணு நிறம் என்னன்னா புது நிறம். அல்லது மாநிறம்னு சொல்வாங்க. அது என்னன்னா மாந்தளிர் இருக்கில்லையா அது புதுசா தளிர் விடும்போது கொஞ்சம் அரக்கும் பசுமையும் கலந்த நிறமா இருக்கும். அதுதான் நம்ம நிறம். மாநிறம். இப்படி ஒரிஜினல் கலரே மாநிறமா இருக்கும்போது மெலனின் குறைவா உள்ள வெள்ளைச் சிவப்பா நம்ம தோலையும் முகத்தையும் மாத்த ஏன் கடும் முயற்சி எடுக்குறாங்க பெண்கள். ஏன்னா சிவப்புதான் அழகுன்னு நம்பப்படுது. விளம்பரங்கள்லயும் திரும்பத் திரும்பக் காட்டப்படுது. பல ஆண்டுகளா சிவப்பானவங்கதான் சிறப்பானவங்க என்ற நம்பிக்கை நம் மனங்களில் ஊட்டப்பட்டிருக்கு.

இதை எல்லாம் கடந்து நம் பதின்பருவப் பெண்கள் வெளி வரணும். பொதுவா பதின் பருவப் பெண்களுக்கு உள்ள பிரச்சனைகள் என்னன்னா

1. உடல்கூறு சார்ந்த பிரச்சனைகள்

2. மனம் சார்ந்த பிரச்சனைகள்

3. கல்வி, சமூகம் மற்றும் குடும்பம் சார்ந்த கட்டுப்பாடுகள்.

 இதில் உடல் கூறு சார்ந்த பிரச்சனைகளில் வெள்ளை/ சிவப்பு மட்டுமே அற்புதமான நிறம்னு எப்படி கற்பிக்கப்பட்டு எல்லார் மனதிலும் பதிய வைக்கப்பட்டு இருக்கோ அது போலவே ஒல்லியாய் இருப்பதுதான் மிக அழகுன்னும் பதிய வைக்கப்பட்டிருக்கு. இந்த ஒல்லியாகத் தோன்றவேண்டும் என்ற தாகம் எல்லா இளவயதுப் பெண்களையும் போட்டுத் தாக்குவதால் ஒழுங்கான சத்தான உணவை உண்பதில்லை. மாடல்கள் பலர் அனரெக்சியா போன்றவற்றால் பாதிப்படைந்தது பார்த்தாலும் ஒல்லி என்பது அழகு என பெண்கள் மனதில் பதிந்து போயிருக்கு.

உங்க உறவினர்கள், அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா எப்படி இருப்பாங்களோ அதை ஒட்டித்தான் உங்க உடலமைப்பும் இருக்கும். அதுனால அநாவசியமா உடம்பைக் குறைக்கிறேன்னு குலைப் பட்டினி கிடப்பது கூடாது. சத்தற்ற ஃபாஸ்ட்புட், பாஸ்டா,கோக் போன்றவற்றை சாப்பிட்டு உடலுக்குத்தேவையான விட்டமின்ஸ் , மினரல்ஸை பின் காலத்துல மாத்திரையா சாப்பிட வேண்டி வரும்.

ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது இப்போது அதிகம் கேட்கும் ஒரு சொல்லாக இருக்கிறது. நல்ல பப்ளிமாஸ் மாதிரி பெண்களும் பெருகி வர்றாங்க. கவுச் பொட்டட்டொ, அல்லது டொமெட்டோ என கிண்டல் செய்யுமளவு. இதுக்கு இவங்க மட்டும் காரணமில்லை. சரிவிகிதமா கொடுக்கப்படாத உணவும்., உடற்பயிற்சி இன்மையும்தான் காரணம் . மரபு ரீதியாவும் பெரும்பகுதி இந்த ப்ரச்சனை இருக்கு, தைராய்டு சுரப்பிகள் தாறு மாறா வேலை செய்வதைப் பொறுத்து மிக ஒல்லியாகவோ ( கழுத்தில் வீக்கம் இருக்கும், படபடப்பாக எந்நேரமும் இருப்பார்கள். ) மிக குண்டாகவோ ( அதீதமாக குண்டாகிக் கொண்டே போவார்கள் . சிறிது உணவு உண்டாலும் பெருமூச்சு விடுவார்கள். சிறிது தூரம் நடந்தாலும் களைத்துப் போவார்கள் ). இருப்பார்கள். இவர்களுக்கு தைராய்டு செக்கப் செய்து அதற்கான மாத்திரை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் தைராய்டு சுரப்பியின் இந்த அதீத செயல்பாடுகளைக் கவனிக்காமல் விட்டால் பெண்கள் பூப்பெய்துவதும். கர்ப்பம் தரிப்பதும் தள்ளிப் போகும்.

தவறான உணவுப் பழக்கம் மூலம் பெண் குழந்தைகள் சிலர் 10 , 12 வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். முன்பு 14 , 15 வயதில்தான் பெண்கள் பூப்பெய்துவார்கள். இன்று உணவுப் பழக்கம், தொலைக் காட்சி , கம்யூட்டர் போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில் பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் ( முதிர்வது) எய்துவது நிகழ்கிறது.

முன்பு பூப்பெய்திய பெண்களுக்கு திருவாதிரைக்களி, உளுந்தங்களி, நல்லெண்ணெய், பச்சை முட்டை போன்றவற்றை இடுப்பு பலம் பெறவேண்டிக் கொடுப்பார்கள். இன்னும் பெண் குழந்தைகளுக்கு பேரீச்சை, பாதாம், கீரை வகைகள், பழங்கள் ஆகியன ஆரோக்கியமாக வளர கொடுக்கப்பட வேண்டும். வாரம் ஒரு முறையாவது எண்ணெய்க் குளியல் எடுத்துக்கச் சொல்ல வேண்டும்.

சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் , யோகாசனங்கள் செய்யச் சொல்ல வேண்டும். பூப்படைந்து பின் அடுத்த மாதவிடாய் சிலருக்கு நிகழாது. சிலருக்கு அடுத்தடுத்து அதிக ரத்தப் போக்கு இருக்கும். அதற்குத்தகுந்த கவனிப்பும், இரும்புச் சத்துள்ள உணவுகளும் கொடுக்கப்படவேண்டும். சுத்தமாய் இருப்பதும், சுகாதாரமாய் இருப்பதும் கற்பிக்கப்பட வேண்டும். தன் உடலில் நிகழும் மாற்றங்கள் குறித்துப் பெண்ணுக்குப் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படக் கூடும். அதை எல்லாம் காது கொடுத்துக் கேட்டு சிநேகிதியைப் போல நடத்தித் தீர்த்து வைக்க வேண்டும்.

சரியான உடைகள் அணியக் கற்பிக்க வேண்டும். தன் உருவத்துக்கும்., நிறத்துக்கும் பொருத்தமாகவும் கண்ணியமாகவும் வசதியாகவும் எது இருக்கிறதோ அதை அணியலாம். உடை விஷயத்துல இப்போவெல்லாம் பிள்ளைகளை விட அம்மா அப்பாக்கள் அட்வான்ஸ்டா இருக்காங்க. ஆனா உங்க பிள்ளைகளின் உடையும் அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கக் கூடும். எனவே சிறப்பானதை நீங்க தேர்வு செய்து அவங்களுக்குக் கொடுக்கலாம்.

அடுத்து மனம் சார்ந்த பிரச்சனைகள் என்னன்னா இந்தப் பதின் பருவத்துல பழகுற எல்லாரையும் அவங்க நம்புவாங்க. யாரும் இவங்களைப் பாராட்டிட்டாங்கன்னா அவங்களை ரொம்பப் பிடிக்கும். அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு ஆராய மாட்டாங்க. அப்பா அம்மாவை விட சிநேகிதிகளையும், தோழியா பழகுற எல்லாரையும் பிடிக்கும். இந்த சமயத்துல ஆண் நண்பர்களோடு பழகும் பெண்கள் அவங்க பாராட்டுல மயங்கி விடலாம். எப்பவும் தங்களோட குழந்தைக்கு நல்லது கெட்டது புரிய வைச்சு வழி நடத்தும் பெற்றோர் இருந்தா எந்த சூழ்நிலையிலும் அந்தப் பிள்ளைகள் தவறிழைக்கத் துணிய மாட்டார்கள். தங்கள் அம்மா அப்பாவிடம் எல்லா வற்றையும் கலந்து கொண்டு செய்வார்கள். அதீத பணம் ., அதீத சுதந்திரம் கொடுக்கக் கூடாது. செல்ஃபோன், தனி ரூம், லாப்டாப் கொடுத்தாலும் என்ன பண்றாங்க, என அவ்வப்போது அக்கறையோடு கவனித்துக் கொள்வது நல்லது.

கல்விச் சுமையும் அதிகம் இருக்கும் காலகட்டம் இது. நன்கு படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும். ஆணும் பெண்ணும் ரேஸ் குதிரைகளைப் போல வேலையைத் தொட ஓடும் காலகட்டம் இது. யாரு முன்னே ஓடுகிறார்களோ அவர்களுக்குத்தான் ஜாக்பாட். அடுத்து அடுத்து காம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகிறவர்களுக்கு இவர்கள் அளவு சம்பளம் உள்ள வேலை கிடைப்பதில்லை. எனவே முதன்மையா ஓடணும். அதுவும் பிடரியில் பின்னங்கால் பட ஓடணும் இதுதான் இப்போதைய வேலைகள் கிடைப்பதற்கான தாரக மந்திரம். பெண் குழந்தைகளுக்கும் காரியர் என்பது முக்கியமாகக் கருதப்படுவதால் அவங்க கல்வியை தங்கள் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகளூடே கான்சண்ட்ரேட் செய்து படிப்பது கடினமாகிறது. மேலும் நட்பு, அன்பு, பாசம், காதல் போன்ற பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பருவம் இது.

இந்தக் காலகட்டத்தில் எது எது தேவை, எது நிஜம், எது பொய், வாழ்நாள் முழுமைக்குமான தேவை என்ன எனப் புரிய வைக்க வேண்டும். அதுக்குன்னு எல்லா நட்பையும் முறித்துப் போட வேண்டாம். பெண் குழந்தைகளுக்கு பெண் தோழிகளைப் போலவே ஆண் நண்பர்களும் முக்கியம். பெண் குழந்தைகள் பெண் தோழிகளுடன் அளவளாவுவதைப் போல ஆண் நண்பர்களுடனும் நல்ல நட்பைப் பேணச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படியானால் எல்லா நட்பும் ஆக்கப்பூர்வமான நட்பே.

சமூகம் மற்றும் குடும்பம் சார்ந்து பதின் பருவப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை கொஞ்சம் விசித்திரமானதுதான் அந்தப் பெண்ணின் நோக்கில். பத்து வயது வரை நன்கு விளையாடிய பெண்ணை உள்ளே போ என விரட்டுவது, நீ பெண் எனவே வேலை செய் என வேலைகளைச் சுமத்துவது, பெண் என்றால் விட்டுக் கொடுத்துப் போவதுதான் எனக் கட்டாயப்படுத்துவது. இது எல்லாம் பருவ வயதுப் பெண்களுக்கு மனச் சங்கடத்தை அளிக்கும். இப்போவெல்லாம் தாய்மார்கள் பெண்கள் நன்கு படித்து வேலைக்குச் சென்றால் போதும் என நினைத்து எதையுமே கற்பிப்பதில்லை. அவ படிக்கிறா என விட்டு விடுகிறார்கள். திருமணமானதும் பெண்ணுக்கு தனக்கானதை சமைக்கக் கூடத் தெரிவதில்லை. அப்படி இல்லாமல் ஆண் குழந்தையாயினும்., பெண் குழந்தையாயினும். ரொம்பவும் அடக்காமலும், அல்லது எதையுமே பயிற்றுவிக்காகமலும் இராமல் அவசியம் ஏற்பட்டால் எல்லாவற்றையும் சுயமாகச் செய்து கொள்ளக் கற்பிக்க வேண்டும்.

தாய் தந்தையரை விட்டு ஹாஸ்டலில் வாழ வேண்டிய சூழ்நிலைகளும் பதின் பருவப் பெண்களுக்கு உண்டு. ஏனெனில் தாய் தந்தையர் வெளிநாடுகளில் இருக்க பெண் குழந்தைகள் இந்தியாவில் உறவினர் இல்லத்திலோ அல்லது கல்லூரி ஹாஸ்டலிலோ தங்கிப் படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படித் தனித்து இருக்க நேரும் பெண்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும். இரவு நேரங்களில் அல்லது சில இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படிச் செயல்படவேண்டும் எனவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.தனியே பயணம் செய்தல், பண நிர்வாகம், ஒரு பிரச்சனையில் எப்படி முடிவெடுப்பது என்பனவற்றையும் கற்றுக் கொள்வார்கள். சில குழந்தைகள் தனித்து வாழ்வதாலேயே தலைமைப் பண்புகளுடன் தானே எல்லாவற்றையும் சீர் தூக்கி நிர்ணயிக்கும் ஆற்றலோடு திகழ்வார்கள்.

குடும்பம் என்ற கோயிலில் பெண் குழந்தைகள் தீபத்தைப் போல. தீபத்தின் பிரகாசம் சிறப்பாக விகசிக்கும் வண்ணம் அழகாக ஒளிவிடும்படி அவர்களைச் செய்விப்பதே சிறப்பு.


சனி, 15 ஜூன், 2013

ப.சிங்காரம் நாவல்போட்டி

ஜி மெயிலில் வந்திருந்த போட்டி பற்றிய விபரத்தை இங்கே பகிர்ந்துள்ளேன்.. நல்ல நாவலா எழுதி பரிசு வாங்குங்க மக்காஸ். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)

 ///ப.சிங்காரம் நாவல்போட்டி

புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நற்றிணைப்பதிப்பகம் ஒரு நாவல்போட்டியைஅறிவித்திருக்கிறது. ப.சிங்காரத்தின் பெயரால் அமையும் இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம்.
முதல்பரிசு ரூ 50000
இரண்டாம் பரிசு ரூ 30000
மூன்றாம் பரிசு ரூ 20000
பிரதிகள் வந்துசேரவேண்டிய கடைசிநாள். செப்டெம்பர் 15.
அக்டோபர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும்
டிசம்பர் 30 அன்று பரிசுவழங்கும் விழாவும் நூல் வெளியீடும் நிகழும்.
நிபந்தனைகள்
1. பக்கவரையறை இல்லை.
2. முதல்பதிப்புக்கான உரிமை நற்றிணைப்பதிப்பகத்துக்குச் சொந்தம். 1000 பிரதிகள்
3. மின்னஞ்சலில் அனுப்பக்கூடாது
4.பிரதி திருப்பியனுப்பபட மாட்டாது. ஆகவே நகல்களை அனுப்பவும்
5 தட்டச்சு அல்லது மின்னச்சு செய்யப்பட்ட வடிவில் அனுப்பவும்
6. பிரசுரமாகாத நாவலாக இருக்கவேண்டும்
7 தேர்வுக்குழு முடிவே இறுதியானது
முகவரி
நற்றிணைபதிப்பகம்
பழைய எண் 123 A
புதிய எண்
243 A
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை திருவல்லிக்கேணி
சென்னை///




வெள்ளி, 14 ஜூன், 2013

காக்கைக் கோலமும் படிக்கோலமும்.ஸ்வஸ்திக்கும்.

ஃபிப்ரவரி 16-28 குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில்வெளியான கோலங்கள்.

ஸ்வஸ்திக் கோலம், பூ இலைக் கோலம், படிக்கோலம் , புள்ளிக் கோலம், காக்கைக்கோலம் , இன்னொரு விதமான ஸ்வஸ்திக் கோலம் மற்றும் தாமரைக் கோலம்.

நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல்.