அன்பர் பூசையில் அயர்வுறாத தம்பதிகள்
தம் இல்லத்துக்கு வரும் உறவினர்களை வரவேற்று உபசரிப்பது உலக வழக்கம். ஆனால் தம் இல்லத்துக்கு வரும் சிவனடியார்களுக்கும் பூசை செய்வதில் அயர்வடையாத தம்பதியர் இருந்தார்கள். கடுமையான வறுமையில் உழன்ற போதிலும் இருப்பதைக் கொண்டு சிறப்பாக உணவு படைத்த அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
இளையான்குடி என்றொரு ஊரில் உழவுத் தொழில் புரிந்து வந்தார் மாறன் என்பார். இவர் சிறந்த சிவபக்தர். இவர் மட்டுமல்ல இவரது மனைவியாரும் தன் பர்த்தாவுக்கேற்ற பத்தினி. எந்நேரமும் பஞ்சாட்சரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். தம் இல்லத்துக்கு வரும் சிவனடியாரை இருவருமே இன்சொற்கள் கூறி வரவேற்று உபசாரம் செய்து அறுசுவை விருந்து படைப்பார்கள்.