எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 மார்ச், 2018

வாய்மையின் மைந்தன் லோகிதாசன் :- தினமலர் சிறுவர்மலர் - 11.


வாய்மையின் மைந்தன் லோகிதாசன் :-


சீரும் சிறப்புமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது வாரணாசி. காசி என்னும் இப்பதியில் விசுவநாதரும் விசாலாட்சியும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நானோ நாகத்தால் தீண்டப்பட்டுக் கங்கைக் கரையின் ஓரத்தில் கிடக்கிறேன்.  ஆனால் என் தாயோ காசிராஜன் குழந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு என் தந்தையாலேயே வெட்டுப்படப் போகிறாள்.

இதெல்லாம் எதனால் என நினைக்கிறீர்கள்.? வாய்மையே என்றும் வெல்லும் என்று என் தந்தை கொண்ட விடாப்பிடியான கொள்கையால்தான். மனைவியானால் என்ன மகனானால் என்ன சத்யமேவ ஜெயதே என்று கடமையில் கண்ணாய் இருக்கிறார் என் தந்தை.
  
மனைவியும் மகனும் இறப்பின் நுனியில் இருக்கும்போதும் தன் வாய்மையை விடாத அந்த மயானக் காவலர் யார் ? அவர் தான் என் தந்தை அரிச்சந்திர மகாராஜா. இந்தத் தாரணியே போற்றும் அயோத்தியின் பேரரசர். விண்ணுலகத்திலும் மண்ணுலகத்திலும் எக்காலத்திலும் வாய்மைக்காகப் போற்றப்படக் கூடிய மன வலிமை வாய்ந்தவர் என வசிஷ்டரால் புகழப்பட்டவர். ! அதனாலேயே விசுவாமித்திர மகரிஷியின் அழுக்காறுக்கும் அளவற்ற சோதனைக்கும் ஆளானவர்.

வாருங்கள் காசி மாநகரம் அழைத்துச் செல்கிறேன். எங்கள் கதையைப் பார்த்து வாய்மையைக் கடைப்பிடிப்பது குறித்து முடிவெடுங்கள்.

புதன், 28 மார்ச், 2018

நுங்கிலிருந்து விரியும் பனையும் பச்சைப் பாம்படமும்.

1741.பறக்கும் கம்பளமெல்லாம் என்னங்க ஜுஜூபி. முக்கால் மணிநேரம் லேட்டா வந்து பறக்கும் ரயிலின் ஜன்னலோரத்துல உக்கார்ந்து மிதக்குற இன்பத்தை விடவா ..

1742. மத்தாப்பூக் குச்சிகள் போல் விளக்குக் கம்பங்கள். மீன் செதிலாய் நீரில் மின்னும் கட்டிடங்கள். குளிர் சாமரத்தோடு மரங்கள். இருளை அணைத்துப் படுத்திருக்கும் வானம். குட்டிக் குழந்தையாய் ஓடிவரும் நிலா. புறநகரில் கொட்டிக்கிடக்கும் அழகை ரசிக்கவே ரயிலில் பயணம் செய்ய வேண்டும்.

1743. நெகிழ்ந்து கொண்டிருக்கிறது 
கனத்த மேகம்.
இன்னும் சிறிது நேரத்தில்
அழுதுவிடவும் கூடும்.
நித்திலத்தில் செம்புலம் காட்ட
நீர் யாழ் ஸ்வரம் கோர்க்கிறது. 
ராகம் பிடித்து ரசித்துக் கொண்டிருக்கிறது
விசிறும் காற்று.

1744. வறண்ட நிலம் மழையை வரவேற்பது போல, தனிமையையும் அமைதியையும் ஏகாந்தத்தையும் தனக்குள் அனுமதித்தான். 
---- ஹருகி முரகாமியின் "கினோ." ஸ்ரீதர் ரங்கராஜின் மொழிபெயர்ப்பில் அற்புதம் !

1745. கட்டாயங்களை விருப்பங்களாகக் காட்டிக் கொள்வது குடும்பத்தின் வலிமைகளில் ஒன்று--விவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர் . நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்ப்பில் வியக்க வைத்த இடம்.

சனி, 24 மார்ச், 2018

திருவாவினன்குடிக்கு இடும்பாசுரனின் காவடி. தினமலர் சிறுவர்மலர் - 10.


திருவாவினன்குடிக்கு இடும்பாசுரனின் காவடி:-

வில் போலவும் வேல் போலவும் மயில் போலவும் திருவாவினன் குடி நிறையக் காவடிகள் ஆடி வருகின்றன. பறவைக்காவடிகளும், பன்னீர்க்காவடிகளும் புஷ்பக்காவடிகளும் , பால் காவடிகளும், தீர்த்தக் காவடிகளும், அலைஅலையாய்ப் பழனி மலையைக் கடலாக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று விஞ்சி மலைமேல் முருகனைக் காண ஓட்டமாய் ஓடுகின்றன. பல கண்கவர் காவடிகள் சிந்து பாடி ஒயிலாகச் செல்கின்றன.

இந்தக் காவடிகள் எல்லாம் திருவாவினன்குடிக்கு ஆயிரக்கணக்கில் வருடந்தோறும் வரும் காரணம் என்ன ? எதனால் வருகின்றன.. இதன் காரணகர்த்தா யார் ?

முருகனுக்கு முன்னே முழு மரியாதையும் இந்தக் காவடிக் கட்டும் யாருக்காக ? சக்தி கிரியையும் சிவகிரியையும் அநாயசமாகத் தூக்கி வந்தானே அந்த அசுரனுக்கா இத்தனை மரியாதை ?

இதைத் தெரிந்துகொள்ள நாம் அதோ இடும்பவனத்தில் அமர்ந்து சிவபூஜை செய்துவரும் இடும்பாசுரனையும் இடும்பியையும் பின்தொடர வேண்டும்.

சனி, 17 மார்ச், 2018

சமத்துவம் போதித்த சாதுவன். தினமலர் சிறுவர்மலர் - 9.

சமத்துவம் போதித்த சாதுவன்.

டல் கொந்தளிக்கிறது. அலை தத்தளிக்கிறது. கப்பல் தடுமாறுகிறது. மேலும் கீழும் சதிராடுகிறது. திசைமாறிச் சென்று எதன் மீதோ மோதுகிறது. மிகப் பெரும் பாறையாக இருக்கக்கூடும் அது.

வெளியே எங்கும் அந்தகாரம். எந்தப் பிடிமானமும் கைக்கு அகப்படவில்லை. உடைந்த மரக்கலத்தின் ஒரு துண்டுகூடக் கிட்டவில்லை. இருளைப் பற்றி நீரைச் சுழற்றி நீந்துகிறான் சாதுவன். எங்கெங்கும் நீர். சில்லென்று மேனியெங்கும் விறைக்கிறது. தான் பிழைப்போமா சாவோமா தெரியாது நீரில் தவறி விழுந்த பறவையைப் போலத் தலைதெறிக்க நீந்திக் கொண்டிருக்கிறான் சாதுவன்.

அலை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. கால்கள் சோர்வுறுகின்றன. அவனுடன் பயணித்தவர்கள் எங்கே ?. நாவாய் மோதித் தெறித்ததும் அனைவரும் எங்கெங்கோ சிதறிப் போனார்கள். கண்கள் இருள கைகளும் கால்களும் சோர தன் அன்பிற்குரிய மனையாட்டி ஆதிரையின் முகத்தை நினைத்து ஏங்கியபடி மயக்கத்துக்குப் போனான் சாதுவன்.  

ஆமாம் யார் இந்த சாதுவன்.? அவன் ஏன் கப்பலில் பயணித்தான். ஏன் விபத்துக்கு ஆட்பட்டான். பார்க்கப் போனால் கண் போன போக்கிலும் கால் போன போக்கிலும் மனம் போன போக்கிலும் வாழ்ந்த ஒருவன் சாதுவன். அவன் எப்படி சமத்துவம் போதித்தான் அதுவும் யாருக்குப் போதித்தான் ?

வெள்ளி, 16 மார்ச், 2018

மகளிர் தினத்தில் ஒரு சிறப்புப் பரிசு.

சென்றவாரம் மகளிர் தினத்தன்று ஒரு சிறப்புப் பரிசு கிடைத்தது எனக்கு. அதை வழங்கியவர்கள் முனைவர்  திரு வி டி மாணிக்கம் அவர்கள் குடும்பத்தார்.

திரு வெ தெ மாணிக்கம் அவர்களின் நூலான மருதத்திணையையும் ( ஆங்கிலம் ) அவரது மற்றைய படைப்புகளையும் கொண்டு சென்றவருடம் நடைபெற்ற நான்காம் உலகத்தமிழ்க் கருத்தரங்கில் திருமதி சத்யா அசோகன் தலைமையில் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் அவரது ஆக்கங்களைத் தொகுத்துப் பேசினேன்.

அது அன்றே புத்தகமாகவும் வெளிவந்தது. அதில் அவர் பற்றிய அரிய தகவல்கள் நிரம்பி இருந்தன. அவற்றைக் கொடுத்து உதவியர்கள் அவரது திருமதியார் திருமதி மீனாக்ஷி ஆச்சி அவர்கள்.

கணவரின் தமிழ்ப் பணிக்கு இதயமாக விளங்கியவர்கள். அவருடன் இருக்கும்போது தான் பெற்ற தமிழின்பத்தைச் சேமித்து அதை அமுதம் போல் தற்போது வழங்கி வருகிறார்கள்.

வெவ்வேறு ஊர்களில் நாடுகளில் இருக்கும் தங்கள் குடும்ப அங்கத்தினர்களை ஒன்று சேர்த்து ( தந்தையின் புகழையும் பெருமையையும் பற்றி எழுதிய ) என்னை கௌரவிக்க அவர்கள் இல்லத்துக்கு அழைத்திருந்தார்கள். அவர்களின் மகன்கள் மருமக்கள் முன்னிலையில் ஒரு பாராட்டுரை வாசித்துப் பட்டுப் புடவையோடு வழங்கினார்கள்.  இரண்டுமே மகாகனம் பொருந்தியவை. !

அன்று என்னை மட்டுமல்ல என் பெற்றோருக்கும் என் சின்ன மருமகளுக்கும் கூட பரிசளித்துக் கௌரவித்தார்கள்.

இவர்கள் எங்கள் அம்மா வீட்டுப் பங்காளிகள்.  எங்கள் உறவினர்கள். திரு வி டி மாணிக்கம் அவர்கள் எனக்குப் பெரியப்பா, அவர்கள் மனைவி திருமதி மீனாக்ஷி ஆச்சி பெரியம்மா ஆவார்கள்.

இந்திய ஆஷியான் கவிஞர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஆரம்பமும் நிறைவும்.

காரைக்குடியில் நடைபெற்ற இந்திய ஆஷியான் பன்னாட்டுக் கருத்தரங்கில் கவிஞராகப் பங்கேற்று என் கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. என்னுடைய ஒரு கவிதை மலாயில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டது.


முதல் நாளில் துணைவேந்தர், குன்றக்குடி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகத்தின் தமிழ்ப் பிரிவைத் திறப்புவிழா செய்துவிட்டு கருத்தரங்கிற்கு வந்தார்கள்.

வியாழன், 15 மார்ச், 2018

விவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர். ஒரு பார்வை.



விவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர். ஒரு பார்வை.

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

செவ்வாய், 13 மார்ச், 2018

நான் வாங்கிய பல்புகளும் பலூன்களும்.

கரோல்பாகின் டி பி குப்தா ரோட்டில் சின்னவன் படித்த பள்ளி இருந்தது. அங்கே இருக்கும் சப்ஜி மண்டி அருகே கல்சா காலேஜ் வழியாக தினம் பள்ளிக்குச் செல்வதுண்டு. அந்த ரோடுகளில் அங்கங்கேதான் என் பிள்ளைகளுடன் படித்த  பிள்ளைகளின் வீடும் இருந்தது. அவர்களின் அம்மாக்களும் தமிழம்மாக்களே ஐ மீன் தமிழர்களே என்பதால் நாங்க எல்லாம் ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ்.

மொழி ஓரளவு தெரிந்த ஊரில் பஸ்ஸில் கூட அமர்ந்து கஜ கஜ வென தமிழில் கதைத்தபடி கும்பலாகச்  செல்வது ரொம்பப் பிடிக்கும். சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டேன். அங்கே ஒரு ஹிந்திப் பெண்மணியும் எங்களுக்குப் பழக்கம்.

எனக்கு ஓரளவு வரையும் திறன் இருந்தது ( என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் ). எனது கணவரின் பழைய புகைப்படத்தை எடுத்து அச்சு அசலாக பென்சில் ட்ராயிங் செய்திருந்தேன். அதைத் தோழியரிடம் காட்டி மகிழ்ந்து கொண்டிருப்பேன். அதே போல் இந்தத் தோழியிடமும் காட்டினேன். ஏதோ பெரிய ஆர்டிஸ்ட் , கலாகார் என்ற நினைப்பில்.

அதை வாங்கிப் பார்த்துவிட்டு உடனே கேட்டார் பாருங்க ஒரு கேள்வி.. ”ஆர் யூ எ பெயிண்டர் ?”

-- பெயிண்டர் என்றால் நமக்கு வீட்டை பெயிண்ட் அடிப்பவர் என்ற அர்த்தம்தான். ஒரு டன் அசடு வழிய ஞே ஞே என்று நான் சிரிப்பும் முழிப்புமாக வாங்கிய  முதல் பல்பு..அதுதான். 

திங்கள், 12 மார்ச், 2018

வத்துப்பஹார் வானா ஐயா அவர்களுக்கு நூற்றியாறு வயது.


வள்ளியப்பர் எங்கள் ஐயா
வெள்ளை மனம் கொண்ட மனிதர்.
முள் உள்ளிருக்கும் பலாப் போல
உள்ளமெல்லாம் இனிப்பவர்.
வேகுப்பட்டியிலிருந்து வலசைவந்து
காரைக்குடியில் கோலோச்சும்
வேகுப்பட்டியார் வீட்டில்
வள்ளியம்மை பெற்ற மகன்
விசாலாட்சி வளர்த்த மைந்தன்.
நாகப்பையா மெய்யப்பையா
குலம்தழைக்க உதித்த பேரன்.
கொட்டிக் கிடந்த சொத்தை ஆள
ஓவியமாய்ப் பிறந்த ஒற்றை அரசு.
ஐந்தாவது படிக்கும்போதே
தந்தியைப் படித்துக் காட்ட
மகிழ்ந்து போன பாட்டையாவும்
படித்ததெல்லாம்போதுமென்று
பெட்டியடி பார்க்க
மலேயாவுக்கு அனுப்பக்
கப்பலேறிப் போனவர்கள்.
மலாய் சீனம் பின்னர்
மலையாளமும் கற்று
மலைக்க வைத்தவர்கள்.
கட்டுச் செட்டாய் வாழ்ந்து
கன காரியம் முடித்தவர்கள். 
வத்துப்பஹார் வானா.
பட்டாலையில் பெட்டியடியில்
கம்பீரமாய் வீற்றிருப்பார்.
திண்டும் குறிச்சியும்
சிறு ஓய்வுஸ்தலங்கள்.
செட்டியார் கதம்பமோ
மருக்கொழுந்தோ மணக்க வரும்
செண்ட் வானா.

செவ்வாய், 6 மார்ச், 2018

சுந்தரமாய் உதித்த சொல்லின் செல்வன். :- தினமலர் சிறுவர்மலர் - 8.

சுந்தரமாய் உதித்த சொல்லின் செல்வன். :-

ராம் ராம்”என்றொரு ஒலி எங்கும் ஒலிக்கிறது. நித்ய பிரம்மச்சாரி ஒருவன் சிரஞ்சீவியாய் இதைச் சொல்லியபடி தன் நெஞ்சில் ராமரை நிலை நிறுத்திவிட்டான். அவன் இதயமே அவர் உறையும் கோயில் என்றானது. யார் இந்த சிரஞ்சீவி, இவன் சொல்லும் ’ராம்’ எல்லோரும் எழுதும் ராமஜெயமானது எப்படி ?

சொல்லின் செல்வன் என்று ராமராலேயே அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா ? அதைத் தெரிந்து கொள்ள நாம் ரிஷியமுக பர்வதத்துக்குப் போகவேண்டும். அது எங்கே இருக்கிறதா.. ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது. வாருங்கள் நாம் ஒரு சொல்லின் செல்வன் சுந்தரமாய் உதித்த சுந்தரகாண்டத்துள் நுழைவோம்.

ஆம் யார் இந்த சொல்லின் செல்வன் ? அவர் ஏன் சுந்தர காண்டத்தில் உதித்தார். இவர் சுந்தகாண்டத்தில் உதிக்கக் காரணமானவர்கள் யார்?

திங்கள், 5 மார்ச், 2018

மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.

1721. பைபாஸ், ஹைவேஸ் ரோடெல்லாம் சூப்பர். பட் கொதிக்கிற வெய்யில்ல கண்ணு எரிஞ்சிரும்போல. அசோகர் மாதிரி சாலை ஓரங்களில் நிழல்தரும் மரங்களை எப்போ நடப்போறீங்க ?

1722. ஆட்டு மந்தைகள் மேயுற, பச்சைப் பசேல்னு இருக்குற எந்த எடத்தைப் பார்த்தாலும் ஸ்டெப்பி புல்வெளி மாதிரியே தோணுதே # எட்டாங்கிளாஸ் பாடம் இன்னும் மறக்கல ;)

1723. ஊருடன் ஒத்துவாழ்ங்கிறது பழைய மொழி. ஊரோடு ஒட்டாமல் போங்குறது பைபாஸ் ரோட் மொழி.. ;)

1724. கார்ப்பரேட் சாமியார் மடங்களால் நிரம்பி வழிகிறது கிரிவலப் பாதை. #திருவண்ணாமலை அட்ராசிட்டீஸ்

1725. சித்தர்கள் 18 பேர்தான். ஆனால் சாமியார்களோ 18,000 பேர். #திருவண்ணாமலை கிரிவலப் பாதை .

1726. அர்த்த ராத்திரியிலும் ராசிக்கல், ஜவுளி, லாலிபாப் விற்பனை. நல்லாவே கல்லா கட்டுறாங்க. #ட்ரேட் சென்டர், திருவண்ணாமலை.

நகரத்தார் திருமகளில் தமிழ் வளர்த்த நகரத்தார்கள்.

கோட்டையூர் திரு ரோஜா முத்தையா பற்றித் தெரியாத புத்தக வாசிப்பாளர் இருக்க முடியாது. மாபெரும் புத்தக சேமிப்பு அவருடையது. பல்லாண்டுகளாக அவர் சேமிப்பில் இருந்த புத்தகக் கருவூலம்  இப்போது சென்னையில் செயல்பட்டு வருகிறது. அவர் மகள் வள்ளிக்கண்ணு  ரோஜா முத்தையாவும் அவர் போலே தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறார். அவர் நடத்தி வரும் இதழ்தான் நகரத்தார் திருமகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...