எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 மார்ச், 2015

திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை.:-



திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை.:-

திரு மேலை பழனிப்பன் மேலைச் சிவபுரியைச் சேர்ந்தவர். கரூரில் பல்லாண்டு காலமாய் வசித்து வருகிறார். அவருக்கு இந்தத் திருக்குறள் விழாவில் ( காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிகழ்ந்த 61 ஆம் ஆண்டு குறள் விழாவில் ) திருக்குறள் செல்வர் என்ற பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.

{முதலில் முனைவர் குமரப்பன் பற்றிக் கூறி இவர் நகரத்தார்களின் முதல்வர் என்று சிறப்பித்துக் கூறினார்.கருத்தரங்கமும் கவியரங்கமும் காலையிலேயே நடைபெற்றிருந்தன. அதில் பழ கருப்பையா, பேராசிரியை விசாலாட்சி ஆகியோர் உரையாற்றி இருந்தார்கள்.}

1986 இல் கரூரில் திருக்குறள் பேரவை தொடங்கப்பட்டதாக திரு மேலை பழனியப்பன் கூறினார். இப்பேரவையின் மூலம் சுமார் 50,000 திருக்குறள் சார்ந்த புத்தகங்கள் இலவசமாக வெளியிடப்பட்டிருப்பதாகவும், இலட்சம் புத்தகங்கள் வெளியிடவேண்டுமென்பது தமது குறிக்கோள் எனவும் கூறினார்.

வருடத்தில் ஓர் நாள் மட்டுமல்ல திருக்குறள் படிப்பது என்பது. அதை வருடம் முழுதும் வளரும் சமுதாயத்துக்குக் கொண்டு செல்வோம் என்று கூறினார். கரூரில் ஆண்டுதோறும் பள்ளிகளில் திருக்குறள் போட்டிகள் நடத்தி தைத்திருநாளில் விழாவெடுத்துப் பரிசு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இம்முறை நடைபெறுவதாகத் தெரிவித்தார். 5,6,7,8, ஆகிய வகுப்பில் படிப்பவர்கள் ஒரு குழுவாகவும் ( சப் ஜூனியர்), 9,10 ஆம் வகுப்பில் படிப்பவர்கள் ஒரு குழுவாகவும் ( ஜூனியர் ) , 11.12 ஆம் வகுப்பில் படிப்பவர்கள் ஒரு குழுவாகவும் ( சீனியர் ) மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

1775 மாணாக்கர்கள் கலந்து கொண்டு அதில் முதல் கட்டமாக 172 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது இறுதிச் சுற்றில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். தொலைக்காட்சித் தொகுப்பாளர் திரு ஜேம்ஸ் வசந்தன் இந்நிகழ்ச்சியை நடத்துவதாகவும் பரிசுத் தொகை  3 லட்சம் எனவும் குறிப்பிட்டார்.  முதல் பரிசு 30.000, இரண்டாம் பரிசு 20,000 எனவும் 100 திருக்குறளைக் காணொளி மூலம் கண்டு 4 கேள்விக்கும் 15 நொடிகளில் பதில் சொல்பவருக்குப் பரிசு என்றும் கூறினார்.

திரு பொன்னம்பல அடிகள் கூறியது போல பள்ளிகள் தோறும் திருக்குறள் மன்றம் அமைத்து குறள் வகுப்புகள் எடுத்து வள்ளுவத்தைப் பரப்புதல் வேண்டும் என்பதைக் கட்டளையாக்க வேண்டும் என்று கோரினார்.  

1950 இல் வள்ளல் அழகப்பர் ( காரைக்குடியில் பேசும் யாவரும் வள்ளல் அழகப்பர் பற்றிச் சிலாகிக்காமல் பேசுவது இல்லை J. ) ரயில்வே க்ராசிங்கில்  காரில் காத்திருந்த போது ஒரு வெள்ளரிக்காய் விற்ற பெண்மணியிடம் வெள்ளரிக்காய் வாங்கிவிட்டுச் சில்லறை இல்லாமல் 100 ரூபாய் நோட்டைக் கொடுக்க அவர் சில்லறை இல்லையே என்று சொல்ல பரவாயில்லை வைத்துக்கொள்ளம்மா என்று இலவசமாகக் கொடுத்தாராம். அதைக் கேட்ட அப்பெண்மணி தன் கூடையில் இருந்த மிச்ச வெள்ளரிக்காய்களை அங்கே ரயில்வே க்ராசிங்கைக் கடக்கக் காத்திருந்த அனைவருக்கும் ஓடி ஓடிச் சென்று இலவசமாக வழங்கினாராம். அப்போது அவரைச் சார்ந்தவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார். வரவுக்கு மேலே கிடைத்துவிட்டதால் தலை கால் புரியலையா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அப்பெண்மணி வள்ளல் அழகப்பர் கொடுத்த ரூபாய் நோட்டைத் தொட்டவுடன் அவருடைய ஈகைத் தன்மை தனக்கும் ஒட்டிக்கொண்டுவிட்டதாகச் சொன்னாராம்.  வள்ளல் தொட்ட 100 ரூபாய் நோட்டைத் தொட்டதும் அந்த சாதாரணப் பெண்மணியையும் அது வள்ளல் ஆக்கியதாம்.

“தோன்றிற் புகழொடு தோன்றுக “

“ ஈதல் இசைபட வாழ்தல் “

“ அறம் செய்க “

“ஒண்டு உலகத்து உயர்ந்த புகழல்லால் “ என்ற குறள்களைக் கூறினார். பிறந்தோம் இருந்தோம் இறந்தோம் என்றில்லாமல். பிறந்தோம் இருந்தோம் சிறந்தோம் இறந்தோம் என வாழவேண்டும் என வலியுறுத்தினார்.

வள்ளுவர் அவ்வாறு வாழாதவர்களை மரத்துக்கு ஒப்பானவன், மிருகத்துக்கு ஒப்பானவன் என்று குறிப்பிடுவதாகச் சொன்னார்.

“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையோர்
செத்தாருள் வைக்கப் படும். ”

என வள்ளல்களை, ஈகைக் குணம் கொண்டவர்களை ஒரே பட்டியலில் வைக்கிறார்.

காந்தியடிகள் ஒரு முறை திருக்குறளின் நிலையாமை என்ற குறளை மொழிபெயர்ப்பில் படித்தபோது

“ உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. ”

இதன் பொருளுணர்ந்து ரசித்த அவர் தான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும் என்றும்  இந்தக் குறளை அதன் மூல மொழியாகிய தமிழில் புரிந்துணர்ந்து படிக்க வேண்டும் என்றும் விரும்புவதாகக் கூறினாராம்.

நபிகள் தான் சம்பாதித்தவற்றை அன்றைக்கே தர்மத்திற்கு செலவழித்து விடுவார்களாம். இரவில் அவர் எப்போதும் சமாதி நிலையில் உறங்குவாராம். ஆனால் ஒரு நாள் நபிகளுக்கு இரவில் உறக்கம் வராமல் இருந்ததாம். அப்போது வீட்டில் உதவியாகப் பணிசெய்துகொண்டிருந்த பெண்ணை அழைத்து தான் அன்று கொடுத்த பணம் எல்லாம் செலவாகிவிட்டதா என்று வினவி இருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண் இல்லை என்றும் நபிகளுக்கு சிறிது உடல் நலக் குறைவாக இருப்பதால் மருந்து வாங்க அந்தப் பணத்தைச் சேமித்து வைத்திருப்பதாகவும் கூறினாராம்.

உடனே நபி அவர்கள் அந்தப் பெண்ணிடம் அந்தத் தொகையை யாருக்காவது வழங்கிவிடும்படிக் கூறினார்களாம். அப்போது அந்தப் பெண் இந்தக் குளிர் இரவில் யாரைத் தேடுவது காலையில் கொடுத்துக்கொள்ளலாம் என்றாராம். அந்தச் சமயத்தில் வீட்டு வாசலில் குளிரில் நடுங்கியபடி ஒருவர் கதவைத் தட்டி குளிருக்கு உணவு வாங்கவும்  போர்வை வாங்கவும் பணம் வேண்டும் என்று கேட்டாராம். உடனே நபி அவர்கள் சொன்னபடி அந்தப் பெண் அந்தப் பணத்தை ( 5 தினார்கள் ) வழங்கினாராம். அதன் பின்னரே நபி அவர்களுக்கு நிம்மதியான நித்திரை வந்ததாம்.

ஒவ்வொருவர் உண்ணும் அரிசியிலும் பெயர் பொறித்திருப்பது போல கடவுள் பணத்தையும் அவர்க்காக  வழங்கும்படிக் கொடுத்திருப்பதாகக் கூறுவாராம்.. நாம் சேமிக்க மிகச் சிறந்த செல்வம் ஒழுக்கமும் பண்பாடுமே என்று மேலை பழனியப்பன் கூறினார்கள்.

தன்னுடைய இத்தனை வருட வாழ்க்கையில் இந்த திருக்குறட் கழகத்தின் திருக்குறட் செல்வர் விருது பெற்ற இந்த நாள்தான் சிறந்தநாள் என்று கூறினார்கள். இத்துடன் அவர்கள் உரை இனிது முடிந்தது.

டிஸ்கி :- இந்தக்கட்டுரைத் தொகுப்பு  டிசம்பர் 7. 2014 திண்ணையில் வெளிவந்தது. 

7 கருத்துகள்:

  1. நல்ல பல செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி குமார்

    நன்றி கோபால் சார்

    நன்றி தனபால் சகோ

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. திண்ணையில்

    ramu says:
    December 12, 2014 at 10:24 am

    naan alagappaa kalloriyil padikkum naatkail mahar nonbu pottalil nadakkum antha vizhaa vaazhththuukal
    Reply
    ramu says:
    December 12, 2014 at 10:52 am

    திருக்குறள் ஒரு உலக மகா இலக்கியம் என்பதில் எனக்கு உடன்பாடு அதனால் தான் வாழ்த்து தெரிவித்தேன் சென்ற கடிதத்தில். நான் அழகப்பா கல்லூரியில் 1952-56 இல் படித்தவன் அப்போதே மகர்நோன்பு பொட்டலில் நடந்தது இந்த விழா ஒரு உண்மை என்ன என்றால் ” இதன் நோக்கம் சா கணேசன் நடட்த்திகொண்டிருந்த கம்பன் விழா வுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது என்பது உண்மை ஏன் ? அந்த காலகட்டத்தில் கம்பனுக்கு எதிர்ப்பு திராவிட கழகம் பிறகு தி மு கவிடம் இருந்தது ரா பி சேது பிள்ளையோடு அண்ணா ” தீபரவட்டும் என்ற விவாதம் நடத்தியவர் எவ்வளவு கம்பனி இழிவு படுத்த வெண்டுமெஒ அவ்வளவு செய்தார்கள் ஏன்? கம்பன் ஒரு ஆரிய தாசன் திருப்பாவை பற்றி சொற்ப்பொழிவு நிகழ்த்திய ஐயம் பெறமால் கோனாருக்கு ( கோனார் நோட்ஸ் புகழ்) ” ஆரிய தாசன்” என்று பெயரிட்டார்கள் சா கணேசனுக்கே பல எதிர்ப்புகள் இப்படியாக தோன்றியது இந்த விழா நோக்கம் எப்படியோ நல்லதை செய்தார்கள்
    Reply

    ஷாலி says:
    December 14, 2014 at 4:04 am

    //”(திருக்குறட் கழகம்) இதன் நோக்கம் சா கணேசன் நடட்த்திகொண்டிருந்த கம்பன் விழா வுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது என்பது உண்மை ஏன் ? அந்த காலகட்டத்தில் கம்பனுக்கு எதிர்ப்பு திராவிட கழகம்…..//

    அய்யா ராமு அவர்களே! உண்மையில் திராவிடக் கழக கொள்கைகளுக்கு போட்டியாகவே சா.கணேசன் அவர்கள் கம்பன் கழகத்தை ஆரம்பித்தார் என்றுதான் வரலாறு சொல்கிறது.பின்பு 15 வருடம் கழித்தே திருக்குறட் கழகம் துவக்கப்பட்டது.

    “1937 ஆம் ஆண்டில் முதன்முறையாக, அன்றைய, சென்னை மாகாணத்தில் இராசகோபாலாச்சாரி தலைமையில் இந்திய தேசிய காங்கிரசுஆட்சிப் பொறுப்பேற்றது. 1938 ஆம் ஆண்டில் அவ்வரசாங்கம் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து தமிழறிஞர்களும் பெரியார் ஈ.வே.இரா. போன்ற சமூகச் செயற்பாட்டாளர்களும் போராடினர். அப்போராட்டத்தில் வடமொழி – வடபுலம் – வடவர் பண்பாட்டு ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்து “திராவிடர்நாடு திராவிடர்க்கே” என்னும் சிந்தனை மேலோங்கியது. அச்சிந்தனையின் ஒரு பகுதியாக, இராமாயணம் வடவர் பண்பாட்டை முன்மொழிகிறது எனக்கூறி, பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தினர் இராமாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்நிலையில் கம்பனது இலக்கிய ஆளுமையை தமிழர்களிடையே பரப்புவதற்காக காரைக்குடி சா. கணேசன் கம்பன் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.[1] ( சிவம் சுகி., கம்பன் நேற்று – இன்று – நாளை, வானதி பதிப்பகம் சென்னை, ஐ.பதி. நவ 2006, பக். 20-23)
    Reply

    பதிலளிநீக்கு
  5. 1 மார்ச், 2015 ’அன்று’ 1:30 பிற்பகல்
    Thenammai Lakshmanan சொன்னது…



    தேனம்மைலெக்ஷ்மணன் says:
    December 14, 2014 at 5:07 pm

    திரு ராமு அவர்களுக்கு

    தங்களின் அரிய தகவல்கள் கொண்ட பின்னூட்டத்துக்கு நன்றி. முகப்பில் இந்த இடுகை எனக்குத் தெரியவில்லை. தாங்கள் பின்னூட்டமிட்டபின்பே வெளியானது தெரிந்தது.

    திருக்குறளின் மேல் கொண்ட ஆர்வமும் ஈர்ப்புமே என்னை அந்த நிகழ்வில் குறிப்பெடுக்கச் செய்தது.

    நன்றி. :)
    Reply
    kathirvel says:
    December 15, 2014 at 7:13 am

    மனிதன் வாழ்வதற்கு வழிகாட்டிய நூல் திருக்குறள் ,,திருஅருட்பா வாழ்ந்து காட்டிய நூல் ,,ஆனால் இந்த தமிழ் நாட்டில் உள்ள ஆன்மீக பெரியவர்களும் அறிஞர் பெருமக்களும் .வள்ளலாரின் சுத்த சன்மார்க்க உண்மை நெறிகளை கண்டு கொள்ளாதது ஏன்.என்று புரியவில்லை .
    Reply
    kathirvel says:
    December 15, 2014 at 7:27 am

    தவத்திரு பொன்னம்பல அடிகள் அவர்கள் வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை படிக்க வில்லையா ? உலகத்திற்கு நல்வழிக் காட்ட இரண்டு நூல் மட்டும் இருந்தால் போதும் .பாரதியார்,பாரதிதாசன் ,தந்தை பெரியார் போன்றவர்கள் ,வள்ளலார் எழுதிய திருஅருட்பாவைப் படித்து தெரிந்து கொண்டு தாங்கள் சொல்லுவது போல் பகுத்தறிவுக் கொளகைகளை மக்கள் மத்தியில் விதைத்து உள்ளார்கள் .எப்படியோ மக்கள் நலமுடன் வாழ்ந்தால் சரி …பகுத்தறிவு ஆன்மீகத்தை உலக மக்களுக்கு உணர்த்தியவர் வள்ளல்பெருமான்.கதைகளையும் ,கற்பனைகளையும் சொல்லி மக்களை ஏமாற்றி வாழ்ந்த ஆன்மீக வாதிகளுக்கு சவக்குழி தோண்டி புதைத்தவர் வள்ளல்பெருமான் ..அவரைப் பற்றி பேசாத ஆன்மீக வாதிகள் ஆன்மீக வாதிகள் அல்ல …போலியானவர்கள் என்பது பொருள் .வள்ளலார் சொல்லாத வாழ்க்கை நெறி உலகத்தில் எங்கும் இல்லை .மனிதன் மனிதனாக வாழ்ந்து மரணத்தை வெல்ல முடியும் என்ற உண்மையை அறிவியல் ரீதியாக விஞ்ஞான ரீதியாக கண்டு பிடித்து வாழ்ந்து காட்டியுள்ளார் .மனிதன் பிறப்பு என்பது உயர்ந்த பிறப்பு அந்த பிறப்பினால் அடைய வேண்டிய ஆன்ம லாபத்தை காலம் உள்ள போதே அனுபவித்து பின் இறை நிலையை எப்படி அடைய முடியும் என்ற உண்மையை தெளிவுப் படுத்தி ..சொன்னால் மட்டும் போதாது வாழ்ந்து காட்டவேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் வள்ளல்பெருமான்.அவருடைய சன்மார்க்க நெறியைப் பின் பற்றாதவன் தமிழன் அல்ல !…நன்றி ஈரோடு கதிர்வேல்.
    Reply
    IIM Ganapathi Raman says:
    December 28, 2014 at 6:09 am

    இக்கட்டுரையில் தலைப்பு ஏதோ டாகுமென்ட்ரி ரைட்டிங் என நினைக்கும்படி செய்து என்னை விரட்டிவிட்டது. கூகுலில் பாரதியார் கவிதை வரிகளைத்தேடும்போது இது கிடைத்தது. படிக்க வேண்டிய திண்ணைக்கட்டுரை.

    தமிழக ஆன்மிக வாதிகளில் இருவகை: ஒருவர், தன் உரைகள்; பேருரைகளில் தான் சேர்ந்திருக்கும் மதத்தின் கருத்துக்களை ஆழ்ந்த புலமையோடு எடுத்தியம்பினாலும், வடமொழிச்சொற்களை விரவி பேசுபவர். மற்றவர்: தூய தமிழில் மட்டும்- ஆனால், எளிதில் புரியும்படியான – தமிழில் பேசுவார்கள். ஆதினங்கள் இந்த இரண்டாம் வகை.

    நான் இருவகையினர் உரையரங்குகள‌யையும் தேடிச்சென்று கேட்பவன். எனக்கு வடமொழி பிரச்சினையில்லை. அதே சமயம், தூயதமிழ் சுவையும் திகட்டாதது.

    பொன்னம்பல அடிகளாருக்கு முன் குன்றக்குடி அடிகளாரைப் பலமுறை கேட்டு இன்புற்றதுண்டு. பொன்னம்பல் அடிகளாரை ஓரிரு தடவைகள் கேட்டதுண்டு. அவரின் திருக்குறள் பற்றிய உரையின் சாரம் இங்கே கிடைக்கிறது. ஆதினங்களில் மதக்கொள்கைகள் எனக்கு ஒவ்வாத்தது என்றாலும், திருக்குறளின் மீது எனக்கு கடுமையாக காட்டம் இருந்தாலும், தேனம்மை இலட்சுமணன் ஆதினத்தில் பேச்சையும் பிற அறிஞர்களின் பேச்சுக்களையும் சிறிது தொகுத்தளித்ததது நன்று. நன்றிகள்.

    தமிழ் வாழ்க! தமிழ்ப்பணி சிறக்க !!
    Reply
    தேனம்மைலெக்ஷ்மணன் says: Your comment is awaiting moderation.
    March 1, 2015 at 7:51 am

    அரிய தகவல்களுக்கு நன்றி ஷாலி

    வள்ளலார் போற்றுதலுக்குரியவர். இதில் எனக்கேதும் மாற்றுக் கருத்து இல்லை கதிர்வேல் சார். ஆனால் அங்கே நிகழ்ந்தது திருக்குறள் கழகத்தின் 61 ஆம் ஆண்டு நிறைவு. எனவே அதைப் பற்றி மட்டுமே அங்கே உரையாற்றினார்கள் என்பதை உங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வர விழைகிறேன்.

    மதிப்பிற்குரிய கணபதி சார் அவர்கட்கு,

    எனக்கும் ஆதீனங்கள் மடாதிபதிகள் என்றால் பெரும் வெறுப்பு உண்டு என்றாலும், அங்கே கொண்டாடப்பட்டவர்கள் கூறிய நற்கருத்துக்களை அவர்கள் வார்த்தையிலேயே பதிவு செய்ய விரும்பினேன். திருக்குறள் மீதும் மிக்க அபிமானம் உண்டு. எனவேதான் தொகுத்தேன். கருத்தளித்தமைக்கும் பாராட்டுக்கும் நன்றி :)
    Reply

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...