சனி, 31 மார்ச், 2012

ரத்தநிறம்..

ரத்தநிறம்:-
 *****************
 ஒருவன் இருந்தபோது
சுழற்றிக் காண்பித்த வாளை
அவன் இறந்தபின்னும்
இறக்குவதில்லை இவர்கள் .

நிறங்களைத் தீட்டியவன்
தூரிகையில்
இனங்கள் அடிக்கப்பட்டன.

வேர் இங்கிருக்க.,
எங்கோ கிளைத்து
கொடிக்கம்பாய் ஒடிக்கப்பட்டு
மடிந்தான் அவன்.

கேளிக்கைக்காரனை எல்லாம்
கலகக்காரனாகக் காட்டுகின்றன
வண்ணங்கள்..

கலங்கிக் கிடக்கும் நிறங்களை
அசூயையாய்ப் பார்த்தபடி
கடந்து செல்கிறோம் நாம்.

நிறங்கள் நம்மைக்
கறையாக்கி விடக்கூடாது
என நினைத்தபடி..,
எச்சரிக்கையாய்...

யாரும் நம்மேல்
வாரி வீசி விடாதபடியும்.,
பயந்தபடியும்..

இடிப்பது.,
காவலனைக் கொல்வது.,
நாடுவிட்டு நாடு
ஓடச் செய்வதுமான நிலையில்

வேற்றுமையில் ஒற்றுமை
என சகிப்புத்தன்மையான
முகம் ஒன்றை மாட்டித் திரிந்தபடி..

 நம் ஒவ்வொருவர்
முகத்தின் உள்ளும்
உண்மையான உணர்வு
தற்காத்தபடி ஒளிந்திருக்கிறது.,

ரத்த நிறம் அப்பி
நேரம் வாய்க்கும் போது
வெளிவர..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஜூலை முதல் வார உயிரோசையில் வெளிவந்தது.


வெள்ளி, 30 மார்ச், 2012

காலசர்ப்ப தோஷம்

காலசர்ப்ப தோஷம்..:-
***********************************
நல்ல நட்சத்திரக்காரர்
நீங்கள் என்று
புகழப்படுகிறீர்கள்.

இது இதற்கு உகந்தது என்று
ஒரு சுபயோகக்காரனாகப்
பிறப்பித்திருக்கிறது அது உங்களை..

போர்வாளாய்ப் போரிடத்
தயாராயிருக்கும் போதெல்லாம்
மழுங்கடிக்கப்படுகிறீர்கள்.
நீங்கள் ஷத்ரியனல்லவென்று.

வசியமும்., வைசியமும்
செய்யத் தெரியவில்லை
உங்களுக்கு ..வாய்ப்பூட்டும் கூட.

யோகம் கரணம்., சூத்திரம் நீக்கி
ராஜயோகம் என நினைக்க
விபரீத யோகமாய் இருக்கிறது.

நாலு வண்ணத்தில் அடங்கி
அட்டவணையில் சேராமல் போகிறீர்கள்.
சலுகைச் சால்வை கிடைக்காமல்.

சகடயோகம் சடசடவென இறங்க
கால சர்ப்பம் தீண்டித் தோஷமாக்க
பாம்புக்கடியின் விஷப்பல்பட்டு
பரமபதத்திலிருந்து இறங்குகிறீர்கள்.

 நீங்கள் இறங்கிவந்த இடத்திலிருந்து
உங்கள் மகனோ பேரனோ திரும்ப
நடக்கத் துவங்குகிறான், திரும்ப
பாம்புக்கடிபட்டு இறங்க..

 டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஜூன் நான்காம் வார உயிரோசையில் வெளிவந்தது.


புதன், 28 மார்ச், 2012

வயதின் கம்பீரம்.

வயதின் கம்பீரம்:-
*****************************

கண்ணாடியைப் பார்ப்பது
இப்போதெல்லாம் பிரியத்துக்கு
உரியதாயில்லை.

எடை மெஷி்ன்
சங்கப்பலகையாய் மிரட்டுகிறது
கனம் அதிகரித்துவிட்டதாக.

அழகு நிலையத்தில்
முடிச்சீரமைப்பு முகசீரமைப்பு
செய்து கருத்தவர் பார்த்தபின்

புருவமுடி மட்டும்
பிடுங்கச்சென்று வலியெடுக்க
பின்னொருநாள் போகவேயில்லை

நரை முடிக்கு கொஞ்சம் கண்மையும்
முகத்துக்கு வெளுப்பு க்ரீமும்
பூசியபின் கொஞ்சம் இளமையாக

எப்போதும் சூடும் சிரி்ப்பை
எடுத்து சூடியபின் இன்னுமிளமையாக
எதற்கு இதெல்லாம் என

வயதின் கம்பீரம் கேள்விதொடுக்க
இன்னும் இளமையாகத்தானிருக்கிறாய்
என்ற சமாதானத்தோடு பொ்ழுதுகள்..

போக்கிவிட எண்ணும்போதெல்லாம்
கடலுக்கும் அலைக்கும் வயதுண்டா
மலைக்கும் காற்றுக்கும் என மலர்கிறது மனது ..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஜூன் மூன்றாம் வார உயிரோசையில் வெளிவந்தது.


செவ்வாய், 27 மார்ச், 2012

இன்று போய்..

இன்று போய்:-
**********************

நீ நேரில் வந்து
போரிடும்போதெல்லாம்
உன் சரிபாதி வலிமையை
அபகரித்துக் கொள்கிறேன்.

ஹீனமான குரலுடன் நீ
மறைமுகத் தாக்குதல்
தொடுக்கிறாய்.

உனக்கானது
அபகரிக்கப்பட்டதென்றும்
அது ஒரு போதும் இனி
உன்னுடையதாக
ஆகாதென்றும் உணர்கிறாய்

திரும்பி வராத ஒரு அன்புக்காக
உன் போர் நெறிமுறைகள்
தாறுமாறாகின்றன்.
உன்னையே தாக்கிக் கொள்ளுமளவு.

உத்தராயணம் வரை
அம்பில் கிடக்கிறது
அரைகுறையாய் நம் அன்பு.

தாக்குதல்களை நிறுத்தி நீ
பின்வாங்கி வேறொரு இடம்
செல்லத் தலைப்படுகிறாய்

இணையும் எதிரியும் இல்லா
தனிமையில் தோல்வியுற்றுத்
திரும்புகிறேன்
என் அகலாத ஆணவத்தோடு..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஜூன் இரண்டாம் வார உயிரோசையில் வெளிவந்தது.


வெள்ளி, 23 மார்ச், 2012

இடப்பெயர்ச்சி.

இடப்பெயர்ச்சி..:_
***********************

கூடாரங்கள் காலியாகின்றன.
கொழுப்பு சுமந்த திமிலில்
நீர் ஏற்றிக் கொள்கிறது
அலுப்போடு ஒட்டகம்

ஆணிகள் பிடுங்கப்பட்டு
சுருட்டப்படும் டார்பாலின்கள்
குடைப்பாய் அமைப்பில்
குறுக்கில் ஏற்றப்பட்டு.

கோப்பைகளும் வட்டில்களும்
சலசலத்து முதுகில் வழிய
மணலும் சூரியனும் எதிர்த்து
கரையேற மிதக்கிறது ஒட்டகம்

கண் தொங்கும் சதைகள்
மணல் காற்றை தடுக்க
வெப்ப நினைவில் உருளும்
கோள விழியசைத்து

இடம் பெயர்த்து செல்கையில்
சிதைந்து புதைந்த கோப்பையொன்றில்
தலை காட்டிச் சிரிக்கிறது..
எப்படி நகர்வதென்றறியாத
மெலிதான பச்சைப் புல் ஒன்று.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 மே நான்காம் வார உயிரோசையில் வெளியானது.


வியாழன், 22 மார்ச், 2012

ஒட்டுக் கேட்கும் யந்திரம்.

ஒட்டுக் கேட்கும் யந்திரம்..
*************************************

பூச்சிகள் வண்டுகள் அளவில்
ஒலிவாங்கிக் கடத்தும் யந்திரங்கள்
குவிந்து கிடந்த கடை வழியே
கடக்க வேண்டி வந்தது.

எதிர்முறைக்காரர் வீட்டு அலமாரி.,
மேலதிகாரியின் மேசையடி.,
கட்சிக்குள்ளே கோஷ்டியானவனின்
சின்ன வீட்டின் பரண்.,
கையூட்டு வாங்குபவர்களை
சந்திக்கச் செல்பவரின் கைப்பை.,
இவற்றில் பதுக்கி உண்மையை
ஒட்டுக்கேட்கலாம் சத்தமில்லாமல்.

தொலைபேசி உரையாடல்
கண்காணிக்கப்படும் கோபுரங்களின்
கூர்ச் சாணையை விட
சாணிச் செருப்புக்களைப்
படிகளில் தேய்ப்பதாய் இருக்கிறது
உண்மைக் கடத்திகளின் பணி.

யதேச்சையாய்ச் சிக்கும்
வார்த்தைக் கடத்திகளைச்
சோதிக்கும் போது
ஏதும் கொள்ளளவு இல்லை
அதில் என்றாலும்
யார் வைத்திருப்பார்களோவென்று
யாரைப் பார்த்தாலும்
சந்தேகத்துடன் சிக்காகிறது.,
எங்கும் பேச பயந்து.

எதிர்பாராமல் அப்பியோரும்
அப்பப்பட்டவரும் சந்திக்கும் நேரம்
யதார்த்தமாய்ப் புன்னகைப்பது
இலகுவாய் வருவதில்லை..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 மே நான்காம் வார உயிரோசையில் வெளியானது.

புதன், 21 மார்ச், 2012

சூரியச் சிறகுதிர்ந்து.. உயிரோசையில்..

சூரியச் சிறகுதிர்ந்து..
********************************

கலையும் மேகங்களாய்
நகர்ந்து கொண்டேயிருக்கின்றன
பழக்கங்களும் உறவுகளும்.

நிமிடத்துக்கு நிமிடம்
மாறும் மனநிலையில்
கலையவும் உருவாகவும்..

கனத்த மேகங்கள்
உருண்டு திரண்டு முரள்வது
பேரிடியாய் இடம்புரட்டி

முணுமுணுப்போடும்
கூதலோடும் கலையாமல்
இருளோடியபடி பிடிவாத்துடன்.

கரைந்து இறங்குவதும்
உரைந்து சிதறுவதும்
வரையாத பிரிவின் துயர்.

நகர்வதே வாழ்வானதில்
நகர்ந்து செல்லுதல்
துன்பம் விளைவித்து

நெய்தலும் முல்லையும்
மருதமும் குறிஞ்சியும்
பாலையும் நீரோடி புரையோடி..

ஒவ்வொருநகர்தல் முடிவிலும்
ஒலியெழப்பெய்து
ஒளி குடித்த மயக்கத்தில்

சூரியச்சிறகுதிர்க்கும் வானவில்கள்
யவ்வனத்தை கிளறியபடி
கிழக்கு மேற்கை இணைக்கின்றன.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 மே இரண்டாம் வார உயிரோசையில் வெளியானது.

டிஸ்கி:- இந்தக் கவிதை மே15,  2011 திண்ணையில் வெளியானது.

செவ்வாய், 20 மார்ச், 2012

ரீங்காரம் அடங்காமல்..

வைத்த ஆரவாரம்
அடங்காத பாத்திரமாய்
தன்னைத்தானே
ஏசியபடி வீதிகளில்

எண்ணச் சுருக்கங்களுக்குள்
நீவமுடியாத மடிப்புகளோடு
தலையை அசைத்தபடி
கண்கள் எங்கோ அலைய

வீட்டுக்குள் பகிர முடியாதது
மனசுக்குள் கட்டிப் போட்டது
மூளைக்குள் முடங்கியது
அடங்கமாட்டாமல் வசவாய்

யாரோடு சண்டை
யாரைப் பிடிக்கவில்லை
யாரை எதிர்க்க முடியவில்லை
யாரைக் கட்டுப்படுத்தமுடியவில்லை

எந்த கட்டுக்களுமற்று
யார் பார்ப்பார்களோவென்ற
விசாரத்தை ஒழித்து நாய்கள் ஓடும்
மூத்திரச் சந்துகள் வழியாக

வாய்வலிக்க திட்டவும்
காறித் துப்பவும்
சுதந்திரத்தைத் தருகின்றன
ஆளடங்கிய இரவுத் தெருக்கள்.

ரீங்காரம் அடங்காமல்
தெருவிளக்கில் கொசுக்களும்
அசைபோட்டபடி சில மாடுகளும்
உண்ணிகள் கடித்தபடி..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011மே இரண்டாம் வார உயிரோசையில் வெளியானது.

திங்கள், 19 மார்ச், 2012

சாதனை அரசிகள் பற்றிய மிகச் சிறப்பான விமர்சனத்துக்கு நன்றி ராமலெக்ஷ்மி.

தன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் சீற்றத்துடனும் அக்னியின் வெம்மையுடனும் பேரலைகளின் ஆவேசத்துடனும் விழுங்கப் பிழக்கும் பூமியின் வேட்கையுடனும் பேரிடியின் ஆக்ரோஷத்துடனும் ஐம்பூதங்களின் துணைபெற்றாற் போல எந்தத் திக்கிலிருந்து வருமென்றே தெரியாது எழும் எதிர்ப்புகளைச் சமாளித்துக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகையோருக்கு தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சியுடன் கூடுதலாகத் மனோ தைரியமும், தளராத போராட்ட குணமும் தேவையாகின்றன. ஆதிசக்தியாய் விஸ்வரூபமெடுத்து அப்படிப் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ பதினேழு பேரையே ‘சாதனை அரசிகள்’ ஆக நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் தேனம்மை.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் காலகாலமாக பெண்களின் வெற்றி மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. மருத்துவம், மதம், அரசியல், அறிவியல், விஞ்ஞானம், கலை என சத்தமில்லாமல் சாதித்து எந்தக் குறிப்புகளிலும் இடம்பெறாமல் மறைந்து போன பெண்கள் ஏராளமானவர்கள். ‘சரித்திரத்தின் அடிக்குறிப்புகளாகவே பெண்கள் இருந்தார்கள் என்பதை மறுதலித்து சொல்லுகிறார் அமெரிக்க பெண் எழுத்தாளர் சான் ட்ரா சிஸ்னெரோஸ் “அடிக்குறிப்புகளின் அடிக்குறிப்புகளாக இருந்தார்கள்” என்று. சில நூற்றாண்டுகளாக அந்நிலமையில் ஓரளவு மாற்றம் வந்திருக்கிறது என்றாலும் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை ஆவணப்படுத்துவதில் அக்கறையின்மையும் அலட்சியமும் தொடரவே செய்கிறது. அந்த வகையில் தன் சொந்த முயற்சியில் சரித்திரத்தில் பதினேழு சாதனை அரசிகளை இடம்பெறச் செய்திருக்கிறார் தேனம்மை.

சமகாலத்தில் நம்மிடையே வாழும் உதாரணப் பெண்மணிகளைத் தேடிச்சென்று அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்களை ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையில் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ என்ற தலைப்பின் கீழ் எழுதி வந்த தொடரின் தொகுப்பே ‘சாதனை அரசிகள்’. இந்த வாய்ப்பைத் தான் வழங்கிய போது “நாலைந்து பேரை வேண்டுமானால் கண்டு பிடிக்கலாம். அதற்கு மேல் முடியுமா தெரியவில்லை” என ஆரம்பத்தில் தயங்கியதாகவும் பின்னர் அடுத்தடுத்து பலரைக் கண்டு பிடித்து சுவைபட எழுத ஆரம்பித்து விட்டதாகவும் நூலின் முன்னுரையில் மகிழ்வுடன் குறிப்பிடுகிறார் பத்திரிகையின் ஆசிரியர் கிரிஜா ராகவன் அவர்கள். ஒவ்வொருவரையும் பேட்டி காணத் தேனம்மை எடுத்துக் கொண்ட சிரமங்களும், உழைப்பும், முயற்சியும் பாராட்டுக்குரியது எனில் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் நூலைத் தந்த வகையில் தானும் ஒரு சாதனை அரசியாக உயருகிறார் தேனம்மை.

மகளிர் தினம் அனுசரிக்கப்பட்ட இம்மாதத்தில், தேனம்மை கொண்டாடிய மகளிரில் சிலரைப் பற்றிய என் சுருக்கமான பகிர்வு உங்களுக்கு நூலை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

பதிமூன்று வயதாக இருக்கும் போது ஏற்பட்ட ஒரு நெருப்புக்காயத்தினால் சென்ற வருட டிசம்பர் வரையிலும் 42 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளைச் சந்தித்தவர் ரம்யா தேவி. எம் சி ஏ படித்து பன்னாட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் ப்ராஜெக்ட் மேனஜராகப் பணியாற்றும் நிலைக்கு உயர்ந்திருக்கும் இவர் தன் தோழி காயத்ரியுடன் சேர்ந்து ஆற்றி வரும் சமூக சேவைகள் எண்ணிலடங்கா. “தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டு என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்” என்கிறார் நூல் ஆசிரியர்.

‘சுயம்புவாக உருவான பெண்’ என ஓய்வு பெற்ற பேராசிரியர் மோகனா சுந்தரம் அவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். வசதிகளற்ற ஒரு கிராமத்தில் மாடு மேய்ப்பது உட்பட வீட்டுவேலைகளை செய்தவிட்டு பள்ளிப்படிப்பை முடித்தவர் மேற்படிப்புப் படிக்க குடும்பத்தினருடன் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. இதையொட்டி குடும்பமே இவருக்கு விஷம் வைத்துக் கொல்லவும் பார்த்திருக்கிறது. விலங்கியல் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி, பொறுப்பு முதல்வராக ஓய்வு பெற்றவர். ஏராளமான அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் தன்னைத் தாக்கிய புற்று நோயிலிருந்தும் போராடி மீண்டு வந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

சாஸ்திரி பவனில் ஆடிட்டராகப் பணிபுரிகிறார் தலித் பெண்கள் சங்கத் தலைவி மணிமேகலை. நான்கு சகோதரிகள்,ஒரு சகோதரருடன் ஒரே ஒரு அரிக்கேன் விளக்கைச் சுற்றி அமர்ந்து படிப்பதாக இருந்திருக்கிறது பள்ளிப் பருவம். கல்லூரியில் சேரக் கட்டணம் செலுத்தும் வரிசையில் நின்றபோது ‘இவங்க எல்லாம் படிச்சு என்ன செய்யப் போறாங்க’ என ஒருவர் கேட்ட கேள்வியே தன்னை இந்த அளவுக்கு உயர்த்தியதாகக் கூறியிருக்கிறார். பெண் ஊழியர் நலச்சங்கத்தின் தலைவராக இருக்கும் இவர் தலித் பெண்களுக்காகவும் ஒரு நலச் சங்கத்தை உருவாக்கி பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு உதவுவதுடன் சங்கங்களின் மூலமாக இலவச மருத்துவ முகாம்களையும் நடத்துகிறார்.

சென்ற வருடம் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஜனாதிபதியிடம் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர் லூர்து ராணி. 31 வருடங்களாக சிகப்பு அணுக்குறைவுக்காக ஸ்டிராய்ட் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனால் ஏற்பட்ட தீவிர பக்க விளைவுகளை மனபலத்துடன் சமாளித்தபடி மற்ற பலரையும் விடத் தன் பணியைச் சிறப்புற ஆற்றியவர். படிக்க வசதியற்ற மாணவர் பலருக்கு உதவியும் வருகிறார்.

மலைகளில் தேன் எடுத்து வாழும் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வசந்தி. ஆறாவது குழந்தையாகப் பிறந்து, சொந்தத்தில் தத்து கொடுக்கப்பட்டு, பத்தாம் வகுப்பு முடித்திருக்கையில் மணம் ஆக அதன் பிறகு எம் ஏ வரை படித்திருக்கிறார். தம் இன மக்களுக்கு மாலை நேர வகுப்பாசிரியராகவும், கிராம முன்னேற்ற அதிகாரியாகவும் பணியாற்றி இன்று ‘வானவில் பெண்கள் நலச் சங்கம்’ உட்பட பல கூட்டமைப்புகளை உருவாக்கிப் பல்லாயிரக் கணக்கான பெண்கள் அவற்றின் மூலமாக பயனடையக் காரணமாக இருந்து வருகிறார்.

சாலையோரங்களில் அநாதரவாக விடப்பட்டவர்களைக் காப்பாற்றி சரியான புகலிடங்களில் சேர்ப்பிக்கும் சாருமதி; மாங்குரோ காடுகளில் இறால் வளர்ப்புக் கேடுகளையும், அவற்றின் கழிவுகளினால் உண்டாகும் கேடுகளையும் கண்டுபிடித்த டாக்டர் ஆஸ்வின் ஸ்டான்லி; இந்திய தொழிற்சங்கத்தின் மாநில உறுப்பினராக செயலாற்றும் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி உட்பட மேலும் பல பெண்களின் சாதனைகளைக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

நூலின் முக்கிய அம்சமே இப்பெண்கள் அனைவரையும் ஆசிரியர் நேரடியாகச் சந்தித்து, அவர்களுடன் நேரம் செலவழித்து, நட்புடன் அளவளாவி, மனம் திறந்து அவர்கள் சொன்ன கதைகளோடு ஒன்றி, வியந்து போற்றி எழுதியிருக்கிறார்.

தடைகளாகவும் எதிர்ப்புகளாகவும் சுற்றிச் சூழும் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலிருந்தும் மீண்டெழுந்து புடம் போட்டப் பொன்னாக மிளிரும் பெண்மையை உயிர்ப்புடன் சித்தரித்திருக்கும் ஜீவாநந்தனின் அட்டைப்பட ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது. எழுத்தாளர் எம் ஏ சுசிலா அவர்களும், செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு அவர்களும் வாழ்த்துரையும் நட்புரையும் வழங்கியுள்ளார்கள்.

நூலில் இடம் பெற்ற பதினேழு பேரும் இலட்சக் கணக்கான பெண்களின் பிரதிநிதிகளாகவே எனக்குத் தோன்றுகிறார்கள். இன்னல்களையும், இடறுகளையும் கடந்து இவர்போலத் தன்னம்பிக்கையுடன் போராடி, தம்மோடு தம்மைச் சுற்றியிருப்பவரையும் உயர்த்திக் கொண்டே செல்லும் பெண்களை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்!

மகளிருக்கு மட்டுமின்றி எவருக்கும் தன்னம்பிக்கை தரும் ‘சாதனை அரசிகள்’ சரித்திரத்தின் ஒரு பக்கம். காலம் தேனம்மைக்கு நன்றி சொல்லும்.

டிஸ்கி..1. :- இந்த விமர்சனம் 18.3.2012 திண்ணையில் வெளிவந்துள்ளது.

டிஸ்கி 2..:- இந்த விமர்சனம் 8.3.2012 வல்லமையிலும் வெளிவந்துள்ளது.

டிஸ்கி:- 2. :- இந்த விமர்சனம் 8.3.2012 முத்துச்சரத்திலும் வெளிவந்துள்ளது.

நன்றி ராமலெக்ஷ்மி, வல்லமை, திண்ணை மற்றும் முத்துச்சரம். ..:)


சனி, 17 மார்ச், 2012

10 குறுங்கவிதைகள்.. திண்ணையில்.

கண்வழி நுழைந்தாய்..
உறுத்தல் அதிகம்தான்..
கண்ணீராய் வெளியேறினாய்..

******************************************************

முதுகில் இருக்கும் ஓடு
அவ்வப்போது ஒளிந்துகொள்ள..
சுமையாய் இருந்தாலும்
சுமைகள் ஏறாமலிருக்க ..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உலாவிகளில் உலாவி
நான் உன்னிடத்திலும்
நீ என்னிடத்திலும்..
யதாஸ்தானம் அடைந்தபின்
விரும்பிய விருப்பங்களில்
தெரிந்தது தேடியலைந்தது..

****************************************************


குடும்ப ஓடுகளை உடைத்து
வெளிவந்தேன்
நட்பு ஓடுகளை சுமக்க அல்ல..

****************************************************

மலை இருட்டில் உதைத்து
பாதாளத்தில் விழுந்தேன்
நல்ல வேளை .. கனவு..
தாய்வயிற்றுக்குள்.
மீண்டெழுந்தேன்..

***********************************************

இலைச் சிறகுகளை
அசைத்துப் பறக்கிறது
மரம்..

**********************************************

முட்களும்., கொம்புகளும்
கவசத்தை தேர்ந்தெடுக்கின்றன
ஒளியப் பிடித்தபடி பின்னே நான்..

*********************************************

குத்தினாய்..
கிளறினாய்..
தோண்டினாய்..

காய்ந்து போய்
எண்ண விதைகளால்
என்னை மூடினேன்..

மழையும்
வெய்யிலும்
தங்களைத் தெளித்துப் போக

வேர்பிடித்து விளைந்து
வெடித்திருக்கும் என்னை
இனிய கனி என்கிறாய்..

***************************************************

விரைவில் சந்திப்போம்
என்று கூறி
விடை பெற்றுக் கொண்டிருப்பாய்..

****************************************************

பழுத்துக் கொண்டிருந்தாலும்
பயணப்பட்டுக் கொண்டிருப்போம்
பழுதாகி தேங்காமல்..

டிஸ்கி:- இந்தக் கவிதைகள் ஏப்ரல் 30 2011 திண்ணையில் வெளிவந்தவை.

வெள்ளி, 16 மார்ச், 2012

மூட மறந்த பக்கங்கள்.. உயிரோசையில் ..

ஒரு கதவு சட்டென மூட
இன்னொரு ஜன்னல் திறக்க
அடைபட்டுக் கிடந்த காற்று
விரைந்து தப்பித்து ஓட

அசையும் அசையா
சொத்துக்களுக்கெல்லாம்
வாரிசுகள் கையெழுத்திட்டு
சான்றிதழ்கள் சாட்சியோடு

உடைத்து விற்று.
பங்கு போட்டு
உருவி எடுத்து
உலைத்துச் சென்றபின்

மிச்சமாகக் கிடக்கிறது
இணையத்தில்
தொடங்கிய முகப்புத்தகம்
வீட்டுக்காரனற்று..

யார்யாரோ தேடிவந்து
எழுதிப் போக
கடவுச்சொல் இழந்த
ஒற்றைச் சுவரும்

காணவில்லையே
என்று தேடித்தேடி
பக்கம் பக்கமாய் அலையும்
இதயங்களும் சேர்த்து

இதையாவது சம்பாதித்தோமென
மறுஜென்மமாய்
அவ்வப்போது உயிர்த்தெழுகிறது
மூட மறந்த பக்கங்கள்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 மே முதல் வார உயிரோசையில் வெளிவந்தது.

வியாழன், 15 மார்ச், 2012

4 குறுங்கவிதைகள்..

சொட்டு நீலமோ உன் பார்வை
வெளுக்காமலே
வெண்மையாகிறேன் நான்
***************************************

தந்திக் கம்பங்களில்
நிதானிக்கும் பறவைகளாய்
ஓய்வெடுத்து போகின்றன
குறுஞ்செய்திகள்..

**************************************
புலம் பெயர் பறவைகள்
பருவகாலம் முடிந்தும்
திரும்ப ஏலாமல்
வலசை வந்த பறவைகளாய்..

***************************************
சீசன்..
******

கண்களே மட்டையாயும்
பந்தாயும்..
அவுட்டாகாத இதயம்
லப்டப்பென்று
பார்வையாளரின் கூச்சலோடு.

டிஸ்கி:- ஏப்ரல் 24 , 2011 , ஞாயிறு திண்ணையில் வெளியானது.


புதன், 14 மார்ச், 2012

வாக்கு நீளம். உயிரோசையில்..

ஆழக்கற்கள் புரட்டுவதில்லை
புரளுவதில்லை..
வார்த்தை நதியை
வருடியபடி இருக்கின்றன..
கால் நனைப்பவரைக்
குளிர்வித்தபடி..

நெகிழும் கற்கள்
கரை ஓரமெங்கும்.
நகர்ந்து உதிரும்.
மிதிப்பவர் பொறுத்து..

நதியின் ஓட்டத்தில்
உருண்டு ஆங்காங்கே
வறளும் தரைதட்டி நிற்கும்
பாசம் பிடித்தபடி..

பெய்து தீர்க்கும் அருவிகள்
பெரும்பாறைகளையும்
குகைகளாய்க்
குடைகின்றன..
கடும் கற்களையும்
கூறாய் வெட்டி
கூழாங்கற்களாக்குகின்றன..

குடைவரை குகைக்குள்
சிக்கி உருளும் உடல்களாய்
சில சிக்கிப் போன
வார்த்தைகளும்..
வெளியேறத் தவித்து
உருண்டு கொண்டே..

டிஸ்கி:-இந்தக் கவிதை ஏப்ரல் 2011 உயிரோசையில் வெளிவந்தது.

செவ்வாய், 13 மார்ச், 2012

ஏமாற்றாதே.. ஏமாறாதே.. ( சிறுகதை)

மாநகரப் பேருந்து விரைந்து கொண்டிருந்தது.

பக்கத்தில் ஒரு பெண் .. மல்லிகைப் பூ வாசனையோடு..

மாலை நேரக் காற்றில் கிறக்கமாகத் தலை சுற்றுவது போல் இருந்தது..

நிச்சயம் அடுத்த திருப்பத்தில் தெரியாதது போல் ஒரு முறை மோதிவிட்டு அதற்கடுத்தே வரும் ஸ்டாப்பில் இறங்கிப் போய் விடவேண்டும். மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

போன முறை மாதிரி சொதப்பி அடி வாங்கக் கூடாது. நெரிசலில் சிக்கி தர்ம அடி வாங்கி உதடு எல்லாம் ரத்தம்.

வேண்டாம் விட்டு விடலாம் என நினைத்தாலும் கண்ணெதிரில் தெரிவதை உடமையாக்காமல்.. ஹ்ம்ம் முடியவில்லை

அடுத்த ஒரு வாரத்துக்கு நிம்மதி.. எந்த பஸ்ஸிலும் ஏற வேண்டாம்.. கால் டாக்ஸி., ஆட்டோதான்..

லாட்ஜ் ரூமிலேயே தங்கி சிகரெட்டும் தண்ணியும் ., பிரியாணியும் புரோட்டாவும் சாப்பிட்டு சினிமா பார்க்கலாம்..

இதோ இதோ ஸ்டாப் வரப் போகிறது,,

அவள் 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி சில்லறையை பர்ஸில் போடாமல் கையில் செல்ஃபோனோடு இறுக்கமாகப் பிடித்திருந்தாள். கையில் கூடை . அதனுள்ளே பர்ஸ். பர்ஸை திறந்து பணத்தை வைக்க பஸ்ஸின் ஆட்டத்தால் அவளால் முடியவில்லை.. நல்ல சந்தர்ப்பம்...

திடீரென்று அவள் போன் அடித்தது. இன்கமிங் கால். போனை எடுத்து பேசினாள்.. ”தம்பு ஸ்டாப் வரப் போகுது . பைக்கில் பிக்கப் செய்ய வாடா” என்று.

அடடா நல்ல வேளை ஜஸ்ட் மிஸ் செய்யப் பார்த்தோமே.. டக்டென்று யதேச்சையாக மோதுவது போல் மோதி ரன்னிங்கிலேயே இறங்கினான்.. அப்பாடா நல்ல வேளை.. யாரும் பார்க்கலை.

அவள் ,”ஹலோ மிஸ்டர் கண் தெரியலையா.. இவ்வளவு இடம் இருக்கு.. தள்ளிப் போக வேண்டியதுதானே .. என திட்டிக் கொண்டிருந்தாள்..

அப்பாடா ..கையில் கனமான பர்ஸ்.. அடிச்சாச்சு.. ஒரு வாரமோ ..ஒரு மாசமோ.. ஜாலிதான்..

இருளத் துவங்கியதால் மாநகரத்தின் தெருவிளக்குகள் பளிச்சிட ஆரம்பித்தன.

ஒரு பார்க் வந்தது. சௌகர்யமாக உக்கார்ந்து எண்ணலாம் . பர்ஸைப் பிரித்தால்.. கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சில்லறைக் காசுகள்.. மத்ததெல்லாம் 30 விசிட்டிங் கார்டுகள் ., பான்கார்டு., ., ட்ரைவிங் லைசன்ஸ்., காஸ் பில்., சாமான்கள்., துணிமணிகள் வாங்கிய பில்கள்., தட்காலில் ட்ரெயின் டிக்கட் எடுத்த சில ஜெராக்ஸ் பேப்பர்கள்., விபூதி குங்குமம் பாக்கெட்டுகள்., சாமி படங்கள்.. அடிப்பாவி .. ஏமாத்திட்டாளே என கோபமாக வந்தது..

பார்க்கை கடந்து சென்ற பைக் ஒன்றிலிருந்து யாரோ இருவர் இறங்கி வறுகடலை வாங்கினார்கள்..

”அம்மா உங்க பர்ஸிலிருந்து சில்லறை கொடுங்க” என்று ஒரு பையனின் குரல் கேட்டது.

”ஐயையோ காணோம்டா.. கூடையில்தான் வைச்சிருந்தேன் பர்ஸை.. ஒரு ஆள் பஸ்ஸிலிருந்து இறங்கினான்.. இடிச்சுகிட்டு போனான்னு திட்டினேன் .. பர்ஸை அடிச்சிட்டான் போலேருக்கே.. 3000 ரூபாய் இருந்துச்சுடா அதுல.. எல்லா கார்டும் இருந்துச்சுடா.. பான் கார்டு.. ட்ரைவிங் லைசென்ஸ் எல்லாம். அப்பா கோச்சுக்குவரேடா என்ன பண்ண..” என்றாள்..

”நல்ல வேளைம்மா இன்னிக்குத்தான் உங்க பர்சிலிருந்து 3000 ரூபாய் எடுத்து எலக்ட்ரிக் பில்லும்., ஏர்டெல் பில்லும் பே பண்ணேன். அப்புறம் எல்லாம் ஜெராக்ஸ் காப்பிதான் மா விடுங்க .. ”என்று சொன்ன இளைஞன் குரல் கேட்டது..

”சில்லறைக்குத்தான் தட்டுப்பாடு.. பாங்க்லேருந்து 100 ரூபாய்க்கு ஒன் ருபி காயின் வாங்கி உங்க பர்சில போட்டு வைச்சிருந்தேன்மா.. சரி விடுங்க கடலைகாரரே 100 ரூபாக்கு சேன்ச் இருந்தா மட்டும் கடலை கொடுங்க ” என்றான் அந்த இளைஞன்.

சே ஏமாந்துட்டமே என்று கோபமாய் வந்தது இவனுக்கு ..சில்லறையை எடுத்து பாண்ட் பையில் போட்டுக்கொண்டு பார்க்கின் பெஞ்சுக்கடியில் பர்சை வீசி விட்டு நடக்க ஆரம்பித்தான்

டிஸ்கி:- இந்தச் சிறுகதை ஞாயிறு. ஏப்ரல். 11, 2011 திண்ணையில் வெளிவந்தது.

ஞாயிறு, 11 மார்ச், 2012

ஞாபகம் வருதே.. எனது பார்வையில்

ஞாபகம் வருதே -- ஒரு பார்வை.

என்னுடைய காசு என்று ஒற்றைப் பைசா சம்பாதிக்காத போதிலும்.,
பர்ஸிலிருந்து அலட்சியமாக எடுத்து செலவு செய்து இருக்கிறேன்..
தானம் செய்திருக்கிறேன்..எனக்கென்று ஒரு முகம் இல்லையே
இந்த வீட்டில் என்று முணங்கிக் கொண்டே.. இன்னொரு
தன்னம்பிக்கையாளரைப் பார்க்கும் வரை..

அவர் ஞாபகம் வருதே (காயத்ரி பதிப்பகம் வெளியீடு..விலை
ரூபாய் - 45 ) புத்தகம் எழுதிய திருமதி கிரிஜா ராகவன்..பேர்
கேள்விப்பட்டது போல் இருக்கிறதா. பத்ரிக்கை படிக்கும் பழக்கம்
உள்ள எவரும் இந்தப் பேரை அறியாமல் இருக்க முடியாது..

லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையின் ஆசிரியரான இவர் தன்
வாழ்வின் ஞாபக அடுக்குகளில் படிந்துள்ளவற்றை பெண்களுக்குத்
தன்னம்பிக்கையூட்டும் விதமாக அளித்திருப்பது அருமை..

தந்தை வழித் தாத்தா பாட்டிக்கு இந்நூலை அர்ப்பணித்திருக்கிறார்
அது மட்டுமல்ல இதற்கு முன்னுரை இவரது அம்மாவே அளித்திருக்கிறார்

சிறுவயதில் கூட்டுக் குடும்பத்தில் அனைவரின் அன்பிலும் வளரும்
குழந்தை வேலைச்சுமையுடன் இருக்கும் தாயன்பைப் புரிந்து
கொள்வதில்லை..அந்த ஏக்கத்திலி்ருந்தே தொடங்குகிறது..எல்லா
ஆசைகளும்..தாய்ப் பாசத்துக்கு ஏங்கும் குழந்தையாக..தந்தையும்
பாசத்தை வெளிக்காட்டாததால் ரிங் மாஸ்டராக நினைத்து..வருந்தி
கூட்டுக் குடும்பத்தின் நல்லது கெட்டது எல்லாம் அறிந்து பக்குவப்பட்டு
வளரும் குழந்தையாக இருப்பது குறித்த உரத்த சிந்தனை இருக்கிறது
முதல் சில..அத்யாயங்களில்..

இவரின் தாத்தா திரு. கிருத்திவாஸன் இந்தியன் எஸ்பிரஸில்
ஆசிரியராக பணி புரிந்து இருக்கிறார்,, தினமணியின்
திரு ஏ என் எஸ் அவர்கள் குடும்ப நண்பர்..இவர்கள் இருவரும்
இவரின் இன்றைய எழுத்துப் பணிக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்..

நறுவிசாக உடையணிவது என்பது இவருக்குப் பிடித்த ஒன்று..
எப்போதும் பளிச்..அதற்காக உழைக்கவும் சளைத்தவர் .அல்ல..
தாத்தா வீட்டில் நட்ட தென்னைகளைக் கேட்டால் இவர் பெயர்
சொல்லும்.

சொந்த வீடு சம்பந்தமான நினைவுகள்.., திருமண வாழ்க்கை.,
ஆன்மீக ஈடுபாடு.திருமணம். வங்கிப் பணி.,குழந்தை
பிறப்பு., பின் மாரடைப்பால் ஐந்து வருடங்களி்லேயே கணவரை
இழந்தது.. என அதன்பின்னும் திருப்பங்கள் அதிகம் இவர் வாழ்வில்..

மீண்டும் முளைத்தெழும் தாவரம் போல.., ஃபீனிக்ஸ் பறவை போல
உயிர்த்தெழுந்தவர் இவர்.. ஆல் இண்டியா ரேடியோ., டி வி சிரீயல்.,
டாக் ஷோ., விளம்பரப் படங்கள்., ஆடியோ சிடி தயாரிப்பு., OLD AGE
ASSOCIATION க்காக..(G)old Age என்று பெயரிட்டு Grannery of RIch Experience
என்ற வாசகத்தோடு ஆங்கிலம் தமிழ் இரண்டிலும்,பத்ரிக்கை வெளியிட்டு
இருக்கிறார்..அதற்கு ஊக்கமூட்டி பெரிதும் உதவியவர்..திரு எம் ஆர்.
சுப்ரமணியன்..

முதலில் விசுவை வைத்து சிறந்தது கூட்டுக் குடும்பமா.. தனிக்
குடித்தனமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஏ ற்பாடு செய்தது என
நினைவுப் பகிர்வுகள் ஏராளம்..

தன்னுடைய ரோல் மாடலாய் விளங்கிய தோழி ரேணு., பேபி சித்தி
இன்னொரு சித்தி சியாமளா., வங்கித்தோழி மோகனா என இவர்களிடம்
இருந்து எடுத்துக் கொண்ட நல்லனவற்றைப் பகிர்வது அருமை..

மூத்தோர் சொல் மதித்தல்., கூடி வாழ்வதின் நன்மை..நல்ல
ஆசிரியர்கள் கி்டைத்தது....என பகிர்வுகள் ஏராளம் கற்றுக் கொள்ள..

தளராத தன்னம்பிக்கையோடு மீண்டும் மீ்ண்டும் புதுப்புது முயற்சிகள்
செய்யும் இவர் மீதும் சேறு வீசியது சமூகம்..”இப்படி ஒரு வேலை
தேவையா.. ராத்திரி ஒரு மணிக்கு வந்து இறங்குகிறாளே..எங்கே
போனாளோ“ என்று.. கேட்கவே நடுக்கமாய் இருக்கிறது அல்லவா..?
அனைத்தையும் பிடி சாம்பலாக்கி தூரப் போட்டு விட்டு
“புறப்படு பெண்ணே புவியசைக்க ” என்ற தாரக மந்திரத்தோடு
லேடீஸ் ஸ்பெஷல் என்ற பெண்கள் மாத இதழ் நடத்தி வருகிறார்..

கணவர் சிறிதாகக் கோபித்துக் கொண்டாலே குமுறும் பெண்கள்
மத்தியில் சவாலான வாழ்க்கையில் தனித்து இருந்து மகனை
வளர்த்ததை..”என் பிள்ளை என்னும் லட்சியத்தைப் புருவ மத்தியில்
வைத்தேன்,,அதுவே வாழ்க்கை ஆனது “ என்கிறார்..

இது அனைத்துப் பெண்களுக்கும் ஒருவாழ்க்கைப் பாடம் மட்டுமல்ல
தன்னம்பிக்கைப் பாடமும் கூட ..

டிஸ்கி:- ஜூலை 8 2011 வெள்ளிக்கிழமை பூவரசியில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது.

சனி, 10 மார்ச், 2012

தானே துயர் துடைக்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள்..

லலித் கலா அகாடமியில் விகடன் குழுமம் வழங்கிய ஓவியக் கண்காட்சி. பிரபல ஓவியர்களின் ஓவியங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்து அந்த தொகையை தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி அது. முக நூலில் விகடன் ஆசிரியர் கண்ணன் அழைத்திருந்தார் அனைவரையும்.

நம்ம யாருமே மறக்க முடியாத முதல் பத்ரிக்கை ஹீரோ.. அன்னைக்கும் இன்னிக்கும் என்னிக்கும் இந்த விகடன் தாத்தா அப்படியே இருக்கார்.. பருவ மாற்றம் , உருவ மாற்றம் எல்லாம் நமக்குத்தான். இன்னும் பல நூற்றாண்டுகள் இவர் நம்ம தலைமுறைகளுக்கும் சேவை செய்யணும்.

வீர சந்தானம் சாரை முதல்ல அங்கே பார்த்தேன். இந்த விநாயகர் ஓவியம் அவரோடது.

பத்ரிக்கை மூலமா அறிமுகமான ஓவியர்களை நாம மறக்கவே முடியாது. எனக்கு கோபுலு, மாருதி, ஜெயராஜ், ம. செ, வர்ணம், ராமு, ட்ராட்ஸ்கி மருது, ஆதிமூலம் எல்லாம் நம்ம தமிழ் கூறும் நல்லுலகின் வெகுஜனப் பத்ரிக்கையின் மூலம் அறிமுகமானவங்க. அவங்க வித்யாசமான ஸ்டைலை வைச்சே கண்டுபிடிக்கலாம். அது போல மதனுடைய கேரிகேச்சர் , சிம்புதேவன், எல்லாம்
நம்மை சிரிக்க வைத்தவை.

இந்தப் புகைப்படத்தில் கோபுலு சார் வரைந்த விகடன் ஓவியங்கள் ப்ரேமிடப்பட்டு பின்னால் இருக்கின்றன. மணியம் செல்வன் சாருடன் விகடனின் தூண்கள். மிக முக்கியமாக நம்ம கவிதையை எல்லாம் லே அவுட்டால ஜொலிக்க செய்கிற பாண்டியன் சாரைப் பார்த்தேன். ஆனால் அங்கே அடையாளம் காண முடியவில்லை. இப்போ வீட்டுக்கு வந்து ஃபோட்டோஸ் அப்லோட் செய்யும்போதுதான் விகடன் ஆசிரியர் கண்ணன் அவர பத்தி தன்னோட முகநூல் பக்கம் குறிப்பிட்டிருந்தது ஞாபகம் வந்தது. மிக்க நன்றி பாண்டியன் சார்.

அங்கே விகடன் ஆசிரியர் கண்ணன், கவின்மலர், சந்திரா தங்கராஜ் ஆகியோரைப் பார்த்தேன். விகடன் ஃபோட்டோகிராஃபர் ராஜசேகரனும் இருந்தார். இன்னும் நிறையபேர் தெரிந்த முகமாய்த் தெரிந்தது. ஒவ்வொருவராக சென்று விசாரிக்க யோசனை. அடுத்த முறை இந்த மாதிரி பொது நலத்தொண்டில் விகடன் ஈடுபடும்போது ஒரு நேம் பேட்ஜ் ஒவ்வொரு ஊழியருக்கும் கொடுத்தால் நலம். ஏன்னா நாம் அவங்க கிட்டயே போய் நீங்க இன்னாரான்னு விசாரிக்க தயக்கமா இருக்கு. !

இது நண்பர் ஜீவாவோடது. நான் பார்த்து அதிகமா அவரோடதுல ஒரு நீலம் வரும். BE COOL நு சொல்லாம சொல்றமாதிரி. ஜீவாவோட் ஓவியங்கள்ல கண்கள் ஒரு ஸ்பெஷாலிட்டி. இது பறவையும் அவளுமான ஒரு மனநிலை. எது யார்னு பிரிக்க முடியாம ரொம்ப அழகா இருக்கு இல்ல. தூது என்றும் கொள்ளலாம்.

ஹுசைனியின் ஸ்ட்ரோக்ஸ் கொஞ்சம் வித்யாசமானவை. பளிச் பளிச்தான்.

இது என் தோழி மீனாக்ஷி மதனோடது. இது போல மரம், பூக்கள் அவர் ஸ்பெஷாலிட்டி. இயற்கை விரும்பி.

இது அனுராதா நிகேதோடதும் மீனாக்ஷியோடதும் . அனு அங்கே உங்களுக்கு ஒரு ரசிகையும் இருந்தா. அவ பேரு வைஷ்ணவி. விஸ்காம் ஸ்டூடண்ட். உங்க அப்ஸ்ராக்ட் வகை ஓவியங்களைப் பார்த்து AWESOME நு சொல்லிகிட்டு இருந்தா. என் தோழிதான்னு சொன்னவுடனே அவங்க கிட்ட என்னோட வாழ்த்தை சொல்லுங்க.. REALLY SUPERB நு சொன்னா.

இது என் நண்பர் பி ஆர் ராஜனோடது. அவரோட கலர் காம்பினேஷனை வைச்சே கண்டு பிடிச்சுடலாம். ஃபேஸ் புக்கில் இவங்க எல்லாரோட ஓவியங்களையும் பார்த்து பரிச்சயமாக இருந்துச்சு. இவங்க ஸ்டைலும் கூட.

இது பத்மவாசனோடது. ஓவியங்களே புகைப்படம் மாதிரி இருந்த எப்பிடி இருக்கும். அதுதான் பத்மவாசனோட ஸ்பெஷாலிட்டி. அதுவும் கோயில் கோபுரங்கள், சிற்பங்கள் எல்லாம் நுணுக்கமா வரைவார். இதை ரெண்டு பேர் உக்கார்ந்து அணு அணுவா ஆராஞ்சுகிட்டு இருந்தாங்க.

இது பாரதி ராஜாவோடது. இந்த சேவலையும் இந்த ஸ்ட்ரோக்ஸையும் பார்த்தவுடன் தெரிஞ்சு போச்சு இது அவரோடதுதான்னு.

இது இளையராஜாவோடது. இன்னொரு இளையராஜாவும் இருக்கார். அவரோடது க்ரேயான்ஸ்ல இருந்துச்சு. விகடனில் வெளியான என்னோட 5 கவிதைகளில் 3 கவிதைக்கு படம் போட்டவர் அவர்.

இது ஆகத்திலேலே காஸ்ட்லி ஓவியம்.. விலை ஒண்ணும் அதிகமில்லை ஜெண்டில் மேன் சும்மா 4 லெட்சம்தான். என்ன ஸ்பெஷாலிட்டின்னா தங்க ஓவியம்...:)

இன்னும் மதன், ஆதிமூலம் சார், தோட்ட தரணி எல்லா ஓவியங்களும் எடுத்தேன். நிறைய இருக்கு கலெக்‌ஷனா. படம் எடுத்த நமக்கே இவ்வளவு பெருமைன்னா வரைஞ்சு அதை விற்ற பணத்தையும் தானே புயல் நிவாரணத்துக்காக வழங்கி இருக்கும் ஓவியர்களையும் , அதற்கு வழிவகை செய்து இப்படி பிரமாண்டமான ஓவியக் கண்காட்சி நடத்தி இருக்கும் விகடனையும் என்ன சொல்லி பாராட்டுறது.

என்னவென்று சொல்வதம்மா.. இரண்டு தளங்கள் முழுமையா ஓவியங்கள். இன்றே கடைசி. காணக் கண் கோடி வேண்டும். சென்னை மக்காஸ் . தவற விட்ராதீங்க. ஓவியங்கள் எல்லாம் 5, 000 லிருந்து 4 லட்சம் வரை இருக்கு. முடிஞ்சா வாங்குங்க, இல்லாட்டி போய் பார்த்து ரசிச்சிட்டாவது வாங்க. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா.. அப்பிடின்னு சொல்வீங்க.

இந்த அரிய தொண்டில் ஈடுபட்டிருக்கும் ( இன்னும் அரிய பல தொண்டுகள் செய்திருக்கும் ) எங்கள் விகடனுக்கும், ஓவியப் பெருந்தகைகளுக்கும் வலைப்பதிவர் சார்பாக நன்றிகளும் , வாழ்த்துக்களும் . பெருகட்டும் மனித நேயம். !


வெள்ளி, 9 மார்ச், 2012

என்னைச் சுற்றிப் பெண்கள்.. எனது பார்வையில்.

ஆண்கள் சார்ந்த உலகில் ஒரு பெண் பிரதமரும்., முதல்வரும் எவ்வளவு பிரச்சனைகளை., எள்ளல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு சம உரிமை என்று பேசினாலும் கூட நம் இந்தியக் குடும்ப உறவு முறைகளில் வெளிப்படாத சிக்கல்கள் ஏராளம்.

தன் வாழ்வில் எதிர்நீச்சல்கள் போட்டு ஜெயித்த ஒருவர் மற்ற பெண்களுக்கு ஆலோசனை சொல்லி உயர்த்த எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. கங்கை புத்தக வெளியீடு. விலை ரூ. 60. ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன். துணிந்துரையாக அணிந்துரை வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்.பாச்த்திருவுருவான தன் தாத்தா பாட்டிக்கு இதை அர்ப்பணித்திருக்கிறார் இதன் ஆசிரியை.

பெண்ணை அடித்தல் மட்டுமல்ல. ஒரு செயலை நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யத் தடுப்பதும் கூட வன்முறைதான்., வேறு வடிவில் அவ்வளவே.

பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரின் பங்களிப்பைப் பார்த்த பெண்கள் இவரை மகளாய்., சகோதரியாய்., தாயாய் உணர்ந்து நெகிழ அவர்கள் பகிர்ந்த்ததே இந்தக் கட்டுரைத் தொகுப்பாய் வந்திருக்கிறது.

டிப்ரஷனை சரியான நேரத்தில் சரியாகக் கையாண்ட மதுமிதா., தைரியத்தோடு எதிர்த்து நிற்கும் சுநீதா., ஊதாரிக் கணவனைத் திருத்திய அகல்யா., கணவனின் அன்பை ஜெயித்த நிம்மி., வேலை செய்த இடத்திலேயே தாய் தந்தை அறியாமல் திருமணம் செய்து தவிக்கவிட்ட தான்யா., பிள்ளைகளுக்குத்தானே எல்லாம் என்று பாசத்தால் வாரி வழங்கிவிட்டுத் தவித்த சுசீலா., உறவினர்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் தாம்பத்திய இச்சையில் பிரச்சனை பண்ணும் கணவன் குமாரை சமாளிக்கும் விஜயஸ்ரீ., தாய் ஜெயந்தியின் பேச்சுக் கேட்டு மாமியார் வடிவுக்கரசியை மகனுடன் அண்டவிடாமல் செய்த மருமகள் ஈஸ்வரி., தன் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை இல்லை என அடுத்தடுத்து வேலை மாறும் கோபி., அவரைத் திருத்திய மனைவி குமுதா., வாழ்க்கையில் எதற்கு எதை விட்டுத்தரவேண்டுமென்ற தெளிவோடு இருக்கும் சத்யா., ஒரு ஃப்ரொஃபசராயிருப்பதாலேயே செல்லத்துரை., தன் மனைவியாகிவிட்ட காரணத்தால் மீனாட்சியை எப்போதுமே மட்டம் தட்டிக் கொண்டேயிருத்தல்., காதல் திருமணமான பின்பு ஏற்பட்ட எதிர்பார்ப்புகளால் பிரியும் அனிஷா., லோகு., அழகான மனைவி கௌரியை வீட்டுக்குள்ளேயே அடக்கி உலகம் தெரியவிடாமல் செய்து தன்னுடன் பணிபுரியும் பெண்ணுடன் இருக்கும் செந்தில் ., தன் இயல்பைத்தொலைக்க வைத்தவர்கள் மேல் தீராக் கோபத்திலிருக்கும் சீதா., சாஃப்ட்வேர் வேலையில் டெட்லைனை முடிக்க வேண்டிய இக்கட்டில் தற்கொலைக்கு முயன்ற வஞ்சுளா., கணவனின் சந்தேகத்தால் நிம்மதி இழந்த ஸாகரா., வக்கிரம் பிடித்த கணவனுடன் வாழ விரும்பாத ஷைலஜா., பிரச்சனை ஏதும் இல்லாததாலேயே தன்னை யாரும் கவனிக்கவில்லை என வருந்தும் மாமி., திருமணம் செய்த பிறகும் பிள்ளையின் வாழ்க்கையில் இடையூறு செய்யும் பூரணி., அப்பப்பா..என அசரும் அளவுக்கும் மனிதர்களிடம் எத்தனை பிரச்சனை..??

அது வரையும் சித்திரங்கள் எத்தனை. சில அழகாய் சில அலங்கோலமாய்.. எல்லாவற்றிற்கும் ஒரு ஆலோசனை ., ஒரு முடிவு., வழிகாட்டல் என கிரிஜா ராகவன் கொடுத்திருக்கும் விதம் அற்புதம்.

வாழ்க்கையைப் போராடி ஜெயிக்க வேண்டும். சவால்களைச் சந்தித்து சிந்தித்து ., சாதித்து வாழப் பழக வேண்டும். மன மாற்றங்கள் அவசியம். காலம் சிறந்த ஆசான். கற்றுக் கொடுப்பதில். கண்மூடித்தனமான அன்பு மட்டுமல்ல., தேவையான சமயத்தில் ஆலோசனையும் சொல்ல வேண்டும். தன்மானம்., விட்டுக் கொடுக்காத சுயகௌரவம்., குற்றங்களை மன்னித்தல்., உலக அறிவு., விழிப்புணர்வு., தன்னம்பிக்கை., மனிதாபிமானம்., என கிரிஜா ராகவன் எல்லா வகையிலும் உளவியல் வல்லுனராக சொல்லும் கருத்துக்கள் ரசிக்கத்தக்கன. வாசித்துப் பாருங்கள்.

டிஸ்கி .1. :- ஜூலை 10, 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.

டிஸ்கி 2. :- ஜூலை 8, 2011 பூவரசியிலும் வெளிவந்துள்ளது.

வியாழன், 8 மார்ச், 2012

யசோதரா..


வசீகரா என்றிருக்க
நிராதரவாய் நீ விட்டுச்சென்ற
யசோதரா நான் ..
நிழலாய், நிலையாமையுடன்.

அமிர்தம் அள்ளிஉண்டு
சலித்ததுனக்கு.
நீ சிதறிச் சென்ற
துளிகளின் மிச்சமெனக்கு

ஞானம் முகிழ்க்க
எனக்கும் உண்டு போதிமரம்.
உடமைகளையும்
உருவுக்குள் உருவான
உயிர்களையும் விட்டோட.

நட்டநடு இரவில்
இற்றது அறுத்து
இந்தரப் பிரஸ்தம் நீங்கி
நீ வானப் பிரஸ்தம் ஏக..

விடிந்தது என் இரவு
விடியாமலேயே,
விழிப்பில்லா நிலையில்
என்னை ஆழ்த்தி
விழிப்புற்று நீ..

கடமையாற்றில்
கையறு நிலையிலிட்ட
உன் மேலான
ஆசையும் பற்றும்
அறுத்துத்தான் என் வாழ்வும்.

அமிர்தகலசம்
கலசம் உடைந்து சிதறுகிறது..
ஆற்றலை எனக்குணர்த்தி..
ஆன்மவிழிப்பு நோக்கி
என் கடமை முடித்த களிப்பில் நானும்..


டிஸ்கி:- மகளிர் தின வாழ்த்துக்கள்..!!!.. இது எதிலும் வெளிவரவில்லை.. என் வலைப்பதிவ வாசகர்களுக்காய் ஸ்பெஷலாக..!


புதன், 7 மார்ச், 2012

கோடிப் பேரில்...

கோடிப்பேர் இருப்போம்..
வால்வீசி முட்டினோம்
ஒற்றைக் கதவின் முன்..

என் வாலை வெட்டி
உள்ளிழுத்துக் கொண்டது
திறப்பற்ற கதவு..

ஒற்றைச் சில்லான நான்
பத்துவிதமாகப்
பெருகத் துவங்கினேன்..

நல்லவற்றைப் பார்க்கக்
கண்கள் கிடைத்தது..

அடுத்தவர்க்கு உருக., உதவ
இதயம் பிறந்தது.

சிறகுகள் போல கைகளும்.,
உந்திப் பறக்கக் கால்களும்
முளைத்தன..

என்னை., தானாய்
வளர்த்தது தொப்புள் கொடி....

என்னோடு வளர்ந்த நஞ்சையும்
இழுத்துக் கொண்டு
வெளிவந்தேன்..
சுமந்தவளின் சுமை கழிய..

மூளை சொன்னது
உன்னோடு ஆதிநாளில்
முட்டியவர்களைக்
காணோமே என்று..

என்னை வாழவைத்து
வழியற்றுச் சென்ற அவர்களை
ஆக்ஸிஜனாய் நினைத்து
உள்ளிழுத்து ,”ங்கா., ங்கா..” என
அழத்துவங்கினேன்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஏப்ரல் மூன்றாம் வார இதழ் உயிரோசையில் வெளிவந்தது.


செவ்வாய், 6 மார்ச், 2012

குளிர்விக்கும் கோல்..

குளிர்விக்கும் கோலோடு
சில மந்திரவாதிகள்..
சும்மா இருக்கும்
தொப்பிக்கு்ள்ளிருந்து
கைக்குட்டை.,முயல்குட்டி.,
பூச்செண்டு ., புறா என
வண்ணமயமாய் வெளியெடுத்து..

பெட்டிக்குள்ளிருக்கும் போது
ஒன்றுமற்ற தொப்பியாய் இருப்பது
மந்திரவாதி கைபட்டு
புதையல் பெட்டகமாய்..

மைதாமாவு அடைத்த கண்களோடு
சிலேட்டில் எழுதப் பெறும்
எண்களைச் சொல்வது
அச்சமூட்டுவதாய் இருக்கிறது.

ஒற்றை ஆளை
விமர்சனக் கத்தியால்
வெட்டிப் பிரித்து
ஒட்டிக் காட்டும் திறமை
மந்திரவாதிகளுக்கே உரியது.

ஆப்ரா கா டாப்ரா என
எத்தனை முறை சொல்லி
நாம் கைவிட்டாலும்
காலியாகவே கிடக்கிறது
சூதேதும் அறியாத தொப்பி..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஏப்ரல் இரண்டாம் வாரம் உயிரோசையில் வெளிவந்துள்ளது.


ஞாயிறு, 4 மார்ச், 2012

மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்.. கைபிடித்து அல்ல..

இந்தக் கதை ஒரு பையனின் பார்வையிலிருந்து..

நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன்.

” அப்பா .. சைக்கிள்..” . ஒன்று வாங்கிக் கொடுத்தார்.

“ஏறி ஓட்டுடா..” ..

” தெரியாதுப்பா ..”.

“முடிஞ்சா ஓட்டு.. இல்லாட்டி விட்டுரு”..

என் தம்பி பின்னாடியே ஓடி வந்து.. “ ஓட்டுடா முடியும்டா..”

இன்றுவரை என் பின்னால் இருக்கும் உந்துசக்தி அவன்தான்.


************************************************************

பத்தாவது படிக்கும்போது கைனடிக் ஹோண்டாவில் ( இன்றுவரை சத்தியமாக என்ன நடந்தது என்று தெரியாது) மூஞ்சி மொகரை எல்லாம் பெயர வேண்டியது, ஆண்டவன் அருளால் புருவத்திற்கு அருகில் மட்டும் காயம்...

ஆனால் பெரிய ஆக்ஸிடெண்ட் ( உள்காயம்).. அம்மாவின் “ ஐயோ, தம்பி.. என் கண்ணுக் குட்டி” அழுகுரல் மட்டும் கேட்கிறது.

நான்கு நாட்கள் கழித்து.. என் அப்பா..” புது டி வி எஸ் எக்ஸெல் வாங்கி இருக்கேண்டா.. ஓட்டு..”., நான்..” வேண்டாம்பா.. பயமாயிருக்கு..”
“ ஓண்ணுமாகாது .. ஓட்டுடா.. , நான் இருக்கேன்ல..”இதுதான் அப்பா..

காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்.. அப்பா..” பஜாஜ் டிஸ்கவர் பைக் வாங்கி இருக்கேன். .. “ உள்ளுக்குள் உதறல் எடுத்தது.. ஓட்டச் சொல்லி விடுவாரோவென்று...

ஒரு மாதம் கழித்து விடுமுறையில் ஊருக்கு வந்த போது ,” டேய் .. நாளைக்கு க்ரவுண்டுக்கு போகலாம்.. நீ வண்டியை ஓட்டுறே..” வியர்த்துக் கொட்டியது.

அடுத்த நாள்.. செகண்ட் கியர் போடத்தெரியாமல் கமுத்தி அடித்து விழுந்தேன். என் அப்பா..” ஒண்ணுமில்ல.. கத்துக்கலாம்..”

இரண்டே நாளில் கற்றுக் கொண்டேன். அடுத்த நாளே என் அப்பா சொன்ன வார்த்தை.. “ ஆஃபீசிலே கொண்டே விடுடா..” இதுதான் அவர் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.

எனக்கு எப்போதுமே தெரியும். என் தம்பியிடம் இது பண்ணனும் , இப்படி பண்ணனும் என பயப்படுவார்கள். ஆனால் என்னை என் போக்கிலேயே விடுவார்கள். ஒரு வளரும் பையனை குழந்தையாய் நடத்தாமல், கண்ட்ரோல் செய்யாமல் இருந்தாலே அவன் வளர்ந்தவனாகிறான்.

மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது நியாயம்தான். ஆனால் கூடவே நின்று இப்படிப் பிடி அப்படிப் பிடி என அவன் கையைப் பிடித்துக் கொண்டே இருப்பது அநியாயம்.

இன்றைய இளைஞர்கள் முறுக்கேறிய ரப்பர் பாண்டுகள் போல.. இழுத்துப் பிடிக்க பிடிக்க அடி பலமாக இருக்கும். விட்டுப் பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

-------- இப்படிக்கு தேனுவின் மகன் வெங்கட்.


சனி, 3 மார்ச், 2012

ஹெல்த்தியான குங்குமம் தோழிக்கு ஒரு அழகுப்பூங்கொத்து...


குங்குமம் குழுமத்திலிருந்து இந்த மாதம் புதிதாய் வந்திருப்பவள் குங்குமம் தோழி. இன்னும் சில தோழிகள் இருக்கிறார்கள். ஆனால் புதிதாய் வந்த இந்தத் தோழி இன்னும் ஹெல்த்தியாய் . இன்னும் அழகாய் கண்ணைக் கவரும் வண்ணத்தோடு.

அங்காடி தெரு அஞ்சலி அழகிய சிறந்த நடிகை அவரின் அட்டைப் படத்தோடு அவர் போன்றே அட்டகாசமான அழகோடு வந்திருக்கிறாள் குங்குமம் தோழி. அஞ்சலிக்குப் பிடித்த டாப் 5 பெண்களில் அவரின் அம்மாவும் வந்திருப்பது அழகு.. வாஞ்சை.

என் மனைவி என நடிகர் விஜய் மனைவி சங்கீதா பற்றி உருகுவதும், கவிஞர் வெண்ணிலாவின் என் ஜன்னல் என்ற 'சினிமா, இணையம் , புத்தகம், இடம்' பற்றிய ரசனைகளும். வி ஐ பிக்களின் கிச்சன் பக்கத்தில் செஸ் விஸ்வநாதன் ஆனந்தின் மனைவி அருணாவின் கைப்பக்குவமும், நமக்கெல்லாம் மிகப் பிடித்த எழுத்தாளர் ரமணி சந்திரன் பற்றியும், ரேவதி சங்கரனின் 24 மணி நேரமும் அருமை.

என்ன எடை அழகே, சித்த மருத்துவ உணவுகளும், 30 ஆரோக்கிய சமையல் குறிப்புகள் கொண்ட சின்ன புத்தகமும், அழகு, மேக்கப் பற்றிய பக்கங்களும், லேட்டஸ்ட் நகைகளும், செக் பண்ணுங்க ஹெல்த்தியா இருங்க., ஆர்த்தோ தெரஃபியும் மிகவும் பயனுள்ளவை.

இந்த மாதம் இனிய மாதம் என நோன்பு, விரதம், முக்கிய நாட்கள் , ராசி பலன்கள் வழக்கத்தை விட வித்யாசம்.

வித்யாசமாக கயிற்றில் ஊஞ்சலாடும் சர்க்கஸ் பெண்கள் பற்றியும், கப்பலில் பணியாற்றும் பெண் பற்றியும், தமிழகத்தின் முதல் பைக் பெண் பற்றியும், வில்லேஜ் விஞ்ஞானி பெண் பற்றியும், விடிலிகோவால் பாதிக்கப்பட்டும் தன்னம்பிக்கையுடன் லாப் நடத்தி வரும் சோனியாவும், தன்னம்பிக்கையின் உச்சங்கள்.

பாலீதீன் பை கலெக்ட் செய்து அதற்கு பதிலாய் சணல் பை பேப்பர் பை கொடுக்கும் காமாக்‌ஷி, சணல் பை தயாரிக்க சொல்லிக் கொடுக்கும் உமா ராஜ் ,
பெண் மனம் பற்றிய நிகழ்வும் கேள்வியும், சோம வள்ளியப்பன் அவர்களின் ஆன்லைன் வர்த்தகத்தில் தங்கம் வாங்குவது பற்றிய விளக்கக் கட்டுரையும், சோலார் இன்வர்ட்டர், மற்றும் வழிகாட்டும் ஒளி, ஃபேஸ்புக் பக்கங்கள் அனைத்தும் அருமை.

ஆண் தத்துவ மேதை பற்றித்தானே படித்திருக்கிறோம்.. இதில் வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் தத்துவ மேதை அறிவரசி ஹைபேஷா பற்றி கூறப்பட்டுள்ளது அருமை.

முக்கியமா ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் என் அன்புத்தங்கை வாணி மல்லிகையின் கவிதை ஒன்று இனித்துக் கிடந்தது.

“உன் பார்வையின் ஸ்பரிசத்தில்
தினம் மலர்பவள்
உன் விரல்களின் ஸ்பரிசத்தில்
ஏன் வியர்க்கிறேன்..?”

செம அழகான கவிதை .. பிடியுங்கள் வாணிக்கு ஒரு பூங்கொத்து, குங்குமம் தோழிக்கு ஒரு பூங்கொத்து ..!!!


வெள்ளி, 2 மார்ச், 2012

நன்றி கோமதி அரசு, மை,பாரதிராஜா, வேடியப்பன். (சாதனை அரசிகள் விமர்சனம்.)

கோமதி அரசு.. வலைப்பதிவர். ( வலைச்சரத்தில்)

////’சும்மா’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி .தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் ’போராடி ஜெயித்த கதைகள்’ என்று எழுதி இருக்கிறார்.

அதில் தலைமை ஆசிரியர் திருமதி. லூர்துராணி அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். ஹீமோக்ளோபின் அளவு குறைவுக்காக ஸ்டிராய்டின் தொடர்ந்து சாப்பிட்டதால் அவரிடம் அது ஏற்படுத்திய பக்க விளைவுகள் -அதை போக்கி சாதனைகளச் சாதித்து கொண்டு இருப்பது- பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார்.

//டயாபட்டீஸ்., ரத்த அழுத்தம்., காடராக்ட்., கிட்னியிலும் நெஃப்ரான்கள் வீக், 2000 ஆம் வருடத்தில் கான்சர் வந்து மார்பக நீக்கம்., கீமோதெரஃபி., மற்றும் ரேடியேஷன் 55 நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வாழ்நாள் பூரா இது எல்லாவற்றுக்கும் தனித்தனி மாத்திரை சாப்பிட வேண்டும். இவை எல்லாம் சமாளித்து இவர் பள்ளிக்கு பங்சுவலாக காலை 8 3/4 க்கு வந்தாரென்றால் மாலை 4 மணிக்கு பள்ளி பூட்டியபின்தான் வீடு செல்வார்.இதுவரை ஆஸ்பத்ரியில் படுத்திருந்த நாள் தவிர லீவே எடுத்ததில்லை. பிள்ளைகளுக்கு மெட்ரிக்குலேஷன் கல்விக்கு இணையாக இங்கும் கல்வி அளிக்கப்படுவதாக சொன்னார் //


திருமதி.லூர்துராணி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துவோம்.///


வாழ்வில் எல்லா சுவைகளும் அளவோடு இருந்தால் தான் மகிழ்ச்சி.
******************************************************************

மை. பாரதிராஜா. ( சூரியக் கதிர், இவள் புதியவள் எடிட்டர்.)

தேனம்மை லெட்சுமணனின் எழுத்துக்களில் எப்போதும் வசீகரமும் நகைச்சுவையும் மிளிரும். இந்த சாதனை அரசிகளில் கொஞ்சம் கூடுதலாக உழைப்பும் தன்னம்பிக்கையும் தகதகக்கிறது.

தேனம்மை என்றால் உழைப்பு. இவள் புதியவள் இதழுக்கு ஒரு வி.ஐ.பி. பேட்டி வேண்டும்.. என்று கேட்டால் கொஞ்சமும் பிரமிக்காமல், அதெல்லாம் முடியுமாவென கேட்காமல், கொடுத்த வொர்க்கை டேட் லைன் வரை காத்திருக்காமல், முன்பே முடித்துக்கொடுத்துவிட்டு அடுத்தடுத்த வேலையை கேட்டு வாங்குவார். புதிதாக எழுத்துத் துறைக்கு வருபவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய வித்தைகளில் இதுவும் ஒன்று.

போராடி ஜெயித்த பெண்களை இங்கே சொல்லும், தேனம்மை கூட ஒரு சாதனை அரசிதான்! தேனம்மை தொடர்ந்து நிறைய நூல்கள் கொண்டுவரவேண்டும் என்பதே என் விருப்பம்! வாழ்த்துக்கள்.

அன்புடன்
மை.பாரதிராஜா
இணை -ஆசிரியர்
சூரியகதிர் - இவள் புதியவள்

**************************************************************************


வேடியப்பன். ( டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர்.)
Product Description

வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்… நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது..///

நன்றி கோமதி அரசு .. !

நன்றி மை. பாரதி ராஜா... !!

நன்றி வேடியப்பன்..!!!


வியாழன், 1 மார்ச், 2012

முருதாடி. பூவரசி காலாண்டிதழில்.


முருதாடி..:-
******************

பெல்லாப் பூடம்.,
அடம்., சீண்டரம்.,
லண்டி., சகடை.,
குந்தாணி மட்டை.,
காளி., முருதாடி
இதெல்லாம் அம்மாவின்
வழங்குபெயர்கள் அவளுக்கு.

எப்படிக் கேட்பதென
எதவு தெரியாமல்
எதைப்பற்றியாவது
அசந்தர்ப்பமாய்
எதிர்க்கேள்வி கேட்டால்
எதிர்த்துப் பேசாதே என
முடி பற்றி அடிப்பாள் அம்மா.

வாங்கிய அடிகளை
கொஞ்சம் தலையணைக்கும்.,
ஊஞ்சலாடும்போது
உதைக்கும் உத்தரவளையத்திலும்
கல்லாய் நிற்கும் சுவற்றுக்கும்
கைவலிக்கத் திருப்பிக் கொடுப்பாள்.,
வணங்காமுடியென தன்னை நினைக்கும் முருதாடி.

தூக்கத்தில் தலைவிரித்த காளி
எட்டுக் கையும் கபாலமும்
மிதித்த முயலகனுமாய்
ஒற்றைக் காலுயர்த்தி சிரசில் வைக்க
உளறியடித்தெழும் முருதாடி
மகிழ்வாள் காளி நான்தானம்மா..
குணங்கெட்டவளல்ல... முருதாடி..

குறிப்பு :- முருதாடி-- முரட்டுப்பெண்.