எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 ஜனவரி, 2011

மீண்டும் ஆடிய கால்கள்.. போராடி ஜெயித்த பெண்கள் ( 4 ) ..




பார் மகளே பார்.. திருடாதே பாப்பா திருடாதே.. இந்தப் பாடல்களில் நடித்த குழந்தை நட்சத்திரத்தை ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு.. உங்கள் நினைவுகளை ட்யூன் செய்து பாருங்கள்.. சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை என்பதற்கு எடுத்துக் காட்டு அவர்தான்.. லக்ஷ்மிராவ்..

மைசூர் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் பிறந்த இவரின் தந்தை சங்கீத வித்வான் வி.கே.ராஜேந்திரராவ்.. அம்மா தாராபாய். தன் மகளை பெரிய டான்சராக்க வேண்டுமென்பதே தந்தையின் எண்ணமாய் இருந்தது. ஆனால் மாஸ்டரிடம் கற்றுக் கொள்ளும் அளவு வசதியில்லை. சினிமாவின் பரதநாட்டிய அபிநயங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டது.

பெங்களூருவில் வெள்ளிப் பாத்திரக் கடை., துணிக்கடை., கல்யாண வீடு இதிலெல்லாம் இவர் நடனம்தான்.. சங்கீதம் பாட கேள்வி ஞானம் போதும் என்பது போல் இவர் பார்த்தே அறிந்து பழகிக் கொண்டதுதான் முதலில்.. தாளஞானம் அதிகம்., தந்தையின் முயற்சியும் அதிகம். இந்த மாதிரி நடந்த நிகழ்ச்சியில் பார்த்து அசந்து போன ஒருவர் மிக அருமையாக ஆடும் இந்தக் குழந்தையை பண்டரிபாயிடம் அழைத்துச் செல்லுங்கள் என கடிதம் கொடுத்தாராம்.

இவரை நடனமாடச் சொன்ன பண்டரிபாய் வெளியிடத் தயாராய் இருந்த கன்னப் படத்தில் இவருக்காக பர்த்டே செட் போட்டு டான்ஸ் ஆட சொல்லி இணைத்தார்களாம்.. படத்தின் பெயர் ராயர சொசே.. பெரிய இடத்து மருமகள் என்று அர்த்தம்.

ராஜ்குமாரின் முதல் சமூகப் படம். படம் பெரிய வெற்றி அடைந்ததும்., குழந்தை நட்சத்திரமாக பார் மகளே பாரில் சிவாஜி சௌகாருடனும்., திருடாதேயில் எம்ஜிஆருடனும்., எங்கள் குடும்பம் பெரிசுவில் உதயகுமாருடனும்., அமர்தீப் (ஹிந்தி) தேவ் ஆனந்துடனும்., குழந்தைகள் கண்ட குடியரசுவில் ஜாவர் சீதாராமனுடனும் நடித்திருக்கிறார். நாட்டிய நாடகங்களில் ராமாயணம்.. சின்ன ராமராக.. ஃபோக்கில்., தசாவதாரத்தில் முக்கிய ரோல். பத்மினிக்கு ரெகமண்ட் பண்ணப்பட்டவுடன் இவரின் கிராஃப் அதி வேகமாக உயர்ந்து விட்டது. சில படங்களில் இவரே நடனம் அமைத்து நடனம் ஆடி இருக்கிறார். பத்மினியுடன் டெல்லி சென்று நாட்டிய நிக்ழ்ச்சிகள் செய்யும் சந்தர்ப்பமும் கிடைத்தது. எல்லா இடத்திலும் பேரும் புகழும்தான். சாதனையாளர்கள் எங்கிருந்தாலும் கண்டு பிடிக்கப்படுவார்கள். புகழ் பெறுவார்கள்.

அப்போது இவரின் நடனம் கண்டு வியந்த நேருஜி தூங்கிக் கொண்டுருந்த குழந்தையை ஸ்டேஜுக்கு வரச்செய்து காதுகளைப் பிடித்து முயல் குட்டிகளைப் போல் தூக்கிக் கொஞ்சினாராம்.. அப்போது கொடுக்கப்பட்ட அவார்டு பெஸ்ட் சைல்ட் டான்சர் .

சந்திரபாபு இவரின் டான்ஸைப் பார்த்து காலில் விழுந்து கும்பிட்டு நீ மனுஷியே இல்லைம்மா.. என்று சொல்லி பூசணிக்காய் கொண்டு வரச் சொல்லி உடைத்திருக்கிறார். இவ்வளவு சாதனைக்கும் பின்புலம் இரவு பகல் பாராமல் ரிகர்சல்., ஊர் ஊராய் அலைச்சல்., இத்துடன் படிப்பு., நாட்டியப் பயிற்சி வேறு. மாஸ்டர் கோபால கிருஷ்ணனிடம் பயிற்சி.. இவர் வழுவூராரின் சிஷ்யர்.

சிலசமயம் பத்மினி ஷுட்டிங் காரணமாக பயிற்சிக்கு வர இயலாவிட்டால் இவரை ஆடச் சொல்லி சரிபார்த்துக் கொள்வாராம். பத்மா சுப்ரமணியம் ட்ரூப்., டான்ஸ் மாஸ்டர் கோபிகிருஷ்ணா ( ஜனக் ஜனக் பாயல் பஜே) ., ஆஷா பரேக்., ராஜ சுலோச்சனா., லதா ஆகியோருடன் சிறு வயதிலேயே பணி புரிந்திருக்கிறார்.

ஹீராலால்., சோபன் பாபு., சின்னி சம்பத்., தண்டாயுதபாணி பிள்ளை., சின்ன சத்யம் ( குச்சிப்புடி) ., என பயிற்சியும் தொடர்ந்திருக்கிறது. பரத நாட்டியம்., கதக்., கதக்களி., குச்சிப்புடி., ஃபோல்க்., இண்டியன் க்ளாசிக்கல் எல்லாம் தெரியும்.

பத்மினியுடன் அமெரிக்கா செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு 4 வருடங்கள் வாசம். பல நடன நிகழ்ச்சிகள்., பல்வேறு நாடுகள் என சுற்றி 20 வயதில் இந்தியா திரும்பியபின் ப்ரேம் நசீருடன் கெஸ்ட் ஹவுஸ் ( மலையாளப் படம் )., கிருஷ்ண தேவராயரில் நடன அமைப்பு., பஞ்ச வர்ணக் கிளியில் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் பாடல்., துட்டே துட்டப்பாவில் ., கதக் மாஸ்டர் கிருஷ்ணகுமாருடன் என 60 ., 70 படங்களில் பணி புரிந்திருக்கிறார்.

இதெல்லாம் திருமணம் நடக்கும் வரை. நான்கு மொழிப் படங்களில் நடித்து பெஸ்ட் சைல்ட் ஆர்ட்டிஸ்ட் என்று ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் கையாலும் ., பெஸ்ட் சைல்ட் டான்சர் என்று பிரதமர் நேருவின் கையாலும் அவார்டு வாங்கிய இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதையே விட்டார். தந்தைக்கும் விருப்பமில்லை. இவரின் கணவருக்கும் விருப்பமில்லைல்

கணவர் உடுப்பியைச் சேர்ந்த பி. கே. நாராயணராவ். நியூ உட்லாண்ட்ஸில் மானேஜர். நல்ல பீக்கில் இருந்தபோது கணவர் அன்புக் கட்டளைப்படி சினிமா., மற்றும் நடனம் இரண்டையும் விட்டார். டான்ஸ் ப்ரோக்ராமும் செய்வதில்லை. மனைவி சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்துவதா என்ற ஈகோ. கிட்டத்தட்ட 60 டூரிஸ்ட் கார் வைத்திருந்திருக்கிறார். இரண்டு பெண்குழந்தைகள் இவருக்கு. சுபஸ்ரீ., ஜெயஸ்ரீ.

ஜெயஸ்ரீ மானாட மயிலாட சீரியல் நம்பர் ஒன்னில் முதல் பரிசு பெற்றவர். நினைத்துப் பாருங்கள் ஆடிய கால்களை நிறுத்திக் கொள்வது என்பது எவ்வளவு கடினம். கிட்டத்தட்ட 20 வருடங்கள். நடனம்., சினிமா., பயிற்சி எதுவுமில்லாமல் முடங்குவதென்பது பெரிய விஷயம்தான். குடும்பத்துக்காக விட்டுக் கொடுத்தல்., தன் சுயத்தை ஒடுக்கிக் கொள்ளுதல்., இந்தக் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியுமா..

50 வயது சர்வீசில் நடனப் பின்புலம்., புஷ் அப் இல்லாமல் கற்றது., திருமணத்துக்குப் பின் கணவர்., தந்தை சப்போர்ட் இல்லாமல்., ரெகக்னீஷன் இல்லாமல்., வருத்தமுற்று அமைதியாக இருந்தார். 1996 இல் தான் கணவராகவே இவரிடம் கேட்டாராம். யார் யாரோ ஆடுறாங்க நல்லாவே இல்லை.. நீ ஆடினால் என்ன .. என்று.

ஸ்ரீஸ் நிருத்திய க்ஷேத்திரா என கணவரே பெயர் சூட்டி., இவரை நடனம் கற்றுக் கொடுக்கச் சொல்லி ஊக்குவித்தாராம். 1998 இல் கணவர் இறந்துவிட இரண்டு பெண் குழந்தைகளையும் தனியாக திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இன்று ஆர்மி க்வார்ட்டர்ஸில் பத்து பேட்ச்களுக்காவது பயிற்சி கொடுத்திருப்பாராம்.

சிறு வயதிலேயே பல படங்களில் நடித்து விட்டதால் ஹிந்தி., தமிழ்., தெலுங்கு., கன்னடம்., மலையாளம் தெரியும். பல படங்களில் நடன அமைப்பாளராகவும் பணி புரிந்திருக்கிறார். விஜயலெட்சுமியையும் ஆட்டுவித்திருக்கிறார்.

சிவாஜி அவார்டு., எம்ஜிஆர் அவார்டு., நாட்டிய சூடாமணி., நர்த்தன சிரோன்மணி., இண்டியன் கல்சுரல் அகாடமி வழங்கிய நாட்டிய ரத்னா., தமிழக அரசு ( அமைச்சர் மதியழகன்) கொடுத்த நாட்டிய இளவரசி., பாண்டிச்சேர் கவர்ன்மெண்ட் ( அமைச்சர் குபேரன்) கொடுத்த நாட்டிய மாமணி., கர்நாடக அரசு கொடுத்த நாட்டிய பிருந்தா., என விருதுகளாலும்., பரிசுக்கோப்பைகளாலும்., பாராட்டுப் பத்திரங்களாலும் நிரம்பி வழிகிறது இவரின் வீடு. இத்தனை இருந்தும் விசிட்டிங் கார்டில் மிக எளிமையாக பெயர் மட்டும் போட்டு இருக்கிறார்.

சிலப்பதிகாரம்., கண்ணகி., ராமாயணம்., தசாவதாரம்., மஹிஷாசுரமர்த்தினி., பாரிஜாதம் ஆகிய நாட்டிய நாடகங்கள் நிகழ்த்தியுள்ளார். வெளிநாட்டினர் கூட 2., 3 மாதங்களுக்குள் நாட்டியம் கற்க வருகிறார்கள்.. என குறிப்பிட்ட இவர்., வசதியற்ற திறமையுள்ள பெண்களுக்கும் இலவசமாக சொல்லித் தருவதாகக் கூறினார். வரும் ஜனவரி 5 ஆம் தேதி தக்ஷிணாமூர்த்தி ஹாலில் வள்ளி திருமணம் நாட்டிய நாடகம் நடக்க இருக்கிறது.

நம் திறமைகள் அணையவிடாமல் காத்தால் ஒருநாள் மீண்டும் ஒளிர்வோம் என்பது உண்மைதானே..


16 கருத்துகள்:

  1. நம் திறமைகள் அணையவிடாமல் காத்தால் ஒருநாள் மீண்டும் ஒளிர்வோம் என்பது உண்மைதானே.;.////


    எல்லோருக்குமே பொருந்தக்கூடிய ஒன்று.

    பதிலளிநீக்கு
  2. இந்த தொடரை, விரும்பி வாசிக்கிறேன். Very nice. தொடருங்கள்!!!

    பதிலளிநீக்கு
  3. பிரமிக்க வைக்கும் விவரங்கள்..

    பதிலளிநீக்கு
  4. மிக அருமை அக்கா எப்பவும் போல நல்ல விளக்கங்கள்

    பதிலளிநீக்கு
  5. முற்றிலும் புதிய தகவல்கள்

    சுவாரஸ்யமாய் இருந்தது

    பதிலளிநீக்கு
  6. சுவாரசியமான பதிவு...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அவரின் பொறுமை ஆச்சர்யமூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  8. நன்றி ரமேஷ்., சித்து., தென்றல்., சாரல்., ஸ்ரீராம்., சசி, வேலு., ஆயிஷா., ராஜா., ஹுஸைனம்மா..

    பதிலளிநீக்கு
  9. நன்றி ரமேஷ்., சித்து., தென்றல்., சாரல்., ஸ்ரீராம்., சசி, வேலு., ஆயிஷா., ராஜா., ஹுஸைனம்மா..

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  11. மிக அருமையான பகிர்வு

    கொஞ்சம் நாளா பார்க்கலனா எத்தன பதிவு மிஸ்ஸிங்

    பதிலளிநீக்கு
  12. Great to find series of articles on inspiring success stories of women. It will be nice if you can bring out the series of articles in the form of a book so that many who have missed can read it.

    Great work. Keep it up and continue to write the series in future.

    A.Hari
    http://changeminds.wordpress.com/

    A.Hari

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...