எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 செப்டம்பர், 2009

நட்பு

எல்லா அளவு கோல்களாலும்
அளந்த பின்னும் தொடங்கியது
நமது நட்பு...

தனித்தனியே ஜனித்தாலும்
எண்ணங்களால் இணைந்தோம்
நீண்ட மௌனத்துக்குப்பின்...

பிறகு நாம் நிறுத்தாமல் பேசியதை
இரவு நேரக்கூகையும் அர்த்தசாமச் சேவலும்
விடிகாலைக்காக்கையும் பிறைநிலவும்
பௌர்ணமியும் சொல்லும்...

துன்பங்கள் பகிரப்பட்டதாகவும்
இன்பங்கள் பெருகி விட்டதாகவும்
கூடுவிட்டுக்கூடு பாய்ந்த உயிர்
நாமெனவும் நம்பினோம்...

இன்னும் பகிரப்படாத துன்பங்கள்
ஆழ்மன வடுவாய் ஞாபகங்களில்...

என்னைக்கண்டதும் புன்னகையை
வலிய அணிந்து கொள்கிறாய்..
நேர்த்தியாக உடையணியும் நீ
ஏனோதானோவென்று....

மலுக்கிக் கொள்கிறாயோ என
நான் துயரப்பட நீயோ
மருகிக்கொண்டு இருந்திருக்கிறாய்....

காதலர்களுக்கும் மட்டுமல்ல..
நண்பர்களுக்குள்ளும் பிரிவு
துன்பத்தைத் தருகிறது...

சரியாகப் பேசாமல்
கைகோர்த்து அலையாமல்
உணவு கூட உண்ணப்பிடிக்காமல்...

நதியலையாய் இருந்த நம் வீச்சு
குளம் போலத் தேங்கிவிட்டது...
அலையேதும் இல்லாமல்...

நான் நெருங்க நீ விலக
உன் பிரிவு நெருப்பள்ளிப் போட்டதுபோல்
நெஞ்செல்லாம் வேக்காளம்.....

உன் துக்கம் தெரிந்தாலும்
துடைக்க இயலா நட்பெதற்கு...

ஜென்மஜென்மமாய் நான் உன்னைத்
தொடர்வதும் பின் பிரிந்து அழுவதும் ஏன்.?
நட்பென்றும், உறவென்றும், காதலென்றும்...

ஏமாறாதிருக்க இப்போதே சொல்லிவிடு
அடுத்தும் ஒரு ஜென்மமெடுத்து
நான் உன்னைப்பின் தொடராதிருக்க...

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...