எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 மே, 2018

பூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்

மதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள்.

பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி
பூம் பூம் பூம் மேளம் கொட்டி சேதி சொன்னாண்டி.
அரிசி போட வெளியில் வந்த பெண்ணைப் பார்த்தாண்டி
அடுத்த மாதம் கல்யாணத்துக்கு சேதி சொன்னாண்டி.

இந்தப் பாடலில் வரும் பூம் பூம் மாடு நாங்கள் சின்னப் பிள்ளையில் பார்த்தது.  பூம் பூம் மாடு, சாட்டையடி சோளகா, கம்பி மேல் நடக்கும் நெருப்பு வளையத்துள் பாயும் கழைக்கூத்தாடிகள், பாம்புப் பிடாரன்கள், குரங்காட்டிகள், போன்ற தெருவோர வித்தைக்காரர்களை அக்காலத்தில் பார்க்கலாம்.

இன்றும் கோவைக்குச் சென்றிருந்தபோது பாலிடெக்னிக் அருகே ஒரு பூம் பூம் மாட்டைப் பார்த்தேன். அது மாட்டுக்காரரின் மேள தாளத்துக்கு ஏற்ப பூம் பூம் என்று தலையாட்டியபடி வந்தது. பலவகையான துணிகளையும் அணிமணிகளையும் அணிந்திருந்த அது கண்ணைக் கவர்ந்தது.

ஆனால் அந்த மாட்டுக்காரரின் அன்றாடப்பாடோ வெகு பாடு.
தோளில் மேளத்தை மாட்டிக் கடை கடையாக நின்று காசு கேட்டுக் கொண்டிருந்தார். அவர் சொல்லிய நற்பலனுக்கெல்லாம் ஜீவ சாட்சியாய் ஆமோதித்துத் தலையாட்டிக் கொண்டிருந்தது அந்த மாடு.



வெய்யிலுக்கு இதமாய் ஏதும் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் நிற்கிறது பூம் பூம் மாடு.
அப்போதெல்லாம் பழைய துணிமணி அரிசி, சாப்பாடு , காசு ஏதும் கொடுப்பார்கள் மக்கள். துணி கொடுத்தால் மாட்டின் மேல் போர்த்திக் கொண்டும் தோளில் இருக்கும் தொங்குபையில் அரிசி & காசை வாங்கிக் கொண்டும் செல்வார்கள். சாப்பாடு வாங்குவது அரிதுதான்.

மாட்டின் கொம்புச் சிவப்பை போல மாட்டுக்காரரும் சிவப்புத் தலைப்பாகை, காவி வேட்டி அணிந்து வெற்றிலையை அதக்கிச் சிவந்த வாயால் மாட்டிடம் ஒப்புதல் கேட்பார். குழந்தைகளும் குமரிகளும் சுற்றி வந்து நல்வாக்குக் கேட்டு மகிழ்வார்கள்.

சில சமயம் ஆமாம் என்றும் சில சில சமயம் இல்லை என்றும் அந்த மாடு தலையாட்டுவது அன்றைக்கு அதிசயம். அப்புறம்தான் தெரிந்தது மாட்டுக்காரர் அதன் மூக்கணாங்கயிற்றை அசைப்பதன் மூலம் அது ஆமாம் என்று முன்னும் பின்னுமோ இல்லை என்று வலமிடமாகவோ அசைக்கிறது என்று :)


இதேபோல் குடுகுடுப்பைக்காரர் என்றொருவர் அதிகாலையில் வந்து குடுகுடுப்பையை ட்ரியோ ட்ரியோ என்று ஆட்டிப் பலன் சொல்லுவார்.

நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது என்று.

அதை வீட்டில் இருந்தே காது கொடுத்துக் கேட்பார்கள். பகல் நேரத்தில் வந்தால் துணி கொடுத்தால் ராத்திரியில் மயானத்தில் அர்த்தராத்திரியில் மந்திரித்துவிடுவான் என்று ஒரு சிலர் பயப்பட்டு காசோ அரிசியோ மட்டும் கொடுப்பார்கள். இன்னும் குறி சொல்லும் குறத்தியர் இனப் பெண்கள், அம்மி கொத்துவோர், சாணை பிடிப்போர், சவுரி முடி விற்போர் எனப் பலரையும் பார்க்கலாம்.

இந்த பூம் பூம் மாட்டைக் காட்டிக் குறி சொல்வதைக் குலத்தொழிலாகக் கொண்டு பிழைப்பவர்கள் மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர்களாம்.  சுமார் 150 குடும்பங்கள் உள்ளன என்கிறார்கள்.

சாட்டையடித்துக் கொண்டு ஒரு படத்தில் கவுண்டமணி ஷகிலாவை பயமுறுத்துவார். அவர் அடிக்காதீங்க அடிச்சிக்காதீங்க என்று பதறி அங்குமிங்கும் ஓடுவார்.

இந்த சாட்டையடிக்கும் தொழிலைச் செய்து வித்தை காட்டுவோர் காலில் கட்டாயம் சலங்கை அணிந்திருப்பார்கள். அவர்கள் நடந்து வருவதே கட்டியம் கூறுவதுபோல் இருக்கும். சில சமயம் ரத்தத்தையும் கைகளைக்கீறி வடியவிட்டு பயமுறுத்துவார்கள்.

இவரையும் காரைக்குடியில் ஒருநாள் பார்த்தேன். பல்வேறு நிறமுடைய துணிகள் அணிந்து நெற்றியில் பட்டையிட்டு காலில் சலங்கை மற்றும்  கழுத்தில் பல்வேறு ஆபரணங்களுடனும் தோளில் சாற்றிய சாட்டையுடனும் காட்சி அளித்தார்.

காரைக்குடியில் சேட்டை செய்யும் பிள்ளைகளை அப்பாக்கள், “திருக்கைவாலை எடுக்கவா” என்று மிரட்டுவது உண்டு. திருக்கைவால் என்றால் சவுக்கு.

மலேயாவில் இதற்குப் பெயர் ரோத்தான். ”ரோத்தானை எடுக்கவா” என்று என் உறவினர் ஒருவர் அடம் செய்யும் தன் பிள்ளையிடம் கேட்பாரென்று சொல்வார்கள். :)

பழைய படங்களில் சவுக்கால் அடிக்கும் காட்சிகள் வரும் அதில் ஒன்று பட்டத்து ராணி பார்க்கும் பார்வை என்ற பாடலில் ஜெயலலிதாம்மாவை சிவாஜி சாட்டை கொண்டு அடிக்கும் இடத்தில் ( சிவந்தமண் ) மிரண்டுதான் போயிருக்கிறோம்.வீட்டில்  சகோதரர்களின் பம்பரக் கயிறு லேசாக விளையாட்டாகப் பட்டாலே சுளிரென்குமே.

சொல்லப் போனால் இத்தனை வருடம் கழித்தும் இந்த சாட்டையடி சோளகா மனிதரை சாலையில் பார்த்ததும் கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருந்தது . எப்படித்தான் தன் மேலேயே அடித்துக் கொள்கிறார்களோ. ஹ்ம்ம் வயிற்றுப்பாடு.

இந்த சாட்டையடியையே தொழிலாகக் கொண்டவர்களும் வாழும் இடம் மதுரையில்  உள்ள கருப்பாயூரணி. இங்கே சி கே நகர் என்ற இடத்தில் உள்ள சாட்டையடி காலனியில்தான் வாழ்கிறார்கள். வீடு ரேஷன் கார்டு போன்றவை கிடைத்தாலும் ஜாதிச் சான்றிதழ் இல்லாததால் மேல்படிப்பெல்லாம் படிக்க இயலவில்லை என்பது அவர்கள் ஆதங்கம்.

ஒரு நாள் முழுவதும் வெய்யிலில் அலைந்தும் அந்த பூம் பூம் மாட்டுக்காரரும், இந்த சாட்டையடி சோளகாவும் பெறும் தொகை 50 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை இருக்குமாம். இவர்களுக்காக மாற்றுத் தொழில்களையும் படிப்பு வசதிகளையும் அரசு உண்டாக்கினால் இவர்கள் வாழ்வு வளம் பெறும். 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...