எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஜூன், 2011

குண்டூஸ் ஃபார் எவர்.. இவள் புதியவளில்..




கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா .. இல்ல ஓடிப் போயி கல்யாணந்தான் கட்டிக்கிடலாமான்னு என் கணவர் பாட முடியாது.. காரணம் ஏற்கனவே அவர் என்னை கல்யாணம் கட்டிக்கிட்டதுனால இல்ல.. என்னால ஓடி வர முடியாது .. அதுதான் காரணம்..


பருமனா இருக்குறவங்கள ஓபீஸ்னு சொல்வாங்க ஆங்கிலத்துல.. சோபாவை அடைச்சுகிட்டு உக்கார்ந்து டி வி பார்த்துகிட்டு இருந்தா அவங்க பேரு கவுச் பொட்டாடோ. கவுச்சி இல்லை சோஃபாவுக்கு ஆங்கிலத்துல கவுச்சுன்னு சொல்றங்க..

கல்யாணம் ஆகிறவரைக்கும் நானும் ஊர்வசி., மேனகா ., அருந்ததி ( அட இவங்க எல்லாம் அப்போ நடிச்ச நடிகைங்கப்பா)மாதிரிதான் இருந்தேன்.. புள்ள குட்டின்னு ஆனப்புறம் கூட கொஞ்சம் குண்டாதான் இருந்தேன்.. குண்டானதுக்கு சிசேரியன் ஒரு காரணம்னு சொல்லிக்கிறது.. பழிய தூக்கி எது மேலயாவது போடவேண்டி இருக்கே..

ஒரு காலத்துல யோகா ., எக்சர்ஸைஸ் எல்லாம் செய்து காய்கனியா சாப்பிட்டு பழந்தின்னி வவ்வால் மாதிரி பறக்குற அளவு இல்லாட்டாலும் நல்லா நடக்குற அளவு இருந்தேன்.. எப்ப யோகா செய்யிறத விட்டனோ அப்பவிலேருந்து உடம்பு வந்துருச்சு.. சுமாரா நாம எவ்வளவு செண்டி மீட்டர் உயரம் இருக்கமோ அதில் நூறைக் கழிச்சா எத்தன செண்டி மீட்டர் வருதோ அந்த அளவு வெயிட்தான் உத்தேசமா நாம இருக்கணும். நான் 157 செண்டி மீட்டர் உயரம் அப்ப நான் 57 கிலோதானே இருக்கணும் ஆனா பாருங்க 72 இருக்கேன்.. ரொம்ப கஷ்டப்பட்டு குறைச்சா 67 வரைக்கும் வந்திருக்கேன்.. ஒரு பத்து கிலோ எக்ஸ்ட்ராதான்..

ஒரு நாலு தரம் காலில் அடிபட்டு கட்டு., அப்புறம் கையில் கூட ஒருதரம் அடிபட்டு கட்டுன்னு வந்தவுடனே எங்கே பார்த்தாலும் அட்வைஸ்தான்.. என் கணவர் படியை பார்த்தாலே ராணி வர்றாங்க பராக் பராக்குனு சொல்ற மாதிரி ,”படி இருக்கு ..பார்த்து பார்த்துன்னு” சொல்வார்.. என் சொந்தக்காரங்க கூட அப்பிடி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க அப்புறம் என்ன பார்த்தாலே..


ஹீல்ஸ் செப்பல் எல்லாம் போடணும்னு ஆசைதான். சும்மா செருப்பு போட்டு ஃப்ளாட்டான தரையில நடக்கும்போதே இப்படி பொத்பொத்துன்னு பூசணிக்கா மாதிரி விழுந்தா அப்புறம் எப்பிடி ஹீல்ஸ் எல்லாம் வாங்க விடுவாங்க..

புத்தூர் கட்டு., ரத்தக் கட்டு., முட்டைப்பத்து., சுளுக்கு., எக்ஸ்ரே., ஸ்ப்ரெயின்., லிகமெண்ட்ஸ்., டிண்டான்., சர்ஜரி., டாப்லெட்ஸ்., ஊசி., பிஸியோதெரஃபி இதெல்லாம் எனக்கு சகஜமான விஷயம் ஆகிருச்சு..என்னப் பாக்கிறவங்கதான் இப்ப ஒண்ணும் இல்லையே பாணியில் கையையோ., காலையோ பார்ப்பாங்க.. அப்புறம் பத்திரமா பாத்து நட.. பாத்துக்க என்று சொல்லிட்டு போவாங்க..

கால்சியம் கொறைச்சல்., பால் குடி., கால்சியம் டாப்லெட்ஸ் சாப்பிடு., முட்டை சாப்பிடுன்னு.. சொல்லிட்டு போவாங்க..எல்லாம்தானே சாப்பிடுறோம் அதுனாலதானே உடம்பு வெயிட் தாங்காம கால் கதறுதுன்னு நமக்கு தெரியும்.

என் கணவர் சொல்வாரு அவளுக்கு பேச்சு ஸ்பீடு., ஆளும் ஸ்பீடு., மனசு போற வேகத்துல காலும் போகும்னு நினைக்கிறா.. என் பசங்க சிரிப்பாங்க.. என் சின்னப் பையன் குண்டுக்கை, அம்மா என்று கையைப் பிடித்துக் கொள்வான்.. பெரியவன் சொல்வான்., ரன் படத்துல டைட்டில் சாங்ல ஓடிவர மாதிரி ஒரு சீன் எடுப்பேண்டா.அப்ப அம்மாவை ஓடி வர சொல்லி தம் தம்னு மியூசிக் போட்டு குண்டூஸ் ஃபார் எவர்னு டைட்டில் ஸ்க்ரோல் ஆகு்ம்னு.

ஒண்ணுமில்லங்க வீட்டில் வடை சுட்டா ஷேப் இல்லாத வடை.. கடைசி வடை. , முதல் வடை அப்பிடின்னுதான் சாப்பிடுறது.. ஆனா பாருங்க சில சமயம் என் பசங்க சாப்பிட மாட்டாங்களா .. சரின்னு இன்னும் ரெண்டு எடுத்துக்குறது.. அப்புறம் சாயங்காலம் மிச்சம் ரெண்டு எடுத்துக்குறது.. இதுக்கு மேல வேற வேணுமாங்கறீங்களா அதுவும் சரிதான்.

பத்தும் பத்தாததுக்கு பசங்க அப்போ அப்போ பிஸா ஹட்டு ., சப்வே., டொமினிக்., கே எஃப் சின்னு போய் ஏதாவது வாங்கிட்டு வருவாங்க.. அம்மா உங்களுக்கு பிடிக்குமேன்னு சொல்லும் போது சாப்பிடாம இருக்க முடியுமா.. சாக்லேட் கேக்., ப்ளாக் ஃபாரெஸ்ட்., அருண் ஐஸ்க்ரீம்ல கசாட்டா அப்பிடின்னு நமக்கு பிடிச்ச லிஸ்ட் அதிகம்..என்ன ஒண்ணு எல்லாமே கலோரிஸை அதிகப்படுத்தும்..

நாம பாடு நாம உண்டு நம்ம வெயிட்டான சரீரம் உண்டுன்னு போக முடியலை பாருங்க... லீவுல ஊருக்கு அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தா பக்கத்து வீட்டு பொண்ணு சொல்றா.. என்ன அக்கா கதவ இடிக்கணும் போல இருக்கேன்னு.. அம்மா கூட சொல்லி அனுப்பிச்சாங்க பனீர்., மட்டன்., எல்லாம் ரொம்ப சேர்த்துக்காதே.., பால் தயிர் எல்லாம் நல்லா தண்ணி ஊத்தி காய்ச்சி காபி., மோரா உபயோகி., வாக்கிங் போன்னு ..

சரின்னு வாக்கிங் போலாம்னா ரோட்டுல காலை வச்சா ஒரே ட்ராஃபிக் ஜாமுங்க.. நாம் வாக்கிங் போறோமோ இல்லையோ நம்ம கால் மேல ரெண்டு கார் அல்லது ஏழெட்டு பைக் மோதுறா மாதிரி வரும்.. நாமளும் உயிர் தப்பி ஓடுற பல்லியோ., கரப்பானோ மாதிரி அங்கேயும் இங்கேயும் தடுமாறி ஓடணும்.. இது ஒரே புகை வேற.. வீட்டுல வந்து முகம் கழுவுனா கறுப்பா வருது.. முடி எல்லாம் ஏதோ பொகை போட்ட மாதிரி தூசு..


என் கணவர் சொன்னார். சரி கடைக்கு எல்லாம் போயிட்டு வா.. பக்கத்துல பால் கடை., காய் கடை.,எல்லாத்தையும் வீட்டுல இருந்தே போனுல ஆர்டர் பண்ணாம போயிட்டு வா. நடந்த மாதிரியும் ஆச்சு., வெளியே காலைத் தூக்கி வைக்க மாட்டேங்கிறியே.. காலை வெளியே வைச்சா காருலதான் வைப்பேன்., கால்டாக்ஸியிலதான் வைப்பேன். இல்லாட்டா ஆட்டோவிலதான் வைப்பேன் நு சொல்லாம இருந்தா கொஞ்சம் வெயிட்டை குறைக்கலாம்னு..

இப்படி எல்லாம் நாம எங்க சபதம் போட்டோமின்னு நெனைச்சுகிட்டு ( அட்வைஸ் இதெல்லாம்.. ஏங்க நான் குண்டா இருக்கனான்னு கேட்டா இதெல்லாம் கிடைக்கும்தானே.. ஏதோ இல்லமா.. நீ கொஞ்சம் பூசுனாப்புலதான் இருக்கே.. குண்டு எல்லாம் ஒண்ணுமில்லயேன்னு ஒரு ஆறுதலுக்காக கேக்குறது .. அது வெனையில முடியும் ) சரின்னு., போன் பில்லு., தண்ணி பில்லு., கரெண்டு பில்லு., வீட்டு வரி., மளிகைக் கடை., பால் வாங்க., தண்ணீர் கேன் சொல்ல., அயர்ன் பண்ண துணி கொடுக்க., என்று அலைந்து திரிந்ததில் 4 நாளில் பில்லி சூனியம் வைத்த கானாங்கெழுத்தி கருவாடு மாதிரி ஆகிட்டேன்..

வீட்டுல ட்ரெட் மில் வாங்கினா நடந்து நடந்து 50 கிலோ வந்துர்ற மாதிரி அனத்த ஆரம்பிச்சேன்.. கடைக்கு போனா 25000 லேருந்து ஒரு லட்சம் வரைக்கும் இருந்துச்சு ட்ரெட்மில்.. அதுல டி வி எல்லாம் பார்த்து பாட்டு கேட்டுகிட்டே கூட ஒடலாம். அப்புறம் எல்லாத்தையும் பார்த்துட்டு டி வி பார்க்கத்தான் வீட்டுலயே டி வி இருக்கே இதுல வேற பார்த்துக்கிட்டே ஓடணுமான்னு 25000 உள்ள ஒரு ட்ரெட் மில் வாங்கி வந்தாச்சு.. சுமார் ஒரு மாசம் இருக்கும்.. அதுக்கு கான்வாஸ் ஷூ., ட்ராக்சூட்.,பனியன் எல்லாம் போட்டு சூப்பரா நடந்தேன். அப்புறம் என்னாச்சுன்னு கேக்குறீங்களா.. நான் ஆன்லைனில் கவிதை கதை கட்டுரை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டனா.. அது பாட்டுக்கு போர்வை போர்த்திக்கிட்டு தூங்குது..

வீட்டுல தையல் மிஷின் ஏர் கூலர்., ப்ரிட்ஜ்., மைக்ரோவேவுக்கேல்லாம் என்ன கதியோ அதுதான் அதுக்கும்.. என்ன கதின்னா கேக்குறீங்க.. அதுதாங்க வீட்டுல எல்லாத்தையும் பொருள் வைக்கிற ஸ்டாண்டா உபயோகப் படுத்துறது.. எல்லாத்து மேலயும்., ஐடி கார்டு., பணம் வாட்சு., மருந்து மாத்திரை., கோயிலுக்கு போயிட்டு வந்து விபூதி குங்குமம் பாக்கெட் ., ஹேர்பின்னு., பழக்கூடை போட்டோன்னு ஏதாவது வைப்போமில்ல அதுமாதிரி ட்ரெட்டு மில்லும் ஆயிருச்சு. அதுல போயி என்னங்க வைக்க முடியும்னு கேக்குறீங்களா.. ப்ரஷ் ஸ்டாண்ட்., சீப்பு ஸ்டாண்ட் ஷேவிங் ஐட்டம்ஸ் இது பத்தாதுன்னு ஒரு கபடா ( துணி போடுற) ஸ்டாண்ட் வேற.. எங்க விட்டுக்கு வந்த நண்பர் அதுல துண்டு காயப்போட்டு வச்சிருக்குறத பார்த்துட்டு சொன்னார். ஒரு பெட்டும் போட வேண்டியதுதானெ படுத்து தூங்கலாம்னு..

நடிகர் ஜெயராம் ஒரு பேட்டியில் சொன்னார் தன் மனைவி பார்வதி இப்படித்தான் எல்லா இடத்துலயும் விழுந்து வைப்பாருன்னு.. அதை பார்த்து மனச சமாதானப்படுத்திகிட்டேன்.. ஆனா ஒண்ணுங்க.. கூடிய சீக்கிரம் என் எடையை குறைச்சு.. ஃபிட் ஃபார் எவெர்ன்னு ஆகணும்னு தமிழ் புத்தாண்டு சபதம் எடுத்துகிட்டேன்.. என் எண்ணம் நிறைவேற நீங்களும் வாழ்த்துங்க..:))


டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2011 மேமாத இவள்புதியவளில் வெளிவந்துள்ளது.


15 கருத்துகள்:

  1. ஹைய்யோ:-)))))))))))

    சூப்பர்.

    ஆமா.....தமிழ்ப் புத்தாண்டு எப்போ? புதுசா இல்லை பழசா? பழசுன்னா இன்னும் 3 மாசம் எக்ஸ்ட்ரா டைம் உண்டு,கேட்டோ:-))))

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு உள்ள எல்லாப் பிரச்சனைகளும் எனக்கும் உண்டுங்க. அதனால் உங்கள் பதிவு படிக்கும்போது வரிக்குவரி எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சுங்க. என் மனசாட்சியே பேசுவதுபோல இருந்துச்சு. நீங்க ஒண்ணும் கவலையே படாதீங்க. ஸ்லிம் ஆகவென்று மருந்து மாத்திரை வீட்டுக்குள்ளேயே மெஷின்கள் என பலபேர் நம்மை ஏமாற்றக்காத்திருக்கிறார்கள். அவர்களிடம் ஏமாறாமல் மிகவும் உஷாராக இருங்கள். பலமுறை நான் ஏமாந்துள்ளதால் இந்த அட்வைஸ். எந்த நடைப்பயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து உடம்பை வருத்திக்கொள்ளாதீர்கள். வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் பிடித்த ஐடங்களை ஒரு பிடிபிடிச்சுடுங்க. நமக்கெல்லாம் நல்ல மனஸுங்க. வஞ்சனையில்லாமல் சற்றே குண்டாகத்தெரிகிறோம். அவ்வளவுதான். இந்த பிரச்சனைகளை மையப்படுத்தி ”உணவே வா உயிரே போ” என்று ஒரு பதிவும், ”எங்கெங்கும் எப்போதும் என்னோடு” என்று ஒரு சிறுகதையும் என் வலைப்பூவில் பதிவு செய்துள்ளேன்.
    நேரமிருந்தால் அவற்றைப்படித்துப்பார்த்தால், நம்மைப்போலவே மற்றொருவர் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டு, மேலும் 2 கிலோவாவது உடம்பு ஏறக்கூடும். சூடான சுவையான வடை, பஜ்ஜி, வெங்காயத்தூள் பக்கோடா போன்றவற்றை மறக்காமல் தினமும் சாப்பிட்டு வாருங்கள். அதன் ருசி நமக்குத் தெரிந்தவரை பிறருக்குத்தெரிய நியாயமில்லை.

    //காலை வெளியே வைச்சா காருலதான் வைப்பேன்., கால்டாக்ஸியிலதான் வைப்பேன். இல்லாட்டா ஆட்டோவிலதான் வைப்பேன்//

    கரெக்ட்டுங்க. நானும் அப்படியே தான்.
    2 வது அடுக்குமாடி வீட்டிலிருந்து புறப்பட்டு, லிஃப்ட்டில் ஏறி, மேற்படி வாகனங்களில் அமரவே நமக்கு மூச்சு வாங்குமே, அது தெரியாமல் ஆளாளுக்கு அட்வைஸ் தருவார்கள், அதுதாங்க நமக்கு மிகவும் எரிச்சலாக வரும்.

    என்னப்பொருத்தம் நமக்குள் இந்தப்பொருத்தம் என்று பாட்டுப்பாடிக்கொண்டே விடைபெறும் 98 கிலோ எடை + Sugar + BP etc., உடன் vgk

    பதிலளிநீக்கு
  3. http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_28.html

    ”உனக்கே உனக்காக” என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை பற்றி கூற மறந்து விட்டேன்:

    இதோ பாருங்கள் படியுங்கள்:
    ===========================

    எனக்கே என்னைப் பார்த்தால்
    பிடிப்பதில்லை அப்போதெல்லாம்.

    நிறைமாத கர்ப்பணிபோல
    எப்போதும் என் வயிறு

    வேக நடைப் பயிற்சியுடன்
    வேகத்தில் ஓடியும் விட்டேன்

    மஃப்டியில் போலீஸோ
    என்று என்னை எண்ணி

    எனக்கு முன்னே ஓடி
    ஒளிந்தனர் ஒருசிலர் ஒருநாள்.

    நாடாத வைத்தியம் இல்லை, மனம்
    வாடாத நாட்களும் இல்லை.

    காசு பணம் கரைந்ததேயன்றி, என்
    தொந்தி மட்டும் கரையக்காணோம்

    இஷ்ட தெய்வம் விநாயகரிடம்
    இது பற்றி விண்ணப்பிக்க நான்

    அவர் தனக்கும் இந்தத் தொந்திப் பிரச்சனையே எனத் துரத்தலானார், நொந்து போனேன்.

    ”பட்டினி கிட, விரதம் இரு” எனப்
    படுத்தி வந்தனர் பார்த்தவர் என்னை.

    ”பணத்தொந்தி” எனப் பரிகசித்தனர்
    ஒட்டிய வயிற்று எரிச்சலில் சிலரும்.

    எதிலும் ஒரு பயணுமுண்டு தானே
    உணர்ந்து கொண்டேன் நானும் இன்று.

    பேரக்குழந்தை ஓடி வந்தான்
    செல்லமாகப் படுக்கவேண்டி

    ”தாத்தா, கதையொன்று
    சொல்ல வேணும்” என்றான்.

    ”பக்கத்து தலையணியில்
    படுத்துக்கோ சொல்வேன்” என்றேன்

    ”எதற்கு அந்தத் தலையணி” என்றே சொல்லி

    என் தொந்தி மேல் தலையை வைத்தான்

    ஒய்யாரமாகச் சாய்ந்தவாறே
    உன்னிப்பாகக் கதையைக் கேட்டான்

    உவகையுடன் நானும் சொன்னேன்
    "என் தொந்தி என்றும் உனக்கே" என்று.

    -=-=-=-=-=-=-

    பதிலளிநீக்கு
  4. நன்றாக, நகைசுவையுடன் எழுதி இருக்கிறிர்கள்.

    பதிலளிநீக்கு
  5. சும்மா ஒரு விசிட் செய்து பாருங்கள்

    நான் இப்பொழுதுதான் follow செய்ய ஆடம்பித்துள்ளேன்.

    காசு செலவே இல்லாமல் ................
    httpwww.abnsamirtham.com


    ://anatomictherapy.ning.com

    முயற்சி கைவிடாது.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  7. கரக்டாக எழுதி இருக்கிங்க அக்கா...அழகாக இருக்கு..சரி..இப்போ எவ்வளவு எடை குறைந்து இருக்கின்றிங்க..

    பதிலளிநீக்கு
  8. ஹையா! இது என் கதை அல்லவா? ;-)

    ஆல் தி பெஸ்ட்டுங்க..

    அருமை..

    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஒன்றை மாசம் ஆச்சே, இப்பவாவது அந்த ட்ரெட்மில் மேல காய விட்ட துணிய எடுத்தீங்களா?

    பதிலளிநீக்கு
  10. இதைப் போல் நானும் உடம்பு குறைக்க..எக்ஸர்சைஸ்..ஜிம்..ட்ரெட் மில் எல்லாம் வாங்கி கொஞ்ச நாள் ப்ராக்டீஸ் செய்ததில் சர்ரென்று இளைத்து விட்டது.....
    பர்ஸ்!!!!

    பதிலளிநீக்கு
  11. //இதைப் போல் நானும் உடம்பு குறைக்க..எக்ஸர்சைஸ்..ஜிம்..ட்ரெட் மில் எல்லாம் வாங்கி கொஞ்ச நாள் ப்ராக்டீஸ் செய்ததில் சர்ரென்று இளைத்து விட்டது.....
    பர்ஸ்!!!!//

    சுருக்கமா அழகாக நச்சென்று சொல்லியுள்ள என் அருமை நண்பர் இராமமூர்த்திக்கு ஒரு
    ராயல் சல்யூட் !

    பதிலளிநீக்கு
  12. >>கல்யாணம் ஆகிறவரைக்கும் நானும் ஊர்வசி., மேனகா ., அருந்ததி ( அட இவங்க எல்லாம் அப்போ நடிச்ச நடிகைங்கப்பா)மாதிரிதான் இருந்தேன்.

    haa haa ஹா ஹா எல்லா பொண்ணூங்களும் இப்படியே சொன்னா எப்படி?

    பதிலளிநீக்கு
  13. hஹா ஹா சந்தடி சாக்குல பல பர்சனல் புள்ளி விபரங்களை அள்ளி விட்டுட்டீங்க .. நல்ல நகைச்சுவையான எழுத்து நடை.. கவிதை நடையில் சீரியஸ் கட்டுரை நடையில் நகைச்சுவை என யுவர் வே ஆஃப் ரிட்டர்ன் பேட்டர்ன் ஓக்கே குட்

    பதிலளிநீக்கு
  14. நன்றி துளசி.இந்த ஏப்ரல் 2011 க்கு எழுதியதுபா..:)

    நன்றி கோபால்சார். உங்க கருத்துக்களும் கவிதையும் ரொம்ப அருமை சார்.:)

    நன்றி சௌந்தர்

    நன்றி ரமேஷ்

    நன்றி ரவீந்திரன்

    நன்றி மாதவி

    நன்றி கீதா

    நன்றி gardenerat60

    நன்றி பொன்ஸ்.. தினம் காயப் போடுறோம்

    நன்றி கோபால் சார்

    நன்றி ஆர் ஆர் ஆர்

    நன்றி சிபி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...