ஞாயிறு, 31 ஜனவரி, 2010

என்ன தவம் செய்தேன் !!!

*சமீபத்தில் ஒரு ஆன்மீக பாதயாத்திரை சென்று
வந்தேன்.. அதற்கு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு
நன்றி .
*என்னை முதன் முதலில் வாழ்த்தி வழியனுப்பிய
என் அன்பு அம்மா திரு எம். ஏ .சுசீலாம்மா
அவர்களுக்கும் .,
*ஒரு பத்து நாள் போவதால் ஒரே நேரத்தில்
20 போஸ்ட் வரப் போகுதா என பயந்த
பேராசிரியருக்கும் (அது 40 ஆகி அவர் கிலியை
இன்னும் கிளப்பி இருக்கலாம்).,
* முகபுத்தகத்தில் தன் மனைவி மூலம் தெரிந்து
என்னைத்தேடிய சகோதர சகோதரிக்கு தகவல்
எழுதிய அன்பு நண்பருக்கும் (இவர் பேரைத்தான்
நான் கிளம்பியது முதல் முடிவு வரை
கோஷமாக கேட்டு வந்தேன்) .,
*முகப் புத்தகத்தங்கை அமுதா தமிழுக்கும்.,
*முகப்புத்தக சகோதரர் சுந்தருக்கும் .,
*சிறிய சகோதரர் பாலாசத்யாவுக்கும்.,
* என் வலைப் பூவின் வழி கிடைத்து என்றும்
என்னை ஊக்குவிக்கும் என் பக்கமே இருக்கும்
என் அன்பு சகோதரர் விஜய்க்கும்.,
* நல்ல படியாகச் சென்று வாருங்கள் மக்கா என
வாழ்த்திய பாசக்கார குரலின்., எழுத்தின்.,
சொந்தக்காரருக்கும் .,
* பயணம் சிறக்க வாழ்த்திய ஜெயகாந்தனின்
அன்பு நண்பர் மற்றும் பெண்கள் எல்லோரையும்
எழுத ஊக்குவிக்கும் மருத்துவருக்கும் .,
*துபாய் சென்றாலும் வாழ்த்திச் சென்ற "அவர் "
டைரக்டருக்கும்.,
* ஓவியமா., எழுத்தா அனைத்திலும் சிறப்பாகச்
செய்யும் ஜீவ ஓவியருக்கும் .,
*அவ்வாறே வாழ்த்திய உலக சினிமா வலைப்
பதிவர் வண்ணத்துப் பூச்சியாருக்கும் .,
*நிறைந்த மனத்தோடு வழியனுப்பிய என்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இயக்குனர்
சேரனுக்கும் .,
*என்ன அக்கா பதிவு எழுதலியா என கேட்டு
விசாரித்து இருக்கும் ஷேக்குக்கும்
*என்ன ஆளையே காணோம் என விசாரித்த
எங்கள் ப்லாகுக்கும்.,
* என் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்தும்
அடிப்படையில் ஐயப்பபக்தரான ஆர்குட் நண்பர்
அருண்குமாருக்கும்.,
* அதேபோல் வாழ்த்திய அன்பு நண்பர் உதவி
இயக்குனர் யுவராஜ் அரவிந்துக்கும்.,
* என் கவிதைக்குப் பரிசளிப்பதாகக் கூறிய
இளைய பதிவர் ப்ரியமுடன் இருப்பவருக்கும்.,
* என்னை சகோதரியாக ஏற்று நெகிழவைத்த
பாத்திமா ஜொஹ்ராவுக்கும்.,
* எல்லோரையும் போல அறிமுகமாகி ஒரு சில
கவிதைகளில் தனக்கான இடத்தை தெளிவுபடுத்தி
வாசித்து நேசிக்க வைத்த எழுத்துக்குச்
சொந்தக்காரருக்கும்.... இன்னொன்று முக்கியமாகச்
சொல்ல வேண்டும்... நான் பயணம் புறப்பட்ட நாள்
முதல் தினம் மூன்று வேளையாவது தொலைபேசி
எனக்கு என்னென்ன எடுத்துச் செல்லவேண்டும்.,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிக் கூறி தன்
குடும்பத்தோடு வந்து பழமும் .,பழரசமும் அளித்து.,
என்னை அவர்கள் குடும்பத்துள் ஒருத்தியாகப்
பாவித்து., அவரின் அம்மா, பாட்டி., மாமா மனைவி.,
மாமா மகள்., தங்கை .,தங்கை மகன் தீபக் என
அனைவரும் வந்து .,கண்டு .,களித்து .,உறவாடி ....
அந்த இளைய பதிவரின் அழகிய அம்மா என்
அன்புத்தோழி வாணீ தேவியாருக்கும் ,
*அனைவரும் பொறாமைப்படும்படி என்னை
அன்புடன் அழைத்துச் சென்ற என் பெரிய
தம்பிக்கும் சின்னத்தம்பிக்கும் (சின்னவன்
முன்னிருந்து முன்னெடுத்துச் செல்ல பெரியவன்
பின்னிருந்து பின் செலுத்த ஒரு வழியாக என்
வேண்டுதலை-அயர்ச்சிகளையும் சோர்வுகளையும்
களைந்து தன்னம்பிக்கையூட்டி -நிறைவேற்றி
வைத்த என் உடன் பிறந்த சகோதரர்களுக்கும்.,
*அனைத்து விஷயங்களிலும் ஊடும் பாவுமாய்
இருந்து என் எல்லா நேரங்களிலும் உடன் இருக்கும்
என் பெற்றோருக்கும் .,
*என் அன்புக் கணவருக்கும் என் குழந்தைகளுக்கும்.,

நன்றி..! நன்றி ..!! நன்றி....!!!!
இத்தனை பேரும் கிடைக்க என்ன தவம்
செய்தேன் என என்னை எண்ண வைத்து
விட்டார்கள் ....!!!!

வியாழன், 21 ஜனவரி, 2010

இன்னா(வோ) நாற்பது

சத்புத்திரருக்கும் இருக்கக் கூடும்..
சொத்துபற்றிய ஏக்கம்..

அடகுக்கடை சாமி பூவில் வடிந்தது தண்ணீர்..
உழைத்தவனின் கண்ணீர்..

பாட்டியும் கதைகேட்கிறாள் குழந்தைகளோடு..
தொலைக்காட்சியில்..

வீட்டில் வேலைக்காரி
உடல் மெலிய ஃபிட்னஸ் சென்டர்...

ஹோலிக்காட்சியில் ராதைகள் சூழ
புல்லாங்குழலுடன் ராபின்...

ஒருவாய் சோற்றுக்காய்
உலகம் சுற்றி கருத்த காக்கைகள்...

நகரும் பிம்பங்களில்
வாழும் பலருள் நாமும்.....

காய்ந்த மஞ்சள் இலைகளில்
படைத்த பொங்கல் சோறு மாட்டுக்காய்..
ஆவின் பால்...

கிறிஸ்துவுக்கு சிலுவை கிருஷ்ணனுக்கு அம்பு
மேன்மையானவர்களுக்கு மனிதர்களின் பரிசு..

உப்பளத்திலோ., யூக்கலிப்டஸோ .,
சுமக்கும் தலை சோற்றுக்காய்...
முடி பற்றிய கவலையில்லாமல்..

பண்டிகை நாட்களில் பெற்றோர்
தனிமையில் பிணியுடன்..
முதுமையும் தனிமையும் நமக்கும் வரும்...

உருளையாயும் தக்காளியாயும் சோபாவில்
கணினி முன்னால் பையன்களும் பெண்களும்..

வருடந்தப்பாமல் வரும்போகி அப்படியாவது
அழுக்குகள் எரியூட்டப்படட்டுமென...

வெண்ணை உண்ணும் குழந்தை ராபின்
கண்ணனில்லையா....

கோபுரங்களும் கூடாரங்களும் விதிவிலக்கல்ல..
காதலுக்கும் .,தோல்விக்கும்..

இறுதிச்சுற்றில் கோல் விழாமல்..
பார்த்தவருக்கு ஹார்ட் அட்டாக்...

பெட்டிங்கோ., புட்டிங்கோ .,வளவளவென்று..
கட்டையடி போல் மட்டையடி.,
நேர விரயம் ...

கையாளக் கற்காமல் மண்ணுளிப் பாம்பு கூட
மலைப்பாம்பாய்...

பணத்தேட்டையில் பலியானது இளமை .,
சுயகௌரவம்., கூடி வாழ்தல்., குழந்தை இன்பம்..

பிறந்த நாள் வருகிறது வருடந்தோறூம்
மூப்பை நினைவு படுத்த...

வெந்த உருளைத் தோலுரிக்கும் போதெல்லாம்
நினைவில்..விற்ற வெள்ளிக் குத்துவிளக்கு..
தேய்த்தால் பளபளப்பாகுமென...

டேஷ் டேஷ் நீ ..டேஷ் டேஷ் நான்..
இது தவிர ஏதும் எழுதத்தெரியாதா
என கிண்டலில் என் மகன்.....

சுமைஅரைப்பணம்., சுமைக்கூலி அரைப்பணம்.,
பழைய பேப்பர்காரன்...

ஏதோஒரு வீட்டின் பழைய மரச்சிலாகை.,
யாரோஒரு குழந்தை வளர்த்த செல்ல ஆடு.,
இரண்டும் சமைந்து பிரியாணியாய்...

வலைபோல்வீசுகிறாய் உன் பார்வையை.,
நினைத்து நினைத்தே மீனாய் தத்தளித்து நான்...

வட்டச் செக்கைச் சுற்றும் மாடாய்
உன் கண்ணைச்சுற்றி ஆசை நெகிழ்ந்து...

இசையமைப்பாளனின் ஒலிக்குறிப்பு கையசைவாய்
உன் கையசைப்பின் நடனத்தில்...
எல்லா இசைக்கருவிகளின் சத்தமாய்
என் மனம் அதிர்ந்து ...

செப்படி வித்தைக்காரன் நீ ...
மனிதப்பிறவியான என்னை
உன் பொம்மலாட்ட பொம்மையாக்கி...

இரும்பைத்தங்கமாக்க ரசவித்தை...
என் கண்ணை உன் கண்ணால் தீட்டுகிறாயே...
அது வைரவித்தையா...

உன்னைப் பார்த்ததும் பூம்பூம் மாடாய் மனசு..
எதற்குத்தலை ஆட்டுகிறோமெனத்
தெரியாமல் ஆடிக்கொண்டு...

பதினோரு மணிக்கு இருக்கவேண்டிய இடத்துக்கு
வீட்டிலிருந்து பதினோரு மணிக்குக் கிளம்பி
நேரந்தவறாமை...

உணர் கொம்புகள்.. தூரம் கடந்தும் நீ
என்ன செய்து கொண்டிருக்கக் கூடும்
என்ற அனுமானத்தில்...

முன்புகற்றுக்கொடுத்தோம் .,
இப்போது கற்றுக் கொள்கிறோம்.,
திட்டு வாங்கி... குழந்தைகளிடம்...

பரிட்சை அன்றும் பயணத்தின் அன்றும்
மறக்காமல் நினைவு கூர்கிறோம்... சாமியை...

புதிதாய் ஒன்று வாங்கினால்
சந்தோஷம் சிறுவயதில்..
எவ்வளவு புதிது வாங்கியும்
திருப்தியில்லை நடுவயதில்...

அணைக்கவியலா அடர் நெருப்பும்.,
பெருவெய்யிலும் .,அயல்நாட்டுத்தோழருக்கு.,
அகமும்., புறமும்....

ஆதரிக்க ஆளில்லாமல் அழிந்து தொலைந்து
கிராமியக்கலைகளும்.,இயற்கைவிவசாயமும்.,
கைத்தொழிலும்.,மட்டைதவிர்த்த விளையாட்டுகளும் ..

வெள்ளமாய் ஒரு பக்கம்..
அணைக்குள் ஒரு பக்கம்...
அவசரத்துக்கு ஒரு வாய் கிட்டாமல்...தண்ணீர்..

என் சகலத்தையும் இட்டும் நிரப்ப முடியவில்லை..
அம்மா...

நானென்பது கணவனுக்கு மனைவி...
குழந்தைகளுக்கு அம்மா...
கவிதை எழுதுகிறவள்...

செவ்வாய், 19 ஜனவரி, 2010

இருவருக்கும்

பனைமரங்களும் தென்னைமரங்களும்
பாய்மரங்களும் தெளித்துக் கிடக்க..
கரையோரம் ஆளைத்தழுவி
இழுத்துச்செல்லும் மின்சார அலை...
சொற்களின் அர்த்தமும்
வார்த்தைகளின் வீர்யமும்
கடந்த மௌனம்...
சும்மா பக்கத்தில் அமர்ந்து
இருப்பது கூட சுகமானதாய்...
நட்புக்கும் காதலுக்கும்
மேலானதொரு கரையாத உணர்வு...
வயதெல்லாம் ஒரு பொருட்டில்லை..
வார்த்தைகளின் வழி அணுக்கத்திற்கு..
ஆறுதலான பார்வைக்கு
அணைப்புக்கு ஏங்கும் மனிதர்கள்...
கிளைடர்கள் பறந்தும்
கருடன்கள் மீன்களோடும்
கங்காருக்கள் குட்டியுடன் துள்ளிக் கொண்டும் .
பலூனோ பட்டமோ ஆதாரக்கயிற்றில்
ஆடிக்கொண்டு மனசு..
ஃபெரிக்களும்., ஸ்கீயிங்கும்.,
க்ராஃப்டும் ., ஸர்ஃபிங்குமாய் .,
பாரா செய்லிங்கைப்போல
பறந்து பறந்து இறங்கி...
பக்கத்து வட்டுகளில்
கடந்து செல்வதே
வாழ்க்கையும் நட்பும்....

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

மலையறுப்பு

மலையின் முலை மேகம் முட்டி
மார் சுரந்து பாலாய்ப்பெருகி...
வேர் அடைந்த மரத்தின்கீழ்
வனப்பின் மிருகம் சடைபிடித்து...
முண்டுமுடிச்சுத்தண்டுகளூடே...
குளிர்சுனை சத்தமெழாது
கழுத்துப்பாசியாய் சிறுநெளிப்போடு...
வெய்யில் கீறி உள்நுழையும்
கறுப்பு ரகசியம் தெளிந்தும் தெளியாமலும்...
காற்றடைத்த மூலிகை வாசத்தை
கொஞ்சங்கொஞ்சமாய்ப் பரப்பி...
மழமழப்போ., கொரகொரப்போ .,
இயற்கை விளைத்த ராட்ச்சசனாய்
மலைகள் பலவும்.....
திடீர் பூகம்பம்., சுனாமியில்
வெடித்து உள்வாங்கி ...
சடையிழந்த வனப்பின் மிருகம் ...
மலையை., மரத்தை அறுத்துப்போட்டால்
இன்னொரு லெமூரியா...
இயற்கை அரணான
கறுங்கிழங்கு மலையறுத்து
கிரானைட் குவாரியாய் ...
தென்மேற்கும் வடகிழக்கும்
பொய்த்துப்போக ...
அலுமினியமும்., இரும்பும்.,
கிரானைட்டும் ., சல்லியும் சுரண்டி
மலையெல்லாம் பால்வற்றிய முலையாகி...
முள்வேலியோ., எதியோப்பாவோ வேண்டாம் ..
வரிப்பணத்தையும் வாழ்வாதாரத்தையும்
சுரண்டும் எலிகள் எங்கெங்கும் .....
மலையின் முலையறுத்து ....

டிஸ்கி:- காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும்
வழியில் உள்ள மலைகள் எல்லாம் இந்த முறை
சென்றபோது அறுக்கப்பட்ட ஆடுபோல் ஒரே
பால்கவிச்சியுடன் கிடந்தது .ஆற்றாமையும்.,
அவதார் படமும் வெற்றிவேல் அவர்களின்
நறும்புனலில் மலைகள் பற்றிய பதிவும்
இந்த இடுகைக்குக் காரணம்

வெள்ளி, 15 ஜனவரி, 2010

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூம்ம்ம்ம்

சொல் பேச்சு கேட்பதில்லை ..
அறிவுரை கேட்பது விட ஐ பாட் கேட்பது ஆனந்தம்.
தினமும் பைக்கை உறுமச்செய்கிறான் ...
என் கட்டயத்தின் பேரில் ஹெல்மேட்...
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூரூம்ம்ம்.................................................

****************************

ஜன்னல் இருக்கை அவனுக்கானதல்ல..
வளர்ந்த முட்செடிகள் அடிக்கக்கூடும்...
குளிர்ராவுகளில் சேணம் போல மங்கிக் குல்லாய்..
ரஜாய்க்குள்ளும் அவனை
அதிகக் கணப்பாய் அணைத்தபடி....
எந்த தேசம் சென்றாலும்
எல்லா உணவும் என் ருசி பார்ப்பிற்குப்பின்...

*******************************

பாலருந்தும் போது வழியும்வாயுடன் தூங்குபவனை
கன்னத்தில் சுண்டச் சொல்லும் அம்மா.....
வயிறு காயுமோவென்று
லேசாகத்தட்டுவேன் வலியுடன்....
ஊக்குகள் கண்களில்
பட்டுவிடுமோவென்ற பரிதவிப்பில்...
தாலிக் கொடி பற்றி விளையாடி...
முந்தானையில் முகம் மூடிச் சிரித்து.....

***********************************

வயிற்றுக்குள் கைவிரலோ
கால்விரலோ கிள்ளுவதுபோல்...
முண்டி விளையாடி வளர்ந்து வெளியாகி..
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூரூரூம்ம்ம்ம்மென்று..
செல்பவனின் பின்னால்
என் கடவுளுக்கான வேண்டுதலும் தொடர்ந்து ......

************************************

டிஸ்கி:- சும்மா இருந்த என்னை பக்தி உ(மானா)க
மாற்றிய அண்ணாமலையான் ., கலையரசன்.,
வினோத் கௌதம்முக்கு நன்றி.....

புதன், 13 ஜனவரி, 2010

சூரியப் பொங்கல்

அந்திக்கூட்டுக்குள்
விடியலின் சிறகு முளைக்க
சூரியன் பறந்து கிளம்பி ....

சூரியப் பொங்கலில்
வெளிச்சப் பால்
பொங்கி வழிந்து...

சூரியத்தண்ணீர்
மரத்தாமரை வழி சிதறித்
தரையில் முத்துக்களாய்.....

இலைக்குடைத்தடுப்பில்
சில ஒளிக்கற்றைகள் பிரிந்து
மரத்தின் கிழவாய்களாய்...

சூரியப் பூக்கள்
காலையில் மலர்ந்து மாலையில் வாடி
பறிக்கவும் சேகரிக்கவும் முடியாமல்...

பறவைகளைப் போல
தினம் புலம் பெயர்ந்து சூரியன்...

இருள் மானை வேட்டையாடியபடி
சிங்கமாய் துரத்தும் சூரியன் ...

நகரும் அமீபாக்களாய்
கட்டடங்களை நிழலாய் நகர்த்தியபடி ...

மணித்துளிகளையும் நாட்களையும்
வாரங்களையும் மாதங்களையும்
வருடங்களையும் ஆயுளையும்
காயசண்டிகையாய் விழுங்கி...

உலகம் முடியுமளவு
அலையச் சபிக்கப்பட அஸ்வத்தாமனாய்
கிரகணம் பீடித்து...

வனவாச ராமனைத் துயிலெழுப்ப
விஸ்வாமித்திரன் துதிவழிவெளித்து...

பூமிக்காதலியை தினம் சுற்றி
பச்சையம் பிரசவித்து...

மழைக் கண்ணாடி வழி
வானவில்லாய் ...

சாயா உஷாவின் கணவன் ..
சனி யமனின் தந்தை..
ரதசப்தமி உலா..
ஏழுகுதிரையிலாரோகணித்து..

இரவுக் கூட்டுக்குள்
இறக்கை சுருக்கி
உறங்கக் கூடடையும்சூரியன்

திங்கள், 11 ஜனவரி, 2010

நாண(ந)யம் நாகப்பன்

"தோட்டத்தில் எல்லாவிதைகளும்
ஒரே நேரத்தில் விதைக்கப்பட்டு
ஒரே சூரியன் கீழ்
ஒரே கிணற்றின் தண்ணீரில்...

ஒன்று மட்டும் ஆழமாய் வேர்பாய்ச்சி
அகலமாய் கிளைபரப்பி
அண்டமெல்லாம் விரிந்து.... "

அதுதான் நாண(ந)யம் நாகப்பன் அவர்கள் .

வங்கிகள்., பத்திரிக்கை .,பல்கலைகழகங்கள்.,
பங்கு வர்த்தகம் என்று எல்லாவற்றிலும்
வெற்றிக்கொடி நாட்டும் சமூகத்தில் பிறந்தவர்..
எம்.பி.ஏ. பட்டதாரி.. உழைத்துப் பொருளீட்டத்
தேவை இல்லாத குடும்பத்தில் பிறந்தும் தனக்கென
ஒர் முத்திரை பதித்தவர் ..

சென்னைப் பங்கு சந்தையின் இயக்குநர்களில்
ஒருவர்.. தமிழகத்தின் முண்ணனிப் பங்குத்
தரகர்களில் ஒருவர் ..

பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கம் காணும்
போதெல்லாம் இவரது பேட்டியை தவறாது
அனைத்து தொலைக்காட்சிகளிலும் காணலாம்..
பணம் செய்ய விரும்பு என்ற இவரதுதொடர்
விகடனில்வந்தபோது தினம் தவறாது
படித்தவர்களில் நானும் ஒருத்தி..
பணம் செய்யும் யுக்திகளைவிட பணம் பண்ண
வேண்டும் என்ற உத்வேகம்தான் முக்கியம்
என்று கூறுவார் இவர்..

அஞ்சலக சேமிப்புத்திட்டம்., தங்கத்தில் முதலீடு
செய்வது., இன்ஷுரன்ஸ்., ஃபிக்ஸட் டெப்பாஸிட்
இவற்றைவிட ம்யூச்சுவல் ஃபண்ட்., பங்குச்
சந்தையில் முதலீடு செய்வது சிறந்தது எனக்
கூறுவார்.. தினம் தினம் வாங்கி விற்பதை விட
நீண்ட கால முதலீடே சிறந்தது என்பதும்
அவர் கருத்து..

நாணயம் விகடன் சார்பாக பல்வேறு வாசகர்கள்
முதலீட்டாளர்களுடன் தமிழகத்தின் பல்வேறு
ஊர்களில் செல்வத்தைப் பெருக்கும் வழிகள்
பற்றிய கூட்டங்கள் நடத்தி இருக்கிறார்..

தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பம் இவர்..
96 வயதிலும் (இறக்கும் ஒரு வாரம் முன்பு வரை
கூட) ஷேர் பிஸினஸ் செய்துவந்தவர் இவருடைய
தந்தை திரு. வள்ளியப்ப செட்டியார்.. இவர்
தந்தையிடம் பெற்றதும் தானே கற்றதும் அதிகம்..

மத்திய நிதி அமைச்சர் சமூகத்தின் வழி வந்த
அவர் விகடன் எனர்ஜி பக்கங்களில் சொன்னதை
உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்...

இன்றைய இளைஞர்களுக்கு மிக மிக
முக்கியமானது நிதி திட்டமிடுதல்.. இளம்
வயதிலேயே நிதி திட்டமிடுதலைத் தொடங்க
வேண்டும்..இளைஞர்கள் தங்களின் ஆடம்பரத்
தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய
வாழ்க்கை வாழ வேண்டும்.. அப்போதுதான்
சந்தோஷம் ஆயுள் வரை நீடிக்கும்...

எனவே மக்களே..! பணம் செய்ய விரும்புங்க..!
உங்களுக்கும் உங்க குடும்பத்தார்க்கும்
என் பொங்கல் வாழ்த்துச் செய்தி இதுதான்...!!!

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஐந்தொகை

* அழகனோ அழகியோ இல்லை
காதல் மட்டும்
அழகியல் கூறுகளோடு..
* காதலிப்பவரை கைபேசியுடன்
அலைபவரை
வெறுக்கிறோம்
நாம் காதலிக்கும்வரை ....


* நெஞ்சம் நிறைகிறது பால் மணத்தால்
விடுதியில் இருக்கும் என் மகன்
உணவு பிடிக்காமல் பசித்த வயிற்றோடு ...
* விஷேஷ தினங்களில்
அநேக பலகாரங்கள்
ஒருபோதும்
உண்ணக்கேட்காத சாமிக்காய்...


* தொட்டாற்சிணுங்கியின்
செல்லச் சிணுங்களில்
உயரப் பறக்கும் தட்டான்கள் ....
* வார்த்தைக் கல்லில் அடிபட்ட
மௌனச்சிறகாய் மனசு.....

* எல்லாவற்றையும் கடைந்து., கடந்து
எது விஷம் .,? எது அமிர்தம்.,?
யார் தேவர்.,? யார் அரக்கர் .,?
* அது அதுவாய் வரும்வரை
அததனோடு போராட்டம்....

* சொல்லப்படாத பாசம்
பிரமிடுக்குள் மம்மியாய்
தலைமுறைகடந்தும்.....
* வாசிப்புக்குப்பின் ஓட்டு மட்டும் போடுவதோ.,
பின்னூட்டம் மட்டும் இடுவதோ .,
பாதி சாக்லேட் மட்டும் தருவதாய்....

வெள்ளி, 8 ஜனவரி, 2010

தீக்குளிப்பும் குண்டு வெடிப்பும்

கிராமம் சார்ந்த
காங்க்ரீட் காடு எனது .
மௌனமாய் நகரும் பல்லி .,
ஓடி ஒளியும் கரப்பான்.,
தத்தித் தாவும் பாச்சை.,
புத்தகங்களுக்குள் சில்வர் ஃபிஷ்.,
ஓரத்து ஒட்டடைக்குடியிருப்பில் சிலந்தி.,
பருப்புகளில் வண்டு .,
காய்களில் பச்சைப்புழு.,
மழைத்தேங்கல்களில் கானம் பாடும்
ஈக்களும்.,மொழும்புகளும்., கொசுக்களும்.,
தலைப்பிரட்டையும்., தவளையும் கூட...
தோட்டத்தில் செவ்வால் அரணை .,
புதர்களுக்குள் ஓணான்., மரப்பல்லி
பச்சைப்பாம்பு .,பூரான்.,மரவட்டை.,
மொசுக்கட்டை., கம்பளிப்பூச்சி .,அட்டை.,
கட்டெறும்பு., சிகப்பெறும்பு., கறுப்பெறும்பு.,
புற்று .,கரையான்.,
கல் படிகளின் கீழ் நத்தை .,சங்குப்பூச்சி .,
கோழி.,நாய்., பூனை., ஆடு., மாடு., கன்று.,
காக்கை., குளவி .,தட்டான்.,பட்டாம்பூச்சி.,
மைனா.,குருவி.,தேன்சிட்டு.,
சில்வண்டு .,மின்மினிப்பூச்சி., மண்புழு ...
இவ்வளவும் என்னோடு....
இவற்றோடு என் வாழ்வு....
****************************************************
ஓரறிவு உள்ள இவையே வாழத்துடிக்கும் போது
ஆறறிவு பெற்ற முத்துக்குமார், தாணு ஏன் இப்படி.,?
ஏன் சிந்தனைச்சாவு...?
எது தூண்டியது .,?யார் தூண்டியது .,?
ஊடகமா ., சமூகமா .,தேசமா .,
கொள்கையா., இயக்கமா., இழப்பா.,
தீவிர சிந்தனையா .,தீராத்துக்கமா .,
தீராத்தூக்கத்தில் வீழ..?
மௌனப்போராட்டம் நடத்தும் தலாய்லாமா ..
அகிம்சாவாதி காந்தி .,..நெல்சன் மண்டேலா
கவரவில்லையா உங்களை ..?
நெருப்பிலிட்டும் வெடித்துக்கொள்ளவுமா
உங்களம்மா பத்துமாதம் கருக்காத்தாள் ....
எங்கோ நடந்த கண்டத்திட்டதிர்விற்காய்
தன்னையே சாய்த்துக்கொண்ட விருக்ஷமாய்....
தன்னையழித்ததும் .,பிறரையழித்ததும் தவிர
உங்கள் சாவு நிகழ்த்தியது என்ன...?
அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழலாம்....
மண்கிளர்ந்து மறையலாமா..?
எது எதனால் அணையப்பெற்றது எனத்
தெரியாமல் யார் யாருக்காகவோ
உயிர் நீத்த இரு அப்பாவிகள் ....
உயிர் யாருடையதாக இருந்தாலும்
வாழ்வு விலை மதிப்பற்றது
...

டிஸ்கி :- பட்டியன் பதிவில் படித்தவுடன் ஒரு சக
உயிராக முத்துக்குமாரையும் தாணுவையும் பற்றிய
சிந்தனைகளை பதிவிட்டு இருக்கிறேன்....
//பாரிஸ் கார்னரில் ஷாப்பிங், நாதமுனியில்
திரைப்படம், VGP யில் உல்லாசம் என தாணு
கழிக்கும் நாட்களும், வெடிகுண்டை உடலில் சுமந்த
வண்ணம் பிள்ளையார் தரிசனம், பஸ் பிரயாணம்,
கனகாம்பரம், முனியாண்டி விலாஸ் பிரியாணி
என இருப்பதும் இனம்புரியாத ஒரு உணர்வை
மனதுள் ஏற்படுத்துகின்றன.....ரகோத்தமன்
சொல்வது எல்லாமே (Exposed) உண்மைதானா
என்றெல்லாம் ஆராய முடியாது..
ஆனாலும் வாசிக்கலாம்.. ஆர்வத்துடன்//

வியாழன், 7 ஜனவரி, 2010

வாடகை புத்தகம்

பழைய நாட்குறிப்புகளைத்
திறக்கும் போதெல்லாம்
ஒரு பறவையின் இறக்கையாயும்
குட்டி போடும் மயில் தோகையாயும்
பாடம் செய்யப்பட்ட அரச இலையாயும்
நழுவி விழுகிறது உன் நினைவு...
நூலில் இங்க் வைத்து பக்கங்களில்
இழுத்து மகிழும் வினோத பிக்காஸோவாய்
அப்பிக்கிடக்கும் உன் நினைவுகள் ...
லெண்டிங்க் லைப்ரரி புத்தகங்களுடன்
உன் விரலையும் சேர்த்துத் தருவாய் ..
நான் தொடத் தகாத சயனடைப் போல்
பயந்து பெற்றுக்கொள்வேன்..
அழகாக வளைக்கப்பட்ட என்
நகங்கள் பட்டால் கூட புல்லுக்கு
வியர்த்தது போல புன்னகைப்பாய் ...
பூனையைப் போல பயந்து நானும்
புலியைப்போல சிலிர்த்து நீயும்...
தடம் மாற்றிவிடப் பட்ட
தண்டவாளங்களைப்போல
இரு வேறு திசையில் பிரிந்து ...
பால்பாய்ண்ட் .,ஜெல்பென் .,மைக்ரோபென்.,
யூனிபால் என்கிற காலத்தில் எப்படிப்
புரிந்து கொள்வார்கள் நம் கைகளைக்
கறையாக்கிய இங்க்கின் காயங்களை....

புதன், 6 ஜனவரி, 2010

புத்தகங்கள்

புங்கைப் பூக்கள் மிதக்கும்
குளத்தின் கல்லில்
கால் நனைத்து அமர்ந்து...
மீன்களைப்போல் எண்ணங்கள்
என்னைக் கடித்துக்கொண்டு...
தொலைந்து போகிறேன் ...
ஒவ்வொரு சின்ன அலையிலும் ...
அழித்து அழித்து எழுதுகிறது ..
ஒவ்வொரு பெயராய்...
புத்தகங்கள் கொடுத்த
அனைவரையும் அடுத்தடுத்து...
கற்றுக் கொடுத்த தகப்பனாய் ..
கற்றுக்கொண்ட மகனாய் ..
கடிந்து கொள்ளூம் சகோதரனாய் ..
கனிந்து நிற்கும் நண்பனாய்...
அதற்கும் மேலான
அனைத்துமான ஒருவனாய்...
என் வீட்டின் புத்தக அலமாரியில்
ஏகப்பட்ட புத்தகங்கள்...
பிரிக்கப்படாமல் ...
பிரிக்கப்பட்டு படிக்கப்படாமல்...
அரைகுறையாய் சில...
சில மட்டுமே முழுமையாய் ...
சில அனுபவித்து விழுங்கி ...
சில ஆவியோடு சேர்ந்து...
தினம் பார்க்கிறேன்., தொடுகிறேன் .,
படிக்கிறேன்., உணர்கிறேன் ....
உணர்வுகளின் வெம்மையையும்.,
கதகதப்பையும் .,குளுமையையும் ...
சூரியன் குளத்து நீரில்
மீன்செதில்கள் போல் மினுமினுப்பாய் ...
அழித்து அழித்து எழுதிக் கொண்டு
இருக்கிறது காற்றும் அலையும்....

திங்கள், 4 ஜனவரி, 2010

குருக்ஷேத்திரம்

எதிர்பாராது
எதிரில் இருப்பவரே
எதிரியான குழப்பம்...
குறிவைத்தோ .,
குறிப்பிட்டதை மட்டுமே சொல்லியோ
எய்யப்பயிலாமல்...
கண்ணனே என் காதலன்.,
சாரதி., சேவகன் ஆனால்
என் போரேல்லாம் அவனுடனே ...
பேரொளியும் பேரிடியும்
மின்னலுமாய் என் மேல் வீழ
கண்ணீரில் கறுத்து நான்...
கூட இருப்பதுவும்...
கூடி முயங்குவதும் ...
கோரப் பொருவதும் ...
வார்த்தை யுத்தத்தில்
நிராயுதபாணியாய்க் காதல் .,
கண்மூடித்தேம்பி ....
எத்தனை துடைத்தும்
போகாத சேறு.,
இது ஊடலா ....?
வாயில் உலகைக் காட்டி .,
என்னையும் அந்த
வாய்க்குள்ளே மட்டும் அடக்கி ....
வெண்ணையும் .,மண்ணையும்
தின்றவன் என்னையும் தின்று ....
கம்சனா .,கர்ணனா .,காளிங்கனா.,.,
அர்ஜுனனா .,பலராமனா., த்ரௌபதையா .,
ராதையா .,பாமாவா .,ருக்மணியா .,
யசோதையா .,தேவகியா .,நான் யார்யாராவோ.,
ஒவ்வொரு சதாப்தத்திலும்
உடலும் .,ஆன்மாவுமாய்
நானும் கண்ணனும் ....

சனி, 2 ஜனவரி, 2010

இதுவும் கடந்து போகும்

அறியாத அருணாவுக்கு
முப்பத்தாறு ஆண்டுகள்
நினைவற்று..
உலகெங்கும் உழைக்கும்
நண்பருக்கு அயர்ந்து அமர
ஒரு வீடும் குடும்பமும்...
கார்கிலிலும் வாகாவிலும்
கடுங்குளிரில் நமக்காய்
துப்பாக்கிக் கனவான்கள்..
குரலும் பிம்பமும் கொண்டு
சேர்க்கும் வீடு ..
வான்வழிப் பயணமோ ..
வயர் வழிப் பயணமோ..
எத்தனை புத்தாண்டு..
பொங்கல் .,தீபாவளி .,
ரம்ஜான் .,கிறிஸ்துமஸ் .,
யாருமில்லாமல்.. ..
குரல் வழிக்குடித்தனத்தில்
கழிந்து போனது
புத்தாண்டுகளும் புன்னகையும்...
பிஞ்சுக்குழந்தையோ., புத்தகமோ .,
வெளிவரும் நேரமும்
தகப்பனோ .,தாயோ .,
காற்றில் கரையும் காலமும்
அருகிருந்து ஆற்றாமல் ...
மனைவியின் மல்லிகைப்பூவாலும் ,
மகவின் பூந்தண்டைக்காலாலும்
அடிக்கப்படாமல் ....
தினம் தினம் வாகாவில்
கொடியேற்றும் த்வாரபாலகர்கள்...
அருணாவிற்கும்.,
அன்னிய தேச நண்பருக்கும் .,
அன்னைபூமித்தோழருக்கும் .,
இதுவும் கடந்து போகும் .....
இனி நலமே பொலிக நாளும்... ..