சனி, 31 அக்டோபர், 2009

விதி வலியது

ஆமாம்..
கவிதைகள் மட்டுமே எழுதி வந்த என்னை
சகோதரர் மணிகண்டன் தன்னுடைய தமிழ்
வலையுகத்தில் தொடர் இடுகை ஒன்று
எழுத அழைத்து இருந்தார்...
அவரின் அன்பு அழைப்புக்கு இணங்க
இதோ உங்கள் முன்பு எனது படைப்பு...

1. A- Available/single - single ....ABYAN என் மனம்
கவர்ந்த குட்டிப்பையன் ...
ஊசி போட்டு சின்னதாக மட்டும் சிணுங்கி
தன் தந்தைக்கு வலிக்க வைத்தவன்

2. B - Best friend - எல்லோரும்

3. C- Cake or pie - ரெண்டும்

4. D - Drink of choice - ஆரஞ்சு ஜூஸ்

5.E - Essential items you use everyday -டூத் ப்ரஷ்

6. F- Favorite colour - க்ரீன்

7. G - Gummy bears or worms - ரெண்டுமில்லை

8. H - Hometown - காரைக்குடி

9. I - Indulgence - பேச்சு

10. J - January/Feruary - பொங்கல் , பூசம்

11. K - Kids and their names - 2 பையன்கள்
வெங்கட், சபா

12. L - Life is incomplete with out - அனுசரித்துப் போவது

13. M - Marriage date - உயிர்ப் பூவை எடுத்து
ஒரு மாலை தொடுத்து வைத்த நாள்

14. N - Numberof siblings - 3 தம்பிகள்

15. O - Oranges or Apples - ஆரஞ்சு

16. P - Phobias/ Fears - தனிமை

17. Q - Quotes for today - காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

18. R - Reason to smile - ஜோக்ஸ்

19. S - Season - இளவேனில்
20. T- TAG 4 PEOPLE - இராகவன் நைஜிரியா,
விஜய் கவிதை(கள்), வினோத்கெளதம், பிரியமுடன்...வசந்த்

21. U- Unknown fact about me - கல்கியில்
என் கவிதை 1985 இல் வெளி வந்தது..

22. V - vegetables you dont like - எல்லாத்தையும்
சாப்பிடப் பழக்கி வைச்சுட்டாங்க.. :(((

23. W - Worst habbit - அநாவசிய கோபம்

24. X - Xrays you had - அது நிறைய இருக்கு
பல்லு காலுன்னு...

25. Y - Your favourite food - பாதாம் கீர்

26. Z - Zodiac sign - மகரம்

அன்பிற்கு உரியவர்கள் - அருணாசலம் என்ற என் ஐயா
எனது குழந்தைகள் மற்றும் அனைவரும் ...

ஆசைக்குரியவர் - பேர் கூடவே இருக்காரே...

இலவசமாய்க்கிடைப்பது - உபதேசம், ப்ரசாதம்...

ஈதலில் சிறந்தது - புன்னகை, உணவு...

உலகத்தில் பயப்படுவது - இது அவர் கிட்ட
கேக்க வேண்டிய கேள்வி....

ஊமை கண்ட கனவு - வரைஞ்சு கண்பிக்கவா...

எப்போதும் உடன் இருப்பது - லாப்டாப், இண்டெர்நெட்...

ஏன் இந்தப் பதிவு - நம்பளையும் சிலர் நம்புறாங்களே
அவங்களுக்கு....

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - மகிழ்ச்சியான மன நிலை....

ஒரு ரகசியம் - எப்போதும் சந்தோஷமாக இருங்கள்....

ஓசையில் பிடித்தது - நிச்சயம் லௌட் ஸ்பீக்கரில்
வருவது அல்ல ....

ஒளவை மொழி ஒன்று - கற்றாரைக்
கற்றாரே காமுறுவர்
எம்.ஏ.சுசீலா,
எண்ணம்,
அ. வெற்றிவேல்,
கவிமதி,
பாலா கவிதைகள்
இவர்கள் என் முன்னோடிகள்...
படித்துப் பாருங்கள்...

வெள்ளி, 30 அக்டோபர், 2009

டேபிள் ரோஸ்

என்னுடைய அன்பை
கவசமாகவும் சேணமாகவும்
தாலியாகவும் மோதிரமாகவும் மாட்டி
அழகாய் இருக்கிறாய்
என்கிறேன்....

நீ வலிகளைப்
பற்களுக்குள் ஒளிப்பதை
புன்னகைப்பதாக எண்ணி
மகிழ்கிறேன்....

சட்டிச் செடிக்கு
சூரிய வெளிச்சம் போல
சிறிது மட்டும்
தூவுகிறேன் அன்பை
நீ உயிர்க்க மட்டும்....

பொழுது போக்குச் சாதனங்கள்
போரடிக்கும் போது
என் பொழுது போக்குச்
சாதனம் நீ....

வீட்டில்
எது பழுதானாலும்
பழுதாகாத
உயிர் எந்திரம் நீ....

என் கண் எனும்
ரிமோட்டில் உன்
மனத்தை எனக்கேற்றதாக
மாற்றுகிறேன்....

என் கண்ணுக்கு விருந்தாய்...
எப்படி உணர்கிறாய்
உன்னை நீ...
அறிய விழைந்ததில்லை...

யார் கண்ணிலும்படாத
எனக்கு மட்டுமான
ஜன்னலில் நீ....

கலாசாரங்கள் கோட்பாடுகள்
சடங்குகள் என்று
என் வலையிலுன்னைப் பின்னி
எந்நேரமும்
எனக்கான இரையாய்....

நான் தனிமையில்
இருக்கும்போது தான்
உணர்கிறேன் உன் தனிமையை
தீரமுடியாத தொலைவில்......

வேப்பம் பூ

சூடிக்கொள்பவன் இல்லாமல்
மழையில் கரைந்து
நிலவு....

காண்போரே இல்லாமல்
பூப்பள்ளத்தாக்கு....
தனிமைக்குப் பயந்து
கூட்டமாய்ப் பூத்து....

ஆதிரையின் பிச்சைப்பாத்திரமாய்
அனுசூயாவின் பருத்த தனமாய்
ஆயி மாண்டேப் போல
அள்ள அள்ள அன்பு....

ராமனை வேண்டா
அகலிகைக்கல்லாய்
வெண்சடை விரித்த
வேம்பு...

மனநோயாளியின்
எச்சில் தட்டிலும்
உயிர் உற்பத்திவிக்கும்
உலகம்...

வேம்பூக்களுக்குள்ளே
யாருக்காகவோ
வருத்தமாய்
குயில்...

அன்பிற்காகவும்
ஆலிங்கனத்துக்காகவும்
ராகுப் பெயர்ச்சியில்
பறவைகள்...

தன்மனை சிறக்கும்
பெருமக்கள்
பிறன் மனையில்
ரகசிய ஸ்நேகிதம்...

வெல்லமிட்டு வைத்தாலும்
பகிர்ந்து கொள்ளாத பேரன்போடு
செவ்வாய்ப் ப்ரஜைகள்...

காயாகி கனியாகி
விதையாகி மரமாக
வேண்டாமல்....

போதுமிந்த ஜென்மமெனெ
மரத்திலிருந்து
பூவாகவே உதிர்ந்து .....

புதன், 28 அக்டோபர், 2009

போகன் வில்லாப் பூக்கள்

மாண்டிஸோரியின் குடில்களில்
வளைந்து பரவி இருந்தது
போகன்வில்லா....

தினம் ஒரு பூப்பறித்து
உதட்டில் வைத்துத் தேய்ப்போம்
ரைம்ஸில் வரும் ரோஸி லிப்ஸ்
ஆகுமாவென்று....

பருவங்கள் மாறி
திருமணத்துக்கு முன்
பட்டம் வேண்டி
நான் பெண்கள் கல்லூரியிலும்
நீ பொறியியலிலும்.....

பொறியியலில் மட்டுமல்ல
தடகளத்தையே
தடதடக்கவைத்த
தங்கக் கோப்பைக்காரன் நீ.....

நெஞ்சம் முரசடிக்க
சிலம்பாட்டக்காரன் போல்
கைமாறிப் பந்தடித்து...

கூடைக்குள் போட்டு
ஏற்றிக்கொண்டே இருக்கிறாய்
ஸ்கோரையும் பல்ஸையும்....

நீ விளையாடி முடிந்தபின்னும்
கை நிறைய ஏப்ரல் பூக்களுடனும்
இதயத்துடிப்புடனும்
உனக்காக நான்....

போகன் வில்லாபோல்
உன் விரிந்த தோள் மீது
வளைந்து படர்ந்தது மனது....

உன் காந்தப் புலனில்
தற்காலிக காந்தமான
தேனிரும்பாய் நானும்....

இன்று உன் வரவேற்பறையில்
பல கோப்பைகள்
இருந்தாலும்....

உன் கண்ணில் உணர்ந்தேன்
சிறுவயதில்
நான் தந்த காகிதப்பூவும்
பொற்கோப்பையாய் .....

வியாழன், 22 அக்டோபர், 2009

நீலோத்பவம்

பர் துபாயின் பேரழகே
நீல வைரமே ...
தேரா க்ரீக்கின் ஆப்ராவில்
உனைக்காண...

யமுனையின் ராதையாயும்
மீராவாகவும் ஆண்டாளாகவும்
சதுர்யுகமாய் உனைத்தேடி...

என் பேரழிந்து
ஊரழிந்தேன்
நீலோத்பவமே....

ஜலக்ரீடையும்
பாமாலையும்
பூமாலையும் சூடி ...

தேடித் தேடி
உன்னைச் சூடிக் கொண்ட
சுடர்க்கொடியாய்....

நீலச் சூரியனே
என் ப்ரபஞ்சத்தில் தான்
நீயென்றாலும்
தொடமுடியா உயரத்தில்....

வானவில்லை அணிந்துகொண்ட
நீள்வெளியாய்....
வர்ணமாலை அணிந்த
நீலவண்ணனே....

என் மனமெனும் காளிங்கத்தில்
மதங்க நர்த்தனமாடி
ஞானச்சுடர் தெறித்தோனே....

கறுப்பின் அழகும்
நெருப்பின் அழகுமாய்
ஜொலிக்கும் அழகே.....

உன் ஆழிப்பேரலையின்
கன்னச் சுழிப்பில் நான் மயங்க
நீ ஆலிலையில் அழகுத்துயிலில்....

துயில் எழுந்து வா கண்ணா
உன் மதுராவில்
உனக்காக நான்....

செவ்வாய், 20 அக்டோபர், 2009

குறிஞ்சிப் பூ

ஊட்டியிலும் கொடையிலும்
ஏற்காட்டிலும் இடுக்கியின்
ஸ்டெர்லிங்கிலும்....

பனிதூவிய பாலேரூமில்
பில்லியர்ட்ஸ் டேபிளில்
நீ மும்முரமாய்....

பட்டர் சிக்கனும்
பைனாப்பிள் ஜூஸும் அருந்தி
உன் கியூபாலின் அசைவை
ரசித்தபடி நான் ....

ஷேர் மார்க்கெட்டிலும்
எக்கனாமிக் டைம்ஸிலும்
பாரின் எக்ஸேஞ்சிலும்
நீ மூழ்க....

எங்கெங்கும்
என் குழந்தைகளுடனும்
கவிதைகளுடன் நான்.....

எல்லா விக்கெட்டுகளும்
வீழ்ந்து கொண்டிருக்க
நின்று விளையாடி
சதமடித்தவன் நீ....

ஆனைமலையின்
வரையாடுகளைப்
பார்க்கச் சென்றபோது .....

உன் சாயலில்
ஒரு குறிஞ்சியையும்
பார்த்தேன் .....

எல்லாத் தாவரங்களும்
என்னைப் பார்த்தவுடனே
பூத்தபின்னும்.....

எப்போதோ
ஒரு முறைதான்
புன்னகைபூப்பாய்.....

நதியின்
நீர்ச் சுழியினைப் போல்
என்னை வாரி விழுங்கும் அது.....

அபூர்வமான
உன் புன்னகையைக் காணவே
நான் ஆயுளோடும் உன்னோடு.....

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

தெட்சிப்பூ [இட்லிப் பூ]

அட்லாண்டிஸின் பனைமரத்தில்
காட்டர்பில்லர் போல்
ஊர்ந்த மோனோவில்....

அசைவற்ற கடல் சார்ந்த
வீடுகளின் ஊடாக
நாம் பயணித்தோம்....

வாட்டர் தீம் பார்க்குகளில்
சிவந்த தெட்சிப் பூக்களாய்
வெளிநாட்டு மங்கையர்....

நீ விரும்பி உண்ணும்
ஹம்மர் மீனைப் போல
நான் உன்னைச் சுற்றி....

மாலைச் சூரியனும்
பாய் மரப்படகுகளும்
முத்தமிட்டதுபோல
இலகுவாக அணைத்திருந்தாய்....

கற்கள் மோதும்
கடலலைகளைப் பார்த்து
நானும் ஒரு சுனாமி ஆகியிருந்தேன்...

நீ
தெட்சிப் பூக்களை
ரசிக்கத் துவங்கி இருந்தாய்....

என் கைப்பிடிப்பின்
கோபத்தைஉணர்ந்த நீ
எனக்கான ஹம்மரானாய்....
நான் உன்னை உண்ணத் துவங்கினேன்....

சனி, 17 அக்டோபர், 2009

மத்தாப்பூ

'""என் வலைத்தளத்துக்கு வருகை தந்து என்னை
ஊக்குவித்தும் தவறுகளைத் திருத்தியும்
ஆலோசனைகள் கூறியும் ஆற்றுப் படுத்தும்
அன்பு உள்ளத்தினர் அனைவருக்கும் என் மனம்
கனிந்த தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள் ...... '""


தீப ஒளித்திருநாளில்
உள்ளமெல்லாம் பெருந்தீபம்
மகர ஜோதியும்
அண்ணாமலைஜோதியுமாய் ...

ஊரனந்தம் பெற்ற
பேரனந்தம் என்றிருந்தேன்
என்னருகே நீயிருந்தாய்....

தகப்பனாய் சகோதரனாய்
வகுப்புத்தோழனாய் நண்பனாய்
காதலனாய் கணவனாய் ...

ஏன் வழித்துணைவனுமாய்
தெய்வமாகவும் நீ...
எல்லாரூபத்திலும்...

நான் டால்பினைப் போல
எனக்கான உலகத்தில்
கவலையேதும் அற்று
மிதந்து திரிந்து விளையாடி
மகிழ்ந்திருந்தேன் ....

என் கவலைகளை எல்லாம்
உன் தோளில் நீ சுமந்து
என்னைப் பேரன்பால்
பெருஅரணாகப் பாதுகாத்து...

நான் துயிலும் போது கூட
என் மனம் எங்கும் புன்சிரிப்பு
மத்தாப்பாய்....

புஸ்வாணம் பெருகி எழுந்து
ஒளிக்கற்றை வானவில்லாய்...
மேகம் உடைத்துக்
கிழித்த மழை....

என் மன அணையில்
உனக்கான அன்பு வெள்ளம்
தளும்பிக் கொண்டே..

என் வாழ்வெங்கும்
உனக்குமட்டுமேயான
என் பேரன்பு உனைச் சூழ்ந்து ....

செவ்வாய், 13 அக்டோபர், 2009

பவள மல்லி

ரேஸ்கோர்ஸின்
கவர்மெண்ட் காலேஜ்
வாசலில்...

நண்பர்களுடன்
கடலைகளைக்
கிண்டல் செய்து
கொண்டிருந்தேன்....

தூரத்து நிலவு
மிதந்து வருவது போல்
வெள்ளை டீஷர்ட் த்ரீபோர்த்தில் ...

சிவப்பு கான்வாஸில்
நச்சென்று நீ....
பவள மல்லியாய் ....

என்னவாக ஆகிறேன்
என்பது தெரியாமல் ஏதேதோ
ஆகிக் கொண்டிருந்தேன்...

பிட்னெஸ் ஒன்னுக்கு
ஜாகைமாறி
முளைப் பயிறும்
முட்டை வெண்கருவும்...

பழங்களும் காய்களும்
மட்டும் உண்டு ...
வீட்டில் வினோதப் பிராணியாய்...

ரஹேஜாவின் வாசலில்
நண்பர்கள் திடுக்கிட ...
நானே கடலையாய்....

நம் ஜாகிங்குத் துணையாய்
ஹெட் போனில் ஷகிராவும்
எமினெமும் பிப்டி சென்டும் ...

உன் பின்னே
ஒடி ஒடி என்னைச்
செதுக்கிக் கொண்டே...

காபி டேயில் காத்திருந்தபோது
நூற்றெட்டுப் பிள்ளையாருக்கும்
உன் தோட்டத்தில் பூத்த...

பவளமல்லி கோத்த
சின்ன ஆரங்கள்
சூட்டிக் கொண்டிருந்தாய்...

ராத் கி ராணி
உன் கை பட்டு
மகாராணியாய் ....

திங்கள், 12 அக்டோபர், 2009

லில்லிப்பூ

ப்ளூ க்ரீன் அல்கே
போல் தண்ணீருக்குள்...
உடல் மறைத்த
லில்லிப் பூவாய்...

வெண்மையாய்க் குவிந்து
மென்விரிந்த முகத்துடன்...
கருப்புச் சிப்பியில்
வெண்முத்தாய்...

ராப்லேக்ஸியா
பூப்போன்ற
பெரிய கண்களுடன்
அராபிய அழகே...

பாலைவனம் தோறும்
நீ நடக்க ...
நான் உன் பின்னே
மணல் காற்றாய்,,,

பேரீச்சைச் சாறாய்
நீ இனிக்க...
சிவந்த கன்னக்கதுப்பில்
சாக்லேட் காஸ்மாஸ் போல்
வனப்பின் வாசம்...

அரேபியன் கோப்ரா போலும்
மணல் மீன் போலும்
உன் பின்னே அலைந்து
திரிந்து நான்...

தொன் படிமங்களும்
பாறைப் படிவங்களும்
டைனோஸர் எலும்புக்கூடுகளும்
செறிந்து கிடந்த
மியூஸியத்துக்குள்ளே....

உயிர்ப் பதுமையாய் நீ ...
குளிரூட்டப் பட்ட
காற்றில்....

யுகங்களாய்க்
காத்து இருந்து
ஏங்கித்தவித்த நான்
எங்கெங்கோ சுற்றி....

ஷவர்மாவுடன்
ஒரத்து டேபிளில்
ஒதுங்கி...

சிறிது தூரத்தில்
பாஸ்தாக்களை போர்க்கில்
உன் குழந்தைகளுக்கு
ஊட்டியபடி நீ,,,,

மணலை உதறி
மனதையும் உதறி
எழுந்து நடந்தேன்....

சனி, 10 அக்டோபர், 2009

பூசணிப் பூ

தீப்பெட்டித் தொழிற்சாலையின்
வேன்களின் அதிகாலைப்
பொறுக்குதல்களிலும்...

அந்தி மாலை
வீசியெறிதல்களிலும்
குழந்தமையைத்
தொலைத்த நீ ...

வருமானம் போதாமல்
திருமணத்துக்குப் பின்னும்
எனக்காக வாசலில் அமர்ந்து
தீப்பெட்டி ஒட்டியபடி....

சிமெண்டுத் தூசியுடன்
சாந்துச் சட்டியுடன்
வீடு வந்து ...

வெந்நீரில் குளித்து
கறிச்சோறு தின்று
கயிற்றுக் கட்டிலில் நான்...

கூரையில் படர்ந்த
பூசணிப்பூக்களும்
படலில் பால் நிலவில்
நனைந்த இடுப்பாய்
பளபள பூசணிகளும்...

கிணற்றடியில் கந்தக நாற்றம்
தொலையுமளவு தேய்த்துக்
குளித்தபடி நீ...

சகடைச் சத்தமாய்
தடதடக்கும் இதயத்துடன்
விழித்து இருந்தோம்
பூசணிப் பூக்களும் நானும்...

வியாழன், 8 அக்டோபர், 2009

எள்ளுப் பூ

காற்றின் திசையில்
தெறித்து விழுந்த
கறுப்பு விதையில்...

வெடித்துக் கிளைத்து
வளர்ந்த பசுமை இலைகள் ..
புல் பூண்டு கூட
களையத்தயங்கும்
என் முன் ...

பசுமையாய்ச் சிரித்த செடியில்
வெள்ளைப் பூக்கள்
கொத்துக் கொத்தாய் ...

முறம் நிறைய சலசலத்த
எள்ளை வருடும்
போதெல்லாம்...

எள்ளுப் பூ நாசியம்மா
உனக்கு என அப்பாவும்
ஜப்பான் சுந்தரி என
மூக்கைக் கிள்ளிய
தாத்தாவும் நினைவில்...

திருமணம் முடிந்தும்
அய்யங்கார் பெண்களின் மூக்கும்
ரைனோப்ளாஸ்டியும்
அவ்வப்போது கவர்ந்து இழுக்க...

உன் மூக்கின் அழகோடு
முன்னூறாண்டு என பாடலும்
ஏக்கம் விளைக்க...

கதைப்பதில் மட்டுமே
பச்சைக் கஞ்சன்
நாசியென்பது சுவாசிக்கத்தானே
அழகாய்த்தானிருக்கு
என்றபோது...

குறையொன்றுமில்லை
மறை மூர்த்தி கண்ணா
என்று வெட்கத்தில்
நான்

புதன், 7 அக்டோபர், 2009

துலிப் பூக்கள்

ரஷிதியாவிலிருந்து
எமிரேட் மால்வரைக்கும்
மெட்ரோவில் வந்தேன்...
உன்னைப் பார்க்க...

ஷூமுதல் தலை வரை
சிக்கென உடை அணிந்த
பூவாய் நீ...

பொக்கிஷம் போல்
பொலிந்திருந்தாய்...
ச்வரோஸ்கி கற்கள் போலும்
டீ பீர்ஸ் வைரம் போலும்...

எக்ஸலேட்டரில்
இறங்கிவந்த பிலிப்பைனின்
விற்பனைப் பெண்ணாய்...

என்ன நிறம்...
என்ன நிறம் ...
கண் இமைக்க
மறந்து விட்டேன்...

இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல
என அறிவிக்கப்படாத
உயிர்ப்பூ நீ...

பொக்கே ஷாப்பில் நின்று
உன் கண் சிரித்த
புன்சிரிப்பில கலர்
கலராய் துலிப் பூ ...

எதை எடுக்க ...
எதை விட ...
அத்தனையும் அள்ளி
அணைத்துக் கொண்டேன்
பூங்கொத்தாய் ...

திங்கள், 5 அக்டோபர், 2009

கோழிக்கொண்டைப் பூ

மீனாக்ஷி திருக்கல்யாணம்
முடிந்து அழகர் தேனாற்றில்
இறங்கிக் கொண்டிருந்தார்...

சிவப்பு வெல்வெட்
செண்டுகளைச் சுற்றிக்
கட்டியதான கோழிக்கொண்டை
மாலை அணிந்து....

புரவியில் அழகரின்
அழகைக் காண
மக்கள் வெள்ளத்தில்
நீயும் நானும்...

கூட்டத்தில் தொலைந்து
விடாமல் இருக்கிறேனா என
நீ அடிக்கடி மின்னலைப்
போல் பார்க்க...

நான் வேரற்ற மரமாகவும்
கருகிவிடாமலும் மிதந்து உன்
பின்னேயே வந்தேன்...

நீயும் மறு மின்னல்
அடித்தது போலானாய் ...

ஒருவரை ஒருவர்
தொலைத்து விடாமல்...

அழகர் ஆற்றில் இறங்க
நாம் கை பிடித்துக்
கரை சேர்ந்தோம் ...

வெள்ளி, 2 அக்டோபர், 2009

ஆர்க்கிட்

என் முதல்
விமான பயணத்தில்
ஜிலீரென்று குளிர்வித்த
ஆர்க்கிட் நீ...

அநேக இதழ்களால்
நீ சிந்திய
அழகுப்புன்னகையில்
வசமிழந்தேன்...

என் ஒவ்வொரு
ப்ளைட் பயணத்திலும்
வெவ்வேறு உருவில் நீ ...

பின் தொடர்வதும்
எனக்குப் பணிவிடை
செய்வதும் ...

இலங்கைப் பயணத்தில்
சிகப்பு ஸ்கர்ட்டிலும்
மும்பை செல்லும் போது
புடவையிலும்...

எமிரேட்டில்
தலைக்குல்லாயில் இருந்து
சல்லாத்துணியில்
அரைமுகம்மறைத்து
அரபிக் கதையின்
லைலாவாகவும்...

என் வழித்துணையாகவும்
ஒவ்வொரு முறையும்
அன்றலர்ந்தது போல்...

என் ருசியறிந்து
பானம் கொடுத்து
வரவேற்று வழியனுப்பி...

உன்னைப் பிரிய
மனமில்லாமலே
பிரிகின்றேன்...

உன்னைப் பரிசளிக்கவே
பிறந்த ஆர்க்கிட்
பூ நீ ...

பிரிவோம்
[அடுத்த பயணத்தில்]
சந்திப்போம்...