கஜேந்திரனைக் காத்த கருடவாகனன்
முனிவர்களின் சாபம் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரியாமல் ஒரு மன்னனும், ஒருகந்தர்வனும் விளையாட்டாக நடந்துகொண்டார்கள். அதன் கொடுமையான விளைவுகளையும் அனுபவித்தார்கள். ஆனால் தன் பூரண சரணாகதியின் மூலம் மோட்சம் பெற்றான் அம்மன்னன்.
பாண்டிநாட்டை ஆண்டுவந்தான் இந்திரத்துய்மன் என்னும் மன்னன். மிகச் சிறந்த பெருமாள் பக்தன். பெருமாளுக்குப் பூசை செய்யாமல் அன்னம் தண்ணீர் அருந்தமாட்டான். அப்பேர்ப்பட்ட பக்தனுக்கும் ஒரு முனிவர் மூலமாக சோதனை வந்தது. ஒருநாள் அவன் விஷ்ணு பூசை செய்து கொண்டிருந்தபோது அகஸ்திய முனிவர் அங்கே வந்தார். இந்திரத்துய்மனின் பூசையோ முடிவதாயில்லை. தொடர்ந்து கொண்டேயிருந்தது. பார்த்தார் அகஸ்திய முனிவர். வேண்டுமென்றே மதியாமல் நடக்கிறானோ மன்னன் என்ற கோபம் உண்டானது அவருக்கு.
ஒருவழியாகக் கடைசியில் பூசையை முடித்துவிட்டு நடந்து வந்தான் மன்னன் முனிவரை வரவேற்க. பார்த்துக் கொண்டிருந்த முனிவருக்கோ அவன் மதர்த்த யானைபோல் அமர்த்தலாக வந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது. உடனே தன் கமண்டலத்திலிருந்து நீரை எடுத்து வீசினார் ”பிடிசாபம்! மதிக்காமல் மதங்கொண்ட நீ யானையாகக் கடவது” விதிர்த்து வணங்கினான் மன்னன்.

