**ஒற்றைச் செடியாய்த்
தனித்திருப்பது பிடித்திருக்கிறது.
எவ்வுயிர்க்கும் வானமும்
மழையும் வெய்யிலும் ஒன்றுதானே.
**தேடுகிறாயா எனத்
தெரிந்துகொள்ளவே
காணாமல் அடிக்கிறேன் என்னை.
**உலகத்து இன்பங்களை
ஒரு தட்டில் வைத்தாலும்
உன் ஒரு பார்வைக்கு ஈடாகுமா
**கோபித்துக் கோபித்துப் போவாய்
கோபத்தில் தத்தளிக்கும் உள்ளம்
பித்தாகும், பித்தாக்கும்
உன் பார்வையின் சுகம் தாங்குமா
**காண எதுவுமில்லை
உன் கையெழுத்துத் தவிர
கண் நிறைந்து மனசு நிறைந்து
பொழுதும் நிறைந்து போகிறது
எழுத்தே நீயானதன் அதிசயம்தான் என்ன
**நீயாகத் தேடிவரும்வரை
உன்னைத் தேடமாட்டேனென
சூரியனிடம் கோபித்துக் கவிழ்ந்திருக்கிறது தாமரை.
**வானத்தின் விசாலம்
நதியின் பிரவாகம்
கடலின் ஆர்ப்பரிப்பு
இவை பயமுறுத்தவில்லை
அடித்து அலசிச் செல்லும் உன் அன்பைப்போல
**தேடுகிறாயா எனத்
தேடிக்கொண்டே இருக்கிறேன்.
**பௌதீகத்தில் இரசாயனத்தில்
ஒன்றில் ஒன்று விழுந்தால்
என்னன்னவோ விளைவுகள் வருகின்றன
உன்னில் விழுந்தேன் நான்
என்னில் விழுந்தாய் நீ
பின் பிரிந்தோம்
எந்த விளைவும் ஏற்படுத்தவில்லையா
கலப்பும் பிரிப்பும்.
என்னை மறக்க வைத்துவிட்டதே
நான் என்ன உன்னைப் பீடித்த வியாதியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)