காரைக்குடியின் காவல் தெய்வம் கொப்புடையம்மன். கல்லுக்கட்டியில் அமைந்துள்ள இக்கோயிலைச் சுற்றிக் கடைவீதி அமைந்துள்ளது.
மூன்று நிலை இராஜ கோபுரத்துடன் எடுப்பான அழகிய கோவில் இது. உள்ளே நுழைந்ததுமே தாயின் கருவறைக்குள் இருப்பது போன்ற நிம்மதி ஏற்படும்.
எங்கள் பாட்டிகள் , பாட்டையாக்கள், ஐயாக்கள், ஆயாக்கள், அப்பத்தாக்கள் மற்ற உறவினர்கள் அனைவரின் காலடித்தடங்களும் இங்கே நான் மானசீகமாக உணர்வேன். அவர்களின் சுவாசம் கலந்த கோவில் எனக்கு மிக விசேஷமானது.
வருடா வருடம் பழனிக்கு நடைப்பயணமாகவும், காவடி கட்டியும் புறப்படும் நூற்றுக்கணக்கான புனித மக்களின் காலடித் தடங்களும் அவர்களின் வேண்டுதல்களும் கலந்த காற்று நம்மையும் ஆற்றுப்படுத்தும்.
ஒரு சில முறை ஆயாவுடன் இங்கே மார்கழி திருப்பள்ளி எழுச்சிக்கு வந்து வணங்கி சூடாக வெண்பொங்கல் வாங்கிச் சாப்பிட்டது நினைவில் ஆடுகின்றது. ஆறாவயல் பாட்டியுடன் வந்து பூச்சி பொட்டுக் கடிக்காமல் இருக்க அவற்றின் மண் உருவை வாங்கி வேண்டுதல் குதிரைகளின் அருகில் சேர்ப்பித்ததும் கூட. எங்கள் ஐயா ஆயாவின் சஷ்டியப்த பூர்த்திக்கும் இங்கே வணங்கிவிட்டுத்தான் வீட்டிற்கு வந்தோம்.ஆயா வீட்டில் நடைபெறும் அனைத்துத் திருமணங்களுக்கும் மாப்பிள்ளை அழைப்பு இங்கே இருந்துதான் நடைபெறும்.
முன்பு இக்கோயிலின் நுழைவுப் பகுதியில் வாயிலை ஒட்டி மேற்பக்கத்தில் கல் வளையங்கள் தொங்குவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். கோயில் முழுவதும் தூண்களில் தாமரை பூத்த கொடுங்கைகள் வெகு அழகு.
கல் திருப்பணியால் ஆன கோயில் இது. உள்ளே உள்ள தூண்கள் ஒன்றில் பைரவர் காட்சி அளிக்கிறார்.