எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

குற்றாலம் என்னும் தேனூர் !!!

செங்கோட்டை எக்ஸ்ப்ரஸ்ஸில் ஒரு நாள் அதிகாலையில் தென்காசி வந்தாச்சு. ஆனால் ட்ரெயின் ஒரு மணி நேரம் லேட்.

தென்மேற்குப் பருவக் காற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுமாக பசுமை வயல்களுடன் மரம் செடி கொடிகளுடன் குளுகுளுவென அற்புத தரிசனம் தந்தது. ஜிலுஜிலுவென்று ஏசி போட்டதுபோல் இருந்தது. அங்கேயே இருக்கலாம்போல் ஒரு எண்ணம் வந்தது.

தென்காசி. காற்று அதிகம் என்பதால் இங்கே காற்றாலைகள் ( விண்ட்மில்)  அதிகம் பொருத்தப்பட்டுள்ளன . குற்றாலம் அருவிகள் நிரம்பிய ஊர். இதற்குத் தேனூர் என்றொரு பேரும் உண்டாம். டபுள் குஷியோடு தேனூரின் அருவி நீரில் நனையச் சென்றோம் )

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்தான் குற்றாலத்தில் சீசன். சாரல் திருவிழா எல்லாம் நடக்கும். ஆறுமாசம் க்ளைமேட் அப்புறம் காத்தாடும் என்றார் ஆட்டோக்காரர்.

இங்கே நான்கு ஆறுகள் பிறக்கின்றன. ஒன்பது அருவிகள் புறப்படுகின்றன. குற்றால நாதர் கோவிலும் சித்திர சபையும் வெகு பிரசித்தம். சிறுவர் பூங்கா, அருங்காட்சியகம் எல்லாம் உண்டு.  பராசக்தி மகளிர் கல்லூரியைப் பார்த்தேன்.

இதோ மெயின் அருவி.

ஆனால் அது ஒரு ஆடி வெள்ளி என்பதால் ஒரே கூட்டம். அதுவும் ஆண்கள் பக்கம் கூட்டம் கம்மி.

பெண்கள் பக்கம் கூட்டம் அதிகம் என்பதால் க்யூ. போலீஸ் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தது.

அவ்ளோ பெரிய அருவியில் இருந்து கொட்டிக் கவிழும் தண்ணீர் இவ்ளோதான்.
கூட்டத்தைக் கண்டு மிரண்டு ஐந்தருவிக்குப் போகலாம் என்று பின்வாங்கினோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகும்போலிருந்தது.

சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைக்கிறது. ஊரெங்கும் புரோட்டாக் கடைகள், கோழிக்குருமாவின் வாசம்தான்.

ரோட்டுக் கடைகள் நல்லா கல்லாக் கட்டுகின்றன.

பெண்மக்கள் அநேகமாக விரித்த தலையுடனும் நைட்டியுடனும் மேலே ஒரு துவட்டிக்கிற துண்டைப் போர்த்தியபடியும் காணப்படுகிறார்கள்.

ஒவ்வொரு அருவியாகக் குளித்துவிட்டு ஆட்டோவில் இன்னொரு அருவிக்குச் செல்வதால் இப்படியாம்.

ஆண்கள் பர்முடாஸ் & ட்ராயர்கள் மட்டுமே அணிந்திருக்கிறார்கள். சிலர் வேஷ்டி மட்டுமே. அநேகர் சட்டை அணிவதில்லை. கார்களிலும் ஜீப்புகளிலும் அப்படியே அமர்ந்து பயணிக்கிறார்கள். ஊர்விட்டு ஊர் கூட செல்கிறார்கள்.

எங்கு பார்த்தாலும் கூட்டம். ரோட்டிலும் கூட்டம். ஒரே பழக்கடைகள் வேறு. விதம் விதமான பழங்கள் கண்ணைக்கவர்கின்றன.

வழி எங்கும் வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சி கொண்டிருந்தன.

குற்றாலக் குறவஞ்சி ப்ளாஷ்பேக்காக ஓடியது.

கேரளா அருகில் இருப்பதால் ஐயப்ப கோவில் சீஸன்  அடுத்துக் களை கட்டும் என்றார்கள்.
தூரத்தில் இருந்தே அருவியை பார்த்துப் புகைப்படம் எடுத்துவிட்டுக் கிளம்பினோம்.


அடுத்தது ஐந்தருவி.

இங்கே ஐந்து கிளைகளாகப் பிரிந்து நீர் கொட்டுகிறது. உருக்கி வார்த்த வெள்ளி போல் அவ்வளவு தண் & கிண்.

மூன்று கிளைகள் கொட்டும் இடம் ஆண்களுக்கு. மிச்ச இரு கிளைகள் பெண்களுக்கு.

அதிலேயே பெண்கள் அடைசலாக ஒருவர்மேல் ஒருவர் பொதிந்து நின்றுகொண்டிருந்தார்கள். நமக்கோ பார்க்கவே மூச்சுத் திணறியது.

மூலிகை கலந்த நீர். தண்ணீரிலும் காற்றிலும் சத்துக்கள் மிகுந்துள்ளன. இவற்றை சுவாசித்தும் அருந்தியும் முனிசிரேஷ்டர்களும் தவ சித்தர்களும் வாழ்ந்ததில் அதிசயமில்லை என்றே தோன்றுகிறது.

ஒரு வழியாக துணிந்து அந்த் ஐஸ் நீரில் ( ஹரித்வார்,ரிஷிகேஷ் போல் தண்ணென்றிருக்கிறது தண்ணீர் ) கால் வைத்துச் சென்று நீர்ச்சாரலில் நனைந்தேன். அதிகமான சாரலில் மூச்சு முட்டியது.

வீட்டில் கொளுத்தும் வெய்யிலிலும் வெந்நீரிலேயே குளித்துப் பழகியதால் குளிர்நீர் உடலை நடுக்கி சுவாசத்தைத் திணறச் செய்தது.

சும்மா ஐந்து நிமிஷம் பேருக்கு ஆடிவிட்டுத் திரும்பி வந்தேன். அங்கே சில உறவினர்களையும் சந்தித்தோம்.

பல பெண்கள் தண்ணீரில் அமர்ந்து இருந்தார்கள். குழந்தை குட்டிகளும் ஓடும் ஓடையில் ஆட்டம் போட்டபடி இருந்தார்கள்.


உடை மாற்ற ஒரு நபருக்கு 10 ரூ கட்டி விட்டுச் சென்று உடை மாற்றி வந்து ஐந்தருவி சாஸ்தா ஐயனாரை வணங்கினோம்.

நந்தி இருக்கும் இடத்தில் யானை !.

ஐந்தருவியின் காவல் தெய்வங்கள்
குளித்து இம்மூவரையும் வணங்கி விபூதி ,மல்லிகைப்பூ பிரசாதம் பெற்று வந்தோம்.

அடுத்துப் பழ வேட்டை. ஆனால் எல்லாம் காஸ்ட்லி. கிலோ 200 க்குக் குறைவில்லை.

பழக்கடையின் முன் மகளிர். இப்படித்தான் விரித்த கூந்தலும் சூடி இல்லை நைட்டியுடன் துப்பட்டாவோ அல்லது துண்டோ போட்டு நிற்கிறார்கள் எங்கெங்கும்.

டொரியான் பழம் கால் கிலோ மற்றும் மற்ற பழங்களும் வாங்கி வந்தோம். அப்புறம் மிக ருசியான ஸ்ரீவில்லிபுத்தூர் பரசுராமன் பால்கோவாவும்கூட கிடைக்கிறது. தென்காசி, ராஜபாளையம், சங்கரன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஈறாய ஊர்களில் பால்கோவா கடைகள்தான் ஊர் முழுக்க. அப்புறம் எலுமிச்சை அளவு முழு நெல்லியும் கிடைக்கிறது. பழங்கள் இன்னொரு பதிவில் பகிர்வேன். :) 

4 கருத்துகள்:

  1. போன மாதம் நாங்களும் சென்று வந்தோம்... படங்கள் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
  2. அட எங்கூருக்கு வந்துட்டு போயிருக்கிறீங்க ! ! சீசன் நேரங்களில் இரவில் கூட்டமில்லாத சமயம் மட்டும் குளிப்பது உண்டு. இரவுக்குளியல் ஆனந்தமாக இருக்கும். என் இல்லம் மெயின் அருவியிலிருந்து 2 கி.மீ தூரம். இலஞ்சி குமாரகோவில் சாலையில் வாக்கிங் செல்லும் போது தினமும் அருவியை காணலாம்.

    பதிலளிநீக்கு
  3. சென்று பல வருடங்கள் ஆகி விட்டன. மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  4. நன்றி டிடி சகோ.

    ஆம் பொன்சந்தர் சகோ.

    சென்று வாருங்கள் பானுமதி :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...