எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 27 செப்டம்பர், 2014

சாட்டர்டே போஸ்ட்,ஆன்மநேயர் கதிர்வேலும் மனித உறவுகளும்.

எனவே இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக ஒரு கேள்வி கேட்டேன்.

///இன்றைய வாழ்க்கைமுறையில் மனித உறவு எப்படி இருக்கிறது. அதை மேம்படுத்த என்ன செய்யலாம். ?///



மனித உறவு ! இன்றைய மனித வாழ்க்கையில் மனித உறவுகள் தள்ளி வைக்கப் படுகின்றது.அதற்கு காரணம் ! இன்றைய உலகில் மனிதர்கள் ஆடம்பரத்தை அதிகம் விரும்புகின்றார்கள் பணத்தைத் தேடி அலைகின்றார்கள் அதனால் பாசத்தை ஓரம் கட்டி விடுகின்றார்கள். பணம் இருந்தால் போதும் ,அனைத்தும் கிடைக்கும் அதை வைத்துக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்று நினைக்கின்றார்கள். பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது என்பதை யாரும் உணர்வது இல்லை. 

நம்முடைய தாய்,தந்தையர்கள்,அதற்கு முன்பு வாழ்ந்த தாத்தா ,பாட்டிகள் எல்லாம் அன்பை மூலதனமாக வைத்து வாழ்ந்தார்கள் .அதனால் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் . பிரிந்து வாழ்ந்தால் அதை கேவலமாக நினைத்தார்கள். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்பவர்களுக்கு ஊரில் உள்ள மற்ற உறவினர்கள் ,நண்பர்கள் யாரும் அதிகமாக உதவி செய்ய மாட்டார்கள்.அவர்களுக்கு வெளியே ஆதரவு இருக்காது என்பதை உணர்ந்து பெரியவர்கள் சொல்லும் வரை தனிக்குடித்தனம் போக மாட்டார்கள். 

பெரிய குடும்பமாக இருந்தால்,பெரியவர்களே அவரவர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து,பிரிக்க வேண்டியதை பிரித்து,தனித்தனியாக குடும்பத்தை வைத்து வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கி வைப்பார்கள். அதிலும் யாருக்காவது அஜாக்கிரதையால் துன்பம் நேரிட்டால் அவர்களுக்கு தகுந்த முறையில் உதவி செய்து,அந்த துன்பத்தில் இருந்து அவர்களை காப்பாற்றுவார்கள். 

எவ்வளவுதான் குடும்பத்தில் குழப்பங்கள் பிரச்சனைகள் வந்தாலும்,அதை பெரியவர்கள் அன்பால் அரவணைப்பால் சொல்லி புரிய வைத்து ஒற்றுமையுடன் வாழ வழி வகுத்து தந்தார்கள். சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.அவரவர்களுக்கு எவை தேவையோ அதை மட்டுமே அனுபவித்து வந்தார்கள்.அதனால் யாருக்கும் எந்த துன்பமும்,துயமும்,அச்சமும் பயமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். 

இப்போது காலங்கள் மாறி விட்டன.மகனோ,மகளோ,நன்றாக படித்து வேலைக்குச் சென்று ,,பெற்றோர்களை விட அதிகமாக சம்பாதிக்கின்றார்கள் .சம்பாதிக்கின்றோம் எனற ஆணவத்தால் அவர்களை அறியாமலே ,பெரியவர்களை மதிப்பதில்லை,மதித்தாலும் அவர்கள் சொல்லை யாரும் கேட்பதில்லை. தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ தொடங்கி விட்டார்கள்.

ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதற்கு தகுந்தாற்போல் பெரிய பெரிய கம்பெனிகள் விலை உயர்ந்த பொருள்களை தயாரித்து மக்கள் வாங்கும்படி விளம்பரங்கள் செய்து தவணை முறையில் விற்பனை செய்து வருகின்றார்கள். பேராசையின் காரணமாக வருமானத்திற்கு மேலாக,பெரிய ஆடம்பரமான வீடுகளும்,வீட்டை நிரப்புவதற்கு தேவையற்ற பொருகளை வாங்கி வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்படுகின்றார்கள்.அதற்கு மேலாக விலை உயர்ந்த வாகனங்கள் வாங்கி அதற்கு செலவு செய்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள். 

தங்கள் குழந்தை களுக்கு நல்ல கல்வியை கொடுக்காமல் . கவுரவத்திற்காக,மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்ற அற்ப ஆசைகளுக்காக, அதிகமான பணம் வசூலிக்கும் வியாபார கல்வி சாலைகளுக்கு அனுப்பிவிட்டு பணம் அதிகம் செலவாகிறதே என்று அங்கலாயித்துக் கொண்டு சிரமப்படுகின்றார்கள். அவர்களை தட்டிக் கேட்க ,அறிவுரை சொல்ல ஆள் இல்லை என்பதால் வாழ்நாள் முழுவதும் துன்பபடுகின்றார்கள்.

நாகரீகம் என்ற போர்வையில் அனைவரும் துன்பப்பட்டுக் கொண்டுதான் உள்ளார்கள் .யாரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாக தெரியவில்லை, மனித உறவு இல்லாமல் பண உறவைத் தேடிக் கொண்டு உள்ளார்கள். மனித உறவு என்பது மிகவும் மகத்தானது,அது அன்பின் பிறப்பிடம் மனித உறவு என்பது நிலையான அன்பு உடையதாகும்.அந்த அன்பிற்கு ஈடு இணையாக வேறு எதுவும் இல்லை,.அன்பு தான் மனிதனை மகிழ்ச்சி அடைய செய்விக்கும். அன்பு இருக்கும் இடத்தில் ஆண்டவர் குடியிருப்பார் .பணம் இருக்கும் இடத்தில் எமன் குடி இருப்பார் .என்பதை மனிதர்கள் உணர்ந்து மனித நேயத்தை பாது காக்க வேண்டும்.மனித நேயம்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும். 

வள்ளுவ பெருந்தகை சொல்லுவார் ...அன்புடையார் எல்லாம் உடையார் ,அன்பிலார் ஏதும் இலார் .என்பார் . வள்ளல்பெருமான் அவர்கள்...அன்பெனும் பிடியும் அகப்படும் மலையே என்பார் .ஒரு பெரிய அசையாத மலையையே அன்பால் கையில் அகப்பட்டுவிடும் என்பார். வருங்காலத்தில் உயர்ந்த மனிதப்பிறப்பு எடுத்த மனிதர்கள் .பேராசையை விடுத்து வருமானத்திற்கு தகுந்த செலவுகளை செய்து தேவையான ஆசைகளை நிரந்தரமாக இருக்கும்படி செய்து மகிழ்ச்சியுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

 தாய் தந்தையர்களை ,பெரியவர்களை மனம் நோகாமல் பாது காக்க வேண்டும்.ஏழை எளியவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உபகாரம் செய்ய வேண்டும் .அவர்களின் வாழ்த்துக்கள் நம்மை எப்போதும் பாது காக்கும். யாவரும் மதிக்கத்தக்க மனித நேயத்துடன் வாழ்க்கையைத் தொடங்கினால் என்றும் துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம் . இன்றைய சமுதாயம் நாளைய உலகை உருவாக்கும் சிற்பிகள் . 

ஒவ்வொரு தனிமனிதனும் சத்தியம்,நேர்மை,ஒழுக்கம்,உழைப்பு, உயிர் இரக்கம் உடையவர்களாக வாழ்ந்தால் ,நாமும்,நாடும் நலம் பெரும். ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

டிஸ்கி 1. :- மிக அருமையான தெளிவான இன்றைய தலைமுறைக்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லி இருக்கீங்க கதிர் சார் . சாட்டர்டே போஸ்ட் சார்பா உங்க கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன்.  

டிஸ்கி 2:- ////வருகிற அக்டோபர் மாதம் நான்கு ஐந்தாம் தேதி வள்ளலார் அவதார தின விழா ...மலேசிய நாட்டில் சுத்த சன்மார்க்க மாநாடு நடைபெற உள்ளது .ஈரோடு கதிர்வேல் கலந்து கொண்டு அருள் உரை நிகழ்த்துகிறார்  .///

வாழ்த்துகள் சார். !!!!!!!!!! 


6 கருத்துகள்:

  1. அன்பு சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம் வாழ்த்துக்கள் .என்னுடைய கட்டுரையை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி அதனால் பெருமை சேர்த்து உள்ளீர்கள் .உங்கள் உயர்ந்த பணி மென்மேலும் வளர என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ....ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையானதொரு மனிதரைப் பற்றிய செய்தியுடன் அழகான கட்டுரை அக்கா...
    தங்களுக்கும் திரு. கதிர்வேலு ஐயாவும்மும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. தாய் தந்தையர்களை ,பெரியவர்களை மனம் நோகாமல் பாது காக்க வேண்டும்.ஏழை எளியவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உபகாரம் செய்ய வேண்டும் .அவர்களின் வாழ்த்துக்கள் நம்மை எப்போதும் பாது காக்கும். யாவரும் மதிக்கத்தக்க மனித நேயத்துடன் வாழ்க்கையைத் தொடங்கினால் என்றும் துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம் . இன்றைய சமுதாயம் நாளைய உலகை உருவாக்கும் சிற்பிகள் . //

    மிக அருமையாக சொல்லி இருக்கிறார் திரு, கதிர்வேல் ஐயா அவர்கள்.
    அவரின் கருத்தை பகிர்ந்தமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி,

    பதிலளிநீக்கு
  4. அறிஞரின் பதிவுகளை முகநூலில் படிப்பவர் நான்
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி கதிர் சார்

    மிக்க நன்றி குமார் சகோ

    சரியா சொன்னீங்க கோமதி மேம் நன்றி

    மிக்க நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...