*****************************************
வளரும் பிள்ளைகளின்
அம்மாவாய் இருப்பது
அற்புதம்தான்..
கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் பொய்
கொஞ்சம் உரைத்தல்
கொஞ்சம் மறைத்தல்
எல்லாம் உணர்ந்தும்
மௌனமாய் இருக்கக்
கற்க வேண்டும்.
கைபேசியோ
கணணியோ
கவனிக்கப்படவேண்டும்
எல்லைமீிறா வகையில்.
படபடவென்று
சண்டையிடும்போதும்
தூக்கி எறிந்து பேசும்போதும்
உணரவேண்டும்..
பேசுவது அவர்களல்ல..
துடித்தோடும் ரத்தம்.
மனம்கவர் நட்போ
அதனோடான உராய்வோ
வரைந்து வைக்கும்
மந்தகாச ஓவியமோ
கரிக்கிறுக்கல்களோ
கண்டும் காணாமல்
கடக்க வேண்டும்.
கேள்விகளற்று..
பிள்ளைகள் புலிகளாய்
சீறப்போகும் சூத்திரம் உணர்ந்து.
இராத்தூக்கம் மறந்து
போர்வைக்குள் மறைந்து
கூடா நட்போடு
கதைக்கும் மகளோ
டிஸ்கோதேயில் தொலைந்து
பீருக்குள் கரைந்து
கூகை ஒலிக்கும் நேரம்
வரும் மகனோ பார்த்து
அதிராமல் இருக்க
பழக வேண்டும்.
ஒரு நட்பு தொலைத்து
மறு நட்பில் உயி்ர்த்து
உனக்கென்ன தெரியுமென
கேட்கும் பிள்ளைகளிடம்
கடித்துக் குதறவோ
சுயகௌரவம் காட்டவோ
விடுதலைப்பத்திரம் நீட்டவோ
தூக்கிப் போட்டுப்
போகவோ முடியாது
திருமண பந்தம் போல.
உள் வைத்து உணவூட்டியது
போல் எளிதில்லை
வெளியில் உணர்வூட்டுவது.
இதுவும் கடப்போமென
எளிதாய் நகர்ந்தால்
அனுபவம் அவர்க்குச்
செமிக்கச் சொல்லும்
வயிற்றில் சுமந்தவள்
மேலேற்றும் கவலையோடு
மனதிலும் சுமக்கிறாளென..
.
6 கருத்துரைகள்:
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
பதின்ம பிள்ளைகளின் அம்மாவாக இருப்பது கடினம் தான். ஆனாலும் மகிழ்ச்சி தான்.
//தூக்கி எறிந்து பேசும்போதும்
உணரவேண்டும்..
பேசுவது அவர்களல்ல..
துடித்தோடும் ரத்தம்//
ம்... அம்மாவாக நானும் இந்த நிலைக்கு இப்போதுதான் வர ஆரம்பித்திருக்கிறேன்..
(மீள் பதிவா இது? சமீபத்தில்தான் வாசித்த ஞாபகம்..)
//தூக்கி எறிந்து பேசும்போதும்
உணரவேண்டும்..
பேசுவது அவர்களல்ல..
துடித்தோடும் ரத்தம்//
Nan Oru thagappanaga en magalidam
idhai unargiran.
Best wishes.
Karunakaran
நன்றி ரத்னவேல் சார்
நன்றி ரமேஷ்
நன்றி ஹுசைனம்மா
நன்றி கருணாகரன்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக