மன்னனானால் என்ன மகரிஷி ஆனால் என்ன ? எதில்தான் விளையாடுவது
என்ற வரைமுறை இருக்கிறது. அப்படி இல்லாமல் ஒரு ராஜா தவமியற்றிக் கொண்டிருக்கும் முனிவரின் கழுத்தில்
விளையாட்டாக ஒரு செத்த பாம்பை மாலையாகப் போட்டுவிட்டான். அந்த முனிவரின் மகன் உக்கிரத்துடன்
விழித்து கமண்டல நீரை அவன்மேல் தெளித்து ஒரு வாரத்துக்குள் அவன் நாகத்தால் இறப்பான்
என பிடி சாபம் கொடுத்துவிட்டார். அதனால் என்னென்ன குளறுபடிகள் ஏற்பட்டன. அவை எப்படி
நீங்கின என்று பார்ப்போம் குழந்தைகளே.
குருஷேத்திரப்போர் முடிந்த சமயம். ஹஸ்தினாபுர அரண்மனையில் அர்ஜுனனின்
மகன் அபிமன்யுவின் இறப்பிற்குப் பிறகு அவரது பேரன் பரீட்சித்து மன்னர் ஆட்சிக்கு வந்தார்.
இவரது தாய் உத்தரை. உலகிற்கே மன்னர், தான் ஒரு சக்கரவர்த்தி என்ற மமதை அவரிடம் இருந்தது.